அதிரடிப்படைகிரிக்கெட்டும்
அடிவாங்கிடும்
மக்களும்
புதியவன்
விளையாட்டு, உடற்பயிற்சி, ஓய்வு
மனநிம்மதி, பொழுதுபோக்கு
அனைத்திலும்
கிரிக்கெட் கரும்புகை
நம்மை சூழ்ந்திருக்கிறது
வகுப்பறையில்
'புக்கிரிக்கெட்' ஆடுவதால்
கிரிக்கெட்கரையான்கள்
நம் படிப்பையும் அரிக்கின்றன...
நமது பல ஆயிரம்
கர்ப்பினி விளையாட்டுகளின்
புடைத்த வயிறை
பூட்சு கால்களால்
மிதித்துக் கொன்ற
அதிரடிப்படை கிரிக்கெட்டிற்கு
வயல்வெளிகளையும்
பொட்டல்காடுகளையும்
மைதானங்களையும்
முட்டுச்சந்துகளையும்
பரிசாக கொடுத்துவிட்டோம்!
கிரிக்கெட் நமதுவாழ்வானதால்!
நம்மை சுற்றி பூமியில
என்னவெல்லாம் நிகழுது
எத்தனை லிட்டர் வியர்வையில
எத்தனை பொருள்கள் மலருது
எப்படி நமக்கு கிடைக்குது
எத்தனை கிடைக்க மறுக்குது
விலைவாசி ஏன் உயருது
அரசியல் என்ன நடக்குது
எதற்கும் விடைஎடுக்கவிடாமல்
திணறச் செய்கிறது
கிரிக்கெட் பேயின்
வலுவான ஃபீல்டிங்!
ஒவ்வொரு ஓவரிலும்
பட்டினி சாவுகளாய்
வேலை இன்மையாய்
உரிமையற்ற மக்களாய்
அடிமை நாய்களாய்
அடுத்தடுத்த பந்துகளில்
அவுட் ஆகிறோம்!
ஆட்டத்தின் ஒவ்வொரு பந்தும்
மட்டையில் படாமல்
பின்னுக்குப் போவதால்
இயற்கை, விஞ்ஞானம்,
சமூகம், அரசியல்பற்றி
சிந்திக்க வேண்டிய நம்மூளை
'கிளீன்ஃபோல்டு' ஆகுது...
நாம் கிரிக்கெட்டில்ஜெயிக்கிறோம்
வாழ்க்கையில் என்னசெய்துகிழிக்கிறோம்!
No comments:
Post a Comment