எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Wednesday, May 31, 2017

முன்னுரை 2

ஆய்வு நோக்கம்
            தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதினங்களில் பழங்குடி மக்களின் தனித் தன்மையான வாழ்க்கை எத்தகைய முறையில் விவரிக்கப் பட்டிருக்கின்றன என்பதை இலக்கிய இனவரைவியல் (literary ethnography) அணுகுமுறை மூலமாக அறிவது இவ்வாய்வின் நோக்கமாக அமைகின்றது. சமகாலத்தில் எந்த ஒரு சமூகத்திலும் மேற்கொள்ளப்படும் இனவரைவியல் ஆய்வில் அச்சமூகத்தார் தகவலாளிகளாக அமைகின்றனர். இலக்கிய இனவரைவியல் ஆய்வில் ஆய்வுக்குட்படுத்தப்படும் பனுவல் தகவலாளிகளைக் கொண்டுள்ளது. இங்குக் கதைமாந்தர்கள் தகவலாளிகளாக அமைகின்றனர். இந்நிலையில்பனுவலே தகவலாளியாக இருத்தல்’ (text an informant) எனும் நிலை மேலெழுகிறது.
ஆய்வுக் கருதுகோள்
            சுதந்திர இந்தியா என்ற கருத்தின் தோற்றத்திற்கு முன்னும்  பின்னும் ஏராளமான நெருக்கடிகளுக்குப் பழங்குடி மக்கள் ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். அரச பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆளாகாத பழங்குடி இனமே இல்லையென்று சொல்லிவிடலாம். இன்றும் இவர்களது வாழ்வியலுக்கு எதிரான ஏராளமான நெருக்கடிகள் சூழ்ந்திருக்கின்றன. இந்த நெருக்கடிகளைப் போலவே நெருக்கடிகளுக்கு எதிரான இவர்களது போர்க்குணங்களும் வலிமை பெற்று வருகின்றன. இவர்கள் தங்களது வாழ்வியல் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடுகிறார்கள். 1.இவர்களது அரசியல் போராட்டச் சூழலே பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள் உருவாக வழிவகுத்துள்ளன. 2.அரசபயங்கரவாதத்தாலும் அவற்றிற்கெதிரான பழங்குடி மக்களின் போராட்ட உணர்வுகளாலும் கவரப்பட்ட கலை இலக்கிய உணர்வாளர்களே இவர்களைப் பற்றிய புதினங்களைப் படைத்திருக்கிறார்கள்.
ஆய்வு முன்னோடிகள்
  1. கைலாசபதி, . 1987 (1968). தமிழ் நாவல் இலக்கியம். திறனாய்வுக்         கட்டுரைகள். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
  2. சிவத்தம்பி, கா. 1988 (1978). நாவலும் வாழ்க்கையும். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
  3. தோதாத்ரி, எஸ். 1988. தமிழ் நாவல்கள் சில ஆய்வுகள். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
  4. வேங்கடாசலபதி, . இரா. 2002. நாவலும் வாசிப்பும். நாகர் கோயில்: காலச்சுவடு பதிப்பகம்.
  5. சிவசுப்பிரமணியன், . 2009. இனவரைவியலும் தமிழ் நாவலும். சென்னைபரிசல் வெளியீடு.
  6. பக்தவத்சல பாரதி. 2013 (2007). தமிழகப் பழங்குடிகள். புத்தாநத்தம் (திருச்சி): அடையாளம் பதிப்பகம்.
  7. பக்தவத்சல பாரதி. 2014. பாணர் இனவரைவியல். புத்தாநத்தம் (திருச்சி): அடையாளம் பதிப்பகம்.
  8. பக்தவத்சல பாரதி. 2014. இலக்கிய மானிடவியல். புத்தாநத்தம் (திருச்சி): அடையாளம் பதிப்பகம்.
