எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Thursday, May 18, 2017

விதி-2 பொருளையும் கருத்தையும் உணர்தல் (சிறுகதை 7)

விதி-2  பொருளையும் கருத்தையும் உணர்தல் (சிறுகதை 7)
            எது பொருள்? எது கருத்து? இதை எப்படி சொல்வது? நமது மூளை மிகவும் விசித்திரமானது. மனிதன் தேன்றி வளர்ந்துள்ள பத்து லட்சம் ஆண்டுகளுக்குள் எத்தனைக் கோடி கருத்துக்கள் விளைந்துவிட்டன. கருத்துக்கள் நிரம்பிய ஓர் உலகைக் கட்டியெழுப்ப மனித மூளையால் மட்டுமே முடிந்துள்ளது. அதுவும் இந்தக் குறுகிய தலைமுறைக் காலத்திற்குள். உயிரினங்களின் படிமலர்ச்சி வழியில் கடைசியில் தோன்றிய உயிரினக் குழுவில் இடம் பெற்றுள்ள மனிதன் என்ற சமூகவிலங்கின் மகத்தான சாதனையாகவும் இதைச் சொல்லலாம். இந்த உலகம் பலவிதப் பொருட்களால் நிரம்பியிருக்கின்றன. மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும் இவற்றில் அடங்கியுள்ள பொருட்களே. பொருள் பற்றிய கருத்தை இன்னும் சரியாக முடிவு செய்யலாம். நமது மூளைக்கு அறிமுகம் ஆனாலும்சரி, அறிமுகம் ஆகாவிட்டாலும்சரி, தன்னளவில் இருந்துகொண்டிருக்கின்ற அனைத்தும் பொருட்களே.
            பரபஞ்சப் பொருட்களில் ஒன்று நிலவு. இது மனிதர்களுக்கு எளிமையாக அறிமுகமான அழகான பொருள். ஆனால் யுரேனஸ், நெப்டியூன் போன்ற கோள்கள் அப்படியல்ல. மனிதர்களின் அறிவியல் சாதனக் கருவிகளால் மிக சமீபத்தில் கண்டறியப்பட்ட பிரபஞ்சப் பொருள்கள். மனிதன் கண்டறியாமல் போயிருந்தாலும் யுரேனஸ், நெப்டியூன் என்ற பொருள்கள் பிரபஞ்சத்தில் இருக்கக்கூடியதே. மனித மூளைக்கு எட்டிவிட்டதன் விளைவு. யுரேனஸ், நெப்டியூன் கருத்தாகவும் மாறியுள்ளன.

காற்றிலிருந்து கடல்வரை
மணலிலிருந்து மலைவரை
அணுவிலிருந்து அண்டம்வரை
இருட்டிலிருந்து வெளிச்சம்வரை

