எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Friday, June 2, 2017

இயல் – 4 வாழ்வியல் நெருக்கடிகளும் பண்பாட்டு அசைவியக்கங்களும்

இயல் – 4
வாழ்வியல் நெருக்கடிகளும்
பண்பாட்டு அசைவியக்கங்களும்

4.1.முன்னுரை
          இந்த இயலில் ஆய்விற்குரிய ஐந்து புதினங்களிலிருந்து இயற்கையின் அங்கமாகிய பழங்குடி மக்களது வாழ்வியல் நெருக்கடிகளும் பண்பாட்டு அசைவியக்கங்களும் ஆராயப்பெறுகின்றன. பண்பாட்டு அசைவியக்கம் என்பது வாழ்வியலில் நிகழ்கின்ற ஒரு குறிப்பிட்ட பொருளாதார நெருக்கடி அல்லது பண்பாட்டு நெருக்கடியானது வாழ்வியல் பொருளாதார பண்பாட்டுக் கூறுகளின் பல்வேறு இயக்கங்களுக்குக் காரணமாக அமைவதாகும். தங்களுடைய அன்றாட வாழ்வின் இயல்புகளுக்கு முரணாக இயற்கை மற்றும் சமூகளாவிய நிலையில் தோன்றுகின்ற புதிய காரணிகளின் விளைவுகளாகிய அடிமைப்படுத்துதல், வாழ்விடங்களைவிட்டு விரட்டப்படுதல், நவீன அரசு நிறுவனங்களைச் சுமத்துதல், கடன்காரராக்குதல், வாழ்வியல் ஆதாரமான தொழில்களாகிய காடு சார்ந்த பொருட்களைச் சேகரித்தல், வேட்டைத் தொழிலைத் தடுத்தல், பாலியல் வன்புணர்ச்சிகளுக்கு ஆளாகுதல், சிறையிலடைத்தல், வாழ்விடச் சூழல்களாகிய இயற்கை வளங்களை இலாபவெறியுடன் அழித்துப் பழங்குடி மக்களுக்கும் மற்ற காட்டு உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலை உருவாக்குதல் போன்ற வாழ்வியல் நெருக்கடிகளின் பண்பாட்டு அசைவியக்கங்கள் இவ்வியலில் ஆராயப்பட்டுள்ளன.
4.2.சமூகப் பொருளுற்பத்தி பாதிக்கப்படுதல்
4.2.1.காடு சார் பொருள்களின் சேகரிப்பு பாதிக்கப்படுதல்சந்தனக்கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்காகத் தமிழ்நாடு, கர்நாடகக் காவல்துறையினர் கூட்டு அதிரடிப்படையை உருவாக்கியிருப்பதாக தலமலை காவல்காரர்கள் அறிவிக்கிறார்கள். யாரும் எக்காரணத்திற்காகவும் இனி வனங்களுக்குச் செல்லக்கூடாது என்று கட்டளையிடுகிறார்கள். ஆடு, மாடு மேய்க்கக்கூட வனங்களுக்குச் செல்லக்கூடாது. மீறிச் சென்றால் சுட்டுக் கொல்வோம் என்று காவல்துறையினர் மிரட்டிச் செல்கிறார்கள். (பாலமுருகன்,.2013: 121). சோளகர்கள் வனங்களிலிருந்து தேன், கிழங்கு போன்றவற்றைச் சேகரித்தார்கள். மணிராசன் திருவிழா, திருமணம் போன்ற விழாக்களின்போது வனங்களிலிருந்து பூக்கள், இலைகளைப் பறித்தார்கள். மருத்துவத் தேவையின்போது மூலிகைகளைப் பறித்தார்கள். கஞ்சா, புகையிலையைப் பறித்துப் பயன்படுத்தினார்கள். காவல்துறையின் அறிவிப்பிற்குப்பிறகுச் சோளகர்களது காடுசார்ந்த பொருள் சேகரிப்பு முற்றிலும் தடைசெய்யப்படுகின்றது. வறட்சிக் காலங்களில் பெண்கள் அதிரடிப்படையினரின் தடையை மீறித் துணிச்சலுடன் சென்று கிழங்கெடுக்கிறார்கள். தங்களது பூர்விக உரிமையுடைய வனத்தில் சுதந்திரமான மனநிலையில் வழக்கம்போல கிழங்ககெடுக்க முடியவில்லை. அவர்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் திருடர்களைப்போல இரகசியமாகச் சென்று கிழங்கெடுக்கின்றார்கள்.
            மலையாளிகளது சிறுவர்களும் சிறுமியர்களும் பெண்களும் வனங்களில் சென்றுச் சுள்ளிபொறுக்குகிறார்கள். அவர்களை வனத்துறை அதிகாரிகள் குற்றவாளிகளாக அறிவிக்கிறார்கள்காடுகளில் சென்றுச் சுள்ளி பொறுக்குவதன் மூலமாக வனங்களை அழிக்கிறார்கள் என்பதாகக் குற்றம் சுமத்தி குற்றப்பணம் வசூல் செய்கிறார்கள். (சின்னப்ப பாரதி,கு. 2008: 179). வனத்துறையினரிடம் அஞ்சிப் பழகிய மலையாளிகள் சுதந்திரமாக சுள்ளி சேகரிக்க முடியாத நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார்கள்
            வனத்திலுள்ள யானைகளின் வலசைப் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாலும் மின் வேலி போன்ற நவீன பாதிப்புகளாலும் மிரட்சி அடைந்துள்ள யானைகள் மனிதர்களை எதிரியாக உணரத்தொடங்கியிருக்கின்றன. இதன் விளைவாக மனிதர்கள் யானைகளால் அதிகம் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. கிழங்குகள், மூலிகைகள், புளியமர குத்தகைக்காரர்களுக்கு புளியம்பழங்கள் ஆகியவற்றைச் சேகரிப்பதற்காக வனங்களுக்குச் செல்பவர்களை யானைகள் கண்டுவிட்டால் தாக்கத் தொடங்குகின்றன. இதனால் காடுசார்ந்து பொருட்களைச் சேகரிக்கின்ற வெள்ளியங்கிரி மலையடிவார கிராமங்களில் வாழ்கின்ற இருளர்களது வேலைமுறை பாதிப்படைகின்றன.
