எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Wednesday, September 14, 2016

புதிய பாரம்பரியம் 2520 ( நாடகம்)



புதிய பாரம்பரியம் 2520 ( நாடகம்)
(நாவலர் பள்ளி, சமூகவிஞ்ஞான நண்பர்கள் குழுவுடன் நாடக உருவாக்கம் புதியவன்)
நாடகம் முழுவதும் காட்சிகளை ரயில் வண்டி போன்ற செயல் வடிவம் ஒருங்கிணைக்கும்.
காட்சி – 1, தாத்தா, பேத்தி
பேத்தி                             தாத்தா தாத்தா எங்க பள்ளிக்கூடத்துல பாரம்பரியம் பற்றி நாடகம்            போடப்போறோம். பாரம்பரிம்ன்னா என்னன்னு சொல்லுங்க தாத்தா.
தாத்தா           காலங்காலம்மா தொடர்ந்திட்டிருக்கிற பண்பாட்டைத்தான் பாரம்பரியம்ன்னு சொல்லுவாங்க.
பேத்தி            பண்பாடா? அப்படின்னா என்ன தாத்தா?
தாத்தா           விருந்தினர்களை உபசரிப்பது, இயற்கை சூழல்களையும் உயிரினங்களையும் பாதுகாப்பது, சாதி, மதம், சங்கம், சண்டை, சச்சரவு எல்லாந்தான் பண்பாடு.
பேத்தி            இன்னும் விளக்கமா கதையா சொல்லுத் தாத்தா
தாத்தா            அந்த காலத்துல எல்லா வீட்லயும் திண்ணை இருந்துச்சு
பேத்தி            திண்ணையா? அப்படின்னா?
தாத்தா           உனக்கு திண்ணை தெரியாதா ?
பேத்தி            எனக்கு திங்கிறதுதான் தெரியும், திண்ணை தெரியாதே..

(ரயில்காட்சி மாறுகிறது)
திண்ணை வீடு, வழிபோக்கர் ஒருவர்(), வீட்டார் இருவர்(வீ)
வீ1 –                      என்ன பெரியவரே எங்கிருந்து வாறீக?
                       கள்ளந்தேரில இருந்து வாறேன், புளியங்குளம் எவ்வளவு தூரம்?
வீ1 –                      ரெண்டு ஊரு தள்ளி புளியங்குளந்தான்.
வீ2 –                      காலு உலச்சலா இருந்தா செத்த உக்காந்திருந்துட்டு போறது
(பெரியவர் திண்ணை வந்து அமர்ந்ததும் உரிமையுடன் பேசிக்கொள்கிறார்கள்.)
                       கொஞ்சம் நீராகாரம் இருந்தால் கொடு தாயி,
                கரும்புக்காடு நல்லா செழிப்பா இருக்கு.
வீ1 -                      செழிப்பா இருந்து என்ன பண்ண. பெரிய வீட்டுக்காரங்க கூலிய உசத்த மாட்றாங்க
(வீ2 நீராகாரம் எடுத்துவந்து கொடுத்ததும் ருசித்துப் பார்க்கிறார்)
வீ1 –                      ஏம் பெரியவரே உங்களுக்கு பேரப்பிள்ளைக இருக்குங்களா?
                       உப்பு இல்ல
வீ1 –                      பேரப்பிள்ளைக இருக்கான்னா உப்பு இல்லங்கிறீங்க?
                       அது இல்ல, நீராகாரத்துல உப்பு போதலையே, கொஞ்சம் உப்பு தரியாம்மா
வீ2 –                      அதுக்கென்ன, கொண்டாங்க பெரியவரே கலந்து தாரேன்
                       பேரப்பிள்ளைகளுக்கு ஒரு குறைவும் இல்ல. ஏங்காலத்துல அவங்க வளர்ரத பாக்குறதவிட வேற என்ன சந்தோசம் இருக்க முடியும்.
(வீ2 உப்பு கலந்த நீராகாரத்தை கொடுத்ததும் மகிழ்வோடு குடிக்கிறார்)

