முடிவுரை
‘தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள் : இனவரைவியல் நோக்கு’ என்ற இவ்வாய்வேட்டில் முன்னுரை முடிவுரை நீங்கலாக நான்கு இயல்கள் அமைக்கப்பெற்றிருக்கின்றன.
‘இலக்கியம், இனவரைவியல், பழங்குடிகள்’ என்ற முதல் இயலானது இலக்கியம் என்ற சொல்லிற்கான விளக்கங்கள், இலக்கியத்தின் இலக்கு, இலக்கிய வடிவங்களில் புதினம், இனவரைவியல், மானிடவியல் பற்றிய விளக்கங்கள், இலக்கியத்திற்கும் இனவரைவியலுக்கும் இடையிலுள்ள உறவுகள், பழங்குடிகள் பற்றிய விளக்கங்கள், இந்திய மற்றும் தமிழகப் பழங்குடிகள் பற்றிய அறிமுகம், தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்களின் கதை சுருக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அமையப்பெற்றிருக்கின்றது.
இலக்கியம் என்பது சமூகத்திலிருந்துதான் உருவாக முடியும். சமூகத்திலுள்ள மனிதர்களின் மொழியானது பயன்பாட்டு ஆளுமைகளிலிருந்தும் பண்பாட்டு அடர்த்தியிலிருந்தும் இலக்கிய படைப்பாக்கம் உருவாகின்றது. வரலாற்று நிலையில் மனிதர்களுக்கு கட்டமைந்துள்ள உள்ளத்தியல்களும் கருத்தியல்களும் இலக்கியப் படைப்பிற்கு மூலங்களாக இருக்கின்றன. நிகழ்கால மனிதர்களின் சமூக வாழ்வியல் முரண்பாடுகளும் இலட்சியங்களும் இலக்கியப் படைப்பிற்கு உந்துதல்களாக இருக்கின்றன. மூலங்களையும் உந்துதல்களையும் காரணிகளாகப் பெற்று இலக்கியப் படைப்புகள் உருவெடுக்கின்றன. இலக்கியப் படைப்பாளிகள் சமூகத்தைத் தவிர்க்க இயலாத அங்கமாகப் பெற்றிருப்பதால் எந்த ஓர் இலக்கியப் படைப்பையும் சமூக நிகழ்வாகவே கருத முடிகின்றது. இலக்கியப் படைப்பாளர் சக மனிதர்களின் அங்கம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஒவ்வொரு படைப்பாளரும் எத்தகைய இலக்கியங்களைப் படைக்கிறார்கள் என்ற கேள்வி காலந்தோறும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. இலக்கியப் படைப்புகள் மீதான ஆய்வுகளைச் சமூகப் பற்றுள்ள ஆய்வாளர்கள் சமூகத் தேவையின் அடிப்படையில் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.
இலக்கியப் படைப்பாளர்களுக்கு மனித சமூகத்தைப் பற்றிய தனித்துவமானப் பார்வைகள் இன்றியமையாத சமூக அறிவாக அமைகின்றன. மனித சமூகத்தில் இனம், மதம், சாதி, தொழில் போன்ற வேறுபாடுகள் ஏராளமாக இருக்கின்றன. இத்தகையப் பல்வேறு வேற்றுமைகளை அவற்றின் தனித்துவங்களோடு புரிந்துகொள்வதற்கு இனவரைவியல் அணுகுமுறை இன்றியமையாததாக அமைகின்றது. இனவரைவியல் பார்வையற்ற இலக்கியப் படைப்பாளியின் சமூக அறிவு முழுமையின் சாராம்சமாக அமையாமல் அதிக விடுபாடுகளுடன் அமைகின்றது. அவர் ஒரு குறிப்பிட்ட மனிதர்களின் சமூகப் பொருளாதார வாழ்வியல் பண்பாடு பற்றிய புதினத்தைப் படைத்து முடிக்கின்றாரெனில் அந்தப் புதினத்தில் ஏராளமானப் பண்பாட்டு விடுபடுதல்களை ஆய்வாளர்களால் கண்டறிய முடியும். அந்தப் புதினம் எத்தகைய மனிதர்களைப் பற்றி உருவாக்கப்பட்டதோ அத்தகைய மனிதர்களைப் பற்றிய முழுமையின் சாராம்சமாகப் படைக்கப்படவில்லை என்பதை அறிய முடியும். எனவே ஒரு இலக்கியப் படைப்பாளியின் சமூக அறிவிற்கு மானிடவியலாளர்களின் இனவரைவியல் பார்வை இன்றியமையாததாகக் கருத முடிகின்றது.
‘வாழ்விடங்களும் சமூகப் பொருளாதார உற்பத்தி உறவுகளும்’ என்ற இரண்டாவது இயலானது தமிழகப் பழங்குடிகளது வாழ்விடச் சூழல், ஊர்கள், வீடுகளின் அமைப்புகள், நீர் நிலைகள், வனம், வன உயிரினங்கள், தொழிற்கருவிகள், காடுசார்ந்த பொருட்களைச் சேகரித்தல், வேட்டையாடுதல், விலங்குகளை வளர்த்தல், விவசாயம் செய்தல், உற்பத்திப் பாதுகாப்பு செய்தல், வியாபாரம் செய்தல், கூலி வேலை செய்தல், கடன்பெறுதல் ஆகிய முதன்மை உட்தலைப்புகளைக் கொண்டு தமிழகப் பழங்குடிகள் பற்றிய ஐந்து புதினங்களிலிருந்தும் இனவரைவியல் நோக்கில் ஆராயப்பட்டிருக்கின்றது.