            தேன்கனிக்கோட்டை தாலுகாவில் இருளர்கள் உட்பட மலையடிவாரத்திலுள்ள வன கிராமங்களில் வாழும் மக்கள் வனங்களுக்குச் சென்று விறகு, மூங்கில் போன்ற பொருட்களைச் சேகரிக்கிறார்கள். வனத்துறையினர் காடுசார்ந்தப் பொருட்களைச் சேகரிக்கின்ற உரிமைக்கு எதிராக ஒடுக்குமுறைகளைக் கையாளுகிறார்கள். வனத்துறையினர் கட்டுப்பாட்டில் இருக்கின்ற வனங்களுக்குச் சென்று மூங்கில் சேகரித்துக் குடிசை அமைத்திருப்பதாகக் குற்றம் சுமத்தப்படுகிறார்கள். குற்றப் பணமாகப் பத்தாயிரம் ரூபாய் கொடுக்காவிட்டால் குடிசைகளை அழித்துவிடுவோம் என்பதாக மிரட்டிப் பணம் வசூல் செய்கிறார்கள். (நஞ்சப்பன்,. 2007: 133). வனத்துறையினரின் இத்தகைய அநாகரிகமான ஒடுக்குமுறையின் காரணமாக இருளர்கள் உட்பட வனம் சார்ந்த மலையடிவார கிராம மக்கள் வனங்களுக்குச் சென்று சுதந்திரமாகப் பொருட்களைச் சேகரிக்க இயலாதவர்களாகியிருக்கிறார்கள்.
            படகர்கள் பற்றிய புதினத்தில்  காடுசார்ந்தப் பொருட்களைச்  சேகரித்தல் பாதிப்படைகின்றச் சூழல் பற்றிய செறிவானத் தகவல்கள் இடம்பெறவில்லை.
4.2.2.வேட்டைத் தொழில் பாதிக்கப்படுதல் - சோளகர்களின் வேட்டையாடும் உரிமையை வனத்துறை தடை செய்திருக்கின்றது. வேட்டையாடியதாக ஆதாரங்கள் கிடைத்தால் சோளகர்களை இழுத்துச்சென்று சித்திரவதைகள் செய்து வழக்குபோட்டு வாழ்க்கையை அழித்துவிடுகிறார்கள். வனத்துறையின் இத்தகைய அடக்குமுறைகளினால் வனத்தில் சுதந்திரமாக வேட்டையாடுவதற்கான உரிமையைச் சோளகர்கள் இழந்திருக்கிறார்கள். வனத்துறைக்கும் அரச அதிகார நலன் சார்ந்தவர்களுக்கும் தெரியாமல் வாய்ப்பு ஏற்படுகின்ற சூழலில் இரகசியமாக  வேட்டையாடுகிறார்கள். மானை வேட்டையாடுகின்ற சூழலில் சோளகர்களது தலைவனாகிய கொத்தல்லிதிருடனைப் போலவா நாம் வேட்டையாட வேண்டும்என்று ஆதங்கத்துடனும் அவமானத்துடனும் சொல்கிறார். வேட்டையில் ஈடுபடுபவர்கள் மீது வனத்துறையினர் சுமத்துகின்ற சித்திரவதைகள் காரணமாக வேட்டைத் தொழிலில் ஈடுபடுதல் என்பது அரிதாகிவிட்டது. தொட்டியின் அருகில் வந்து சிக்குகின்ற மான் போன்ற உயிரினங்களைச் சோளகர்கள் அரிதாக வேட்டையாடுகிறார்கள். வேட்டையாடியதற்கான எந்தத் தடயங்களும் தெரியாத அளவிற்குத் தற்காத்துக்கொள்கிறார்கள். தொட்டியிலுள்ள ஒவ்வொரு குடும்பத்தாரும் தங்களிடமுள்ள துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு தமிழ்நாடு கர்நாடக காவல்துறை கூட்டு அதிரடிப்படையினர் கட்டளையிட்டதும், ஊர் பொதுஇடத்தில் ஒன்றுகுவிக்கப்பட்ட துப்பாக்கிகளைக் காவல் துறையினர் அபகரித்துச் செல்கிறார்கள். தொட்டியினரின் துப்பாக்கிகள் காவல்துறையினரால் அபகரிக்கப்பட்டுவிட்டதும் அரிதாக நிகழ்ந்த சிறிய வேட்டைகளைக்கூட சோளகர்கள் முற்றிலும் கைவிட்டுவிடுகிறார்கள்.
            தாணிக்கண்டி இருளர்கள் வனங்களுக்குச் சென்று வேட்டையாடுகின்ற முறையை முற்றிலும் மறந்துவிடுகிறார்கள். வனங்கள் காப்புக் காடுகளாக அறிவிக்கப்பட்டு வனத்துறையின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டபிறகு வேட்டைத்தொழிலில் ஈடுபடுகின்ற வழக்கத்திலிருந்து விலகிவிட்டார்கள். தங்களது வாழ்விடங்களுக்கு மிக அருகில் மான் போன்ற ஏதேனும் வன உயிரினம் கிடைக்க வாய்ப்பிருந்தால் மிகவும் இரகசியமான முறையில் அடித்துப் பகிர்ந்து உண்கிறார்கள். (ஆட்டனத்தி. 2010: 82). வனத்துறைக்குத் தெரியவந்தால் வழக்குத் தொடுத்துத் தண்டிக்கப்படுகிறார்கள்.
            தேன்கனிக்கோட்டை வட்டத்தில் இருளர்கள் உட்பட மலையடிவாரத்திலுள்ள வன கிராமங்களில் வாழும் மக்கள் வனங்களிலிருந்து விவசாய பயிர்களை அழிக்க வருகின்ற காட்டுப் பன்றிகளை வாய் வேட்டு வைத்து வேட்டையாடுகிறார்கள். வெடி வைத்தவனுக்கு ஒரு கால்சப்பையை முழுதாகக் கொடுத்துவிடுகிறார்கள். பன்றியின் மொத்த இறைச்சியையும் ஊரிலுள்ள அனைவரும் பங்கிட்டு உண்கிறார்கள். வனத்துறையினருக்குத் தெரியாமல் இரகசியமாக வேட்டையில் ஈடுபடுகிறார்கள். வனத்துறையினருக்குத் தெரிந்துவிட்டால் ஊரிலுள்ளவர்களைக் கைது செய்து வனத்துறை அலுவலகத்தில் அடைத்துவிடுகிறார்கள். குற்றப்பணமாக இருபத்தைந்தாயிரம்வரை வசூலிக்கிறார்கள். (நஞ்சப்பன்,. 2007: 83). வனத்துறையினரின் ஒடுக்குமுறை காரணமாக இருளர்கள் உட்பட வனம் சார்ந்த மலையடிவார கிராம மக்கள் வேட்டைத் தொழிலில் ஈடுபடுவதைப் பெரும்பாலும் தவிர்த்துக்கொள்கிறார்கள்.
            மலையாளிகள், படகர்கள் பற்றிய புதினத்தில்  வேட்டைத் தொழில் பாதிப்படைகின்ற சூழல் பற்றிய செறிவானத் தகவல்கள் இடம்பெறவில்லை.