ரயில்காட்சி மாறுகிறது (தாத்தா, பேத்தி)
பேத்தி -              என்ன தாத்தா சொல்ற. இப்பல்லாம் தவிச்ச வாயிக்கு தண்ணிகூட தர்ற மாட்றாங்க. குடிக்கிற தண்ணிய பாட்டில்ல அடைச்சு காசுக்கு விக்கிறானுங்க. கவர்மெண்ட்டே தண்ணிய பாட்டில்ல விக்கிது. நீ என்னடான்னா முகம் தெரியாதவரைக்கூட திண்ணைல்ல உக்கார சொல்றாங்களாம், நீராகாரம் கொடுக்குறாங்கலாம், போதக்குறைக்கு உப்பு போதாதுன்னு கேட்டு வாங்குறாராம். என்ன தாத்தா சோக்கடிக்கிறியா!
தாத்தா -             உண்மையதான் சொல்றேன்டா தங்கம்
பேத்தி -              சரி தாத்தா எனக்கு பாரம்பரியம் பத்தி வேற கத சொல்லுங்க
தாத்தா -             அப்பல்லாம் மக்கள் இயற்கையையும் மரங்களையும் தாயைப்போல மதிச்சாங்க. இன்னைக்கு கம்பெனிக்காரனுங்க காட்டையும் விலங்குகளையம் கண்டபடி அழிச்சு காசாக்குறானுங்களே அதுமாதில்லாம் நம்ம வாழல்ல. இன்னிக்கும் காடுகளையும் மலைகளையும் தாயைப்போல நேசிக்கிற பழங்குடி மக்கள் வழ்ந்திட்டிருக்காங்க.
பேத்தி -              தாத்தா! இப்பவும் பழங்குடி மக்கள் இருக்காங்களா?
ரயில்காட்சி மாறுகிறது.
(பழங்குடி தாயி(தாயி), வேட்டையாள் இருவர் (வே), வேட்டை நாய், மூன்று மான்)
வே1 -                   தாயி வேட்டைக்கு போயிட்டு வாறேன்
தாயி -                  ஜடசாமி துணையோட நல்ல வேட்டை கிடைக்கட்டும்.
                பிள்ளதாச்சியோ, குட்டி ஜீவனையோ அடிச்சுராதப்பா குலசாமி குத்தமாயிடும்.
வே1 -                   ஆகட்டும் தாயி
(காட்டில் மான்கள் திரிகின்றன. வேட்டைநாய் உதவியுடன் வியூகம் அமைத்து வேட்டையாடுகிறார்கள், பிறகு பங்கு பிரிக்கிறார்கள்.)
வே2 -                   முதல் பங்கு விதவதாச்சிக்கு (காட்சி சிலையாகிறது)

                        ரயில் உதவியுடன் காட்சி இணைகிறது – (தாத்தா, பேத்தி)
பேத்தி -              விதவதாச்சின்னா யாரு தாத்தா?
தாத்தா -             விதவை பெண்ணைதாம்மா விதவைதாச்சின்னு சொல்றாங்க
பேத்தி -              என்ன தாத்தா சொல்ற, நம்ம மக்கள் விதவை பெண்ண மதிக்காம அவமரியாதையா நெனைக்கிறாங்க. ஆனா அவங்க விதவைக்குதான் முதல் பங்கு ஒதுக்குறாங்க.
தாத்தா -             அதாம்மா அவங்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம்

ரயில் உதவியுடன் காட்சி பிரிகிறது-வேட்டையை பங்குபிரித்தல்
வே2 -                   ரெண்டாம் பங்கு ஊரு தலைவருக்கு
                                மூன்றாம் பங்கு வேட்டையாடின நம்ம பங்கு
                                நாலாம் பங்கு ஊருல எல்லார்க்கும்
                                அஞ்சாம் பங்கு நாயிக்கு
வே1 -                   நாயிக்கு இன்னொரு துண்டு போடப்பா

ரயில்காட்சி மாறுகிறது (தாத்தா, பேத்தி)
பேத்தி -              தாத்தா எனக்கு மனசு கஷ்ட்டமா இருக்கு.
தாத்தா -             என்னாச்சுடா தாயி
பேத்தி -              லாலா கடையில வாங்கி வந்த அல்வால அம்மாவுக்கு பங்கு தராமல் நானாவே சாப்பிட்டுட்டேன். அவங்க நாயிக்குகூட பங்கு கொடுத்துட்டுதான் சாப்பிடுறாங்களா! நல்ல மனுசங்கள்ல தாத்தா (தாத்தா சிரிக்கிறார்)
சரி தாத்தா, பாரம்பரியத்தைப்பத்தி வேற கத சொல்லுங்க
தாத்தா -             சாதிய பத்தி சொல்லட்டுமா?
பேத்தி -              சாதியா! காதலிச்சவங்கள்ல வெட்டி கொண்ணுட்டு வீடியோல்லன்னா காட்னாங்களே அதுவா, எனக்கு அருவெறுப்பாவும் கோவமாவும்  இருக்கும்மே?
தாத்தா -             அடி ராசாத்திநல்லது, கெட்டது, சரி, தவறு எல்லாமும் சேர்ந்ததுதான் பாரம்பரியம்இதுக்கு அருவெறுப்பு பட்டா எப்படி?
பேத்தி -              சரி தாத்தா சொல்லுங்க பாக்கலாம்.