  9. ஆனந்தவேல், சு. 2009. இனவரைவியல் நோக்கில் தமிழ்ப் புதினங்கள், முனைவர் பட்ட ஆய்வேடு. திருச்சி: பாரதிதாசன் பல்கலைக்கழகம்.
  10. சித்ரா,. 2006. தொன்மவியல் நோக்கில் படுகர்களின் சமூக அமைப்பும் பெண் தெய்வ வழிபாடும். அச்சிடப்படாத முனைவர் பட்ட ஆய்வேடு. கோயம்புத்தூர்: பாரதியார் பல்கலைக்கழகம்.
ஆய்வு எல்லை
          ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பிற்கு முன்பிருந்தே தமிழக மலைக் காடுகளில் வாழ்ந்து வருகின்ற பழங்குடிகளைப் பற்றிய ஐந்து தமிழ்ப் புதினங்கள் மட்டுமே இவ்வாய்விற்கு எல்லையாக அமைகின்றன.
ஆய்வு மூலங்கள்
            ‘தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள்: இனவரைவியல் நோக்குஎன்ற தலைப்பின் கீழ் அமைகின்ற இவ்வாய்விற்கு ஐந்து புதினங்கள் முதன்மைச் சான்றுகளாக அமைகின்றன.
          சோளகர் தொட்டி- தமிழகத்தின் கர்நாடக எல்லைப்புற மலை கிராமத்தில் வாழும் சோளகர் பழங்குடியைப் பற்றிய இப்புதினத்தை .பாலமுருகன் படைத்துள்ளார்.
            சங்கம்- கொல்லி மலையில் வாழும் மலையாளிப் பழங்குடிகளைப் பற்றிய இப்புதினத்தை கு.சின்னப்ப பாரதி படைத்துள்ளார்.
            குறிஞ்சித்தேன்- நீலகிரி மலையில் வாழும் படகர் வாழ்வியலை முதன்மையாகக் கொண்டு இப்புதினம் படைக்கப்பட்டுள்ளது. இப்புதினத்தை ராஜம் கிருஷ்ணன் படைத்துள்ளார்.
வனம்கோயம்புத்தூரில் வெள்ளியங்கிரி மலையில்  வாழும் இருளர்களைப் பற்றிய இப்புதினத்தை ஆட்டனத்தி படைத்துள்ளார்.
          பனியில் பூத்த நெருப்பு- கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் வாழும் இருளர் பழங்குடிகளைப் பற்றிய இப்புதினத்தை .நஞ்சப்பன் படைத்துள்ளார்.
            இந்த ஐந்து புதினங்களைப் பற்றியும், பழங்குடிகள் பற்றியும், இனவரைவியல் பற்றியும் தகவல்களை வழங்கக்கூடிய நூல்கள், கட்டுரைகள், பிற பதிவுகள் முதலானவை துணைமைச் சான்றுகளாக அமைகின்றன.
ஆய்வு அணுகுமுறை
          இனவரைவியல் நோக்கில் அமைகின்ற இவ்வாய்வில் நான்கு  வகையான அணுகுமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
            புதினங்களில் காணலாகும் பழங்குடி மக்களின் வாழ்வியலை விவரிப்பதற்காக இனவரைவியல் அணுகுமுறையும், சூழல் சார்ந்த கண்ணோட்டத்துடன் விளக்குவதற்காக விளக்கமுறை ஆய்வு அணுகுமுறையும், வாழ்வியலின் அனைத்துக் கூறுகளையும் பகுத்துக் கூற முற்படுவதால் பகுப்பு முறை ஆய்வு அணுகுமுறையும், சமூக அசைவியக்கங்களை விளக்குவதற்காக சமூகவியல் ஆய்வு அணுகுமுறையும் பயன்படுத்தப்படுகின்றன.
ஆய்வுப் பகுப்பு
          முன்னுரை முடிவுரை நீங்கலாக இவ்வாய்வில் நான்கு இயல்கள் அமைகின்றன.
            முன்னுரை
இயல்-1 : இலக்கியம், இனவரைவியல், பழங்குடிகள்
இயல்-2 : வாழ்விடங்களும் சமூகப் பொருளாதார உற்பத்தி உறவுகளும்
இயல்-3 : சமூக வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகள்
இயல்-4 : வாழ்வியல் நெருக்கடிகளும் பண்பாட்டு அசைவியக்கங்களும்
முடிவுரை