4.2.3.மேய்ச்சல் தொழில் பாதிக்கப்படுதல் - ஆடு மாடுகளை மேய்க்கக்கூட வனங்களுக்குள் செல்லக்கூடாது என்பதாக அதிரடிப்படையினர் கட்டளையிட்டதன் விளைவாக சோளகர்கள் சுதந்திரமாக வனங்களுக்குச் சென்று மேய்ச்சலில் ஈடுபட முடியாதவர்களாகிறார்கள். மேய்ச்சல் தொழில் முற்றிலும் பாதிக்கப்படுகின்றது.
            மலையாளிகள் தங்களது ஆடு மாடுகளை வனங்களுக்குச் சுதந்திரமாக மேய்த்துச் செல்ல முடிவதில்லை. வனத்துறையினர் மலையாளிகளை ஆடு மாடுகளை மேய்த்து வன வளங்களை அழிப்பதாகக் குற்றம் சுமத்துகிறார்கள். வனத்துறையினரிடம் சிக்கி தொந்தரவிற்கு ஆளாகக்கூடாது என்ற பயஉணர்வின் காரணமாக ஆடு, மாடுகளைச் சுதந்திரமாக மேய்க்க முடியாத நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார்கள். வனத்துறை ஊழியர்கள் மலையாளிகளது மேய்ச்சல் தொழில் உரிமையைத் தடுக்காமலிருப்பதற்காக குறிப்பிட்ட தொகையை இலஞ்சமாக பெற்றுக்கொள்கிறார்கள். வனத்துறை மேலதிகாரி வலம்வருகின்ற சூழலில் மேலதிகாரிக்கென்று தனியாக வசூலிக்கப்படும் குற்றப் பணத்தை மலையாளிகள் வழங்க வேண்டும். ஒவ்வொரு மாட்டிற்கும் குற்றப்பணமாக இருபது ரூபாயும், ஆட்டிற்குப் பத்து ரூபாயும் கொடுக்கும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். பல விதங்களில் கெஞ்சியவர்களாக மேலதிகாரியின் இரக்கத்திற்கு ஆளாகியபிறகு குற்றப்பணம் பாதியாகக் குறைக்கப்படுகின்றது. (சின்னப்ப பாரதி,கு. 2008: 176-178). வனத்தில் தலைமுறைகடந்து மேய்ச்சல் தொழிலில் ஈடுபடுகின்ற மலையாளிகளது மேய்ச்சல் உரிமைகள் வனத்துறையினரது ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
            படகர்கள் தங்களது கால்நடைகளை மேய்ப்பதற்காக மரகத மலையில் ஒரு குன்று முழுவதையும் பயன்படுத்துகிறார்கள். மரகத மலையிலுள்ள காடுகள் தேயிலை, காபி போன்ற பணப்பயிர்களின் விளைச்சல்களுக்காக அழிக்கப்படுகின்றன. தேயிலைத் தோட்டங்களை உருவாக்கத் தொடங்கியவர்கள் மலைகளை ஆக்கிரமிக்கத் தொடங்குகிறார்கள். மரகத மலையில் கால்நடை மேய்ச்சலுக்காகப் பயன்படுத்தப்பட்டுவந்த ஒரு குன்றின் ஒருபக்க சரிவு முழுவதும் தேயிலைத் தோட்டங்களாக மாற்றப்படுகின்றன. இதனால் கால்நடைகள் மேய்வதற்கான தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாத நிலைமை ஏற்படுகின்றது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் பகைமையுணர்வுகளும் உருவாகியிருப்பதால் ஒருவரது நிலத்தில் மற்றொருவரது கால்நடைகள் நுழைந்து மேய்கின்றபோது சிறைபிடிக்கப்படுகின்றன. குற்றப்பணத்தைச் செலுத்தி கால்நடைகளை மீட்கின்ற புதிய நடைமுறை உருவாகியிருக்கின்றன. (ராஜம் கிருஷ்ணன். 2001: 218).
            தேன்கனிக்கோட்டை வட்டத்தில் வனங்களில் சென்று ஆடு மாடுகளை இருளர்கள் உட்பட வனம் சார்ந்த மலையடிவார கிராம மக்கள் மேய்க்கிறார்கள். வனத்துறையினர் கால்நடைகளைச் சிறைபிடித்துக் கொள்கிறார்கள். வனங்களில் தங்களது மேய்ச்சல் உரிமைக்கு வனத்துறையினரால் பிரச்சனைகள் வரக்கூடாது என்பதற்காக ஆடு ஒன்றுக்கு பத்து ரூபாய் வீதம் மாதந்தோறும் வனத்துறையினருக்குப் பணம் கொடுத்து வருகிறார்கள். மாதத் தொகையை வாங்கிக்கொண்ட பிறகும் வனங்களில் மேய்த்துக் கொண்டிருக்கின்ற ஆடு மாடுகளை வனத்துறையினர் சுற்றி வளைத்து சிறைபிடிக்கிறார்கள். ஆடு மாடுகளின் எண்ணிக்கையைக் குறைவாகச் சொல்லி ஏமாற்றுகிறீர்கள் என்பதாகக் குற்றம் சுமத்தி மேலும் அதிக பணத்தை வசூலிக்கின்றனர். (நஞ்சப்பன்,. 2007: 136-137). வனத்துறையினரின் இத்தகைய ஒடுக்குமுறை காரணமாக இருளர்கள் உட்பட வனம் சார்ந்த மலையடிவார கிராம மக்கள் சுதந்திரமாக மேய்ச்சல் தொழிலில் ஈடுபட முடியாதவர்களாக இருக்கின்றார்கள்.
            தாணிக்கண்டி இருளர்கள் பற்றிய புதினத்தில்  மேய்ச்சல் தொழில் பாதிப்படைகின்ற சூழல் பற்றிய செறிவானத் தகவல்கள் இடம்பெறவில்லை.
4.2.4.விவசாய உற்பத்தி பாதிக்கப்படுதல்சோளகர்களின் பூர்வீக பூமியைச் சொத்ததிகாரம் உடையவர்கள் அரசாங்க உரிமை பட்டா மூலமாக அபகரித்துக்கொள்வதால் சோளகர்களின் பூர்விக விவசாயம் பாதிக்கப்படுகின்றது. (பாலமுருகன்,.2013: 58). அவர்கள் தங்களது சொந்த பூமியில் விவசாயம் செய்ய முடியாத நிலைமைக்கு ஆளாகிறார்கள்.
            மலையாளிகளது விவசாய நிலங்களை வனத்துறையினர் அநீதியான முறையில் கைப்பற்றுகிறார்கள். தொழிற்சாலைகளின் இலாப நோக்கங்களுக்காக மலையாளிகளது விவசாய நிலங்களை ஆக்கிரமித்து தைல மரங்களை நடுகிறார்கள். (சின்னப்ப பாரதி,கு. 2008: 333). இதன் விளைவாக மலையாளிகளது விவசாய உரிமைகள் முற்றிலும் மறுக்கப்பட்டு விவசாய உற்பத்திகள் பாதிப்படைகின்றன.
