எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Wednesday, May 31, 2017

இயல் – 1 இலக்கியம், இனவரைவியல், பழங்குடிகள் 2

1.17.3.குறிஞ்சித் தேன் அறிமுகம்
ஜோகி என்ற படகரை மையமாகக் கொண்டு இந்த நாவல் அமைக்கப்பட்டிருக்கின்றது. பன்னிரெண்டு ஆண்டிற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் நீலகிரி மலையின் தனிச்சிறப்பாகும். ஒன்பது வயது சிறுவனாக அறிமுகமாகும் ஜோகி நாவலின் இறுதியில் ஐந்து குறிஞ்சிகளைக் கண்ட கிழவராக இருக்கிறார். மரகதமலை ஹட்டி(ஊர்)யில் மலை முழுவதும் இருளே இல்லாமல் ஒளியேற்றினால் எப்படி இருக்குமென ஜோகி கற்பனை செய்து பார்க்கிறான். இது சாத்தியமா என்பதைத் தனது நண்பர்களுடன் விவாதிக்கிறான். இந்தக் கற்பனை நாவல் இறுதியில் நிஜமாகிறது. ஜோகி ஐந்து குறிஞ்சிகளைக் கடந்தபோது சமூக வாழ்வில் ஏராளமான மாற்றங்களைக் கண்டுவிட்டான். ஜோகியின் தந்தை லிங்கையா ஹொணே என்ற மூங்கில் பாத்திரத்தில் திறமையாகப் பால் கறப்பவர். தாய் மாதி. ஜோகியின் பெரியப்பன் மாதன் குடிப்பதும் பாடுவதும் ஆடுவதுமாக இருக்கிறார். விவசாயத்தையோ எருமைகளையோ கவனித்துக்கொள்வதில்லை. ஒத்தையில் கூலிவேலை செய்தாலும் வீட்டிற்குச் செலவு செய்வதில்லை. மாதனது முதல் மனைவியின் பிள்ளை ரங்கன். அவள் இறந்தபிறகு இரண்டாவதாக நஞ்சம்மையை மணந்துகொண்டார். நஞ்சம்மைக்கு ஒரு பெண்ணும் ஆணும் பிறந்திருக்கிறார்கள்.
            ஜோகியின் மாமன் வீடு மணிக்கல் ஹட்டியில் இருக்கிறது. இந்த ஹட்டியில்தான் ஜோகிக்கும் ரங்கனுக்கும் உரிமையுடைய பெண்களாக கிரிஜையும் பாருவும் வளர்கிறார்கள். மரகதமலை, மணிக்கல் ஹட்டி, சின்னக்கொம்பை, கீழ்மலை அனைத்திற்கும் தலைவர் போன்றவர் மணியகாரர் கரியமல்லர். இவரது மகள்வயிற்றுப் பிள்ளையாகிய பேரன் கிருஷ்ணனும் மணிக்கல் ஹட்டியில்தான் வளர்கின்றான்.
            அந்த மலைப்பகுதியில் முதல்முதலாக வந்து ஊன்றிய முன்னோரான ஹெத்தப்பரின் நினைவு கோயில் இருக்கின்றது. அந்தக் கோயிலில் ஈசரின் நெருப்பைக் காக்கின்ற பொறுப்பான பணியை ஒரு குறிஞ்சியைக் கண்ட பாலப்பருவத்துப் பையனிடம் ஒப்படைப்பது வழக்கம். பால்மனை புகுவதற்கான உரிமைச் சடங்கு மூலம் இப்பொறுப்பை ஒப்படைப்பா். அப்பணியை ஐந்தாண்டுகளுக்குச் சிறப்பாகச் செய்து முடித்துவிட்டுக் குடும்ப வாழ்வில் ஈடுபட வேண்டும். அதுவரை அந்தப் பாலகன் தனது வீடு சுற்றம் யாவற்றையும் மறந்து தெய்வ நெருப்பைப் பாதுகாக்கின்ற கடமையை மட்டுமே செய்ய வேண்டும்.
