சமூகவிஞ்ஞானத்தின்
உருவம் காரல்மார்க்ஸ்
இப்பொழுது ஐந்து வழிமுறைகளையும் நினைத்துப் பாருங்கள்.
எடுத்துக்காட்டுகளின் உதவியுடன் ஐந்து வழிமுறைகளும் நமக்கு அறிமுகமாகிவிட்டன. இந்த
வழிமுறைகள் நம் சிந்தனையில் கலக்க வேண்டும். இப்படிக் கலந்துவிட்டால், சரி எது என்பதை தெளிவாகக் கண்டறிந்து செயல்படுவதற்குரிய வழிமுறைகள்
பழகிவிடும். வெளுத்ததெல்லாம் பால், கருத்ததெல்லாம் காக்காய்
என்ற சிந்தனைப் பழக்கம் வெயில் நிலத்தில் பனி பேல உருகிவிடும். தனிமனிதனைவிட
சகமக்களில் ஒரு சகமனிதனாக வாழ்வதிலுள்ள இன்பத்தையும் வலிமையையும் உணர முடியும்.
இந்த உணர்வுடன் சிந்தனைப் பயிற்சியில் உற்சாகமாகக் குதிப்போம். அதற்கு முன் ஒரு
கதையைக் கவனிப்போம்.
இந்த வழிமுறைகளை முதன்முதலில் ஒன்றிணைத்தவர் காரல்மார்க்ஸ். இவர்
உலகமக்களின் மீள முடியாத துயரங்களை நினைத்துத் துன்பக்குதிரையில் பயணித்தார்.
மக்களின் துயரங்களுக்கு எது காரணம்? மக்கள் தங்களைத்
துயரங்களிலிருந்து எப்படி விடுவித்துக்கொள்வார்கள்? இந்தக்
கேள்விகளே அவரது பயண இலக்குகள். விடைகளை ஆராயத் தொடங்கினார். அவரது முயற்சிக்கு
உலகம் பற்றிய பல உண்மைகளை அறிய வேண்டியிருந்தது. உண்மைகளை
எப்படி அறிவதென்று ஆராய்ந்தார். ஆராய்ச்சிக்கு உறுதுணையாக அறிவியல் சாதனங்களின்
செயல்பாடுகளை எடுத்துக்கொண்டார்.
மனித வரலாற்றிலிருந்த அனைத்து சிந்தனை முறைகளையும் இவற்றில்
பொருத்திப் பார்த்தார். இவற்றில் பொருந்துகின்ற சிந்தனை முறைகளையும், பொருந்தாத சிந்தனை முறைகளையும் தனியே பிரித்தார். பொருந்தியவை அனைத்தும்
உண்மைகளைக் கண்டறிந்த சிந்தனைமுறை. பொருந்தாதவை முழுதும் உண்மைகளுக்கு எதிராயமைந்த
சிந்தனைமுறை.
இவரது ஆராய்ச்சியில் உண்மை அறிவதற்காகக் கிடைத்த
சிந்தனைமுறைகளே, இந்த ஐந்து வழிமுறைகள். இந்த வழிமுறைகளை
ஒன்றிணைத்து, தனது சிந்தனையைப் பக்குவப்படுத்திக் கொண்டார்.
ஐந்து வழிமுறைகளும் அவரது சிந்தனையில் கலந்திருந்தன. ஆகவே அவரது இலட்சியப்
பயணத்திற்கு சரியான ஆயுதம் கிடைத்துவிட்டது. இந்த ஆயுதத்தின் வழியில் உண்மைகளின்
தன்மையை உணர்ந்தார். சகமக்களின் சமூகத்தை ஆய்வு செய்து பல முடிவுகளை வழங்கினார்.
இந்த முடிவுகள் சமூக உண்மைகளைப் பிரகாசமாக உணர்த்தின. எனவே மனிதசமூகம் தன்னால்
தவிர்க்க முடியாதபடி காரல்மார்க்ஸை முக்கிய சமூகவிஞ்ஞானியாக தேர்ந்தெடுத்தது.