            மரகத மலையில் பெருகி வருகின்ற தேயிலைத் தோட்டங்களினால் விவசாய உற்பத்தி பாதிக்கப்படுகின்றன. இராகி, சாமை, தினை போன்ற பாரம்பரிய உணவு தானிய பயிர்களை விவசாயம் செய்வதற்கான பரப்பளவு குறைந்துகொண்டே வருகின்றன. குமரியாற்று அணை கட்டும் திட்டத்திற்காகப் படகர்களின் நிலங்களை அரசு அபகரிக்கின்றது. ஏராளமான விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களை இழக்கிறார்கள். (ராஜம் கிருஷ்ணன். 2001: 345-346). குமரியாற்று அணை கட்டுதல் காரணமாக நிகழ்த்தப்பட்ட நில அபகரிப்புகளின் விளைவாகப் படகர்களின் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கின்றன.
            தேன்கனிக்கோட்டை வட்டத்தில் இருளர்கள் உட்பட்ட மலையடிவாரத்திலுள்ள வன கிராமங்களில் வாழும் மக்கள் பல தலைமுறைகளாக விவசாயம் செய்கின்ற நிலத்தை மாவட்ட ஆட்சியர் அநீதியான முறையில் வனத்துறையினரிடம் ஒப்படைத்துவிடுகின்றனர். பஞ்சாப், கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளிலிருந்து வருகின்ற சொத்ததிகாரம் படைத்தவர்களுக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஆயிரம் அல்லது ஐநூறு ரூபாய் விலைக்கு ரெவின்யூகாரர்கள்  பட்டாவுடன் கொடுத்துவிடுகிறார்கள். ஆனால் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து நிலத்தின் மீது உரிமை  பெற்றுள்ள எளிய மக்கள் பட்டா உரிமை வழங்கப்படாமல் ஏமாற்றப்படுகிறார்கள். (நஞ்சப்பன்,. 2007: 138-139). மக்களின் பூர்வீக நிலங்களை அநீதியான முறையில் வனத்துறையினர் அபகரிக்கிறார்கள். விவசாய உற்பத்திக்கான நிலங்கள் அபகரிக்கப்படுவதால் விவசாய  உற்பத்திகள் முற்றிலும் பாதிக்கப்படுகின்றன.    
            தாணிக்கண்டி இருளர்கள் பற்றிய புதினத்தில் விவசாய உற்பத்தி பாதித்தல் பற்றிய செறிவானத் தகவல்கள் இடம்பெறவில்லை.
4.2.5.சந்தை சார்ந்த பொருளாதாரம் பாதிக்கப்படுதல் - சோளகர்கள் கர்நாடக காவல்துறை முகாமிற்குச் சென்று கட்டாயப் பாதுகாப்புப் பணி செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். தொட்டியிலுள்ள அனைத்து ஆண்களும் இரவு முழுதும் தூங்காமல் மூங்கில் கம்பைத் தரையில் சத்தம் கேட்கும்படி தட்டிக்கொண்டு முகாமைச் சுற்றிலும் வலம்வருகிறார்கள். இரவு முழுவதும் தூக்கம் இல்லாததால் சோளகர்கள் காலை நேரத்தின் வழக்கமான பணிகளைச் செய்ய முடியாதவர்களாய் துன்புறுகிறார்கள். புதன் கிழமை நிகழ்கின்ற திம்பம் சந்தைக்கு வழக்கம் போலச் சென்று தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர இயலாத நிலைமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். (பாலமுருகன்,.2013: 129).
            மலையாளிகளது வனத் தோட்டங்களில் உற்பத்தியாகின்ற பலா, அன்னாசி, வாழை போன்ற பழங்களை அரசு அதிகாரிகள் விலையில்லாமல் அபகரித்துச் செல்கிறார்கள். இதனால் மலையாளிகளது சந்தை வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. (சின்னப்ப பாரதி,கு. 2008: 24). வாரந்தோறும் புதன் கிழமையன்று மலையடிவாரத்தில் நடைபெறுகின்ற சந்தைக்கு மலையாளிகள் தங்களது உற்பத்திப் பொருட்களை விற்பனைக்காக எடுத்துச்செல்கிறார்கள். விற்ற வருமானத்திலிருந்து தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருகிறார்கள். மலையாளிகளது உற்பத்தி பொருட்களைச் சந்தையிலுள்ள கீழ்நாட்டு வியாபாரிகள் அடிமட்ட விலையில் அபகரித்துக் கொள்கிறார்கள். இதனால் பழைய கடனை அடைத்துவிட்டுக் கடனில்லாமல் பொருட்களை வாங்கிவருவது மலையாளிகளுக்கு இயலாத காரியமாகவே இருக்கின்றது. இந்நிலையில் தங்கள் உற்பத்திப் பொருட்களை அரசு அதிகாரிகள் விலையில்லாமல் அபகரித்துச்செல்வது வியாபாரத்திற்கான பொருட்களின் அளவை மிகவும் குறையச் செய்கிறது. இதனால் சந்தை வியாபாரத்தின் மூலமாக தங்களது பொருட்தேவைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள்  தொடர்ந்து பாதிக்கப்படுகின்றன. சந்தை வியாபாரிகளின் அதிகாரத்தினாலும், கந்துவட்டிக்காரர்களின் அதிகாரத்தினாலும் பாதிக்கப்படுகின்ற மலையாளிகளுக்கு மாற்று வழிகளை உணர்த்துவதற்காக சிலோன் சீரங்கன் முயற்சிகளை மேற்கொள்கிறான். அவன் சிலோனில் தேயிலைத் தோட்டத் தொழிலாளியாக இருந்தபோது தொழிற்சங்க அனுபவங்களைப் பெற்றவனாகத் திகழ்கிறான். இவனது வழிகாட்டுதலுக்கு உட்பட்ட மலையாளிகள் சேலத்திலுள்ள செங்கொடி சங்கத்தைச் சார்ந்தவர்களுடன் நட்பு கொண்டு சங்கம் அமைக்கின்றனர். கீழ் நாட்டுச் சந்தையைச் சார்ந்திருப்பதனால்தான் கந்துவட்டிக்காரர்களுக்கு அடங்கிப்போக வேண்டிய நிலையிருக்கின்றது. நமக்குள் ஒற்றுமையும் அரசு பற்றிய தெளிவும் இல்லாததன் காரணமாகத்தான் வனத்துறையினருக்கும் காவல்துறையினருக்கும் அஞ்சி வாழவேண்டிய நிலையிருக்கின்றது. எனவே சங்கமாக ஒன்றிணைந்து சந்தையை மலையிலேயே தொடங்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். செங்கொடி சங்கத்தினர் உதவியுடன் தங்களது முடிவை நடைமுறைப்படுத்துகிறார்கள்மலையாளிகளது சந்தை வட்டாச்சியர் அனுமதியுடன் மலையிலேயே தொடங்க ஆரம்பிக்கின்றது. சந்தை பாதிப்பிலிருந்து விடுதலை பெறுவதற்கான வழிமுறைகளையும் கண்டடைந்துவிடுகிறார்கள். மலையாளிகள் சுதந்திரமான சந்தையை அமைப்பதற்குக் கீழ்நாட்டுச் சந்தையிலிருந்த பாதிப்பு அனுபவங்கள் காரணங்களாக அமைந்திருக்கின்றன.