இப்படி எதிலிருந்து எதுவரை பட்டியலிட்டாலும் அனைத்தும் பொருள்களே. இங்கு நாம் மறக்கக்கூடாத ஓர் உண்மை இருக்கிறது. பொருள்களைப் புரிந்துகொள்ளும் ஆற்றலுள்ள ஒரு பொருளே மனிதமூளை. புலன்கள் வழியாகப் பிற பொருள்கள் மனித மூளையில் ஏற்படுத்துகின்ற பிரதிபிம்பங்களே எண்ணங்களாகின்றன. எண்ணங்களைச் சிந்தனை உழைப்பில் ஈடுபடுத்துவதால் கருத்துக்கள் மலர்கின்றன. இத்தகைய மலர்தலே புரிதலுக்கு அடிப்படை.   
            மனித வாழ்வில் மட்டுமே பொருள் என்பதற்கு இணையாகக் கருத்துக்களும் மலர்கின்றன. அதாவது வெயிலில் தோன்றும் நிழல் போல. எனவே பொருள் என்பது முதலாவது. கருத்து என்பது இரண்டாவது. எத்தகைய கருத்தை உணர்வதற்கும் பொருள் அடிப்படை. அதாவது, வில், விமானம் ஆகியவற்றைப் படைப்பதற்குச் சிந்தனையின் முதன்மை ஆதாரமாகப் பறக்கின்ற பறவை இருந்ததுபோல.
            சரி, உதாரணத்திற்கு உங்கள் ஊரில் தேடிப் பாருங்கள். இவனைப் போல யாரையாவது நீங்கள் சந்திக்கலாம். இவனது பெயர் நமக்குத் தேவையில்லை. ஆளை மட்டும் கவனியுங்கள். எளிமையான மனிதன். பழக்கத்திற்கு இனியவன். விசயஞானம் இருந்தாலும் ஏதும் அறியாத பாலகன் போன்ற நடிப்பு. வேலையில் சோம்பேறி. உற்சாகம் தேவைப்பட்டால் சிறுவர்களுடன் விளையாடுகிறான். சிறுவர்களிடம் கதை கேட்டால் உணவை மறந்துவிடுகிறான். சின்னஞ்சிறு சிறுவர்களிடம் வலுப்போட்டி வேறு! இந்த மாமாவை நாம ஜெயிச்சுட்டோமா! குழந்தைகள் சிரித்துக் குலுங்குகிறார்கள். அப்படியொரு தோல்வி. கடினமாக முயற்சித்தும் தோற்றுவிட்டானாம். நல்ல நடிகன். குழந்தைகளின் சிரிப்பு இவனுக்கு உற்சாக பானம். சிறுவர்களிடம் விடைபெற்று உற்சாகமாக விரைகிறான். இவன் திட்டமிட்ட வேலை இவனுக்காகக் காத்திருக்கிறது. வேலையில் இறங்கியதும் அமைதியே  உருவம். இந்த அமைதியும் எளிமையும் இவனது மூன்றாண்டு வளர்ச்சி. மூன்றாண்டுகளுக்கு முன்?
            அமைதியற்ற ஆரவாரம். அடைக்க முடியாத வாய்ப்பேச்சு. அறிவியல் காரணங்களின்றி கண்மூடித்தனமாக கடவுளை மறுப்பவன். நான் நாத்திகத்தின் பிரச்சார பீரங்கி என்பது போன்ற பாவனை. கடைக்கு ஓடும் பக்கத்து வீட்டு அண்ணாச்சியை வழிமறித்து வாதிடுவான். சாமிக்குப் படைத்த முதல் பணியாரத்தை முழுங்கிவிட்டு சாமி தின்றுவிட்டதாக ஆத்தாளிடம் வம்பிழுப்பான். கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களைத் தப்பிக்க முடியாதபடி பிடித்துக்கொள்வான். முகம் கோணியும், வாய் அகட்டியும், கைகளை விரித்தும், தேர்ந்த பேச்சாளரைப்போல ஆட்டியும் அரட்டியும் இவன் பேசிய பேச்சுக்கள்... அப்பப்பா சொல்லிமாளாதவை! இவனது கடவுள் வெறுப்பிற்கும் எச்சில் அபிசேகத்திற்கும் ஓடி ஒளிந்தவர்கள் ஏராளம். எளிமையும் அமைதியும் இவனது இத்தகைய அனுபவங்களைக் கடந்து வந்திருக்கின்றன. படிப்பினைகளால் நன்கு பக்குவப்பட்டிருக்கிறான். இத்தகைய அனுபவசாலி ஆறு ஆண்டுகளுக்கு முன் தேர்ந்த பக்தன்.