ரயில்காட்சி மாறுகிறது (அப்பா, மகள், காதலன்)
அப்பா -              படிக்க அனுப்பிவச்சா காதல் கத்திரிக்கான்னு கண்ட சாதிக்காரனோட
ஊரு மேய போனீயாடீ..
மகள் -                 என்ன இவரோட சேத்து வைக்கலன்னா நான் செத்துருவேம்ப்பா
அப்பா -              அடி செருப்பால நாயே. உங்க ரெண்டு பேரையும் வெட்டி எரிச்சாக்கூட என் கோபம் தீராது. எங்க அருவாள

(அருவாளுடன் இருவரையும் விரட்டுகிறார். இருவரும் ஓடுகிறார்கள். அப்பாவின் சாதித்திமிரை கிண்டல் செய்கின்ற நகைச்சுவைக் காட்சிபோல அந்தக் காட்சி நடைபெறுகிறது. ரயில்காட்சியை மாற்றுகிறது (தாத்தா, பேத்தி).
பேத்தி -              நிறுத்து.. நிறுத்து.. தாத்தா கதைய நிறுத்து.
தாத்தா -             ஏண்டி தாயி
பேத்தி -              சாதிய பத்தி கத கேட்டாலே வாந்தி வராப்ல இருக்கு. சாதி, மதம், ஆம்பள, பொம்பள, பணக்காரன், ஏழை இப்படி எந்த ஏற்றத்தாழ்வும் கிடையாது. எல்லாரும் சரிசமம்னு மேடைக்கு மேடை பேசுறாங்க. இங்க என்னடான்னா சாதி கௌரவம்னு சல்லித்தனமா பேசிக்கிட்டு சகமனுசனையே வெட்டிக் கொல்றானுங்க. வெக்கமா இல்ல. ச்சீ!
தாத்தா -             சரிடீயம்மா பதறாத, நான் வேற கத சொல்லட்டா?
பேத்தி -              என்ன கத தாத்தா?
தாத்தா -             மதத்தைப் பத்தி சொல்லவா
பேத்தி -              அய்யய்யோ சாமி! ஆள விடு தாத்தா. சாதி நாத்தம்மே தாங்கல இதுல மதம் வேறயாக்கும்எங்களுக்கு மக்கள் எல்லாரும் சரிசமமா வாழ்றாங்க, சந்தோசமா வாழ்றாங்க, ஒற்றுமையா வாழ்றாங்க, சுதந்திரமா வாழ்றாங்க என்பதாகதான் கத வேண்டும். எங்க கதைக்கு புதிய பாரம்பரியம்தான் தேவைப்படுது. உங்க பாரம்பரியத்தை உங்களோடவே முடிச்சுக்கோங்க. நான் போய்வாறேன்.
தாத்தா -             ஏய் பாப்பாஎங்கம்மா போற?
பேத்தி -              சமூகவிஞ்ஞானிகள்ட்ட போறேன்.
தாத்தா -             புரியல
பேத்தி -              சமூகத்தப்பத்தி அறிவியல் பூர்வமாக புரிஞ்சுக்கிட்டு புதிய பாரம்பரியத்த உருவாக்கப்போறேன்.
தாத்தா -             புதிய பாரம்பரியமா? அது எப்படி இருக்கும்?