            படகர்கள், இருளர்கள் பற்றிய புதினங்களில் சந்தைப் பொருளாதாரம் பாதித்தல் பற்றிய செறிவானத் தகவல்கள் இடம்பெறவில்லை.
4.2.6.உணவு முறை பாதிக்கப்படுதல்சோளகர்கள் சுதந்திரமாக வேட்டையாடிய காலங்களில் உப்புக்கண்டம் என்ற உணவைத் தயாரித்து உண்டார்கள்தேவைக்கு அதிகமாகக் கிடைத்துள்ள இறைச்சியை உப்பிட்டுக் காயவைத்துப் பதப்படுத்துகின்ற முறையில் உப்புக்கண்டத்தைத் தயார்செய்தார்கள். உப்புக்கண்டம் என்ற உணவுப்பொருளை இருப்பில் வைத்துக்கொள்வதன் மூலமாக இறைச்சியை விரும்பும்போதெல்லாம் சாப்பிட்டார்கள். ஆனால் வனத்துறையினரின் ஒடுக்குமுறைகளால் வேட்டைத்தொழில் தடைசெய்யப்பட்டுள்ளதால் உப்புக்கண்டம் என்ற உணவு வகை மறைந்துபோய்விட்டது. (பாலமுருகன்,.2013: 19). வேட்டை உரிமை மறுக்கப்பட்டுள்ள காரணங்களால் இறைச்சியை உரிமையோடு உண்ண இயலாததன் விளைவாக உப்புக்கண்டம் என்ற உணவு வகையே அழிந்துபோய்விட்டது.
            தேன்கனிக்கோட்டை வட்டத்தில் இருளர்கள் உட்பட மலையடிவாரத்திலுள்ள வன கிராமங்களில் வாழும் மக்கள் வறட்சி காலங்களில் பசியின் கொடுமையிலிருந்து தப்பிப்பதற்காக வனங்களிலிருந்து காரைக்காய், சூரைக்காய், நாகதாளி பழம், கற்றாழைக் கிழங்கு ஆகியவற்றை சேகரித்துச் சாப்பிடுகிறார்கள். இவை மிகவும் ஆபத்தான உணவுகள் ஆகும். (நஞ்சப்பன்,. 2007: 73-74). காரைக்காயை உண்டவர்கள் ஒவ்வாமையால் தொண்டையைப் பிடித்துக்கொண்டு செத்து மடிகிறார்கள். சூரைக்காயைத் தின்றவர்கள் மலம் வெளியேறாமல் அடைத்துக் கொண்டு செத்து மடிகிறார்கள்நாகதாளி பழத்தை உண்டவர்கள் அதிலுள்ள ஒரு வகையான விச முள்ளை முழுங்கியதால் இறந்துவிடுகிறார்கள்புளி கரைசலில் கற்றாழைக் கிழங்கை ஒரு வாரமாகப் பக்குவப்படுத்தி உண்கிறார்கள். இந்தக் கிழங்கை உண்ட கர்பிணி பெண்கள் அதிக உடல் சூட்டின் காரணமாகக் கருகலைந்து துயரடைகிறார்கள்.
            மலையாளிகள், படகர்கள், தாணிக்கண்டி இருளர்கள் பற்றிய புதினத்தில் உணவுமுறை பாதித்தல் பற்றிய தகவல்கள் செறிவாக இடம்பெறவில்லை.
4.3.இயற்கையை எதிர்கொள்ளுதல்
சோளகர்கள் தங்களது வனங்களின் சிறுசிறு நிலங்களில் இராகி போன்ற தானியங்களை விளைவிக்கிறார்கள். விளைந்த கதிர்களை அறுவடை செய்து சேகரித்த தானியங்களைக் குத்தாரி அமைத்துப் பாதுகாக்கிறார்கள். மூங்கில் படலாலும் செம்மண்ணாலும் உருவாக்கப்பட்டுள்ள தங்களது எளிய குடிசையின் முன்பு தானியங்களைப் பாதுகாக்கின்ற குத்தாரியை அமைத்திருக்கிறார்கள். யானைகளுக்கு உணவாகிய மூங்கில் மரங்கள் காகிதத்தொழிற்சாலைகளால் அழித்தொழிக்கப்படுவதால் உணவின்றி அலைகின்ற யானைகள் சோளகர்களது வாழ்விடங்களை நோக்கி வந்துவிடுகின்றன. (பாலமுருகன்,.2013: 8). குத்தாரியிலுள்ள தானியங்களை முகர்ந்துகொண்டு வருகின்ற யானைகள் இரவு நேரங்களில் வனத்திலிருந்து வெளிப்பட்டு சோளகர்களது வாழ்விட வேலிகளை முறித்துக்கொண்டு நுழைந்துவிடுகின்றன. குத்தாரியை அழித்துத் தானியங்களை யானைகள் உண்டுவிட்டால் வருடம் முழுவதும் கால்வயிற்றுப் பட்டினி கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகின்றது. ஆகையால் தங்களது உழைப்பிலிருந்து விளைவித்த தானியங்களை யானைகளிடமிருந்து பாதுகாக்க ஒற்றுமையுடன் முயற்சி செய்கிறார்கள். மூங்கில் தப்பைகளால் சத்தம் எழுப்பியும் வெடிகளை வெடித்தும் யானைகளை வனத்திற்குள் விரட்டப் போராடுகிறார்கள்.
            சோளகர்கள் தங்களது வானம் பார்த்த பூமியில் விவசாயம் செய்வதற்காக பருவமழையை எதிர்பார்க்கிறார்கள். பருவ மழை பொழியாவிட்டால் விவசாயம் செய்ய முடியாத நிலைமை ஏற்படுகின்றது. மழையைப் பொழியச் சொல்வதற்காக பெண்கள் வனத்திற்குச் செல்கிறார்கள். வனத்திலிருந்து அவர்களது மழை தெய்வமாகிய எங்குசீர்குட்டையை  நிர்வாண நிலையிலிருந்துமழைபொழி தாயே மழைபொழிஎன்று வழிவாடு செய்கிறார்கள்.