            இறைவர் ஜோகியைப் புனிதபணிக்கு அழைப்பதாக லிங்கையா கனவு கண்டார். ஆனால் குடும்ப நிலைமைகளைச் சிந்தித்த லிங்கையா ரங்கனுக்கு இந்தச் சிறப்புபணி கிடைத்தால் அண்ணனது குடும்பம் நல்ல மாற்றங்களைச் சந்திக்கும் என்பதாக நம்பிக்கை கொண்டிருந்தார். எனவே கரியமல்லரிடம் தனது கனவைப் பற்றி விளக்கினார். இறைவன் ரங்கனை அழைப்பதாகப் பொய் கூறினார். ஊரார் முன்னிலையில் ரங்கனின் விருப்பு வெறுப்புகளை அறியாமல் பால்மனை புகுவதற்கான உரிமைச் சடங்கு  நிகழ்த்தப்பட்டது. ரங்கன் தனது சிற்றப்பன் சேமித்துவைத்திருந்த வெள்ளிப்பணத்திலிருந்து எடுத்துக்கொண்டு மறுநாளே ஒத்தைக்கு ஓடினான். ஏமாற்றத்தினால் மனநோயில் உடல் சோர்ந்த லிங்கையா இறைவன் கனவில் அழைத்தபடியே ஜோகியை உரிமையாக்கினார். ஒரு குறிஞ்சி அடைவதற்கு முன்பே புனித நெருப்பைக் காக்கும் பொறுப்பை ஜோகி ஏற்றான்.
            கரியமல்லரின் பேரன் கிருஷ்ணன் பட்டணம் சென்று பி..படித்து முடித்து வந்திருக்கிறான். ஊரில் அவனைப் பற்றிய புகழ்ச்சியான பேச்சுக்கள் பரவின. ரங்கனுக்கு உரிமையுடைய பாருவும் கிருஷ்ணனும் சந்தித்துக் காதல் உணர்விற்கு ஆட்படுகிறார்கள். கரியமல்லர் இருவருக்கும் திருமணம் செய்துவைக்க முன்வருகிறார். இதற்கிடையில் ஜோகி புனிதநெருப்பைப் பாதுகாக்கும் தனது கடமையிலிருந்து விடுதலை பெறப்போகிறான். அவனது திருமண விருப்பத்தில் தனக்கு உரிமையானவளாக பாருவையே நினைத்து மகிழ்கிறான். ரங்கன் ஓடிவிட்டதால் அவள் ரங்கனுக்கு உரியவளல்ல என நம்பினான். ஒத்தையிலிருந்த ரங்கனை பாருவின் அண்ணன் பீமன் சந்தித்து மகிழ்ந்தான். ரங்கன் பாருவை தனக்கு உரிமையாக்கிக்கொள்வதில் ஆர்வம் கொண்டிருப்பதை அறிந்து முறைப்படி பாருவைத் திருமணம் செய்துகொடுக்க இசைந்திருந்தான். இதை அறிந்த பாரு கிருஷ்ணன் மீதான காதலை வீட்டாருக்கு உணர்த்துகிறாள். பாருவின் விருப்பத்தோடு அவளைக் கிருஷ்ணனுக்குப் பேசுகிறார்கள் என்ற செய்தியை அறிந்ததும் ஜோகி விட்டுக்கொடுக்கும் மனநிலைக்கு வருகிறான். ரங்கனோ பொறாமை உணர்வு மேலிட பாருவை தனக்கே உரிமையாக்கும் நோக்கத்துடன் மணிக்கல் ஹட்டிக்கு வருகிறான். வருகின்ற வழியில் தந்தை மாதனை சந்திக்கிறான். இருவரும் உணர்ச்சிவயப்படுகிறார்கள். மகன் கிடைத்த மகிழ்ச்சியில் மரகதமலைக்குத் தந்தை அழைத்துச் செல்கிறான். மரகதமலையில் ரங்கனுக்கு இருப்புகொள்ள வில்லை. அவன் நினைவெல்லாம் பாருவை அடைவதிலேயே இருந்தன. மணிக்கல் ஹட்டிக்குச் சென்று ஊராரது வரவேற்பை ஏற்றான். பாருவின் பாட்டனாரிடம் நியாயம் கேட்டான். பாருவை மணக்க விரும்புகின்ற முறைக்காரர்கள் உருண்டைக்கல் தூக்குகின்ற பலப்போட்டியை சந்திக்கும்படி அறிவித்தார். இறுதியில் ரங்கன் பாருவைத் திருமணம் செய்துகொள்கிறான். மனமுடைந்த பாருவை லிங்கையா வசீகரப்பேச்சால் நல்வழிப்படுத்துகிறார்.
            ரங்கனுடன் சகிப்புத்தனமாக வாழ்ந்த பாரு இரண்டு பெண்குழந்தைகளுக்குத் தாயாகிவிட்டாள். கிருஷ்ணன் சட்டம் படித்து ஒத்தையில் தொழில்  செய்கிறான். தேன்மலைக்காரி ருக்மணியைத் திருமணம் செய்து ஒரு பையனும் பெண்ணுமாக இரு பிள்ளைகளுக்குத் தகப்பனாகிவிட்டான். ஜோகி  கிரிஜையைத் திருமணம் செய்து கொண்டு குழந்தையில்லாவிட்டாலும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.