ரயில்காட்சி மாறுகிறது
(2520ம் ஆண்டில் அப்பா, அம்மா, மகள்)
அப்பா -              (போனில் பேசிக்கொண்டே அமர்ந்திருக்கும் இணையாளரின் நெற்றியில் காதலுடன் ஓர் முத்தமிட்டு மகளிடம் டாட்டா என செய்கை செய்துவிட்டு செல்கிறார்) சரி சரி, நான் கவனிச்சுட்டேன். முதியவர்களின் விளையாட்டு முகாம்களுக்கான எல்லா ஏற்பாடுகளும் திட்டமிட்டபடி நடந்திட்டிருக்கு. எல்லா பெரியவர்களும் வழக்கம்போல ரொம்ப ஆர்வமாகவும் உற்சாகமாகவும் இருக்காங்க.
மகள் -                 அம்மா இன்னைக்கு எங்க பள்ளிக்கூடத்துல பழங்கால கண்காட்சி நிலையத்திற்கு கூட்டிட்டுப் போறாங்கம்மா.
அம்மா -             அப்படியா! சந்தோசம்டா செல்லம், அங்க நீங்க எல்லாரும் ஆச்சரியப்பட வைக்கிற பல உண்மைகள தெரிஞ்சுக்கப் போறீங்க.
மகள் -                 அப்படியா அம்மா?
அம்மா-              ஆமாமாம்.. நம்ம வாழ்ற இந்த மகிழ்ச்சியான உலகம் அந்தக் காலத்துல எவ்வளவு மோசமான உலகமாக இருந்துச்சுன்னு தெரிஞ்சுக்கப் போறீங்க.
மகள் -                 நான்கூட கேள்விபட்டிருக்கேன் அம்மா. ஐந்நூறு வருசங்களுக்கு முன்னாடிமனிதர்களுக்கு எதிராக மனிதர்களே வாழ்ந்த காலம் இருந்ததுன்னு எங்க ஆசிரியர் சொன்னாங்கம்மா. அதை நிரூபிக்கத்தான் இந்த கண்காட்சிக்கு எங்கள கூட்டிட்டுப் போறாங்க.
அம்மா -             ஆனால், இந்த திட்டம் 2520 பிப்ரவரி 18ம் தேதிக்கு போறதா முடிவு செய்திருந்தாங்களே?
மகள் -                 இல்லம்மா பிப்ரவரி 14க்கு மாத்திட்டாங்க.
அம்மா -             சரிடா செல்லம். சந்தோசமா போய்ட்டு பழைய உண்மைகளைத் தெரிஞ்சுட்ட வாங்க.
மகள் -                 அம்மா, நீங்களும் வாறீங்களா?
அம்மா -             இல்லடா, எனக்கு பல்கலைக்கழகத்துல வேல முடிஞ்சதும் திரைப்பட கதை தயாரிப்புக்கு போயிருவேண்டா. அப்பாவும் அறுவடை வேலை முடிஞ்சதும்  முதியவர்களுக்கான விளையாட்டு முகாம் திட்டத்துக்காக போயிருவாரு. நீ போய்ட்டு வீட்டுக்கு வா. நாம சாய்ந்தரம் கலந்து பேசுவோம், சரியா!
மகள் -                 சரிங்கம்மா, நான் போய்ட்டு வாறேன்.