            மலையாளிகள் மழையை நம்பி விவசாயம் செய்கிறார்கள். அவர்களது மொச்சைப் பயிர்கள் மழையின்றி வாடுகின்ற நிலைமையையும் அதனால் ஏற்படுகின்ற உள்ளத்தின் நெருக்கடியையும் எதிர்கொள்வதற்கு இயலாத சூழலில் மழைவேண்டி வழிபாடு நிகழ்த்துகிறார்கள். இத்தகைய வழிபாட்டின் மூலமாக மழையைப் பெற்றுவிடுவோம் என்றத் தன்னம்பிக்கையைப் பெற முயல்கிறார்கள். மழையில்லாமல் வாழ்வை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற மன பயத்திலிருந்து தற்காத்துக்கொள்வதற்காக இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இதற்காக மலையாளிகள் சாணிவெட்டு திருவிழாவை நடத்துகிறார்கள்.
            மாமாரி என்று அழைக்கப்படுகின்ற பெரு மழை மரகதமலை ஹட்டியின் இயல்பு வாழ்க்கையை அழித்துவிடுகின்றது. பிளேக் என்ற கொடு நோயால் ஹட்டியில் ஏராளமானோர் பலியாகிறார்கள். மாரியம்மன் தெய்வத்திற்கு விழா எடுக்காததன் விளைவாகத்தான் ஊர் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருதுகிறார்கள். தேயிலைத் தோட்டங்கள் பெருகி பணம் நிறையத் தொடங்கியதும் ஹட்டியில் ஏற்றத்தாழ்வுகள் கூர்மையாக வெளிப்படத் தொடங்கிவிட்டன. கரியமல்லர் தலைமையில் நிகழ வேண்டிய மாரியம்மன் வழிபாட்டு விழா நடக்காமல் இருப்பதன் விளைவாக பிளேக் நோய் பாதித்திருப்பதாகக் கருதி வழிபாடு நிகழ்த்தத் திட்டமிடுகிறார்கள். படிப்பறிவின் மூலமாக வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டிருப்பவர்கள் தலைமையில் நோய்களைப் போக்குவதற்கான நவீன மருத்துவ முகாம்கள் உருவாகியிருந்தனகரியமல்லரின் பேரன் கிருஷ்ணனது தலைமையில் பிளேக் நோயைத் தடுப்பதற்காக ஹட்டியிலுள்ளவர்களுக்கு மருத்துவர்கள் தடுப்பூசி போடுகிறார்கள். பிளேக் நோய்க்கு ஆளாகியவர்கள் காய்ச்சலில் தொடங்கி மூன்று நாட்களில் இறந்துபோகிறார்கள். இறந்தவர்களின் உடலை நோய் தொற்றாத அளவிற்குப் பாதுகாப்பாக எரித்து விடுகிறார்கள். வீட்டுக் குழந்தைகள் மொத்தம் மொத்தமாக இறந்து போகிறார்கள். ஹேத்தப்பா கோயிலின் அணையாத நெருப்பைப் பாதுகாக்கின்ற சிறுவன் நோயால் இறந்துபோகிறான். ஹேத்தப்பாவின் புனித நெருப்பை அணைத்துவிட்டு கோயிலையே அடைத்துவிடுகிறார்கள். பிளேக் நோயிலிருந்து தப்பிப்பதற்காகப் பலரும் ஹட்டியைவிட்டு வெளியூர்களுக்குச் சென்றுவிடுகிறார்கள். புலியையும் சிறுத்தையையும் விட மிகவும் ஆபத்தானதாக பிளேக் நோயை மருத்துவர்கள் அறிவிக்கின்றார்கள். (ராஜம் கிருஷ்ணன். 2001:231). இயற்கையின் மாமாரியால் உருவான பிளேக் நோயை எதிர்கொள்வதற்காக மாரியை வழிபடுவதாயினும் தடுப்பூசி போடுவதாயினும் பிளேக் நோயால் ஹட்டியின் இயல்பு வாழ்க்கை அழிந்துபோயிருக்கின்றது.
            தேன்கனிக்கோட்டை வட்டத்தில் இருளர்கள் உட்பட்ட மலையடிவாரத்திலுள்ள வன கிராமங்களில் வாழும் மக்கள் வறட்சிக் காலங்களில் நீரும் உணவும் இன்றி மோசமான நிலைமைகளுக்கு ஆளாகின்றார்கள். இயற்கையின் வறட்சியை எதிர்கொள்வதற்கு வழியின்றி உண்ணுவதற்குப் பொருத்தமற்ற ஆபத்தான உணவுப் பொருட்களாகிய காரைக்காய், சுண்டைக்காய், நாகதாளிபழம், கற்றாழை கிழங்கு ஆகியவற்றை உண்கிறார்கள். மண்ணில் ஊற்று நீர் தோண்டி நீரெடுத்து அருந்துகிறார்கள். ஒரு வீட்டிற்கு ஒரு மொடா நீரென்று கணக்காக பயன்படுத்துகிறார்கள். குடிநீருக்கு காவல் முறையை அமைத்திருக்கிறார்கள். இயற்கையினால் உருவாகியுள்ள வறட்சியை எதிர்கொள்வதற்காக மழை வேண்டி மாரியம்மனுக்கு விழா எடுத்து வழிபடுகிறார்கள்.
            தாணிக்கண்டி இருளர்களைப் பற்றிய புதினத்தில் இயற்கையினால் உருவாகின்ற நெருக்கடிகளை எதிர்கொள்ளுதல் பற்றிய செறிவானத் தகவல்கள் இடம்பெறவில்லை.
4.4.அந்நியர்களால் ஆக்கிரமிக்கப்படுதல்
புலிவேட்டைக்குச் சென்றபோது யானைகளிடம் மாட்டிக்கொண்ட வெள்ளைக்கார அதிகாரி சாலிதுரையைக் கொத்தல்லி காப்பாற்றுகிறார். தன்னைக் காப்பாற்றிய மகிழ்ச்சியில் சாலிதுரை கொத்தல்லியிடம் கேட்கிறார். உனக்கு வனத்தில் எவ்வளவு நிலம் வேண்டுமென்று சொல் செம்புப்பட்டயத்தில் உரிமை எழுதித்தருகிறேன் என்கிறார். காடு முழுமையும் எங்க சொத்துதான். பட்டயம் எதற்கு என்று மறுத்துவிடுகிறார். (பாலமுருகன்,.2013:15). கொத்தல்லி தங்களைக் காட்டின் உரிமைக்காரர்களாகச் சொல்லிக்கொண்டாலும் சாலி துரையின் கருத்துப்படி வனம் முழுமையும் வெள்ளைக்கார அரசின் உடைமையாக இருக்கின்றது.