சோளகர் பழங்குடிகள் அவர்களது நினைவிற்கு எட்டாத காலந்தொட்டு தலைமுறை தொடர்ந்து சத்தியமங்கலம் பகுதியிலுள்ள மலை காடுகளில் வாழ்ந்து வருகின்ற பூர்வ குடிகளாவர். மலையாளிகளை கொல்லிமலையின் பூர்வ குடிகளாகவே சங்கம் புதினத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. படகர்கள் 18வது நூற்றாண்டில் மைசூரிலிருந்து நீலகிரி மலையில் குடியேறி தங்களது தனித்துவங்களை விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்து வருகிறார்கள். அரசாங்கத்தின் தொடர் முயற்சியால் மலை காடுகளில் வாழ்ந்த இருளர்கள் மலையடிவார கிராமங்களுக்கு குடியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.
வன உயிரினங்களில் யானை, மான், பன்றி ஆகியன பிரதானமாக அறியப்படுகின்றன. கொல்லி மலையில் வாழும் வன உயிரினங்களில் கரடி இன்றியமையாததாகும். ஆனால் ‘கரடி வண்டி’ என்ற உவமையைத் தவிற சங்கம் புதினத்தில் கரடி பற்றிய பதிவுகளே இல்லை.
தமிழகப் பழங்குடிகள் பயன்படுத்துகின்ற கருவிகளில் மின்கம்பி வேலி இடம்பெறுவதில்லை. துப்பாக்கியின் பயன்பாடு வரைமுறைக்கு உட்பட்டதாகவே அமைகின்றது. தமிழகப் பழங்குடிகள் மீது அதிகாரம் செய்கின்ற நவீன சொத்ததிகார சமூகத்தினரால் பயன்படுத்தப்படுகின்ற மின் கம்பி வேலியானது இயற்கையுடன் பகை முரணை உருவாக்குகின்ற கருவியாக அமைந்திருக்கின்றது. வனங்களில் பழங்குடிகளைப்போல வன உயிரினங்களும் இயற்கையோடு ஒத்திசைந்து வாழ்கின்றன. வனங்களிலேயே காலந்தொட்டு வாழ்வதினாலேயே பழங்குடிகளுக்கும் மற்ற வன உயிரினங்களுக்கும் போராடி உணவைப் பெறுவதற்கும் அழிவிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கும் உரிமைகள் இருக்கின்றன. இயற்கையோடு ஒத்திசைந்து பெற்றுள்ள உரிமையின் அடிப்படையில் உணவுத் தேவைக்காக பழங்குடிகள் வேட்டையில் ஈடுபடுகிறார்கள். தற்காப்புத் தேவைக்காக விளைச்சலை மற்ற வன உயிரினங்களிடமிருந்து பாதுகாக்க சப்தம் எழுப்பும் கருவிகளை பயன்படுத்தி விரட்டுகிறார்கள். வாய்வேட்டு மூலம் கிடைக்கும் பன்றிகளின் இறைச்சியை உணவாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். மற்றபடி விளைச்சலைப் பாதுகாப்பதற்காக வனஉயிரினங்களைக் கண்மூடித்தனமாக அழிப்பதற்கு எத்தகைய வடிவங்களிலும் ஈடுபடுவதில்லை. பழங்குடி மக்களின் செயலூக்கத்தால் உருவாகின்ற இயற்கை மீதான முரண்பாடுகள் நட்பு முரணாகவே அமைகின்றன. பழங்குடிகள் அல்லாத கீழ்நாட்டு சொத்ததிகாரக் குடியேறிகள் தங்களது விவசாய விளைச்சல்களைப் பாதுகாப்பதற்காக மின்வேலிகள் அமைத்து வன உயிரினங்களைக் கண்மூடித்தனமாக அழிக்கிறார்கள். மின்கம்பி வேலியில் வன உயிரினங்கள் அடிபட்டு இறக்கின்றன. எனவே, பயன்பாட்டுக் கருவிகளில் மின்கம்பி வேலியானது இயற்கை மீதான பகை முரணை ஊக்கப்படுத்துகின்ற கருவியாக அமைகின்றது. துப்பாக்கி என்ற கருவியை பழங்குடி மக்கள் தங்களது தேவைக்கான வேட்டைக்கும் தற்காப்பிற்கான அவசியத்திற்கும் பயன்படுத்திய தருணங்களில் இயற்கை மீதான நட்பு முரணாகவே அமைந்தது. ஆனால் வெள்ளைக்கார அதிகாரிகள், ஜமீன்தார்கள், அரசு அதிகாரிகள், சொத்ததிகாரம் உடையவர்கள் தங்களது இலாப நோக்கத்திற்காகவும் பொழுதுபோக்கு விளையாட்டிற்காகவும் யானை, புலி போன்ற வன உயிரினங்களை வேட்டையாடிய தருணங்களில் துப்பாக்கி என்ற கருவியை இயற்கை மீதான பகை முரணாகவே கருத முடிகின்றது.
காடுசார்ந்த பொருட்களை சேகரித்தல் பற்றிய புதின விவரங்கள் முக்கிய விடுபடுதல்களுடன் அமைந்திருக்கின்றன. குறிப்பாக தேன் சேகரித்தல் என்ற தொழில் தமிழகப் பழங்குடிகளின் முக்கியத் தொழிலாக அமைகின்றது. ஆனால் மலையாளிகள், படகர்கள், தேன்கனிக்கோட்டை இருளர்கள் பற்றிய புதினங்களில் தேன் சேகரித்தல் பற்றிய தகவல்கள் விடுபட்டுள்ளன.
