எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Wednesday, May 31, 2017

இயல் – 2 வாழ்விடங்களும் சமூகப்பொருளாதார உற்பத்தி உறவுகளும் 2

2.13.உற்பத்தி பாதுகாப்பு செய்தல்
2.13.1.குத்தாரி அமைத்தல் - குத்தாரி என்பது ராகி தானியங்களை அறுவடைக்கு பின்பு பாதுகாப்பதற்காக அமைப்படும் முறையாகும். சோளகர்கள் தரையில் கருங்கற்களைப் பரப்பி தளமாக்குவர். அந்தத் தளத்தில் மூங்கில் படல்களை  நிறுத்தி வைப்பர். அந்தப் படல்களைச் சுற்றிலும் குதிரைவாளிப் புற்களைக்கொண்டு நெருக்கமாக பின்னுவர். அறுவடையான ராகி தானியங்களை அதனுள் சேகரித்துப் பாதுகாப்பர். மழை நீர் புகாமலும் பூச்சி அரிக்காமலும் இந்த முறையில் தானியங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
2.13.2.காவல் செய்தல் அறுவடை செய்யப்பட்ட தானியங்களைப் பாதுகாப்பதற்குக் காவல் செய்தல் என்ற வேலைமுறை பின்பற்றப்படுகின்றது. குடிசையில் குத்தாரியிலுள்ள தானியங்களின் வாசனையை நுகர்ந்துகொண்டு மூன்று காட்டுயானைகள் நுழைகின்றன. காவல் பொறுப்பில் இருந்த சிவண்ணா கவனமின்றி உறங்கிவிடுகிறான். யானைகள் மூங்கில்படல்களால் அமைத்த வேலியை முறித்துக்கொண்டு வருகின்றன. விழித்துக்கொண்ட சிவண்ணா யானைகளை விரட்ட மூங்கில் கட்டிய தகரத்தால் ஒலி எழுப்பியும் வெடி வெடித்தும் விரட்ட முயல்கிறான். ஊரிலுள்ளவர்களும் விழிப்படைந்து யானைகளை விரட்டுகிறார்கள். அனைவரின் ஒத்துழைப்புடனும் யானைகள் வனத்திற்குள் விரட்டப்பட்டன. “ஒரு வருட உழைப்பைச்  சிறிது நேரத்தில் இழந்து வருடம் முழுவதற்கும் கால் வயிற்றுப் பட்டினி கிடந்திருக்க வேண்டி வந்திருக்கும். என்னடா உனக்கு குத்தாரியைப் பார்க்காமல் தூக்கம்என்று  சிவண்ணாவின் தாய் ஜோகம்மாள் கடிந்து கொள்கிறார். (பாலமுருகன்,.2013: 7).
2.13.3.காவல் பரண்விளைச்சல் நிலங்களையொட்டி உயரத்தில் குடிசை அமைத்திருப்பர். இதனைக் காவல்பரண் என்கிறார்கள். அறுவடைக் காலம்வரை பயிர்களை யானை, காட்டெருமை, பன்றிகள் போன்ற மிருகங்களிடமிருந்து பாதுகாக்க சோளகர்கள் இத்தகைய காவல் பரண்களை அமைத்து இரவிலும் தங்கி மூங்கில் தப்பை போன்ற கருவிகளின் உதவியுடன் பயிர்களைப்  பாதுகாப்பர்.
2.13.4.ராகிக் குழி வெட்டுதல்சோளகர்கள் தங்கள் குடிசையின் வாசலில் மண் தரையில் கெட்டியானப் பகுதியில் மூன்று அடிக்கு நீண்ட பள்ளத்தைத் தோண்டுவார்கள். ஆழம் செல்ல செல்ல பள்ளத்தின் அகலத்தை அதிகரித்து ஒரு கிணறு போன்று தோண்டி மண்ணை எடுப்பார்கள். பள்ளம் பதினைந்து அடியை எட்டிவிட்டப்பிறகு பள்ளத்தின் அடிப்பகுதியை சதுரவடிவில் வெட்டி மண்ணை எடுப்பார்கள். மண் எடுக்கப்பட்ட பகுதியில் செம்மண்ணைக் குழைத்து நாற்புறமும் பூசினார்கள். வனத்திலுள்ள மரங்களின் பச்சை மற்றும் காய்ந்த இலை தழைகளை பள்ளத்தில் நிரப்பி தீயிடுவார்கள். தீயின் வெப்பத்தில் பள்ளத்தில் செம்மண் பூசிய பக்கச் சுவர்கள் கெட்டிப்படுகின்றன. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெப்பத்தினால் பள்ளம் பக்குவப்படுகின்றது. பிறகு பள்ளத்தில் இறங்கி சுத்தம் செய்து சாணத்தினால் மெழுகினார்கள். இந்த ராகிக் குழியானது குடுவை வடிவிலான வீட்டின் பாதாள அறையைப்  போன்று இருக்கின்றது. குடிசை வாசலிலுள்ள அந்த ராகிக் குழியில் தானியங்களைக் கொட்டி மரக்கட்டையாலான மூடியைக் கொண்டு அடைத்து மண்போட்டு மறைத்து விடுவார்கள். அந்தக் குழியில் கொட்டப்படுகின்ற தானியங்கள் எவ்வளவு காலத்திற்காயினும் கெட்டுப்போகாமலும் முளை விடாமலும் பாதுகாக்கப்படுகின்றன.