            கிருஷ்ணனிடம் ரங்கன் தொடர்ந்து பொறாமையையும் போட்டியையும் எதிர்ப்புணர்வையும் வெளிப்படுத்துபவனாகவே செயல்பட்டான். கிருஷ்ணன்  வெள்ளையனே வெளியேறு, சுயராஜ்யம் ஆகியவற்றில் ஆர்வமுடன் செயல்பட்டான். மரகதமலையில் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் உருவாகுவதற்குக் கிருஷ்ணன் பாடுபட்டான். லிங்கையா உடல்நலனின்றி இறப்பதற்கு முன்பு  கிரிஜையின் வயிற்றில் ஆண்குழந்தையாகப் பிறப்பேன் என்று உறுதியளித்துவிட்டு இறந்தார். பிளேக் நோயால் ஊரில் பலர் உயிரிழந்தார்கள். பாருவின் குழந்தைகள் இறந்தன. லிங்கையா சொன்னபடியே கிரிஜைக்குக் கரு உருவானது. அவள் ஆண்குழந்தையை மருத்துவமனையில் பெற்றுக்கொடுத்துவிட்டுச் செத்துப்போனாள். கிரிஜையின் குழந்தையாகிய நஞ்சனை பாரு தன்பிள்ளையாகவே வளர்க்கிறாள். ரங்கன் இரண்டாவது மனைவியாக கௌரியைத் திருமணம் செய்து இரண்டு ஆண், ஒரு பெண்  என மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையாகினான்.
            மரியாதைக்குரிய கரியமல்லரின் குடும்பத்துடன் தொடர்ந்து பகை பாராட்டுகின்ற ரங்கனின் நடவடிக்கைகளை ஜோகி வெறுத்தான். தனது பூமியை ரங்கனின் தங்கையிடம் கொடுத்துவிட்டு மூக்குமலைமாமனுக்குத் துணையாகச் சென்றுவிடுகிறான். பாருவும் நஞ்சனுடன் சென்றுவிடுகிறாள். நஞ்சன் படிப்புச் செலவுக்காக மாதமாதம் சிறிது பணம் தருவதாக ரங்கன் ஒப்புக்கொண்டான். ஆனால் ரங்கனின் அக்கறையற்ற போக்கால் நஞ்சன் உயர்கல்வி படிக்க முடியாது என நினைத்துவந்தான். ரங்கனால் உருவாக்கப்பட்ட இருகுடும்பங்களுக்கு எதிரான பகையை நீக்குவதற்குக் கிருஷ்ணன் தொடர்ந்து முயன்றான். நஞ்சனின் மாமன் ராமனின் மூலமாக உதவினான். நஞ்சன் இஞ்சினியர் படிப்பதற்கான முழு செலவையும் ராமன் மூலமாக ரகசியமாக செய்துவந்தான். குமரியாற்று அணைத் திட்டத்தில் நஞ்சனும் பணி செய்கிறான்.
            கிருஷ்ணன் தனது பேத்தி விஜயாவை நஞ்சனுக்குத் திருமணம் செய்து பகையை நீக்குவதற்கு ராமனின் உதவியை நாடினான். விஜயாவும் நஞ்சனை விரும்புகிறாள். இதற்கிடையில் அணைத்திட்டத்தில் நிலத்தை இழப்பவர்கள் பட்டியலில் ஜோகியின் குடும்பமும் இருந்தது. ரங்கன் கிருஷ்ணனுக்கு எதிராகவும் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டான். அதன்காரணமாக வளர்ச்சித்திட்டங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான செங்கொடிக்காரர்களுடன் செயல்படத் தொடங்கினான். நஞ்சன் தனது தாயார் பாருவை சமாளித்துக்கொண்டு கிருஷ்ணன் திட்டமிட்டபடி விஜயாவைத் திருமணம் செய்தபோது போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கிச்சூட்டினால் ரங்கன் கொல்லப்பட்டான். ரங்கன் இறந்தபிறகு பாரு அதிக காலம் வாழவில்லை. தனது உள்ளக் காதலனாகிய கிருஷ்ணனது கறுப்புமண்ணில் களையெடுத்துக்கொண்டிருந்தபோது இறந்துபோனாள். குமரியாற்று அணை அரச மரியாதையுடன் திறக்கப்பட்டது. கணகணவென்று மணிகள் ஒலிக்க, மடை திறந்து நீர் பாய்ந்து யந்திரங்கள் சுழலும் நல்லோசை செவிகளில் முழங்க மின்னொளியால்  மரகதமலையெங்கும் விளக்குகள் பிரகாசித்தன. ஜோகி ஒன்பது வயதில் கண்ட கனவு இன்று நனவாகியிருப்பதை ஆனந்தக்கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