இலக்கியம், இனவரைவியல், பழங்குடிகள்
இலக்கியம் பற்றிய வரையறைகளை உருவாக்குவதற்குத் தொடர்ந்து அறிஞர்கள் முயன்று வந்திருக்கிறார்கள். அகராதிகளும் இலக்கியம் பற்றிய வரையறைகளை வழங்குகின்றன. சமகாலம் வரையிலும் எது இலக்கியம் என்பதைப் பற்றிய ஏராளமான உரையாடல்கள் நிகழ்ந்துள்ளன. இந்நிலையில் இலக்கியம் பற்றிப் பல்வேறு அறிஞர்கள் மற்றும் அகராதிகள் வழங்கும் விளக்கங்கள் தொகுக்கப்பெற்றுள்ளன. மேலும் இலக்கியம் பற்றிய இவ்வாய்வேட்டின் வரையறையும் இங்கு விளக்கம் பெறும். கூடவே இலக்கியத்தின் இலக்குகள் பற்றியும் விளக்கப்பெறும்.
இனவரைவியல் என்பது மானிடவியலின் குறிப்பிடத்தகுந்த ஒரு பகுதி ஆகும். எனவே மானிடவியல், மானிடவியல் வகை, சமூகப் பண்பாட்டு மானிடவியல் குறித்த செய்திகள்  தொகுத்துரைக்கப்படும். இனவரைவியல் பற்றிய சொல் விளக்கங்களும் இனவரைவியல் ஆய்வின் தொடக்கம், வளர்ச்சி பற்றிய விளக்கங்களும் அமையும். இனவரைவியல் பற்றி அறிஞர்களது கருத்தாக்கங்கள் விளக்கப்பெறும். இந்தியாவில் இனவரைவியல் ஆய்வு பற்றியும், இலக்கியத்திற்கும் இனவரைவியலுக்கும் இடையிலான உடன்பாடுகளும் முரண்பாடுகளும் விளக்கப்பெறும்.
பழங்குடிகள் பற்றிய அறிஞர்களின் விளக்கங்கள் இடம்பெறும். இந்தியப் பழங்குடிகள் பற்றியும் தமிழகப் பழங்குடிகள் பற்றியும் விளக்கப்பெறும். தமிழகப் பழங்குடிகள் பற்றிய அட்டவணை இடம்பெறும். தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள்: இனவரைவியல் நோக்கு என்ற இவ்வாய்வேட்டிற்கு முதன்மை மூலங்களாக அமைந்துள்ள புதினங்களின் கதைச்சுருக்க அறிமுகம் இடம்பெறுவதாகவும் இயல் ஒன்று அமையும்.