வேட்டை தொழிலில் மான், பன்றி ஆகியன முக்கிய உயிரினமாக கருத முடிகின்றது. புலி, கரடி, சிறுத்தை ஆகிய வன விலங்குகளின் தாக்குதலை எதிர்கொள்கின்ற தருணங்களில் தற்காப்பு நடவடிக்கையாக அவற்றைப் பழங்குடி மனிதர்கள் கொல்வதை அறிய முடிகின்றது. கரடி கொல்லப்பட்டால் உணவாகவும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் விளைச்சலை பாதுகாத்தல், மந்தையைப் பாதுகாத்தல், பொழுதுபோக்கு விளையாட்டாக வேட்டையாடுதல் போன்ற காரணங்களுக்காக உணவிற்கு பயன்படுத்தப்படாத வன உயிரினங்களைப் பழங்குடி மக்கள் கொன்றழிப்பதில்லை. வெள்ளைக்கார அதிகாரிகள், ஜமீன்தார்கள், அரசு அதிகாரிகள், சொத்ததிகாரம் உடையவர்கள் தங்களது இலாப நோக்கத்திற்காகவும் பொழுதுபோக்கு விளையாட்டிற்காகவும் வேட்டையில் ஈடுபட்டு வன உயிரினங்களை கண்மூடித்தனமாக அழித்திருக்கிறார்கள். வெள்ளைக்கார அதிகாரிகள் தாங்கள் வேட்டையாடிய புலிகளின் உடல்களை கூட்டமாகக் குவித்து அவற்றுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். இன்று புலி இனமே வனங்களில் அரிதாகிப் போனதற்கு காரணம் பழங்குடி மக்கள் அல்ல என்பதற்கு இத்தகையச் சான்றுகளைப் பெற முடிகின்றது. சொத்ததிகாரம் படைத்த கீழ்நாட்டுக்காரர்கள் தங்களது மந்தைகளைப் பாதுகாக்க வனங்களிலுள்ள புலிகளை விசம் வைத்து அழித்திருக்கிறார்கள். தந்தங்களுக்காக யானைகளைக் கூட்டங்கூட்டமாகக் கொல்கிறார்கள். இத்தகைய வேட்டை நடவடிக்கைகள் வனத்தைப் பணமாக்குதல் என்ற கோட்பாட்டின்படி பழங்குடி அல்லாதவர்களால் வனத்தின் மீது தொடுக்கப்பட்ட வன்முறைகளாக அறியமுடிகின்றது. பழங்குடி மக்களின் வேட்டை தொழிலும் விவசாய தொழிலும் இயற்கையோடு ஒத்திசைந்து உணவினைப் பெறுகின்ற உயிரின நடவடிக்கையாக மட்டுமே அமைகின்றன. பழங்குடி மக்கள் இயற்கையோடு ஒத்திசைந்து பராமரித்து உரிமை பெற்றுள்ள விவசாய நிலங்களை பழங்குடி அல்லாதவர்கள் தொடர்ந்து அபகரிப்பதற்காக முயல்கிறார்கள் என்பதை அறிய முடிகின்றது. சொத்ததிகாரம் படைத்த கீழ்நாட்டுக்காரர்கள், தொழிற்சாலை நிறுவனங்கள், நிறுவனங்களின் இலாப நலன்களுக்கு சேவை செய்கின்ற அரசு அதிகாரங்கள் ஆகியன பழங்குடி மக்களிடமிருந்து அவர்களது விவசாய நிலங்களை அபகரிக்கின்றன.
விவசாயத்தில் ஈடுபடுதல் என்பது உணவுத் தேவையை நிறைவேற்றுவதற்கா? பணம் சம்பாதிப்பதற்கா? என்ற விவாதத்தை படகர்களது வாழ்வியல் மாற்றங்களில் அறிய முடிகின்றது. உணவுப் பயிர்களல்லாமல் பணத்திற்காக வனத்திற்கு பொருத்தமற்ற புதிய பயிர்களை வளர்த்து வனத்தை அழிப்பதை கண்டிப்பதாகவே பழங்குடி மக்களது ஆழ்மன உணர்நிலை வெளிப்படுகின்றது.
தமிழகப் பழங்குடிமக்கள் தங்களது வாழ்விட சூழல்களின் அடிப்படையிலும் பொருளாதார உற்பத்தி நடவடிக்கைகள் அடிப்படையிலும் வன உயிரினங்களின் அங்கமாகவே தங்களைப் பிரதிநிதித்துவப் படுத்திக்கொள்வதை அறிய முடிகின்றது.
மனித சமூக வரலாற்றில் பொருளாதாரப் படிமலர்ச்சியானது உற்பத்திக் கருவிகளது வளர்ச்சியின் அடிப்படையில் கீழ்வருமாறு அமைகின்றது.
1.காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)
என்பதாக பொருளாதார படிமலர்ச்சி நிகழ்ந்துள்ளன.
1.காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)
2.வேட்டை நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)
3.கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
4.விவசாய நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
5.உற்பத்தியின் மீதான வணிக நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
6.வணிக இலாபத்திற்காக உற்பத்தி செய்தல் (தந்தை அதிகார சமூகம்)
7.நிதி மூலதனப் பிரிவு தோன்றி சமூகஉற்பத்தி மீது ஆதிக்கம் செய்தல் (தந்தை அதிகார சமூகம்)
8.மக்கள் தலைமையின் கீழ் சமூகஉற்பத்தியைக் கட்டமைத்தல் (ஏற்றத்தாழ்வு மதிப்பற்ற சமூகம்)என்பதாக பொருளாதார படிமலர்ச்சி நிகழ்ந்துள்ளன.