            எல்லாக் கடவுளையும் வழிபடுவோம்! மதபேதம் பாரோம்! மனித நேயம் காப்போம்! ஆன்மநேயம் காப்போம்! போன்ற கொள்கைகள் இவனது செயலில் பிரதிபலித்தன. நாளுக்கு நான்கு முறை கடவுளை வழிபடுவான். சாதி பற்றிய அறிமுகமின்றி வாழ்வதே சாதிய எதிர்ப்பு என்று நம்பினான். நண்பர்களிடம் சாதியைச் சொல்வதுமில்லை, கேட்பதுமில்லை. மூன்று கண்ணாடித்தாள் மடிப்புள்ள சிவப்பு அட்டையில் பிள்ளையார், ஏசு, அல்லா படங்களைப் பாதுகாத்தான். தன் இதயத்துடிப்பு அந்த அட்டையில் இருப்பதாக நம்பினான். புத்தகங்கூட இல்லாமல் பள்ளிக்கூடத்திற்கு வந்தாலும் வருவான். ஆனால் அந்த அட்டை இல்லாமல் வரமாட்டான். அது அவனுக்கு இன்னும் கூடுதலாக ஒரு விசயத்தில் பயன்பட்டது. அவனை அடித்து மிரட்டும் ஆசிரியர்களை தாக்குபிடிப்பதற்கான ஆற்றல் அந்த அட்டையில் இருப்பதாக உணர்ந்திருந்தான்.
            பள்ளிக்கூடத்தில் கடவுள் வாழ்த்து துவங்கியிருக்கும். அதற்கு முன்பாகவே மேசையடி பூசை முடிந்திருக்கும். அதாவது, மேசைக்கு அடியில் ஒட்டப்பட்டிருக்கும் கடவுள் படங்களோடு தனது அட்டைக்கும் பூசையை முடித்திருப்பான். சக நண்பர்களோடு இந்தப் பூசை முடிந்திருக்கும். இவனது கடவுள் அட்டையைப் போன்று சகநண்பர்களும் வைத்திருந்தார்கள் என்பது உறுதி இல்லை. ஆனால் மேசையடி பூசையை அந்தப் பள்ளிச் சிறுவர்கள் இன்றும் நிகழ்த்திக்கொண்டு இருக்கிறார்கள்.
            நீங்கள் ஏதேதோ கோயில்களில் பூசைகள் பார்த்திருப்பீர்கள். அதற்கு எவ்வளவோ செலவுகள் செய்திருப்பீர்கள். ஆனால் இத்தகைய செலவுகளால் நீங்கள் மேசையடி பூசையைத் தரிசிக்க முடியாது. ஏழு மாணவர்கள் அமர்ந்திருப்பார்கள். அந்த மேசைக்குள் குனிந்து செல்வது மிகவும் சிரமம். நீங்கள் பள்ளிச் சிறுவராக அவதாரம் எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் இது சாத்தியமாகும்.
            மேசையடி பூசையில் மதிய உணவின் சிறு பங்கு காய்ந்து கொண்டிருக்கும். கருப்பு எறும்புகள் தனது பங்கை சுவரின் வழியாக சுமந்து சென்றிருந்தன. மேசைக்கு அடியிலேயே பெருச்சாலி போல் சுற்றித் திரியும் உணவுத் திருடர்களால் உணவு மாயமாகிப் போகலாம். இதற்காகவே கடவுளின் பங்கை காலையிலேயே படைத்துவிடுகிறார்கள். இந்தப் பெருச்சாலிகளுக்கு இடையில் சில சுண்டெலிகள் கடவுளின் பங்கை கொரித்துக்கொண்டு இருந்தன. சுண்டெலிகளைக் கண்டு சில பொடியன்கள் வகுப்புகளில் ஆரவாரம் செய்வார்கள். இவனோ இந்தச் சுண்டெலிகளிடம் அன்பு காட்டினான்.
            சுவரும் மேசையும் ஒட்டிக்கொள்ளும் ஓரத்தில் இவன் இருக்கை இருந்தது. இவனுக்குச் சாதகமாக இரும்புக் கம்பியிட்ட சிறிய சன்னல் சுவரில் பொருந்தியிருந்தது. சன்னலுக்குள் பார்த்தால் ஒரு பீரோவின் முதுகு. இது துருப்பிடித்த நூலகத்தின் பழைய பீரோ. சன்னலின் மரச்சட்டகத்தில் ஒரு பொந்து. கீழிருந்து மேலாகக் குடையப் பட்டிருந்தது. இந்தப் பொந்துதான் சுண்டெலிகளின் கூடு.
            இவனது உணவுப் பங்கு கடவுளைவிட சுண்டெலிகளுக்கு அதிகமாகியது. மதியம் சேகரித்த சோளக்கருது கட்டைகளைவேறு அன்பளிப்பாக வழங்குவான். அவை கொரிக்கும் அழகில் பிள்ளையாரே பொந்திற்குள் குடிவந்துவிட்டதாக மகிழ்ந்திருந்தான். ஒரு நாள் விளையாட்டாக ஒரு விபரீதம் நிகழ்ந்தது. ஒரே நொடியில் நூறு கொலை செய்வதாக நண்பன் சவால் விட்டான். சுவரோர எறும்புகளை ஒரே தேய்ப்பில் நசுக்கிக் கொன்றான். இவனுக்கு அடக்க முடியாத கோபம். நவீன மல்யுத்த வீரனை முன்மாதிரியாக நினைத்துக் கொண்டான். அதே பாணியில் நண்பனை துவைத்தான். நண்பனின் பதிலடி இரண்டாம் நாள் தெரிந்தது.