2.13.5.காவல் கொட்டகை –  விளைச்சல் நிலங்களை இரவில் காவல் செய்வதற்காக மலையாளிகள் அமைக்கின்ற குடிசை காவல் கொட்டகை என அழைக்கப்படுகின்றது.
2.13.6.காட்டுக் கொட்டகைசோளகர்கள் விவசாயத்திற்குப் பயன்படுகின்ற பொருட்களைப் பாதுகாப்பதற்காக கணாங்கு புல்வேய்ந்த குடிசைகளை அமைக்கின்றனர். இதனைச் கொட்டகை, காட்டுக்கொட்டகை என்கிறார்கள். சீர்காட்டில் கணாங்கு புல் வேய்ந்த கொட்டகையில்தான் உழவுக் கலப்பையும், மரக் கூடைகளும் பாதுகாக்கப்படுகின்றன.
2.13.7.மாட்டுத் தொழுவம்மாடுகள் கட்டப்படுகின்ற இடத்தை மாட்டுத் தொழுவம் என்று அழைக்கின்றார்கள். இங்குதான் மலையாளிகள் மாடுகளைப் பாதுகாத்துப் பராமிக்கிறார்கள்.
2.13.8.காவல் பரண்சரிவுப் பகுதியில் பெரிய மூங்கில் கால்களையும், மேட்டுப் பகுதியில் சிறிய மூங்கில் கால்களையும் கொண்டு படுகர்களின் காவல்பரண்கள் அமைந்திருக்கின்றன. முள்ளம் பன்றி, மான் போன்ற மிருகங்களிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக இருவர் வருகிறார்கள்இவர்கள் இரவில் காவல்பரணில்  தங்கி காவல் செய்வதற்கு ஊதுகுழல், தீப்பந்தம், காவல்நாய் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.
2.13.9.மாட்டுக் கொட்டில்படகர்கள் தங்களது மாடுகளைப் பாதுகாத்துப் பராமரிக்கின்ற இடத்தை மாட்டுக்கொட்டில் என்று அழைக்கிறார்கள். மாட்டுக்கொட்டில் நீளமாக அமைக்கப்பட்டிருக்கின்றது. மாட்டுக்கொட்டிலில் ஹொணே எனும் மூங்கில் பாத்திரத்துடன் வந்து பாலைக் கறந்து செல்கிறார்கள். மாடுகளின் சாணத்தைச் சுமந்து சேகரிக்கின்ற எரு தொட்டி ஒன்றும் இருக்கின்றது.
2.13.10.ஆட்டுப்பட்டிஇருளர்கள் தாங்கள் வளர்க்கும் ஆடுகளைப் பாதுகாப்பாக வளர்க்கிறார்கள். ஆடுகளை அடைத்துப் பாதுகாத்து வளர்க்கப் பயன்படுத்துகின்ற இடத்தை ஆட்டுப்பட்டி என்கிறார்கள்.
2.13.11.வேட்டைக்கு அழைத்தல்மரகதமலையில் படகர்கள் தங்களது கால்நடைகளுக்கு ஆபத்தாக வேட்டை விலங்குகள் நுழைந்துவிட்டால் பாதுகாப்பு நடவடிக்கை கருதி வேட்டையாடுவதற்காக வேட்டைக்காரர்களை அழைத்துவருகிறார்கள். அருவிக்கரையில் புலியைக் கண்டதாகச் செய்தியை அறிந்ததும் லிங்கையா வேட்டைக்காரர்களை அழைக்க நடவடிக்கையை மேற்கொள்கிறார்.
2.13.12.குடிநீர் காவல்தேன்கனிக்கோட்டை பகுதிகளில் வாழும் மக்கள் வறட்சியின் காரணமாக குடிநீருக்காக தினந்தோறும் அலைகிறார்கள். காட்டாறுகளிலும் ஓடைகளிலும் மண்ணைத் தோண்டி ஊற்று நீரை உருவாக்குகிறார்கள். இந்த ஊற்று நீர் தோண்டுவதைச் செலம்பு தோண்டுதல் என்று அழைக்கிறார்கள். மண்குடத்தை மொடா என்று அழைக்கிறார்கள். ஒரு வீட்டிற்கு ஒரு மொடா என்று தண்ணீரை அளந்து கொடுத்து முறைப்படுத்துகிறார்கள். முறையை மீறாமல் கவனிப்பதற்காகக்  குடிநீருக்கு காவல் போடப்படுகின்றது.