உற்பத்திக் கருவிகள் வளர்ச்சியடையாத காலக்கட்டத்தில் காடுசார்ந்த பொருட்களைச் சேகரித்தலே முதன்மைத் தொழிலாக அமைந்திருந்தது. சிறிய அளவில் வேட்டைக் கருவியும் விவசாய கருவியும் வளர்ச்சி கண்டிருந்த காலத்திலும்கூட காடுசார்ந்த பொருட்களைச் சேகரிக்கின்ற தொழிலே பிரதான சக்தியுடையதாக அமைந்திருந்தது. குழந்தைகளையும் கூட்டத்தையும் குழுவின் தாயார் வழிநடத்திய தாய்தலைமைச் சமூகத்தில் காடுசார்ந்து சேகரிக்கப்பட்ட பொருட்களைப் பெண்களே தலைமையேற்று கூட்டத்திற்குப் பகிர்ந்தளித்துப் பராமரித்தார்கள். வலிமையுடைய வேட்டைக் கருவிகளும் விவசாயக் கருவிகளும் கண்டுபிடிக்கின்ற காலம்வரையிலும் இந்த நிலையே நிலைத்திருக்கிறது. குழுவின் அத்தனை மனிதர்களுக்கும் தேவையான பொருட்களை ஈட்டித் தருவதில் காடுசார்ந்த சேகரிப்பைவிட வேட்டையாடுதலும் விவசாயமும் முக்கியத்துவம் பெறத்தொடங்கிய பிறகு தாய்த்தலைமையிலிருந்து படிப்படியாகத் தந்தை அதிகாரத்திற்குச் சமூகம் மாற்றம் பெறத் தொடங்கியது. இன்றைய தொன்மையானப் பழங்குடிச் சமூக வாழ்விலும் விவசாயத்திற்கும் வேட்டையாடுதலுக்கும் வழியில்லாத சூழலில் காடுகளில் சென்று கிழங்குகளைச் சேகரிப்பதற்குப் பெண்கள்தான் செல்கிறார்கள். இது கடந்தகாலத் தாய்த்தலைமைச் சமூகத்தின் காடுசார்ந்த பொருள் சேகரிப்புக் கடமையின் ஆழ்மன உணர்நிலையின் எச்சமாகத் வெளிப்படுகின்றது. சோளகர்கள் வாழ்விலும் இருளர்களது வாழ்விலும் இந்நிலையைக் காணமுடிகின்றது.
வேட்டையாடிய விலங்கைப் பங்கிடும்போது முதல் பங்கைச் சோளகர்கள் தங்கள் ஊரிலுள்ள விதவை பெண்ணுக்கு ஒதுக்குகிறார்கள். தாய்தலைமைச் சமூகத்தில் வேட்டையாடிய இறைச்சி முழுமையும் தாயின் தலைமைக்கு உட்பட்டு பகிர்ந்துகொள்ளப்பட்டது. தந்தை அதிகாரச் சமூகத்தில் விதவைப் பெண்ணுக்கு ஒரு குறிப்பிட்ட பங்கு ஒதுக்கப்படுகின்றது. தாய்த்தலைமைச் சமூகத்தில் சொத்துடைமை உற்பத்திமுறை வலிமையடையும்வரை ஆண் பாலினத்தை முதன்மைப்படுத்துகின்ற கணவன், தந்தை ஆகிய உறவுமுறைகளோ கருத்துக்களோ தோன்றியிருக்கவில்லை. சோளகர்கள் தங்களது வேட்டையின் முதல் பங்கை தந்தை அதிகாரச் சமூகத்தின் அடையாளமாகிய கணவர் இல்லாத ஒரு விதவைப் பெண்ணுக்கு ஒதுக்குகிறார்கள். இது தாய்த்தலைமைச் சமூகத்தின் மீது ஆண்களின் ஆழ்மன உணர்நிலையிலுள்ள மரியாதையின் எச்சமாகும்.
ஜோகம்மாள் விவசாயம் செய்து ஓரிடத்தில் நிலைத்து வாழ்வதே மதிப்புமிக்க வாழ்வென கொத்தல்லியிடம் எவ்வளவுதான் விவாதித்தாலும் வேட்டைத்தொழிலை விட்டுக்கொடுத்துப் பேசுவதற்குக் கொத்தல்லி தயாராகவே இல்லை. கொத்தல்லியின் ஆழ்மன உணர்நிலையில் வேட்டைச்சமுதாயத்தின் நாகரிகமே சிறப்புடையது என்று கருதுகிறான். பேதன் விவசாய நாகரிகத்தின் பிரதிநிதியாகத் திகழ்கிறான். பேதனின் தோழன் கொத்தல்லியோ பழைய வேட்டை நாகரிகத்தின் பிரதிநிதியாகத் திகழ்கிறான்.