1.17.4.வனம் அறிமுகம்
இருளர் சமூகத்தைச் சேர்ந்த மருதனோடு நட்புபாராட்டுகின்ற ரங்கராஜக் கவுண்டரது குடும்பத்தை மையமாகக் கொண்டு இந்த நாவல் படைக்கப் பெற்றிருக்கின்றது. வெள்ளியங்கிரி மலை ஈசன் பஞ்சலிங்கேசுவரர் மணோன்மணி தெய்வங்களுக்கு சித்திரை முதல் நாள், சித்திரை பௌர்ணமி, பங்குனி உத்ரம் ஆகிய தினங்கள் விழா சிறப்புடன் அமைகின்றன. ரங்கராஜன் குடும்பத்தினர் இத்தகைய விழா நாட்களில் ஒன்றை தீர்மானித்து வழிபாட்டிற்கு வருவது வழக்கம். ரங்கராஜனை அவரது தாய் வள்ளியம்மை வயிற்றில் நான்கு மாத கருவாகச் சுமந்திருந்த சமயம் சித்திரை பௌர்ணமியன்று வழிபாட்டிற்கு வந்திருந்தனர். ஆறு மலைகளைக் கடந்து செல்ல வேண்டும். ஏழாவது மலையில்தான் கோயில் இருக்கின்றது. ரங்கராஜனின் தந்தை சண்முகம் குடும்பத்தினரை கீழே அமர வைத்துவிட்டு மலைக்கு சென்றிருக்கிறார். ஐந்தாவது மலையில் மாரடைப்பு நோய் ஏற்பட்டு இறந்துவிடுகிறார். மலையிலிருந்து இவரை இறக்கி வந்தவர்களில் தாணிக்கண்டி மருதனும் ஒருவர். நான்கு மாத கர்ப்பினியின் கணவன் என்று அறிந்ததும் அந்தப் பெண் மீது பரிதாபம் கொள்கிறான். அது அந்தக் குடும்பத்தின் மீதான பாசமாக வளர்கிறது.
            கணவனை இழந்த வள்ளியம்மை அண்ணன் தங்கவேலுவின் வீட்டிலேயே தொடர்ந்து வாழ்கிறார். அண்ணனது பொரி உற்பத்தி செய்யும் தொழிலில் தொடர்ந்து உழைக்கிறாள். ரங்கராஜன் பிறந்து வளர்ந்ததும் தந்தை வேலை செய்த கம்பெனியில் மேற்பார்வையாளராகப் பணிபுரிகிறான். அண்ணன் மகள் அம்சவள்ளியை ரங்கராஜனுக்குத் திருமணம் செய்ய விரும்பினாள். ஆனால் அண்ணனும் அண்ணி கீதாவும் அதை விரும்பாமல் வேறு இடத்தில் மகளைத் திருமணம் செய்து வைக்கின்றனர். பெற்றோரை சிறுவயதிலேயே இழந்திருந்தாலும் அரசாங்க உத்தியோகமும் பூமி காடு போன்ற சொத்துக்களை உடையவனுமாகிய ஞானசேகரனுக்கு அம்சவல்லியைத் திருமணம் செய்துகொடுத்தனர்.
            ரங்கராஜனுக்குச் சித்ரா என்ற பெண்ணைத் திருமணம் செய்து வைக்கின்றனர். சித்ராவின் தாய் சந்தையில் காய்கறி விற்பவர். தந்தை வாதநோயால் முடங்கியிருப்பவர். ஒரு அக்காவும் ஒரு தம்பி, தங்கையும் இருக்கிறார்கள். அக்கா சாருமதியும் அவரது கணவர் பட்டுலிங்கமும்தான் சித்ராவின் திருமணத்தை முன் நின்று நடத்திவைத்தனர். சாருமதி யூனியன் அலுவலகத்தில் எழுத்தர் வேலை செய்கிறாள். பட்டுலிங்கம் ஜோசியக்காரராக இருக்கிறார். தம்பி தணிகாசலம் வேலையின்றி இருக்கிறார்.