2.13.13.கொல்லை காவல்பழமரத்துப்பட்டியில் விளைச்சல் பயிர்களைக் காட்டுப்பன்றிகள், யானைகள் போன்ற வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காகக் கொல்லை அமைத்துக் காவல் செய்கிறார்கள். கொல்லைக் காவலர்கள் தகர டின்களில் சத்தம் எழுப்பிக்கொண்டு இரவெல்லாம் தூங்காமல் பயிர்களைப் பாதுகாக்கிறார்கள்.


2.14.வியாபாரம் செய்தல்
2.14.1.குப்பை விற்றல்சந்தன மரங்களை லாரியில் ரகசியமாக ஏற்றிக் கடத்துவதற்குத் துரையனுக்கு குப்பைகள் அதிகம் தேவைப்பட்டன. சோளகர்களிடம் குப்பையை விலைக்கு வாங்க முன்வந்தான். சோளகர்கள் தங்களது வயலுக்குச் சேகரித்து வைத்தக் குப்பைகளை ஒரு மரக்கூடை ஐம்பது காசு என விற்றார்கள்.
2.14.2.விறகு விற்றல்மாதி தன் மகள் சித்தியைக் காப்பதற்காகக் காடுகளிலிருந்து விறகுகளைச் சேகரித்து விற்பனை செய்கிறாள்.
2.14.3.சந்தன வேர் விற்றல்யாரோ வெட்டிய சந்தன மரத்தின் அடிவேரை எடுத்துப் புட்டன் விற்று காசுடன் வந்ததை சிவண்ணா அறிந்திருந்தான்.
2.14.4.சந்தைசோளகணையில் ஒண்ணனின் மருமகள் கெஞ்சி தாளவாடி சந்தையிலிருந்து டீத்தூள், சர்க்கரை, பருப்பு, திண்பண்டங்கள் போன்ற பொருட்களை வாங்கிவந்து தொட்டி மக்களிடம் விற்பனை செய்கிறாள்.
           கொல்லிமலையின் அடிவாரத்தில் வாரந்தோறும் புதன்கிழமை சந்தை கூடுகின்றது. மலையாளிகள் தங்களது உற்பத்திப் பொருட்களைச் சுமந்து சென்று விற்றுவிட்டுத் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிவருகிறார்கள். செவ்வாய் கிழமை மாலையிலேயே சந்தைக்குரிய உற்பத்திப் பொருட்களை நூல்வலைப்பை மூலம் சுமைகட்டித் தயாராகிவிடுகிறார்கள். இரவு அல்லது மறுநாள் அதிகாலையில் சந்தைக்குக் கிளம்புகிறார்கள். சந்தைக்குச் செல்பவர்கள் மந்தையில் சந்தித்து ஒன்றிணைந்து பயணத்தை தொடங்குகிறார்கள். வழிகாட்டும் வெளிச்சமாக தீப்பந்தத்தைப் பயன்படுத்துகிறார்கள். சந்தையின் ஒப்பந்தக்காரர்கள் சுமைக்கு அரசு நியமித்த வரியைவிட இரண்டு மடங்குக் கூடுதலாக வசூலிக்கிறார்கள். சுமைக்குரிய வரியை ஒப்பந்ததாரர்களிடம் செலுத்திவிட்டு உற்பத்திபொருட்களை விற்பனைக்கு எடுத்துவைக்கிறார்கள். நகர வியாபாரிகள் சந்தை முடிகின்ற நேரம் வரை காத்திருந்து மிகக் குறைந்த விலையில் மலையாளிகளின் உற்பத்திப் பொருட்களைப் பறித்துச் செல்கிறார்கள். சந்தையை முடித்து மலைக்கு கிளம்பும் மலையாளிகள் தேவையானப் பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். வியாபாரத்தில் கிடைத்த வருமானம் பொருட்களை வாங்குவதற்குப் போதவில்லை என்ற காரணத்தினால் கந்துவட்டிக்காரர்களிடம் கடன் பெற்றுப் பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். (சின்னப்ப பாரதி,கு. 2008: 26-39). இந்த நிலைமையை மாற்றுவதற்காக மலையாளிகள் சங்கம் அமைத்துச் செயல்படுகிறார்கள். சந்தையைக் கீழ்நாட்டுக்காரர்களின் இடத்திற்குச் சென்று அவர்களது அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு நடத்துவதைத் தவிர்த்து மலையிலேயே சுதந்திரமாக சந்தையை உருவாக்குவது என்று முடிவெடுக்கிறார்கள். பொதுவுடைமை இயக்கங்கள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கியதன் விளைவாக விடாமுயற்சியுடன் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களைச் செய்து சந்தையை மலையிலேயே அமைத்துவிடுகிறார்கள்.