விவசாயப் பொருளாதாரத்தில் தங்களுக்குத் தேவையானதை உற்பத்தி செய்து வாழ்கிறார்கள். மலையாளிப் பழங்குடிகளும் இருளர்களும் அத்தியாவசியமான உணவுத் தேவைகளை நிறைவேற்றுகின்ற கடமையுடன் உணவுப் பயிர்களையும் காய்களையும் பழங்களையும் கிழங்குகளையும் விளைவிக்கின்றார்கள். தங்களது விளைச்சலைத் தேவைப்படுபவர்கள் வாங்கிக்கொள்வதற்கு வசதியாக சந்தைக்கு கொடுத்து பணம் பெறுகின்ற வணிக உறவு தோன்றியிருக்கிறது. உற்பத்திப் பொருள்களைச் சந்தையில் விற்பதும் தங்களுக்குத் தேவையானப் பொருள்களைச் சந்தையிலிருந்து வாங்கிவருவதும் பழக்கத்திற்கு வந்திருக்கின்றன. சோளகர்கள் திம்பம் சந்தையுடன் உறவு கொண்டிருப்பதும், மலையாளிகள் கீழ்நாட்டுச் சந்தையுடன் உறவு வைத்திருப்பதும், தாணிக்கண்டி இருளர்கள் பூண்டிக் கோயில் முன்பு கடை பரப்பி வியாபாரம் செய்வதும் அத்தியாவசியமாக தாங்கள் உற்பத்திசெய்த பொருள்களை விற்றுப் பணம் ஈட்டுவதே ஆகும். ஆனால், மண்ணுக்குப் பொருத்தமற்ற புதிய பணப்பயிர்களை அவர்கள் விளைவித்ததில்லை. பணப்பயிர்களை விளைவிக்கின்ற முயற்சிகளை இயற்கையோடு ஒத்திசைந்து வாழ்வதற்கு எதிரானதாகக் கருதுகிறார்கள். இத்தகைய கருத்துநிலைப்பாட்டினை உணர்நிலை அறிவு மட்டத்தில் மட்டுமல்லாமல் ஆழ்மன உணர் நிலை அறிவுநிலையிலும் பெற்றிருக்கிறார்கள். படகர் சமூகத்தில் காபி, தேயிலை போன்ற பணப்பயிர்களை விவசாயம் செய்யத் தொடங்கியபோது அத்தகைய நடவடிக்கைகள் தவறானவை என்று விமர்சித்தவர்களாகவும் படகர் சமூகத்தினர் விளங்கியிருக்கிறார்கள். கரியமல்லரைப்போல தேயிலை விளைவித்தால் பணம் பார்க்கலாமே என்று கருத்துச்சொல்லிய ரங்கம்மையிடம் ஜோகியின் விடை இவ்வாறு அமைகின்றது.
“தேயிலையும் காபியும் பணந்தானே கொடுக்கும் ரங்கம்மா? ராகியும் கோதுமையும் கிழங்கும் பசிக்கு உணவாகுமே!”
(ராஜம்கிருஷ்ணன்.2001:
192). பணத்திற்காக விவசாயம் செய்யும் பண்பு வணிக பொருளாதார வளர்ச்சியினால் உருவாகியது. பணம் வாழ்விற்குப் பிரதான தேவை என்ற மதிப்பானது பழங்குடிகளது வாழ்வில் திணிக்கப்பட்டபிறகுதான் சந்தையில் விற்றுப் பணம் பார்ப்பதற்காகவே பணப்பயிர்களை விவசாயம் செய்கின்ற முறை உருவாகியிருக்கின்றது.
‘சமூக வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகள்’ என்ற மூன்றாவது இயலானது தமிழகப் பழங்குடிகளது குடும்பம், உணவுமுறை, உடை, புழங்கு பொருட்கள், முக்கிய பொறுப்புகள், சமயம் மற்றும் தெய்வங்கள், தோற்றத் தொன்மங்கள், இடப்பெயர் வரலாறு, குலம் இனம் சாதி, சடங்குகள், சுகாதாரம், பாலின அதிகாரம், நம்பிக்கைகள், விழாக்கள், கலை, அறிவியல், மருத்துவம், கல்வி முறை, பஞ்சாயத்து, வாய்மொழி வழக்காறுகள் ஆகிய முதன்மை உட்தலைப்புகளைக் கொண்டு தமிழகப் பழங்குடிகள் பற்றிய ஐந்து புதினங்களிலிருந்தும் இனவரைவியல் நோக்கில் ஆராயப்பட்டிருக்கின்றது.
பழங்குடி மக்களது குடும்ப அமைப்புகளின் இயங்குதலில் ஒருத்திக்கு ஒருவன் என்ற ஒருதார மணமுறை இறுக்கமான வடிவத்தை அடையவில்லை. ஒருதார மணமுறை அதிகாரப்பூர்வமான குடும்ப அமைப்பாக நடைமுறையில் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும்கூட இறுக்கம் அடையாமல் நெகிழ்வுத் தன்மையுடையதாகவே இருக்கின்றது. பருவம் அடைந்த சிறுவனை ஒரு பெண் திருமணம் செய்து கொள்வது, மூன்று வயது சிறுவனைப் பதினெட்டு வயது பெண் திருமணம் செய்து கொண்டு உரிமைக்காரர்களின் உதவியுடன் குழந்தை பெற்றுக்கொள்வது, கணவனைவிட்டு விலகி வேறொரு ஆடவனைத் திருமணம் செய்து கொள்வது ஆகியன நடைமுறையிலுள்ள ஒருதார மணமுறையின் இறுக்கமடையாதத் தன்மையை நிரூபிக்கின்றன.