            பட்டுலிங்கமும் சாருமதியும் பலநேரம் ரங்கராஜனின் சுயமரியாதைக்கு எதிராக நடந்துகொள்கின்றனர். சித்ராவும் இதனை பொருட்படுத்தாதவளாக நடந்துகொள்கிறாள் என்பது ரங்கராஜனுக்கு மனவேதனையாக இருந்தது. சித்ராவிற்கு ஆண்குழந்தை பிறந்தது. ரங்கராஜன் தனது தந்தையை பிள்ளையின் உருவத்தில் பார்ப்பதாக மகிழ்ந்து கொண்டிருந்தான். பட்டுலிங்கம் இயல்பாகப் பேசுவதைப்போல எனக்குப் பிறந்த குழந்தை என்று உரிமை கொண்டாடியதும் மனவேதனையில் துன்புற்றார். வாதநோயால் துன்புற்றிருந்த மாமனாருக்காகத் தொடர்ந்து பொறுமையுடன் நடந்துகொண்டான்.
            ஞானசேகரன் அரசுவேலையில் இருந்துகொண்டு மரக்கடத்தல் வேலையில் ஈடுபட்டதால் வனத்துறை அதிகாரிகளால் கண்டிக்கப்பட்டான். மருதன் குடும்பத்தார் வனத்துறைக்கு உண்மையாக நடந்துகொள்பவர்களாக இருந்தார்கள். ரேஞ்சர் தண்டபாணியிடம் அதிக மதிப்பு கொண்டிருந்தார்கள். இவர்களை மீறி ஞானசேகரன் மரம் அறுப்பதற்காக இருளர்களைப் பயன்படுத்தியிருந்தான். இதனால் மரஅறுக்கும் வேலைக்குச் சென்ற இருளர்களும் தண்டனைக்கு ஆளாகியிருந்தனர். ஞானசேகரன் அம்சவல்லியுடன் ஒழுக்கமாக வாழாமல் வேறு பெண்ணுடன் உறவு வைத்திருந்தான். பொறுமையிழந்த அம்சவல்லி தனது கணவர் ஞானசேகரனுடன் சண்டையிட்டுக்கொண்டு மகள் சசிரேகாவுடன் தாய்வீடு சென்றுவிட்டாள்.
            குடும்பச் சிதைவின் விளைவாக அம்சவல்லி மனஅழுத்த நோய்க்கு ஆளாகியிருந்தாள். அவள் பேய் பிடித்தவள்போல நடந்துகொள்ள ஆரம்பித்தாள். மருதன் அறிவுறுத்தியபடி ரங்கராஜன் அம்சவல்லியை முட்டத்துவயல் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் பொன்னான் பூசாரியிடம் அழைத்துச்செல்லும்படி செய்தான். பொன்னானும் அவரது மகள் செல்லியும் பேயோட்டி குணப்படுத்தினர். ரங்கராஜனின் தந்தையே அம்சவல்லியை தன் மகனுக்குக் கட்டிக்கொடுக்காத கோபத்தினால் மகளைப் பிடித்து ஆட்டியுள்ளார் என்பதைப் புரிந்துகொண்டு வருந்தினார். ரங்கராஜனுக்கே அம்சவல்லியைத் திருமணம் செய்து கொடுத்திருக்கலாம் என நினைக்கத் தொடங்கினார். அம்சவல்லியும் ரங்கராஜனை மதித்து நட்பு பாராட்டத் தொடங்கியிருந்தார். அம்சவல்லி ரங்கராஜனிடம் ஞானசேகரன் விவாகரத்து கேட்டு வக்கில் நோட்டிஸ் அனுப்பியிருந்த செய்தியை காட்டினாள். வேதனையுற்ற ரங்கராஜன் ரகசியமாக டில்லியில் நல்ல நிலையிலிருக்கும் அம்சவல்லியின் அண்ணனுக்குக் கடிதம் அனுப்பினார்.
            டில்லியில் பணிசெய்த இடத்திலேயே பஞ்சாபி பெண்ணைக் காதல் திருமணம் செய்துகொண்ட அண்ணன் ஆறுமுகம் ஞானசேகரனைச் சந்திக்க மனைவியுடன் வந்திருந்தார். ஞானசேகரனிடம் பக்குவமாகப் பேசி நல்வழிபடுத்தியதும் அம்சவல்லியுடன் இணைந்து நல்லவிதமாக வாழ்க்கையைத் தொடர்ந்தனர். தங்களை இணைக்கக் காரணமாக இருந்த ரங்கராஜன் மீது அளவற்ற மரியாதையும் அன்பும் ஞானசேகரனுக்கு உருவாகியிருந்தது. ரங்கராஜனின் குடும்பநிலையை அறிந்து ஞானசேகரன் மிகவும் வேதனைப்பட்டான். பட்டுலிங்கத்திற்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும் எனக் கருதினான்.