வாழ்விடங்களும் சமூகப் பொருளாதார உற்பத்தி உறவுகளும்
இயற்கையின் அங்கமாகிய பழங்குடி மக்கள் தங்களது செயலூக்கத்தின் அடிப்படையில் வாழ்விடங்களை உருவாக்கிக்கொண்ட விதம் பற்றி விளக்கப்பெறுகின்றது. மலைக்காடுகளாகிய இயற்கை சூழல்களே இவர்களது வாழ்விடம் மற்றும் பொருளாதார ஆதாரங்களாக அமைந்திருக்கின்றன. மனித வாழ்வியலில் உணவு, உடை, உறைவிடம் போன்ற அடிப்படைத் தேவைகள் மற்ற உயிரினங்களிடம் இல்லாத வகையில் அமைந்திருக்கின்றன. எத்தகைய உற்பத்தி முறைகள் சமூகத்தில் நிலவுகின்றன என்பதைச் சார்ந்ததாகவே நிறைவடைய வேண்டிய மனிதத் தேவைகள் இருக்கின்றன. சமூகப் பொருளுற்பத்தி பற்றிய எத்தகைய அறிவையும் அனுபவத்தையும் கொண்டு, ஒரு மக்களினம் எத்தகைய இயற்கை ஆதாரங்களில், எத்தகைய உற்பத்திக் கருவிகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்து வந்திருக்கின்றது. உழைப்பின் விளைவுகளை எவ்வாறு தங்களுக்குள் பகிர்ந்துகொண்டு வந்திருக்கின்றது. இவையே சமூகப் பொருளாதார உற்பத்தி முறை ஆகும். உற்பத்தி முறையின் அடிப்படையில் பொருளாதாரப் படிமலர்ச்சி எட்டு நிலையாக அறிப்படுகின்றது. 
      1.காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)
2.வேட்டை நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)
3.கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
4.விவசாய நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
5.உற்பத்தியின் மீதான வணிக நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
6.வணிக இலாபத்திற்காக உற்பத்தி செய்தல் (தந்தை அதிகார சமூகம்)
7.நிதி மூலதனப் பிரிவு தோன்றி சமூகஉற்பத்தி மீது ஆதிக்கம்  செய்தல் (தந்தை அதிகார சமூகம்)
     8.மக்கள் தலைமையின் கீழ் சமூகஉற்பத்தியைக் கட்டமைத்தல் (ஏற்றத்தாழ்வு மதிப்பற்ற சமூகம்) 
எனவே, எத்தகைய பொருளாதார உற்பத்தி முறைகளால் ஒரு சமூகம் தகவமைந்திருக்கின்றது என்பதை ஆராயாமல் ஒரு சமூகம் பற்றிய ஆய்வு நிறைவடையாது. ஏனெனில் சமூகப் பொருளுற்பத்தியே சமூக இயக்கத்திற்கு அடித்தளம் ஆகும். தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள்: இனவரைவியல் நோக்கு என்ற இவ்வாய்வேட்டிற்கு முதன்மை மூலங்களாக அமைந்துள்ள புதினங்களில் பழங்குடி மக்களின் வாழ்விடங்கள் எத்தகைய சமூகப் பொருளாதார உற்பத்தி உறவுகளுடன் தகவமைந்திருக்கின்றன என்பதை ஆராய்வதாக இயல் இரண்டு அமைகின்றது.

சமூக வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகள்
சமூகப் பொருளுற்பத்தி அல்லாத மனித வாழ்வியலின் அனைத்துத் துறைகளும் சமூக வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகளாகும். மனித வாழ்வியல் என்பது புறவுலகின் சமூக இயைபு ஆகும். மொழியின் பயன்பாடு இல்லாமல் புறவுலகச் சமூக வாழ்வு மனிதர்களுக்குச் சாத்தியமல்ல. சகமனிதர்களின் மூளைகள் ஒன்றிணைந்த உற்பத்தி ஆற்றலாக உருவெடுக்க மொழியின் உருவாக்கம் காரணமாகியது. புறவுலகத் தொடர்பால் உருவாகும் எண்ணங்களை அறிவதற்கும், வாழ்வியல் கருத்துக்களை உருவாக்கிக் கொள்வதற்கும் மொழி இன்றியமையாததாகின்றது. மனித இனம் தமக்குள் ஒற்றுமைகளையும் உடன்பாடுகளையும் ஏற்படுத்திக் கொண்டதைவிட வேற்றுமைகளையும் முரண்பாடுகளையும் வளர்த்துக்கொண்டதே அதிகம். இவைகள் மனித இன வாழ்வியலில் ஏராளமான நிறுவனங்களாகக் கட்டமைந்திருக்கின்றன. பழங்குடி மக்களிடமுள்ள சமூக நிறுவனங்களைப் பற்றியும், அவை சார்ந்த நம்பிக்கைகள் பற்றியும் ஆராய்வது இன்றியமையாததாகும். ‘தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள்: இனவரைவியல் நோக்குஎன்ற இவ்வாய்வேட்டிற்கு முதன்மை மூலங்களாக அமைந்துள்ள நாவல்களில் பழங்குடி மக்களின்  குடும்பம், சமயம், தெய்வங்கள் சடங்குகள், விழாக்கள், கல்வி, சட்டம், பஞ்சாயத்து, வாய்மொழி வழக்காறுகள் ஆகியன பற்றி ஆராய்வதாக இயல்  மூன்று அமைகின்றது.