சோளகர் தொட்டியில் மழை தெய்வத்தை வழிபடுவதற்காக ஆண்கள் தொட்டியிலிருந்துகொண்டு பெண்களைக் காட்டிற்கு வழியனுப்புகிறார்கள். காட்டிற்குச் சென்றப் பெண்கள் மழை தெய்வமாகிய எங்குசீர் குட்டையை வழிபடுவதற்காக அனைத்து உடைகளையும் களைந்து நிர்வாணமாக வழிபடுகிறார்கள். தாய்தலைமைச் சமூகத்தில் கூட்டத்தை வழிநடத்துகின்ற தாய் என்பவள் தந்தை அதிகாரச் சமூகத்தின் செயற்கைப் பண்புடைய சொத்ததிகார வடிவங்களுக்கு ஆளாகாதவள். தாய் தலைமைச் சமூகத்தின் பெண் இயற்கையின் அங்கமாக இருக்கின்றாள். சோளகர் பெண்கள் தங்களது கணவர், மகன், தந்தை ஆகியோரை ஒதுக்கிவிட்டு தனியாக வந்து உடைகளைக் களைந்து நிர்வாணமாக வழிபடுகிறார்கள். வழிபாட்டை முடித்துச் செல்கையில் சொத்து சேகரிக்கின்ற கருவிகள் இல்லாத தாய்தலைமை சமூகத்தின் பெண்களாக தங்களை எங்குசீர் குட்டை தெய்வத்திடம் உணர்த்த முயல்கிறார்கள். பொருட்களைச் சேகரித்துக் கொணர்ந்த கூடை முறங்களை உடைமையாக மீண்டும் எடுத்துச் செல்லாமல் வனத்திலேயே வீசிவிட்டுச் செல்கிறார்கள். இத்தகைய நடவடிக்கைகள் மூலமாக சோளகர்கள் தங்களது ஆழ்மன உணர்நிலையில் தாய்தலைமைச் சமூகப் பெண்களுக்கு பதிலீடாக தங்களை உருமாற்றிக்கொள்வதாகக் கருதுகிறார்கள்.
தேன்கனிக்கோட்டையில் இருளர்கள் வாழ்கின்றப் பகுதியில் வறட்சிக் காலங்களில் மழை வேண்டி மழைதேவருக்குப் படையலிட்டு வழிபடுகிறார்கள். அந்த வழிபாட்டில் வயதான மூன்று விதவைப் பெண்களை அழுவதற்காக அழைக்கிறார்கள். விதவைப் பெண்கள் மழையில்லாமல் தம் மக்கள் துயரடைகின்ற நிலைமைகளைப் பாடுவதன் மூலமாக மழை தேவருக்கு இரக்கம் உருவாகி மழையைப் பொழியச் செய்வார் என்பதாக நம்புகிறார்கள். இத்தகைய நம்பிக்கையின் அடிப்படையி்ல் விதவைப் பெண்கள் மழையை வரச்சொல்லி அழுதுகொண்டே பாடுகிறார்கள். இந்த விதவைப் பெண்களின் மழை வேண்டுகின்ற நிகழ்ச்சியானது சொத்ததிகாரத்தின் அடிப்படையிலான தந்தை அதிகாரச் சமூகம் தோன்றுவதற்கு முந்தைய தாய் தலைமைச் சமூக வடிவின் எச்சத்தை எடுத்தியம்புகின்றது. மழையைப் பற்றிய அறிவியலும் அறிவியல் தொழில் நுட்பங்களும் வளர்ச்சியடையாத தாய்த்தலைமைச் சமூகத்தில் கூட்டத்தை வழிநடத்திய தாய் இயற்கையிடம் கெஞ்சியும் போலி விஞ்ஞானமாகிய மந்திரம் மூலமாக இயற்கையைப் பணித்தும் மழை பொழிய வேண்டினார். தாய்த்தலைமைச் சமூகத்தில் கணவர் என்ற ஆணாதிக்கச் சின்னம் தோன்றியிருக்கவில்லை. தந்தை அதிகாரச் சமூகத்திற்கு உட்பட்ட மழைதேவரு வழிபாட்டில் அழுவதற்காக அழைக்கப்படுகின்ற கணவரில்லாத விதவைப் பெண்கள் கணவர் என்ற உறவு முறை தோன்றாத தாய்த்தலைமைச் சமூகப் பெண்களை கருதச் செய்கின்ற பதிலீடாகத் திகழ்கின்றனர்.
தந்தை அதிகார சமூகத்தில் வாழும் மனிதர்களது ஆழ்மன உணர்நிலையானது இத்தகைய பதிலீடுகள் மூலமாக தாய்த்தலைமைச் சமூகத்தை நினைவுகொள்கின்றன.
தமிழகப் பழங்குடிகளின் வாழ்வில் தந்தைவழி அதிகாரச் சமூகம் நடைமுறையில் அங்கீகரிக்கப்பட்டிருப்பதால் பாலின அதிகாரம் என்பது ஆணாதிக்க நலன் சார்ந்து பெண்கள் மீது சுமத்தப்படுகின்ற ஒடுக்குமுறையாகவே இருக்கின்றது.
தாணிக்கண்டி இருளர்கள்,
சோளகர்கள் பற்றிய பதிவில் பூப்புச் சடங்குகள் பற்றிய தகவல்கள் பதிவாகியுள்ளன. இவ்வகை
சடங்கில் தாய்தலைமையின் கொண்டாட்டத்தையும் தந்தை அதிகாரத்தின் வன்மத்தையும் இணை நிலையாக
அறிய முடிகின்றது.
காடு சார்ந்த பொருள் சேகரிப்பு
நாகரிகத்தின் மனிதர்கள் சகமனிதர்களைப் பெறுவதற்குத் தகுதி பெறுகின்றப் பெண்களைக் கொண்டாடத்
தொடங்கினார்கள். தாய்தலைமை சமூகத்தில் தோன்றிய இத்தொடக்கமே பூப்புச்சடங்காக உருப்பெற்றது.
கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்தில் தொடங்கிய ஆணதிகார சொத்தாதிக்கச் சமூகம் பூப்புச்சடங்கைத்
தமக்குரியதாக உருமாற்றிக்கொண்டுள்ளது. எனினும் தந்தையதிகாரச் சமூகத்தின் வன்மத்தை வெளிப்படையாக
அறிய முடிகின்றது.
