மண்ணின் நட்சத்திரங்கள் நாமடா!
புதியவன்
குதித்து இழுத்து
குனிந்து நிமிர்ந்து
வளைந்து நெளிந்து…
கருவிகளை மந்திரமாகக்
கையாளும் நமக்கு…
வியர்த்து இழைத்து
கொதிக்கும் இட்லி சட்டியின்
வெம்புகை ஓசைபோல
அடிவயிற்றில் மூச்சுவாங்கும் நமக்கு…
ஆடுவதும் பாடுவதும்
முஷ்டியை முறுக்கி கோசமிடுவதைவிட எளிமையானது!
இயற்கையின் மொழியறிந்த நமக்கு
கருவிகளின் குரலோசைகள் அத்துபடியான நமக்கு
இசையமைப்பது குரட்டைவிடுவதைவிட சுகமானது!
உழைப்பின் ஆதிகதை
நமக்கு உணர்த்தும் இதை…
வெயிலில் பாறைகளை உடைத்தோம்
வண்ணத்துப்பூச்சிகளோடு விளையாடினோம்
உள்ளங்கை வலிமையால் உலகை உருட்டினோம்
வண்ணங்களைப் பூசி பூப்பெய்த வைத்தோம்
உழைப்பின் முகம் பார்த்து
உலகம் காதலிபோல் சிரித்தது
ஆதியில் நிகழ்ந்த உழைப்பின் கதைகள்
இன்று பொய்மை மேகங்களால் சூழ்ந்தன!
உண்மை நம்மை உணரவைக்க துடிக்கிறது...
எரிக்குழம்பாய் தெரிக்கிறது…
எழுத்தும் கலையும்
எதிரியின் பையில்!
அரசும் அதிகாரமும்
அவனது கையில்!
செருப்பாய் தேய்ந்தே பழகினோம்!
இனியாவது…..
மனுசனாய் வாழ முயல்வோம்!
நமக்கான உலகை படைக்க
கரங்களில் மலரட்டும்
வியர்வை படிந்த கருவிகள் மட்டுமல்ல
கலை இலக்கிய ஆயுதங்களும்…
நம் பிளிறல்
எதிரியின் காதைப் பிளக்கட்டும்
மக்களைத் தட்டி எழுப்பட்டும்
வண்ணத்துப்பூச்சிகள் இனியும்
பெருச்சாலியின் மூக்கை வட்டமிட வேண்டாம்!
உழைப்பாளிகளின் வாழ்வை அழகுபடுத்தட்டும்…
No comments:
Post a Comment