2.14.5.காடுசார் பொருட்களின் வியாபாரம் - இருளர்கள் காடுகளில் சேகரிக்கின்ற பொருட்களை வியாபாரம் செய்கிறார்கள். பூண்டி கோயில் முன்பாக கடைபரப்பி வியாபாரத்தில் ஈடுபடுகிறார்கள். இந்தக் கோயில்களுக்கு வரும் கீழ்நாட்டுக் காரர்கள் இவர்களிடமிருந்து கிடைப்பதற்கு அரிய காடுசார்ந்த பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். தேங்காய் தொட்டியில் பாலாடைக் கட்டியிருக்கும் வேங்கை பால், மூலிகைகள், மூலிகைப் பொடிகள், மூங்கில் தடி  ஆகியன முக்கியப் பொருட்களாகத் திகழ்கின்றன. (ஆட்டனத்தி. 2010: 73-74). வெள்ளியங்கிரி மலையேறுபவர்கள் ஊன்று கருவியாக மூங்கில்தடியை வாங்கிக்கொள்கிறார்கள்.
2.14.6.வியாபாரத்திற்காக மூலிகைகளை பதப்படுத்துதல்தாணிக்கண்டி இருளர்கள் காடுகளிலிருந்து சேகரித்து வருகின்ற மூலிகைகளைக் காய வைத்து இடித்துப் பொடி செய்கிறார்கள். இந்த மூலிகைப் பொடியை வியாபாரம் செய்கிறார்கள்.
2.14.7.வியாபாரத்திற்காக கிழங்கு மாவு செய்தல்கிழங்குகளை மாவாக அரைத்துச் சல்லடைகளில் சலித்து பதப்படுத்துகிறார்கள். இந்தக் கிழங்கு மாவை வியாபாரம் செய்கிறார்கள்.
2.14.8.தளி சந்தைதளியைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து பல வண்ணப் பூக்களையும் பலவிதமான காய்களையும் கொண்டுவந்து விற்பனை செய்கிறார்கள். தரகர்களும் வியாபாரிகளும் தீர்மானிக்கின்ற விலைக்குப் பொருட்களை விற்றுச் செல்கிறார்கள். விவசாயிகள் தங்களது உழைப்பால் விளைவிக்கின்ற பொருள்களுக்குத் தாங்களே விலை நிர்ணயிக்க முடியாத சூழல் நிலவுகிறது. பொருட்களை விற்பனை செய்துவிட்டு கிடைத்த வருமானத்திலிருந்து தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்கிறார்கள். ஆரியம் என்று அழைக்கப்படுகின்ற கேழ்வரகையும் மக்காச் சோள மாவையும் வாங்கிக்கொள்கிறார்கள். சிறிய பாட்டிலில் கடலெண்ணையையும், பெரிய பாட்டிலில் சீமெண்ணெயையும் வாங்கிச் செல்கிறார்கள்.
2.15.கூலி வேலை செய்தல்
2.15.1.விவசாயக் கூலிசோளகர் தொட்டியில் மழை பொய்த்துப்போனதாலும் கடனை அடைப்பதற்கு வழியில்லாததாலும் சோளகப் பழங்குடிகள் கர்நாடகாவில் கூலி வேலைக்குச் செல்கிறார்கள். கர்நாடக நகரப் பகுதியில் கவுண்டர்களின் விவசாய பூமியில் மிகவும் குறைந்த கூலிக்காக மிளகாய் அறுவடையில் ஈடுபடுகிறார்கள்.
            கரியமல்லரின் விவசாய நிலங்கள் தேயிலைத் தோட்டங்களாக மாறியிருக்கின்றன. தங்களது பூமியில் தாங்களே உழைப்பது என்ற நிலை மாறியிருக்கின்றது. கோவை, பொள்ளாச்சி போன்ற பகுதிகளிலிருந்து விவசாயக்கூலிகள் வந்து வேலை செய்கிறார்கள்.
2.15.2.நெருப்புக் கங்காணிவனத்தில் நெருப்பு ஏற்படாமல் கவனித்துக்கொள்வதற்காக மாதம் நூறு ரூபாய் சம்பளத்திற்கு வனம் சார்ந்து வாழும் மனிதர்களிலிருந்து ஒருவரை வனத்துறையினர் நியமிக்கின்றனர். இந்தப்பணியைச் செய்பவரை தீக்கங்காணி என்றும் அழைக்கின்றார்கள். மரம் வெட்டுபவர்களையும், வேட்டையாடுபவர்களையும் வனத்துறையினருக்கு காட்டிக்கொடுக்க வேண்டும் என்பது கூடுதல் பொறுப்பாகும். சிவண்ணா சில காலம் தீக்கங்காணியாகப் பணி செய்தான்.