            சித்ரா தன்னைப் புரிந்துகொள்ளாமல் பட்டுலிங்கத்திற்கும் சாருமதிக்கும் ஆதரவாகவே தொடர்ந்து நடந்துகொள்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வீட்டை விட்டு யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வெளியேறினான். மனம் அமைதியைத் தேடும்போதெல்லாம் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்வது வழக்கமாகக் கொண்டிருந்தான். வெள்ளியங்கிரி மலையை மனம் விரும்பியதற்கு முக்கிய காரணம் அந்த மலையின் சூழலும் மலை போன்ற உயரமான மதிப்பைப் பெற்றிருந்த இருளர்களின் வாழ்க்கையும்தான்.
            ரங்கராஜனை இருளர்கள் பொரிக்கார ஐயா என்றுதான் அழைப்பார்கள். மருதன் காட்டுப் பொருட்களை அன்பளிப்பாகக் கொடுப்பான். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பைக் காட்டினான். மருதனை வைத்துதான் இருளர்களின் உறவு அவனுக்கு நிலைக்கத் தொடங்கியது. ஒருமுறை மலைக்குச் செல்லவிருந்தபோது மருதன் உடல் நலமின்மை காரணமாக வர இயலாமல் மகன் நஞ்சனை அனுப்பியிருந்தார். நஞ்சனுடன் மலையேறிவிட்டு இறங்கிய போது மருதன் இறந்துபோயிருந்தார். அன்று ரங்கராஜன் தனது வீட்டிற்குத் திரும்பாமல் மருதனின் இறுதிச்சடங்கில் முழுமையாகக் கலந்துகொண்டான். மறுநாள் காலைவரை மருதனின் குடும்பாத்தாருடனேயே இருந்தான். அன்றுதான் மருதனின் பேத்தியும் நஞ்சனின் மகளுமாகிய பொன்னியைச் சந்தித்தான். நஞ்சனுடன் தாணிக்கண்டியில் நிகழ்ந்த நோன்பிற்குச் சென்று பங்கேற்றபோது கும்மியாடிய பெண்களை வழிநடத்திப் பொன்னி பாடிய பாடல்களை ரசித்தான். அவள் அன்பாகப் பரிமாரிய உணவை உண்டு மகிழ்ந்தான். பொன்னி பொரிக்கார ஐயாவை விரும்ப ஆரம்பித்திருந்தாள். ஜக்கிவாசுதேவின் ஈசா ஆலயம் சென்றிருந்தபோது அங்கு வேலைக்கு வந்திருந்த பொன்னி ரங்கராஜனின் குடும்பம் பற்றி நலம் விசாரித்தாள். இருவர் மனதிலும் அமைதியாகக் காதல் தோன்றியிருந்தது. நஞ்சன் தன் மகள் பொன்னிக்குத் தனது தங்கை மகன் பொன்னுச்சாமியை மணமுடிக்க விரும்பினான். பொன்னியின் தாய் சின்னரங்கி தனது அண்ணன் மகன் நீலனை தனக்கு மருமகனாக்க விரும்பினாள். பொன்னியோ இருவரையும் ஏற்றுக்கொள்ளும் மனமின்றி ரங்கராஜனிடம் ஆசையை வளர்த்துக்கொண்டிருந்தாள்
            ரங்கராஜன் பணிசெய்த சபரி தொழிற்சாலையில் ஆயிரம் பேர்கள்வரை வேலையிழந்தார்கள். ரங்கராஜனும் வேலையிழந்தான். ஞானசேகர் வழிகாட்டுதல்படி வனத்தில் புளியமரம் குத்தகை எடுக்கின்ற தொழிலில் ஈடுபட்டான். பொன்னி அக்கறையோடு ரங்கராஜனுக்காக உழைத்தாள். பொன்னியின் தலைமையில் இருளர்கள் புளி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பொன்னி பொரிக்கார ஐயாவை வைத்திருப்பதாக உடனிருக்கும் பெண்கள் ஜாடையாகப் பேசினார்கள். அவர்கள் பேசியது உண்மை இல்லாவிட்டாலும் உண்மைதான் என்பதுபோலவே