            சிக்குமாதாவை வனத்துறையிடமிருந்து மீட்டுவருவதற்காக சோளகர்கள் ஒப்புக்கொண்ட ஐநூறு ரூபாய் கடனை வட்டியுடன் சேர்த்து எழுநூறு ரூபாயாகக் கொடுக்குமாறு மணியக்காரர் கட்டளையிடுகிறான். கடனைச் செலுத்தும்வரை கோல்காரனது நிலத்தில் துரையன் குடியிருப்பான் என்றும் அறிவிக்கிறான். (பாலமுருகன்,.2013: 38-39). உரிய நேரத்தில் கடனை அடைக்க முடியாத சூழலைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு கோல்காரனது பூமியைத் துரையன் சொந்தமாக்கிக் கொள்கிறான். கோல்காரனது பூமி பேதனின் சீர்காட்டில் இணைந்திருக்கின்றது. துரையன் பேதனின் சீர்காட்டை ஆக்கிரமிக்க முயற்சி செய்கிறான். துரையன் மணியக்கானின் உதவியுடன் தாசில்தார் அலுவலகத்திற்குச் சென்று சீர்காடு முழுவதையும் தனது பெயரில் பட்டா உரிமை வாங்கிக்கொள்கிறான். அரசாங்கம் பட்டா கொடுத்திருப்பதாகச் சொல்லி பேதனின் சீர்காட்டை ஆக்கிரமிக்கிறான். பேதன் எதிர்த்து சண்டையிடுகின்றான். காவல்துறையின் அதிகாரத்தைப் பயன்படுத்தி பேதனையும் அவனது மகன் சிவண்ணாவையும் சிறையிலடைத்துச் சித்திரவதை செய்கிறார்கள். ‘சீர்காட்டு நிலத்தைச் சொந்தம் கொண்டாடக்கூடாது. முடிந்தால் வழக்கு தொடுத்து நிலத்தை மீட்டுக்கொள்என்று  காவல்துறை அதிகாரி அறிவுரை சொல்லி விடுவிக்கின்றான். (பாலமுருகன்,.2013: 65). அரசாங்க உரிமை பட்டா என்ற பெயரில் பேதனது சீர்காடு அதிகாரப்பூர்வமாக ஆக்கிரமிக்கப்பட்டுவிடுகின்றது.
            சோளகர்கள் குழுவாக வனங்களுக்குச் சென்று தேன் சேகரிக்கின்றார்கள். ஆபத்தான பள்ளங்களில் உயிரைப் பணையம் வைத்து வழக்கமான முறையில் தேனைச் சேகரிக்கின்றார்கள். வனத்துறையினர் அவர்களிடமிருந்து அதிகார உரிமையுடன் தேன்களை முற்றிலுமாகப் பறித்துக்கொள்கிறார்கள். வனத்துறையினர் தங்களுக்குக் கூடுதலாக தேன்கள் தேவைப்படுவதாகச் சொல்லி தேனடைகளைச் சேகரித்துத்தருமாறு கட்டாயப்படுத்துகிறார்கள். சோளகர்கள் வனம் முழுவதும் அலைந்து தேன் சேகரித்ததுக் கொடுக்கிறார்கள். (பாலமுருகன்,.2013: 90-91). சோளகர்களது கடுமையான உழைப்பிலிருந்து சேகரிக்கப்படுகின்ற தேன்களை வனத்துறையினர் எளிமையாகப் பறித்துக்கொண்டு சென்றுவிடுகிறார்கள். அவர்கள் தங்களது உழைப்பை அந்நியர்கள் ஆக்கிரமிக்கின்ற சூழல்களை எண்ணி மனம் நொந்துகொள்கிறார்கள்.     
            சந்தனக்கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்காக தமிழ்நாடு கர்நாடக காவல்துறை கூட்டு அதிரடிப்படை உருவாகியிருப்பதாகக் காவல்துறையினர் அறிவிக்கிறார்கள். சோளகர்கள் வனங்களுக்குச் செல்வதை அதிகாரப்பூர்வமாகத் தடை செய்கிறார்கள். தடையை மீறி வனங்களுக்குச் செல்பவர்கள் சுட்டுக்கொல்லப்படுவீர்கள் என்பதாக மிரட்டுகிறார்கள். காவல்துறை மற்றும் வனத்துறையினர் வனத்தையும் வனத்தின் மீதான  சோளகர்களின் பூர்வீக உரிமைகளையும் முற்றிலுமாக ஆக்கிரமித்துவிடுகிறார்கள்.
கொல்லிமலை மலையாளிகளின் கிராமத்திற்கு அருகில் ஒரு கார் வருகிறது. அந்த ஜீப்பிலிருந்து இறங்கிய இருவர் ஒற்றையடிப் பாதை வழியாக நடந்து ஒரு காவல்கொட்டகைக்கு வருகிறார்கள். அங்கிருந்த ஒரு சிறுவனை அதிகாரத்துடன் விசாரிக்கிறார்கள். அந்தச் சிறுவன் இவர்களை அரசு அதிகாரிகள் என்று மட்டும் புரிந்துகொள்கிறான். அரசு என்றால் கொல்லிமலை மக்களின் அறிவிற்குக் காவல்துறை அதிகாரிகளும், வனத்துறை அதிகாரிகளும் மட்டுந்தான் தெரிகிறார்கள். சிறுவன் இவர்கள் இருவரும் எந்தத் துறையிலுள்ளவர்கள் என்பதை அறிய முடியாமல் அச்சத்துடன் நிற்கிறான். அவர்களும் தங்களைப் பஞ்சாயத்து ஒன்றிய அலுவலகத்திலிருந்து வந்திருப்பவர்கள் என்பதைச் சொல்லிக்கொள்ளாமல் காவல்துறை, வனத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளது பாணியிலேயே பேசுகிறார்கள். அந்தச் சிறுவனது பெயரை விசாரித்துவிட்டு அவனது தந்தையை அழைத்துவரச் செய்கிறார்கள். அவனது தந்தை சாவித்திருமன் வந்ததும் அதிகாரமாகக் கேட்கிறார்கள். “பலா மரம் இருக்கா? – இருக்குது சாமி. / பருக்கம் பழமா? – ஆமாஞ் சாமி / அன்னாசி இருக்கா? – இருக்குது சாமிவாழையிருக்கா? – இருக்குது சாமி / நெமரன் வாழைதானே? – ஆமாஞ் சாமி/ சரி நாலு பலாப்பழம், ரண்டு வாழைத்தாறு, இருபத்தைஞ்சு அன்னாசி பழம் பறிச்சா பார்க்கலாம்! நல்ல சரக்கா இருக்கணும்” (சின்னப்பபரதி,கு.2008:10.) என்று பணிக்கிறார்கள். அதிகாரிகளாக வருபவர்கள் இதுபோல பெற்றுக்கொள்ளும் பொருட்களுக்கு ஒரு விலையும் கொடுப்பதில்லை. ஆனால் பொருட்களைப் பெறுகின்றபோது பொருட்களைக் குறைசொல்வதும், அல்லது வேறொருவன் நிலத்தில் திருடி வந்தாயா என்று திருட்டுப் பட்டம் சுமத்துவதும் செய்கிறார்கள். அவர்கள் கேட்டப் பழங்களை வனத்தோட்டங்களில் பறித்துக்கொண்டு சுமந்து வந்து வாகனத்தில் ஏற்றியதும் அதிகாரிகள் சென்றுவிடுகிறார்கள். இத்தகையப் பழங்களைச் சந்தையில் விற்பதால் வாழ்க்கைத் தேவைக்கான பணம் ஓரளவிற்கு கிடைக்கின்றது. இதன் காரணமாக இத்தகைய பழங்களை ஒருபோதும் ருசிக்காதவர்களாக மலையாளிகள் வாழ்கிறார்கள். தாங்கள் சுவைக்காமல் பாதுகாத்தப் பழங்களை அரசு அதிகாரிகள் விலையின்றி அபகரித்துச் செல்கிறார்கள்.