2.15.3.கல் குவாரிசிக்கைய தம்பிடி என்ற லிங்காயத்து மலையிலிருந்த பாண்டுரங்கனின் கல்குவாரியில் மேஸ்திரியாக பணிசெய்கிறார். கிணறு வெட்டுதல், விவசாய கூலி வேலைகளே கிடைக்காத சூழலில் பாண்டுரங்கனின் கல்குவாரியில் வாரக்கூலிக்குப் பலரும் வந்து வேலை பார்க்கின்றார்கள்.
            மரகத மலை ஹட்டியைச் சார்ந்த தருமன் என்பவன் ஒத்தையில் நாளொன்றுக்கு ஆறணா கூலியில் சாலைபோடும் பணியில் ஈடுபட்டிருக்கிறான்.
2.15.4.காரோட்டிகறுப்பையா மண்டியில் சரக்கு லாரி ஓட்டுபவனாக நஞ்ஞனின் மாமனாகிய ராமன் பணி செய்திருக்கிறார். குமரியாற்று அணைத் திட்டம் தொடங்கியபிறகு அந்தத் திட்டப் பணியில் ஜீப் ஓட்டுனராகப் பணிசெய்கிறார்.
2.15.5.குமரியாற்று அணை பணிகுமரியாற்று நீரை அணைகட்டித் தேக்கி, குகை வழியாக கொண்டுவந்து, பெரிய பெரிய குழாய்களில் பாய்ச்சி இயந்திரங்கள் மூலம் மின்னாற்றலாக மாற்றுகின்ற அரசின் திட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் வனங்களில் வேலை செய்கிறார்கள். மலைகளைக் குடைகிறார்கள். இந்தத் திட்டத்தில் படித்தவர்கள் இன்ஜினியர்களாகவும், கணக்காளர்களாகவும் பணியில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். நஞ்சன் இந்தத் திட்டத்தில் பொறியாளராகப் பணியாற்றுகிறான்.
2.15.6.மரம் வெட்டுதல்மூச்சுக்குழி பக்கம் மரம் கடத்துபவர்கள் தங்கியிருக்கிறார்கள். வெட்டிய மரத்தைப் பாங்காட்டு வழியில் பத்து மைல் சுமந்து சென்று லாரியில் ஏற்ற வேண்டும். மூன்று நாள் வேலை செய்ததற்காகப் புட்டன் முந்நூறு ரூபாய் பெற்று வந்தான்.
கீழ்நாட்டுக்காரர்கள் காடுகளிலிருந்து ரகசியமாக ஈட்டி மரங்களை வெட்டுவதற்கு தாணிக்கண்டியிலுள்ள இருளர்களைக் கூலிக்கு அழைத்துச் செல்கிறார்கள். ஞானசேகரன் ஈட்டி மரங்களை வெட்டிக் கடத்தியதில் வெள்ளியங்கிரி, துரையான், மணியான் ஆகிய மூன்று இருளர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
2.15.7.மரச் செடிகளை நடுதல்வனத்துறையினர் பாலிதின் பைகளில் வளர்த்த நாற்றுகளை வனத்தில் நடுவதற்கான பணியை மேற்கொண்டிருந்தார்கள். தாணிக்கண்டி இருளர்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.
2.15.8.கட்டிட வேலைதாணிக்கண்டி இருளர்கள் கட்டுமானப் பணிகளில் கூலிகளாகப் பணியாற்றுகிறார்கள். ஈசா யோகா மையத்தில் நடைபெறுகின்ற கட்டிட வேலையில் பொன்னி, மாரி, ருக்மணி, வெள்ளி ஆகிய இருளர் பெண்கள் வேலை செய்கிறார்கள்.
2.15.9.புளியம்பழம் சேகரித்தல்வனத்துறையிடமிருந்து காடுகளில் புளியம்பழம் சேகரித்தலைக் குத்தகை எடுத்துள்ள கீழ்நாட்டுக்காரர்களிடம் தாணிக்கண்டி இருளர்கள் பணிக்குச் செல்கிறார்கள். ரங்கராஜன் என்ற கவுண்டரின் புளிக்குத்தகைத் தொழிலில் தாணிக்கண்டி இருளர்கள் பொன்னி தலைமையில் ஆர்வத்துடன் பணிபுரிகிறார்கள்.
2.16.கடன் பெறுதல்
            சாவித்திருமன் என்ற மலையாளியின் குடும்பம் நஞ்சை நிலத்தைக் கடனுக்கு வாங்கியுள்ளது. வருசம் நூற்றுக்கு நூற்று எண்பது ரூபாய் வட்டிக் கணக்கில் இந்த நிலத்தை வாங்கியிருக்கிறார்கள்.