ஒப்புக்கொண்டாள். வனத்தில் புளியமரங்களைத் தேடி புதர்வெட்டி நடந்த பொன்னியின் குழுவினருடன் ரங்கராஜனும் சென்றுகொண்டிருந்தான். மறைந்து நின்ற ஆண் யானை திடீரென்று விரட்டியது. ரங்கராஜன் மாட்டிக்கொள்ளும் நிலையிலிருந்தான். பொன்னி அவனைக் காக்க விரைந்து அவனைப் பள்ளத்தில் தள்ளிவிட்டு அவளும் குதிக்க முயன்றாள். யானையின் துதிக்கையில் ரங்கனுக்குப் பதிலாக பொன்னி சிக்கினாள். யானை அவளை வீசி எறிந்ததில் பொன்னி குற்றுயிரானாள். பொன்னியும் ரங்கராஜனும் மருத்துவமனையில் கிடந்தார்கள். ரங்கராஜன் பிழைத்துக்கொண்டதும் தனக்காகப் பொன்னி தன் உயிரையும் தியாகம் செய்யத் துணிந்ததில் நெகிழ்ந்து போனான். மருத்துவ முயற்சிகள் பலனின்றி பொன்னி இறந்துபோனாள். அவள் இழப்பை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவளது இறுதிச்சடங்கில் ரங்கராஜனும் கலந்துகொள்கிறான். பொன்னுச்சாமி தன்னைப் பொன்னி திருமணம் செய்ய மறுத்த கோபத்தினை வெளிக்காட்ட எல்லோரிடமும் ரங்கராஜனைச் சுட்டிக்காட்டி இந்தாளுதான் பொன்னியை வைத்திருந்தவன் என அவப்பெயரை ஏற்படுத்தினான். துயரத்திலிருந்தவர்களை மேலும் காயப்படுத்தினான். பொன்னி இத்தகைய அவப்பெயருடன் போவதை ரங்கராஜனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பொன்னியின் இறுதி ஊர்வலத்திற்கு முன்பு அவளுக்கு பட்டு துணி விரித்து, மாலையிட்டு, உணர்ச்சி வேகத்தில் கத்தினான். ஆமாம் பொன்னியை நான் வைத்திருந்தேன். அவள் என் பொன்னி என்று சொன்னபடி கருப்புப்பாசி தாலிக்கயிறை அவள் கழுத்தில் கட்டுகிறான். பொன்னியின் இறுதி ஊர்வலம் களங்கப் பெயருடன் அமையாமல், தீர்க்க சுமங்கலியாக முடிந்தது. ரங்கராஜன் பொன்னியின் கணவன் என்ற முறையில் எல்லா சடங்குகளையும் ஏற்றுக்கொண்டான்.
            மனைவி இருக்கும்போதே மறுகல்யாணம் செய்ததைக் கண்டித்து காவல் துறையில் மனு கொடுக்கச் சொல்லி பட்டுலிங்கமும் சாருமதியும் சித்ராவைத் தூண்டினர். ஆனால், ஞானசேகரனும் ரங்கசாமியின் நண்பர் கந்தசாமியும் சித்ராவிற்கு அவளது கணவரைப்பற்றி புரிய வைப்பதற்காக தொடர்ந்து முயன்றனர். ரங்கராஜனை சந்திக்க சித்ராவை தாணிக்கண்டிக்கு அழைத்துச் சென்றிருந்தனர். ரங்கராஜன் அனைத்துச் சடங்குகளையும் முடித்திருந்தான். பொன்னியின் தாய் சின்ன ரங்கி சித்ராவிடம் நிலமையை விளக்கிப்பேசினாள். சித்ராவிற்குப் கணவன் ரங்கசாமியிடம் மிகப்பெரிய மரியாதை தோன்றிவிட்டது. பொன்னியைத் தனக்கு தெய்வமாகவும், அவர்களது வழக்கத்தில்தான் கருப்பு மணி தாலி என்பதால் தாலியைத் தெய்வத்திற்கு சூடிய மாலையாகவும், தெய்வத்திற்காகவே சடங்குகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தன்னை சமாதானம் செய்துகொண்டாள். அவள் பட்டுலிங்கத்தையும் சாருமதியையும் எதிர்க்கத் தொடங்கி தன் கணவருடன் மகிழ்ச்சியுடன் வாழ முன்வந்தாள்.