வாழ்வியல் நெருக்கடிகளும் பண்பாட்டு அசைவியக்கங்களும்
பழங்குடி மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்வின் இயல்புகளுக்குப் பிரச்சனையாக இயற்கை மற்றும் சமூகளாவிய நிலையில் தோன்றுகின்ற புதிய காரணிகளும் அதனால் வாழ்வியல் பொருளாதாரப் பண்பாட்டுச் சூழலில் ஏற்படுகின்ற பல்வேறு மாற்றங்களுமே வாழ்வியல் நெருக்கடி மற்றும் பண்பாட்டு அசைவியக்கங்கள் ஆகும். அதாவது, வாழ்வியலில் நிகழ்கின்ற ஒரு குறிப்பிட்ட பொருளாதார நெருக்கடி அல்லது பண்பாட்டு நெருக்கடியானது வாழ்வியல் பொருளாதார பண்பாட்டுக் கூறுகளின் பல்வேறு இயக்கங்களுக்குக் காரணமாக அமைவது பண்பாட்டு அசைவியக்கம் ஆகும். இயற்கையை இலாப வெறியோடு அழித்து வாழ்கின்ற நவீன சொத்தாதிக்க நலன் சார்ந்த சமூகம் பழங்குடிமக்களின் வாழ்க்கை முறைகளில் நெருக்கடிகளை உருவாக்குகின்றன. அடிமைப்படுத்துதல், வாழ்விடங்களைவிட்டு விரட்டுதல், நவீன அரசு நிறுவனங்களைச் சுமத்துதல், கடன்காரராக்குதல், வாழ்வியல் ஆதாரமான தொழில்களாகிய காடு சார்ந்த பொருட்களைச் சேகரித்தல் மற்றும் வேட்டைத் தொழிலைத் தடுத்தல், பாலியல் வன்புணர்ச்சிகளுக்கு ஆளாக்குதல், சிறையிலடைத்தல், வாழ்விடச் சூழல்களாகிய இயற்கை வளங்களை இலாபவெறியுடன் அழித்துப் பழங்குடி மக்களுக்கும் மற்ற காட்டு உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலை உருவாக்குதல் போன்ற ஏராளமான வாழ்வியல் நெருக்கடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ‘தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள்: இனவரைவியல் நோக்குஎன்ற இவ்வாய்வேட்டிற்கு முதன்மை மூலங்களாக அமைந்துள்ள புதினங்களில் பழங்குடி மக்களின் இத்தகைய வாழ்வியல் நெருக்கடிகளையும் இவற்றின் விளைவாக பழங்குடி மக்களின் பண்பாட்டுக்கூறுகளில் இடம் பெற்றுள்ள மாற்றங்களையும் ஆராய்வதாக இயல் நான்கு அமைகின்றது.
முடிவுரை

            இவ்வியலில் ஆய்வேட்டின் ஒவ்வொரு இயலின் முடிவுகளும் தொகுத்து வழங்கப்படும்

... 

இயல் – 1 இலக்கியம், இனவரைவியல், பழங்குடிகள்

No comments:

அதிகம் படித்தவை