மலையாளிகளுக்குக் கீழ்நாட்டுச் சந்தையில் இருப்பவர்கள் கந்துவட்டி என்ற அநியாய வட்டிக்குக் கடன் கொடுக்கிறார்கள். மலையாளிகள் பொதுவாக விவசாய வெள்ளாமைக்கு முன்பாக கடனைப் பெறுகிறார்கள். வெள்ளாமை கிடைத்தவுடன் அவற்றை வியாபாரிகளிடம் விற்றுவிட்டுச் சந்தை வாசலிலேயே கந்துவட்டிக்காரர்களிடம் இழந்துவிட்டு திரும்பி வருகிறார்கள்.
சாவித்திருமன் என்ற மலையாளியிடம் கீழ்நாட்டு கந்துவட்டிக்காரனுடைய  கையாள் வழக்கம்போல வட்டி வசூல் செய்ய உரிய நாளுக்கு வந்திருக்கிறான். அவனிடம் வட்டியை ஒப்படைக்க வேண்டிய கட்டாயத்தினால் ஊர் தர்மகர்த்தாவிடம் உதவி வேண்டிச் செல்கிறார். பன்றியைக் கொடுத்து முப்பது ரூபாய் பணம் கேட்கிறார். ஆனால் வட்டியும் முதலுமாக இரண்டு பன்றிகளை தர்மகர்த்தா விரும்புகின்றபோது பிடித்துக்கொள்ளலாம் என்பதாக உறுதிசொல்லிவிட்டு  முப்பது ரூபாயைப் பெற்று வருகிறான்.
2.17.இயல் முடிவுகள்
          இந்த இயலில் ஆய்விற்குரிய ஐந்து புதினங்களிலிருந்து சோளகர்கள், மலையாளிகள், படுகர்கள், இருளர்கள் ஆகிய பழங்குடி மக்களின் வாழ்விட சூழல்கள் பற்றிய தகவல்களும் இயற்கை வனம் பற்றிய தகவல்களும் விளக்கம் பெற்றுள்ளன. சமூகத்தில் தங்களது அன்றாடப் பொருட் தேவைகளை பெறுவதற்காக எத்தகையக் கருவிகளை பயன்படுத்திக்கொண்டு எத்தகைய தொழில்முறையைப் பின்பற்றுகிறார்கள் என்பனவற்றை விளக்குவதாக  இரண்டாம் இயல் அமைக்கப் பெற்றிருக்கின்றது.
            சோளகர் பழங்குடிகள் அவர்களது நினைவிற்கு எட்டாத காலந்தொட்டு தலைமுறை தொடர்ந்து சத்தியமங்கலம் பகுதியிலுள்ள மலை காடுகளில் வாழ்ந்து வருகின்ற பூர்வ குடிகளாவர். மலையாளிகளை கொல்லிமலையின் பூர்வ குடிகளாகவே சங்கம் புதினத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. படகர்கள் 18வது நூற்றாண்டில் மைசூரிலிருந்து நீலகிரி மலையில் குடியேறி தங்களது தனித்துவங்களை விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்து வருகிறார்கள். அரசாங்கத்தின் தொடர் முயற்சியால் மலை காடுகளில் வாழ்ந்த இருளர்கள் மலையடிவார கிராமங்களுக்கு குடியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.
            வன உயிரினங்களில் யானை, மான், பன்றி ஆகியன பிரதானமானவைகளாக அறியப்படுகின்றன. கொல்லி மலையில் வாழும் வன உயிரினங்களில் கரடி இன்றியமையாததாகும். ஆனால்கரடி வண்டிஎன்ற உவமையைத் தவிற சங்கம் புதினத்தில் கரடி பற்றிய பதிவுகளே இல்லை.