பூப்பெய்த பெண்ணைக் கொண்டாடுதல்
என்பது தாய்தலைமை சமூகத்தின் எச்சமாக இருப்பினும் தாய்மாமனால் குடிசை அமைக்கப்படுவது
என்பது தந்தையதிகாரச் சமூகத்தின் பண்பேற்றமாக அறிய முடிகின்றது. பூப்பெய்தப் பெண்ணின்
மீது தீட்டு என்ற கருத்தாக்கத்தைச் சுமத்தி அசுத்தப்படுத்தும்போதும், அவளை அமர்த்திக்
கொண்டாடப்பட்ட குடிசையை எரியூட்டும்போதும் தாய்தலைமைச் சமூகத்தை அடையாளமின்றி அழிக்கின்ற
ஆணாதிக்கச் சமூகத்தின் வன்மத்தை அறிய முடிகின்றது.
சமூகப் பொருளுற்பத்தி அல்லாத சமூகத்தின் அனைத்துத் துறைகளும் சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளாக அமைகின்றன. தமிழகப் பழங்குடிகள் பற்றிய ஐந்து புதினங்களில் அனைத்துப் பண்பாட்டுக் கூறுகளும் முழுதளாவிய நிலையில் செறிவாக இடம்பெற்றிருக்கவில்லை. விளையாட்டு, அறிவியல், மருத்துவம், கல்வி முறை, வாய்மொழி வழக்காறுகள் போன்ற பல பண்பாட்டுக் கூறுகளைப் பற்றிய செறிவான தகவல்களை எடுத்தியம்புகின்றனவாகப் புதினங்கள் அமையவில்லை. பண்பாட்டுக் கூறுகளுக்கு இடையிலான விடுபடுதல்களும், இடைவெளிகளும் நிறைந்தனவாக புதினங்கள் அமைந்திருக்கின்றன. இந்தப் புதினங்களைப் படைத்த ஆசிரியர்கள் பிறப்பின் அடிப்படையிலும் வாழ்நிலை அடிப்படையிலும் பழங்குடிச் சமூகங்களைச் சார்ந்தவர்கள் அல்ல என்பதும் இதற்குக் காரணமாக இருக்கின்றன. பழங்குடிகளின் வாழ்வியல் பொருளாதாரப் பண்பாட்டுச் சூழல்களை முழுதளாவிய நிலையில் உணர்நிலை அறிவாகவும், ஆழ்மன உணர்நிலை அறிவாகவும் உணர்ந்திருப்பதற்கான வரலாற்று நிலை வாய்ப்புகளைப் பெற்றிருக்கவில்லை என்ற காரணங்களால் இத்தகைய செறிவின்மை அமைந்திருக்கின்றன.
‘வாழ்வியல் நெருக்கடிகளும் பண்பாட்டு அசைவியக்கங்களும்’ என்ற நான்காம் இயலானது தமிழகப் பழங்குடிகளின் சமூகப் பொருளுற்பத்தி பாதித்தல், இயற்கையை எதிர்கொள்ளுதல், அந்நியர்களால் ஆக்கிரமிக்கப்படுதல், நவீன அரசுகளின் அதிகாரத்திற்கு ஆட்படுதல், இயற்கையின் பகை முரணுக்கு ஆளாக்கப்படுதல், வனம் பணமாதல், கடன் சுமைக்கு ஆளாகுதல், விழுமியங்கள் சிதைக்கப்படுதல், உள்ளத்தியலும் கருத்தியலும் சிதைக்கப்படுதல், சித்திரவதைகளுக்கு ஆளாகுதல் ஆகிய முதன்மை உட்தலைப்புகளைக் கொண்டு தமிழகப் பழங்குடிகள் பற்றிய ஐந்து புதினங்களிலிருந்தும் இனவரைவியல் நோக்கில் ஆராயப்பட்டிருக்கின்றது.
அரசு மேற்கொள்கின்ற வனம் சார்ந்த எதிர்மறையானப் பொருளாதாரக் கொள்கைகள் தமிழகப் பழங்குடிமக்களுக்கு முதன்மையான வாழ்வியல் நெருக்கடிகளாக உருவாகியிருக்கின்றன. மனித சமூகம் தொடர்ந்து இயற்கையின் அங்கமாக ஒத்திசைந்து நிலைபெறுவதற்கு, இயற்கையுடன் பகை முரண் பாராட்டாது பண்பாட்டைப் பக்குவப்படுத்திக் கொள்வது,இன்றியமையாத சமூகத் தேவையாக இருக்கின்றது. வனங்களை இயற்கையின் வளமாகவும், பல்லுயிரினங்களின் வாழ்வாதாரமாகவும், பழங்குடி மக்களின் இயற்கையோடு ஒத்திசைந்த உரிமைகளாகவும் கருதுகின்ற முறையில் அரசின் வனக்கொள்கைகள் உருமாறி செயல்படுவதற்கானத் தேவை இன்றியமையாததாக இருக்கின்றது. இயற்கையின் அங்கமாக வாழ்கின்ற பழங்குடி மக்களை மனித இனத்தின் முன்னோர்களாக மதிக்க வேண்டியது வரலாற்றுத் தேவையாக இருக்கின்றது. வனங்களுடனும் வனங்களில் வாழும் வன உயிரினங்களுடனும் ஒத்திசைந்து வாழ்கின்ற பக்குவப்பட்ட வாழ்வியல் பண்பாட்டைப் பழங்குடி மக்கள் பெற்றிருக்கிறார்கள். வன உயிரினங்களின் ஓர் அங்கமாகப் பழங்குடிமக்களைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவையிருக்கின்றது. இதற்கு மாறாக வனங்களிலிருந்து பழங்குடிகளைக் கட்டாயத்தின் அடிப்படையில் வெளியேற நிர்பந்திக்கின்ற முயற்சிகள் அனைத்தும் இயற்கையுடன் பகை முரண்களைக் கூர்மைப்படுத்துகின்ற முயற்சிகளாகவே அமைகின்றன.