ரயில்காட்சி மாறுகிறது (கண்காட்சி நெறியாளர்(நெ), பார்வையாளர்கள்(பா))
(பின் காட்சியாக பிரமாண்டமான ஐந்து ஓவியங்கள் இருக்கின்றன. இந்த ஓவியங்கள் 2520ம் ஆண்டில் இயங்குகின்ற பழங்கால கண்காட்சி நிலையத்தின் காட்சி பொருளாக பயன்படுத்தப்படுகின்றது. நடுவிலுள்ள பெரிய ஓவியம் காட்டில் வாழும் பழங்குடிமக்கள், மற்ற நான்கு ஓவியங்களில் 1.சாதி வெறி பற்றியது, 2.மதவெறி பற்றியது, 3.ஆணாதிக்கம் பெண்ணடிமைத்தனம் பற்றியது, 4.ஏழை பணக்காரர் வாழ்வைப்பற்றியது)
நெ -      இந்தக் கண்காட்சி நிலையத்துக்கு பார்வையிட வந்திருக்கிற மாணவர்கள் எல்லோரையும் வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
(பார்வையாளர்கள் வரவேற்புக்கு மரியாதை செய்கிறார்கள்)
நெ -      இதப்பாருங்க.. இதுக்கு பேருதான் சாதி. ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு சாதியின் பேராலே மனிதர்கள் அவமரியதை செய்துகொண்டு சண்டைபோட்டுக்கொண்டார்கள். ஒருவரையொருவர் அடிமையாகக் கருதிக்கொண்டார்கள்.
பா1 -     எனக்கொரு சந்தேகம்.
நெ -      சொல்லுங்க
பா1 -     அடிமைன்னா என்ன?
நெ -      சுதந்திரமும் உரிமையும் இல்லாமல் ஒருவருக்கு கட்டுப்பட்டு அடங்கி வாழ்றது.
பா2 -     ச்சீ..!
நெ -      சாதிச் சண்டையில் ஏராளமான மனிதர்கள் இறந்திருக்கிறார்கள்
                சரி.. இந்தக் காட்சியப் பாருங்க. இதுதான் மதம். ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த உலகத்தையும் மனிதர்களையும் கடவுள்னு ஒரு வகையான சக்தி திட்டமிட்டு படைச்சு காப்பாற்றிக்கொண்டு இருப்பதாக மக்கள் நம்பிக்கிட்டு இருந்தாங்க.
பா3 -     அந்த சக்தி எப்படி இருக்கும்.
நெஅது ஆதாரம் இல்லாத வெறும் நம்பிக்கை.
பா4 -     ஆதாரம் இல்லாம மக்கள் எப்படி நம்ப முடியும்?
நெ -      அறிவியல் பார்வை வளராத காரணத்தால நம்பிட்டிருந்தாங்க.
பா5 -     ஆச்சரியமாக இருக்குது.
நெ -      கடவுள்களின் பேரால பல மதங்கள் இருந்தன. மதங்களின் பேரைச் சொல்லி மக்கள் சண்டையிட்டு இறந்திருக்கிறார்கள்
                இங்க வாங்க.. இந்தக் காட்சியப் பாருங்க. இதுதான் ஆணாதிக்க பெண்ணடிமைத்தனம். ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை ஆண்களக்கு மட்டும்தான் சமூக உரிமைகளும் சுதந்திரமும் இருந்தது. பெண்கள் எல்லோரும் ஆண்களைவிடக் கீழானவர்கள் என்றும், ஆணுக்கு அடங்கித்தான் வாழ வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் இருந்தன.
பா6 -     இதென்ன மடத்தனமான கட்டுப்பாடு! எப்படி பெண்கள் இதை ஏற்றுக்கொண்டு இருந்திருக்க முடியும்?
நெ -      பெண்கள் ஆணதிகார கட்டாயத்தின் காரணமாக ஏற்றுக்கொண்டிருந்தார்கள். பெண்களை ஆண்கள் சொத்தாகவும், பாலுறவுப் பொருளாகவும் மட்டுந்தான் கருதினார்களே தவிற சகமனிதர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை.
பா7 -     எங்களால் நம்பவே முடியவில்லை. ஆண்கள் இவ்வளவு மோசமாக சிந்தித்திருக்கிறார்கள்.
நெ -      ஆண்களால் துன்புறுத்தப்பட்டு எண்ணற்ற பெண்கள் கொலை செய்யப்பட்டார்கள் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
பா8 -     நிச்சயம் எங்களால் நம்ப முடியாது!
நெ -      ஆனால், அந்தக் காலத்தில் ஆண்கள் இத்தகைய மனநோயாளிகளாக வாழ்ந்தார்கள் என்பதுதான் உண்மைஇங்கே வாருங்கள். இந்தக் காட்சியைப் பாருங்கள். இதுதான் ஏழை பணக்காரர் வாழ்க்கைமுறை. பொருள்களை உழைத்து உற்பத்தி செய்கின்ற மக்கள் உரிமையோடு பொருட்களை பயன்படுத்த முடியாது.
பா9 -     ஆனால், மக்கள் தங்கள் பயன்பாட்டுக்குத்தானே பொருட்களை உற்பத்தி செய்திருக்க முடியும்?
நெ -      இல்லை, சுயநலக்காரர்களின் லாபத்திற்காக உற்பத்தி செய்தார்கள்.
பா10 -   சுய நலம் என்பது சமூக நலனில்தானே இருந்திருக்க முடியும்?