            சுண்டெலிகளின் நடமாட்டத்தைக் காணவில்லை. எலி செத்த நாற்றம் வகுப்பெல்லாம் நாறியது. சுண்டெலிகள் இறந்தனவோ என்று பதறினான். சடலம் கிடைக்கவில்லை. எல்லா மணிநேரமும் சன்னலையே பார்த்துக்கொண்டிருந்தான். சன்னல் கதவின் பின்புற அகலம் இருட்டாக இருந்தது. சுண்டெலியின் வால் அசைந்து கொண்டிருந்தது. அந்த அசைவு அதன் ஆடி அடங்கும் நேரத்தை உணர்த்தியது. பதறியவன் நேரம் தாழ்த்தவில்லை. நீளமான அளவுகோலை விட்டு நெட்டித் தள்ளினான். சுண்டெலியின் முழு உருவம் கண்ணெதிரில்! உலர்ந்த வாழைப்பழத் தோல் அருகில் இருந்தது. மண் படிந்த வெள்ளைத் தாளில் கருப்பாக பிசையப்பட்டிருந்தது பழம். அது என்ன கருப்பு? அய்யோ விசம்!  கால்களை இழுத்துக்கொண்டு கதறியது. அதன் கண்கள் பிதுங்கின. குழந்தையின் முகம் போன்ற பாவனை. முன் பின் கால்களைச் சுண்டியது. திரவம் கசிந்தது. வகுப்பறையில் வழக்கமான ஆரவாரம் நிலவிக்கொண்டு இருந்தது. ஓர் அழுகுரல் கேட்டது. மேசையடியில் கடவுள் அட்டையை நெஞ்சோடு இடித்துக்கொண்டு வாய்விட்டு அழுதான். இவன்தான் ஒரு காலத்தில் நாத்திக பீரங்கியாய் வளர்ந்திருந்தான். இன்று சமூகவிஞ்ஞானக் களத்தில் உறுப்பினராக வளர்ந்திருக்கிறான்.
            எளிமையும் அமைதியும் நிறைந்த இவனது பேச்சில் தெளிவும் அறிவும் தெரிக்கின்றது. அதோ அவனது குட்டி நண்பன் கேட்கிறான். கடவுள், பேய், ஆவி இவைகள் இருப்பது உண்மையா அண்ணா,” இவனது பதிலைக் கவனியுங்கள்.
            “ஆமாம்! உண்மைதான். மனித மூளைகளுக்குள் மட்டும் இருக்கின்றன. இவைகள் சின்ன அறிவிற்குக் கிடைத்த பெரிய அறியாமைகள். எந்த உயிரினங்களும் தன்னைப் பற்றியும் உலகம் பற்றியும் அறிய முயலவில்லை. மனித மூளை மட்டுமே முதல் முயற்சியில் இறங்கியது. இதன் முயற்சியால் உருவானக் கருத்துக்களே கடவுள், ஆவி, பேய் போன்ற நம்பிக்கைகள். எண்ணங்களும் கற்பனைகளும் ஏராளமானக் கதைகளை வளர்த்திருக்கின்றன. 
            உலகையும் மனிதனையும் கடவுளே படைத்தார். இது உமியை விதைத்து நெல்லு வளர்த்தது போன்றக் கதை. உண்மை தலைகீழாக உள்ளது. அதாவது, மனிதனும் உலகமுமே கடவுளைப் படைத்தன. கடவுள் என்பது பொருளாக இல்லை. மனித மூளையின் கருத்தாக இருக்கின்றது. உலகப் பொருட்களோடு மனித மூளைகளின் உறவுகளே கடவுள், ஆவி, பேய் போன்ற கருத்துக்களுக்கு முதல் காரணம். மக்களிடம் அறிவியல் உலகப்பார்வை வளர்ந்த பிறகு கடவுள் முதலான கருத்திற்கு மதிப்பிருக்காது. மனித இனமே முழுவதும் அழிந்து போகலாம்! அப்பொழுது கடவுள் என்ற கருத்தே இருக்காது.
            இவன் பேசியதைக் கேட்டீர்கள்தானே. இவனது பேச்சை மீண்டும் நினைத்துப் பாருங்கள். பொருளையும் கருத்தையும் நம்மால் உணர முடியும்.

            ஒரு கருத்து எத்தகைய பொருள்களை முதன்மையாகக் கொண்டு தோன்றியது என்பதைக் கண்டுபிடிப்பதும், அப்பொருள்களை அறிந்துணர்வதும் அவசியம். இது சிந்தனையின் இன்றியமையாத கடமை. இந்தக் கடமையிலிருந்து மூன்றாம் வழிமுறைக்குச் செல்வோம்.


No comments:

அதிகம் படித்தவை