            தமிழகப் பழங்குடிகள் பயன்படுத்துகின்ற கருவிகளில் மின்கம்பி வேலி இடம்பெறுவதில்லை. துப்பாக்கியின் பயன்பாடு வரைமுறைக்கு உட்பட்டதாகவே அமைகின்றது. தமிழகப் பழங்குடிகள் மீது அதிகாரம் செய்கின்ற நவீன சொத்ததிகார சமூகத்தினரால் பயன்படுத்தப்படுகின்ற மின் கம்பி வேலியானது இயற்கையுடன் பகை முரணை உருவாக்குகின்ற கருவியாக அமைந்திருக்கின்றது. வனங்களில் பழங்குடிகளைப்போல வன உயிரினங்களும் இயற்கையோடு ஒத்திசைந்து வாழ்கின்றன. வனங்களிலேயே காலந்தொட்டு வாழ்வதினாலேயே பழங்குடிகளுக்கும் மற்ற வன உயிரினங்களுக்கும் போராடி உணவைப் பெறுவதற்கும் அழிவிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கும் உரிமைகள் இருக்கின்றன. இயற்கையோடு ஒத்திசைந்து பெற்றுள்ள உரிமையின் அடிப்படையில் உணவுத் தேவைக்காக பழங்குடிகள் வேட்டையில் ஈடுபடுகிறார்கள். தற்காப்புத் தேவைக்காக விளைச்சலை மற்ற வன உயிரினங்களிடமிருந்து பாதுகாக்க சப்தம் எழுப்பும் கருவிகளை பயன்படுத்தி விரட்டுகிறார்கள். வாய்வேட்டு மூலம் கிடைக்கும் பன்றிகளின் இறைச்சியை உணவாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். மற்றபடி விளைச்சலைப் பாதுகாப்பதற்காக வனஉயிரினங்களைக் கண்மூடித்தனமாக அழிப்பதற்கு எத்தகைய வடிவங்களிலும் ஈடுபடுவதில்லை. பழங்குடி மக்களின் செயலூக்கத்தால் உருவாகின்ற இயற்கை மீதான முரண்பாடுகள் நட்பு முரணாகவே அமைகின்றன. பழங்குடிகள் அல்லாத கீழ்நாட்டு சொத்ததிகாரக் குடியேறிகள் தங்களது விவசாய விளைச்சல்களைப் பாதுகாப்பதற்காக மின்வேலிகள் அமைத்து வன உயிரினங்களைக் கண்மூடித்தனமாக அழிக்கிறார்கள். மின்கம்பி வேலியில் வன உயிரினங்கள் அடிபட்டு இறக்கின்றன. எனவே, பயன்பாட்டுக் கருவிகளில் மின்கம்பி வேலியானது இயற்கை மீதான பகை முரணை ஊக்கப்படுத்துகின்ற கருவியாக அமைகின்றது. பழங்குடி மக்கள் தங்களது தேவைக்கான வேட்டைக்கும் தற்காப்பிற்கான அவசியத்திற்கும் பயன்படுத்துகின்ற தருணங்கள் துப்பாக்கி என்ற கருவி இயற்கை மீதான நட்பு முரணாகவே அமைகின்றது. ஆனால் வெள்ளைக்கார அதிகாரிகள், ஜமீன்தார்கள், அரசு அதிகாரிகள், சொத்ததிகாரம் உடையவர்கள் தங்களது இலாப நோக்கத்திற்காகவும் பொழுதுபோக்கு விளையாட்டிற்காகவும் யானை, புலி போன்ற வன உயிரினங்களை வேட்டையாடுகின்ற தருணங்கள் துப்பாக்கி என்ற கருவியை இயற்கை மீதான பகை முரணாகக் கருதச் செய்கின்றது.
            காடுசார்ந்த பொருட்களை சேகரித்தல் பற்றிய புதின விவரங்கள் முக்கிய விடுபடுதல்களுடன் அமைந்திருக்கின்றன. குறிப்பாக தேன் சேகரித்தல் என்ற தொழில் தமிழகப் பழங்குடிகளின் முக்கியத் தொழிலாக அமைகின்றது. ஆனால் மலையாளிகள், படகர்கள், தேன்கனிக்கோட்டை இருளர்கள் பற்றிய புதினங்களில் தேன் சேகரித்தல் பற்றிய தகவல்கள் விடுபட்டுள்ளன. தமிழகப் பழங்குடிகளின் முதன்மைத் தொழிலாக விவசாயமும் வேட்டையும் வளர்ந்திருப்பதை காண முடிகின்றது. மழை பெய்யாமல் விவசாயம் பொய்த்துப்போனாலும் வேட்டையில் உணவு கிடைக்காமல் போனாலும் பட்டினி கிடக்க நேரிடுகின்றது. இரண்டு தொழிலும் உணவின் தேவையை  நிறைவேற்ற முடியாத சூழலில் காடு சார்ந்து உணவைச் சேகரித்துப் பெறுவதற்கு பெண்கள் செல்கிறார்கள். இந்த நடவடிக்கையைச் சோளகர் பழங்குடிகளிடம் காண முடிகின்றது. காடு சார்ந்து உணவைச் சேகரிப்பதற்காக ஆண்களல்லாமல் பெண்கள் மட்டும் செல்வதற்கான வரலாற்று காரணத்தை ஆய்வேட்டின் முடிவுரை பகுதியில் அறியலாம்.