இந்தளவில் சமூகவிஞ்ஞானம் பற்றிய அடிப்படை உண்மையை நம்மால் உணர முடிகிறது. அதாவது,
அறிவியல்
வளர்ச்சிகளின் உதவியால் சிந்தனை முறைகளை ஒழுங்குபடுத்தியவர் காரல்மார்க்ஸ்.
ஒழங்குபடுத்தப்பட்ட சிந்தனைமுறைகளைக் கொண்டு சமூகத்தை ஆராய்ந்த முதல்
சமூகவிஞ்ஞானி காரல்மார்க்ஸ்.
சமூகவிஞ்ஞானம்
என்பது மார்க்ஸியத் தத்துவம்.
இது
உண்மைகளைப் பிரகாசிக்கின்ற சிந்தனை வெளிச்சம்.
காரல்மார்க்ஸ், இந்த வெளிச்சத்திற்கு உருவமாக உறைந்துவிட்டார்.
இத்தகைய வரலாற்று உண்மைகளை நம்மால் உணர முடிகிறது. ஆனால், உணர வேண்டிய மற்றொரு பகுதியும் இருக்கிறது. இதனை நினைவில் வைத்திருப்பது
அவசியம். ஐந்து வழிமுறைகளும் ஒருங்கிணைந்த கதையை மார்க்சியமாக உணர்கிறோம். ஆனால்,
எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின்,
மாசேதுங் ஆகியோரது செயல்பாட்டுச் சிந்தனைகளாலும் மார்க்சியம்
வளர்ந்திருக்கின்றது. எனவே, மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை
அறிந்துணர்வது அவசியம். இது சமூகவிஞ்ஞானத் தேர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாத்து.
இந்த இன்றியமையாமை நம் சிந்தனைக்கு மிகவும் சுவையானது. நாம்
கோன்ஐஸ் சாப்பிடும் கதைதான். இவர்கள் ஐஸ்கிரீம் கலவையாகக் கோனில் நிரம்பி
இருக்கிறார்கள். கவர்ச்சி மிக்க கோனாக மார்க்ஸ் இருக்கிறார். கோன்ஐஸை முழுதாகச்
சாப்பிட வேண்டும். இதற்கான வாய்ப்பு நமது சமூகவிஞ்ஞானிகளின் சிந்தனைப்பயிற்சி
களத்தில் இருக்கிறது. எனவே, சிந்தனைப் பயிற்சியில் கோன்ஐஸ்
சாப்பிட ஆசைப்படுவோமாக!
சிந்தனைப் பயிற்சியின் இலக்கிற்காக சமூகவிஞ்ஞானிகளின் முடிவுகளுள்
சில...
மனிதன்
சூழ்நிலை கைதி மட்டுமல்ல. சூழ்நிலையை மாற்றவும் இவனுக்குச் சக்தி இருக்கிறது.
மனிதர்களால் சூழ்நிலையை வெல்ல முடியும்!
மக்களின்
விடுதலையை மக்களே சாதிப்பார்கள்!
விடுதலைக்கான
வழியைக் கண்டறியும் இலக்குடனே உண்மை அறிகின்ற சிந்தனை முறைகள்
ஒழுங்குபடுத்தப்பட்டன. இந்தச் சிந்தனை முறைகளை ஆயுதமாக்கிக் கொள்வது மக்களுக்கு
அவசியம். உலகை இயக்கும் உழைக்கும் மக்கள் இதைச் சாதித்துக் கொண்டால் விடுதலை
மலர்வது நிச்சயம்!
நம் அறிவிற்கு எட்டாதிருந்த இந்த வழிமுறைகள் உலகப் புகழ் பெற்றவை.
இதற்கு பெருமையான பல பெயர்கள் உண்டு. சமூகவிஞ்ஞானம், மெய்ஞானம், சித்தாந்தம், உண்மை தத்துவம், உழைக்கும் மக்கள் தத்துவம், அறிவியல் தத்துவம்,
மார்க்சியம்... இப்படி பல பெயர்கள்.
No comments:
Post a Comment