எது செயல்?
புதியவன்
செயல் என்பது
கலை அறிவியல் நேர்த்தியும்
சமூக மேன்மைக்கு முயற்சியும் ஆகும்.
ஏனெனில்,
எல்லா செயலும் செயல் அல்ல. செயல் என்பது முன்னேறிச் செல்தல் ஆகும். சமூகத்தின்
தேக்கத்தையும் கீழ்நிலையையும் பாதுகாக்கின்ற எல்லா செயல்களும் செயலுக்கான தகுதியை
இழந்துவிடுகின்றன. ஏனெனில் சமூக மேன்மையை நோக்கி முன்னேறுவதற்கு இத்தகைய செயல்கள்
தடைகளாக அமைகின்றன. எனவே செயல் என்பதன் தகுதி சமூகமேன்மையை எட்டுவதற்கான
முயற்சிகளுடன் இணைந்திருக்கின்றன. சமூகமேன்மையில் அக்கறையுள்ளவர்களே
சமூகவிஞ்ஞானிகளாக மலர்ச்சி பெறுகிறார்கள். மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற
சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் தங்களை சிறந்த
செயல்வீரர்களாக உருமாற்றி வருகிறார்கள். நாம் ஒவ்வொருவரும் இத்தகைய செயல்வீரர்களாக
உருமாறுவது சமூகத்தின் அவசியத் தேவையாக இருக்கின்றது. இத்தகைய அவசியம் கருதி நமது
செயல்களை மேன்மைப்படுத்த முன்வருவோம்.
செயல் என்பது அறிவியலையும் கலையையும் அடிப்படையாகக்
கொண்டிருக்கின்றது. கலை என்பது அறிவியலின் துல்லியமான புலனறிவு நிலையிலிருந்து
மாறுபட்டு இயங்குவதே ஆகும். அதாவது மனிதர்களின் பருண்மையான உணர்வு நிலைகளுடன்
தொடர்பு கொண்டிருப்பதாக கலை அமைகிறது. எந்த ஒரு கலையும் வாழ்வின் எதார்த்தங்களைப்
பற்றிக்கொண்டு கற்பனைகளின் புனைவுகளை உடுத்திக்கொண்டிருக்கின்றது. அறிவின்
துல்லியத்தைப் பற்றிக்கொண்டு ஆழ்மனதின் எண்ணங்களுக்குள் கரைந்துகொண்டிருக்கின்றது.
எனவே கலையானது ஓர் அறிவை செயல் வடிவம் எட்டச் செய்வதற்காக
உணர்வு நிலையில் உந்துதல் செலுத்தி ஆதிக்கம் செய்கின்றது.
எத்தகைய செயல் வீரர்களுக்கும் அறிவில் தெளிவும் கலையில்
நேர்த்தியும் இன்றியமையாத அடிப்படைகள் ஆகும். சமூகமேன்மையை எட்ட முயல்பவர்கள்
இத்தகைய அடிப்படைகளில் தேர்ச்சி பெற்றுவிட்டால் சமூகவிஞ்ஞானிகளின் பொன்னுலகம்
விரைவில் கைகூடும்.
No comments:
Post a Comment