            வனத்துறை அதிகாரிகள் மலையாளிகளது நிலங்களுக்குப் பட்டா உரிமை வழங்குவதாகச் சொல்லி பணம் வாங்கிக்கொள்கிறார்கள். ஆனால் பட்டா வழங்காமல் நிலத்தை வழக்கம்போல பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறார்கள். சில ஆண்டுகளில் வேறொரு அதிகாரி மாற்றல் ஆகி புதிதாக வருகிறார். மலையாளிகளுக்கு நிலங்களில் பட்டா உரிமை இல்லாததால் நிலத்தை அபகரிக்கிறார். பட்டா உரிமையைப் பெறுவதற்காக முயல்கின்ற மலையாளிகளிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிடுகிறார்கள். சொத்ததிகாரம் உடையவர்களுக்கு நிலம் தேவைப்பட்டால் அவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு தலைமுறை கடந்து உழைத்து உரிமையாக்கியுள்ள மலையாளிகளது நிலத்தை அபகரித்து ஒப்படைத்துவிடுகிறார்கள். (சின்னப்ப பாரதி,கு. 2008: 72).
            மரகதமலையில் குமரியாற்று நீரைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் அமுலாகப்போகின்றது. ஜோகி தனது சிறு வயதில் நண்பர்களுடன் கற்பனை செய்து உரையாடியவற்றை நினைத்துப்பார்த்து மகிழ்கிறார். மரகத மலை முழுவதும் இருள் இல்லாதபடி விளக்குகளைப் பாதையெங்கும் ஏற்றி வைப்பதாகக் கற்பனை செய்திருந்தார்கள்கிருஷ்ணன் அந்த விளக்குகளுக்குத் தேவையான எண்ணெய்யாக குமரியாற்று நீரைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சொல்லியிருந்தான். அன்று விளையாட்டாக செய்த கற்பனை இன்று உண்மையாகும் சூழல் உருவாகியிருப்பதை எண்ணி மகிழ்கிறார். குமரியாற்று நீரை அணைகட்டித் தடுத்துக் குழாய்களில் செலுத்திப் பெரும் இயந்திரங்களின் மூலமாக மின்சாரம் தயாரித்து பெரும் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தப் போகிறர்கள். இதற்காக மலைவாழ் மக்களின் நிலங்களை அரசு கைப்பற்றுகிறது. குமரியாற்று அணைநீரில் மூழ்கும் நிலங்களை அரசு அறிவித்துக் கைப்பற்றுகின்றது. குமரியாற்று அணையில் மூழ்கும் பகுதியாக இல்லாவிட்டாலும் சாலை வசதிகளை விரிவுபடுத்துவதற்காக மலைவாழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. (ராஜம் கிருஷ்ணன். 2001: 345). கணிசமான தொகையை நிலம் இழப்பவர்களுக்கு அரசு ஈடாக தருவதாக அறிவித்திருந்தாலும் சரிவர நடைமுறைப்படுத்தவில்லைஉணவு தந்த நிலங்களைப் பணத்திற்கு மட்டுமல்ல வேறெந்த காரணங்களுக்காவும் இழப்பதற்கு மக்கள் தயாராக இல்லை. நிலம் இழப்பவர்கள் ஒன்றிணைந்து அரசை எதிர்க்கிறார்கள். எதிர்ப்பைக் கடந்தும் படகர்கள் உட்பட அனைவரது நிலங்களையும் அரசு அபகரிக்கின்றது.
            தேன்கனிக்கோட்டை வட்டத்தில் இருளர்கள் உட்பட மலையடிவாரத்திலுள்ள வன கிராமங்களில் வாழும் மக்களிடம் வருவாய் துறை அதிகாரி, கரேதாரர், கர்ணம் முன்சீப், தலையாரி ஆகியோர் மோசடிகளில் ஈடுபட்டு ஏராளமான பொருட்களை அபகரிக்கிறார்கள். அந்த மக்களுக்கு அவர்களது நிலங்களின் மீது பட்டா உரிமை வாங்கித் தருவதாகக்கூறி ஏமாற்றகிறார்கள். அந்த மக்கள் பல தலைமுறைகளாக உழைத்து உரிமை பெற்றிருக்கின்ற நிலங்களுக்குப் பட்டா உரிமை வாங்கித்தருவதாகக் கூறி ஆடு, மாடு, கோழி, நெய், பணம் என ஏராளமானவற்றைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் பட்டா உரிமை பெற்றுத் தராமல் ஏமாற்றிவிட்டுப் பணியிடம் மாற்றமாகி சென்றுவிடுகின்றனர். புதிதாக வருபவர்களும் அவரது பணிக்காலங்களில் இப்படியே ஏமாற்றுகிறார்கள். பஞ்சாயத்தார் உதவியுடன் மக்களின் நிலங்களை மாவட்ட ஆட்சியர் வனத்துறைக்கு உரிமையுடையதாகக் கொடுத்து விடுகின்றார். (நஞ்சப்பன்,. 2007: 138-139). இதனால் வனத்துறையினர் தங்களுக்கு உரிமையாக்கப்பட்டுள்ள நிலங்களிலிருந்து பல தலைமுறைகளாக வாழ்ந்த மக்களைப் பலாத்கார முறைகளில் நில வெளியேற்றம் செய்து நிலங்களை ஆக்கிரமிக்கிறார்கள்.
          தாணிக்கண்டி இருளர்கள் பற்றிய புதினத்தில் அந்நியர்களால் ஆக்கிரமிக்கப்படுதல் பற்றிய செறிவான செய்திகள் இடம்பெறவில்லை.

... 

இயல் – 4 வாழ்வியல் நெருக்கடிகளும் பண்பாட்டு அசைவியக்கங்களும் 1


No comments:

அதிகம் படித்தவை