நெ -      அன்றைய மக்கள் இந்த உண்மையை அறிந்திருக்கவில்லை. சமூக நலனில் அக்கறை இல்லாத சுயநல வெறியர்களாக வாழ்வதை மக்கள் அனுமதித்துக் கொண்டிருந்தார்கள். சுய நலத்தை மட்டுமே லட்சியமாகக் கொண்டு தனிமனிதர்களாகவே வாழ்ந்தார்கள்.
பா11 -                   இது எப்படி சாத்தியம்! எப்படி அவர்களால் வாழ்ந்திருக்க முடியும்! எங்களால் நம்பவே முடியவில்லை.
நெ -                      மனித வரலாறு பற்றிய ஆய்வுப் பாடங்களில் இதைப்பற்றி நீங்கள் சரியாக புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
பா12 –  எனக்கொரு சந்தேகம்.
நெ -      சொல்லுங்க?
பா13 – லாபம் என்றால் என்ன?
நெ -      நிலங்களையும் தொழிற்சாலைகளையும் மக்களின் உற்பத்திகளையும் தனிநபர்கள் தங்கள் உரிமையில் வைத்துக்கொண்டு தேவைக்கு அதிகமாக சொத்து சேர்ப்பது.
பா14 -   அதெப்படி முடியும்? நாங்கள் அரசு என்பது பற்றி அதிகம் படித்திருக்கிறோம். தொழிற்சாலைகளையும் நிலங்களையும் மக்கள் நல அரசுகள்தானே செயல்படுத்தியிருக்கின்றது. தனிநபர்கள் எப்படி உரிமை பெற்றிருக்க முடியும்?
நெ -      இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் நல அரசுகள் இருந்திருக்கின்றன. உலகம் முழுதும் மக்கள் நல அரசுகள் நிலைபெறுவதற்கு முன்புவரை மக்கள் துரோக அரசுகளே இருந்திருக்கின்றன.
பா15 -                   சரி இருந்திருக்கட்டும், ஆனாலும் தனிநபர்கள் சொத்து வைத்துக்கொள்வதால் என்ன பயன்?
நெ -      மக்கள் உற்பத்தி செய்த பொருட்கள் மீது உரிமை இல்லாமல் பட்டினியால் வறுமையடைந்து இறந்துகொண்டிருந்தாலும், சொத்துடைய தனிநபர்கள் தங்களது பிள்ளைகளுக்கும் அவர்கள் வழி பேரன்களுக்கும் என்பதாக பல தலைமுறைகளுக்கும் தேவையான பொருட்களைப் பாதுகாப்பாகக் குவித்துக்கொள்வதற்காக சொத்து முறையை கையாண்டார்கள்.
பா16 -   இத்தனை பெரிய முட்டாள்களாகவா வாழ்ந்திருக்கிறார்கள்! மக்களும் இதை எப்படி அனுமதித்திருக்க முடிந்தது?
நெ -      நிச்சயமாக அனுமதித்தார்கள். ஏனெனில் மக்கள் அவர்களைவிட மிக முட்டாள்களாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.
பா17 -   இந்தக் கண்காட்சியில் நாங்கள் இவ்வளவு அதிர்ச்சியடைவோம் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.
நெ -      எல்லோரும் இங்க வாங்க.. இந்தக் காட்சியப் பாருங்க. இயற்கையோடு இயற்கையாக தெரிகின்ற இந்த மக்கள் பழங்குடிகள். நாம் இன்று நமது சமூகத்தையும்  இயற்கையையும் மற்ற உயிரினங்களையும் சுற்றுச்சூழலையும் மதித்துப் பாதுகாத்து வாழ்கிறோமே, இந்தப் பண்பை நமக்கு பழங்காலத்திலேயே கற்றுத்தந்த முன்னோர்கள் இந்தப் பழங்குடி மக்கள்தான். மனித இனம் தோன்றிய ஆரம்பக்காலம் முதல் இன்றுவரை இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இன்றும் இவர்களைப் போன்ற பழங்குடி மக்களை நமது வன நகரங்களில் சந்திக்க முடியும். அவர்களின் விருப்பப்படியே வனங்களில் பாதுகாப்புடனும், உரிமைகளுடனும் நம்மிடம் நட்புறவுடனும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
பா18 -   நிச்சயமாக நாங்கள் இவர்களைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறோம். நாங்கள் அவர்களுடைய நம்பிக்கையையும் நட்பையும் அதிகமாகப் பெற்றிருக்கிறோம் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

ரயில்காட்சி மாறுகிறது.
(குழுவினரின் ஆட்டத்துடன் ஒரு பாடல் நாடகத்தை முடிக்கின்றது)
மாறுதய்யா மாறுதய்யா காலம்
நிலைமை மாறாதோன்னு ஏங்குறாங்க
  உழைக்கும்  மக்கள் கூட்டம் (2)
நிலைமைய மாற்றுவோம்னு முழங்குறாங்க நாளும்
  சமூக விஞ்ஞானிகள் முழங்குறாங்க நாளும்(2)
ஒற்றுமை உறுதியானால் மாற்றிக்காட்டுவோம் நாமும் (2)
நல்லுலகம் பூக்கும்! சமூக விஞ்ஞானத் தோட்டம்!(3)

               











No comments:

அதிகம் படித்தவை