            வேட்டை தொழிலில் மான், பன்றி ஆகியன முக்கிய உயிரினமாக கருத முடிகின்றது. புலி, கரடி, சிறுத்தை ஆகிய வன விலங்குகளின் தாக்குதலை எதிர்கொள்கின்ற தருணங்களில் தற்காப்பு நடவடிக்கையாக அவற்றைப் பழங்குடி மனிதர்கள் கொல்வதை அறிய முடிகின்றது. கரடி கொல்லப்பட்டால் உணவாகவும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் விளைச்சலை பாதுகாத்தல், மந்தையைப் பாதுகாத்தல், பொழுதுபோக்கு விளையாட்டாக வேட்டையாடுதல் ஆகிய காரணங்களுக்காக  உணவிற்கு பயன்படுத்தப்படாத வன உயிரினங்களைப் பழங்குடி மக்கள் கொன்றழிப்பதில்லை. வெள்ளைக்கார அதிகாரிகள், ஜமீன்தார்கள், அரசு அதிகாரிகள், சொத்ததிகாரம் உடையவர்கள் தங்களது இலாப நோக்கத்திற்காகவும் பொழுதுபோக்கு விளையாட்டிற்காகவும் வேட்டையில் ஈடுபட்டு வன உயிரினங்களை கண்மூடித்தனமாக அழித்திருக்கிறார்கள். வெள்ளைக்கார அதிகாரிகள் தாங்கள் வேட்டையாடிய புலிகளின் உடல்களை கூட்டமாகக் குவித்து அவற்றுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். இன்று புலி இனமே வனங்களில் அரிதாகிப் போனதற்கு காரணம் பழங்குடி மக்கள் அல்ல என்பதற்கு இத்தகையச் சான்றுகளைப் பெற முடிகின்றது. சொத்ததிகாரம் படைத்த கீழ்நாட்டுக்காரர்கள் தங்களது மந்தைகளைப் பாதுகாக்க வனங்களிலுள்ள புலிகளை விசம் வைத்து அழித்திருக்கிறார்கள். தந்தங்களுக்காக யானைகளைக் கூட்டங்கூட்டமாகக் கொல்கிறார்கள். இத்தகைய வேட்டை நடவடிக்கைகள் வனத்தைப் பணமாக்குதல் என்ற கோட்பாட்டின்படி பழங்குடி அல்லாதவர்களால் வனத்தின் மீது தொடுக்கப்படுகின்ற வன்முறைகளாக அறியமுடிகின்றன. பழங்குடி மக்களின் வேட்டை தொழிலும் விவசாய தொழிலும் இயற்கையோடு ஒத்திசைந்து உணவினைப் பெறுகின்ற உயிரின நடவடிக்கையாக மட்டுமே அமைகின்றன. சோளகப் பழங்குடிகள் வேட்டையாடிய இறைச்சியை ஐந்து கட்டமாகப் பங்கிடுகிறார்கள். விதவை பெண்ணுக்கு முதல் பங்கு, இரண்டாம் பங்கு ஊர் தலைவருக்கு, மூன்றாம் பங்கு வேட்டையில் ஈடுபட்டவர்களுக்கு, நான்காம் பங்கு ஊரிலுள்ள எல்லோருக்கும், ஐந்தாம் பங்கு வேட்டைக்கு உதவிய நாய்களுக்கு என்பதாக பங்கு முறை அமைகின்றது. முதல் பங்கை விதவைப் பெண்ணுக்கு ஒதுக்குவதற்கான முக்கியத்துவம் பற்றிய வரலாற்று காரணத்தை ஆய்வேட்டின் முடிவுரை பகுதியில் அறியலாம்.
            பழங்குடி மக்கள் இயற்கையோடு ஒத்திசைந்து பராமரித்து உரிமை பெற்றுள்ள விவசாய நிலங்களை பழங்குடி அல்லாதவர்கள் தொடர்ந்து அபகரிப்பதற்காக முயல்கிறார்கள் என்பதை அறிய முடிகின்றது. சொத்ததிகாரம் படைத்த கீழ்நாட்டுக்காரர்கள், தொழிற்சாலை நிறுவனங்கள், நிறுவனங்களின் இலாப நலன்களுக்கு சேவை செய்கின்ற அரசு அதிகாரங்கள் ஆகியன பழங்குடி மக்களிடமிருந்து அவர்களது விவசாய நிலங்களை அபகரிக்கின்றன.
            விவசாயத்தில் ஈடுபடுதல் என்பது உணவுத் தேவையை நிறைவேற்றுவதற்கா? பணம் சம்பாதிப்பதற்கா? என்ற விவாதத்தை படகர்களது வாழ்வியல் மாற்றங்களில் அறிய முடிகின்றது. உணவுப் பயிர்களல்லாமல் பணத்திற்காக வனத்திற்கு பொருத்தமற்ற புதிய பயிர்களை வளர்த்து வனத்தை அழிப்பதை கண்டிப்பதாகவே பழங்குடி மக்களது ஆழ்மன உணர்நிலை வெளிப்படுகின்றது.

            தமிழகப் பழங்குடிமக்கள் தங்களது வாழ்விட சூழல்களின் அடிப்படையிலும் பொருளாதார உற்பத்தி நடவடிக்கைகள் அடிப்படையிலும் வன உயிரினங்களின் அங்கமாகவே தங்களைப் பிரதிநிதித்துவப் படுத்திக்கொள்வதை அறிய முடிகின்றது.
... 

இயல் – 3 சமூக வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகள்

No comments:

அதிகம் படித்தவை