தமிழகப் பழங்குடிகளுக்கு அரசு இயந்திரத் தொடர்புகளால் உருவாக்கப்படுகின்ற முதன்மை நெருக்கடிகளும் அதன் விளைவாக நிகழ்கின்ற பண்பாட்டு அசைவியக்கங்களும் இறுதி இயலில் ஆராயப்பட்டிருக்கின்றது.
தமிழகப் பழங்குடிகளுக்கு அரசு இயந்திரத் தொடர்புகளால் உருவாக்கப்படுகின்ற முதன்மை நெருக்கடிகளும் அதன் விளைவாக நிகழ்கின்ற பண்பாட்டு அசைவியக்கங்களும் இறுதி இயலில் ஆராயப்பட்டிருக்கின்றது.
சமகாலத்தில் வாழ்கின்ற பழங்குடி மக்களைச் சக மனிதர்களாக ஏற்று அவர்களது இயற்கையான வாழ்வியல் உரிமைகளை அங்கீகரிப்பதற்கான சமூக மதிப்பீடுகள் உருவாக வேண்டும். வனங்களை ஆக்கிரமிக்கின்ற எதிர்மறை பொருளாதாரக் கொள்கைகளால் வனங்களில் ஒத்திசைந்து வாழ்கின்ற பழங்குடி மக்களது சமூக உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன. பழங்குடி மக்கள் தங்களது உரிமைகளுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு ஆளாக்கப்படுபவர்களாகவும், ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்ட உரிமைகளை நோக்கி வளர்பவர்களாகவும் வாழ்கிறார்கள். பழங்குடிகளின் வாழ்விடச் சூழல்கள் பெரும்பாலும் நகர மயமாதலை மையமாகக் கொண்டு ஊடகங்களால் கட்டமைக்கப்படுகின்ற சமூகப் பொதுப் புத்திக்கு எட்டாததாக அமைந்திருக்கின்றன. இந்நிலையில் அரசின் எதிர்மறையான கொள்கைகளைக் கண்டிக்கின்ற கருத்துடைய படைப்பாளிகள் பழங்குடி மக்களின் மீதான ஒடுக்குமுறைகளையும் எழுச்சிகளையும் கருத்தில்கொண்டு செயல்படுகிறார்கள். படைப்பிற்கான பொருண்மையாகப் பழங்குடிகளது வாழ்வியல் நிலைமைகளைக் கையாண்டுப் புதினங்களைப் படைத்திருக்கிறார்கள்.
‘சோளகர் தொட்டி, சங்கம், பனியில் பூத்த நெருப்பு’ ஆகிய புதினங்கள் இந்த முறையில் படைக்கப் பெற்றிருக்கின்றன.
‘குறிஞ்சித்தேன்’ என்ற படகர் குடி பற்றிய புதினம் அரசின் அணைகட்டும் திட்டத்தில் நிலங்களைப் பறிகொடுத்தப் படகர்களின் கிளர்ச்சியால் கவனம் பெற்று உருவாக்கப்பட்டிருக்கின்றது. இருப்பினும் ‘குறிஞ்சித்தேன்’ படைப்பாக்கத்தின் முதன்மை நோக்கமானது படகர்களது தனித்துவமான வாழ்வியல் முறைகளைப் படைப்பாக்கம் செய்ய வேண்டும் என்ற ஈடுபாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. இருளர் பழங்குடிகளின் வாழ்வியல் தனித்துவங்களைப் படைபிலக்கியமாக உருவாக்க வேண்டும் என்ற ஆர்வமிகுதியால் ஆட்டணத்தி என்ற வனத்துறை அலுவலரால் ‘வனம்’ என்ற புதினம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்களின் உருவாக்கங்களை முழுதளாவிய நிலையில் நோக்கினால் பழங்குடிகள் மீதான அரசு இயந்திரத்தின் அதிகார முயற்சிகளும் அதன் மீதான சமூகக் கலை இலக்கியப் படைப்பாளர்களின் மறுவினைகளும் தமிழகப் பழங்குடிகளைப் பற்றிய புதினங்களாக உருவெடுத்திருப்பதாக அறிய முடிகின்றது.
பணம் தரும் முறையில் வனங்களைப் பராமரித்தல் என்ற அரசின் கொள்கை நடைமுறையில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதனடிப்படையில் பழங்குடிகள் மீதான அரசின் அதிகாரச் செயல்பாடுகளும் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
‘மனிதர்கள் இல்லாதக் காடு’ என்ற கோட்பாட்டின் அடிப்படையிலும்,
‘புலிகள் காப்பகம்’ போன்ற வடிவங்களிலும் அரசின் கொள்கைகள் நீட்சி பெறுகின்றன. இந்த நிலையில் பழங்குடிகள் தங்களுடைய வாழ்வியலை உணர்த்துகின்ற அறிவியல் கலை இலக்கியங்களை எழுத முடியாத நிலை நீடிக்கின்றது. இந்த வரலாற்றுச் சூழலில் பழங்குடிகள் மீதான சமூகக் கவனங்களை வளர்த்தெடுப்பதற்கு உரிய முறையில் பழங்குடிகள் அல்லாதவர்கள் பழங்குடிகளைப் பற்றிய கலை இலக்கியங்களை உருவாக்குகின்ற முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். இந்த முயற்சிகளால் பழங்குடி மக்களுக்கு நேர்மறையான வெற்றிகளைப் பெற்றுத்தர முடியும். ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஐந்து புதினங்களும் இத்தகைய நேர்மறையான வெற்றிகளை நோக்கிப் படைக்கப்பட்டுள்ளன.
...
No comments:
Post a Comment