1.17.5.பனியில் பூத்த நெருப்பு அறிமுகம்
            கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி ஒன்றியத்துக்கு உட்பட்ட பழமரத்துப்பட்டி கிராமத்தின் பண்ணையார் கோவிந்தரெட்டியின் ஒடுக்குமுறைகளை ஒழிப்பதை மையமாகக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டிருக்கின்றது. தேன்கனிக்கோட்டை என்பது குட்டி இந்தியாவைப் போன்ற பகுதியாகும். இங்கு தமிழ், கன்னடம், தெலுங்கு, உருது ஆகிய மொழிகளைப் பேசுகின்ற மக்கள் அதிகம் வாழ்கிறார்கள். தளி என்ற பகுதி குட்டி இங்கிலாந்து என்று போற்றப்படுகின்றது. மலைகளில் பூர்வீகமாக வாழ்ந்த இருளர் போன்ற பழங்குடி மக்கள் வனத்துறையினரால் மலையடிவார கிராமங்களுக்கு அழைத்துவரப்பட்டுவிட்டார்கள். மலையடிவார கிராமங்களில் ரெட்டி, கவுடா, நாயுடு, பறையர், சக்கிலி, இருளர் போன்ற பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
            பழமரத்துப்பட்டி பண்ணையார் கோவிந்தரெட்டி இரண்டாயிரம் ஏக்கர் பட்டா நிலங்களுக்கும் ஆயிரம் ஏக்கர் பட்டா இல்லாத நிலங்களுக்கும் சொந்தக்காரர் ஆவார். இவருக்குத் தெரியாமல் ஊரில் யாரும் நிலம் வாங்கவோ விற்கவோ முயற்சி செய்யக் கூடாது என்பது எழுதப்படாத விதியாக இருக்கின்றது. சிவண்ணா என்ற ஆசிரியர் பண்ணையாருக்குத் தெரியாமல் நிலத்தை வாங்கிவிடுகிறார். பண்ணை கோவிந்தரெட்டி ஏழு கொடிய சீமைநாய்களுடனும் அடியாட்களுடனும் விடிவதற்கு முன்பாகவே சிவண்ணா வீட்டிற்குமுன் சென்றுவிடுகிறார். சிவண்ணாவின் குடும்பத்தினர் மிகப்பெரும் சித்திரவதைகளுக்கு ஆளாயினர். சிவண்ணாவின் மனைவி சுகுணா அந்தக் கொடியவர்களால் மானபங்கப்படுத்தப்பட்டாள். அவளது மூன்று பிள்ளைகளையும் சீமைநாய்கள் கடித்துக் குதறுகின்றன. விடிந்ததும் தாசப்பாவின் மனைவி மல்லிகா வழிகாட்ட ஊர்க்காரர்கள் ஒன்றுபட்டுப் பண்ணையாருடன் சண்டையிட்டுச் சிவண்ணாவின் குடும்பத்தை மீட்டனர். குண்டடிபட்ட தாசப்பாவையும் சித்திரவதைகளுக்கு ஆளாகிய ஆசிரியர் சிவண்ணாவையும் அவரது குடும்பத்தினரையும் தேன்கனிக்கோட்டையிலுள்ள மருத்துவமனைக்குத் தூக்கிச்சென்றனர். குழந்தை சிவா மருத்துவப் பலனின்றி இறந்துவிடுகிறான். சுகுணா வேதனை தாங்காமல் தற்கொலை செய்துகொள்கிறாள். ஊர்க்காரர்கள் பலிவாங்கும் உணர்விற்கு ஆளாயினர். இந்தச் சம்பவம் பற்றிய செய்திகள் வேகமாக எல்லா பகுதிகளுக்கும் பரவியது.    ஊரில் பொதுவுடைமை இயக்கம் வளர்ச்சி காணத்தொடங்கியிருந்தது. சென்னையிலிருந்து பொதுவுடைமை கட்சியின் தலைவர்கள் வந்து இக்கொடுமைகளுக்கு எதிரான வேலைத்திட்டத்தில் ஈடுபடவிருப்பதாக செய்திகள் பரவின. நரேந்திரனும் இலட்சுமையாவும் கெம்பண்ணாவும் தலைவர்களை வரவேற்று நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பதில் முக்கிய பொறுப்பாளர்களாக செயல்பட்டார்கள்.
            நரேந்திரனுக்கும் கெம்பண்ணாவுக்கும் கந்தப்பன் சில செய்திகளைச் சொல்லிக் கொண்டிருந்தான். கடலைக்கொல்லையில் வாய்வேட்டு வைத்துப் பன்றியை வேட்டையாடி வழக்கம்போல பகிர்ந்தவர்களைப் பற்றி கோவிந்தரெட்டி வனத்துறைக்கு தெரியப்படுத்தியுள்ளான். இதனால் ஊரில் முக்கியமானவர்களையெல்லாம் கைது செய்து தளி வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்இருபத்தைந்தாயிரம் பணம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடுவதாகவும் இல்லாவிட்டால் சிறைக்கு அனுப்பிவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளார்கள். வசூல் செய்துவர தொட்டண்ணா, பைரன் ஆகிய இருவரை மட்டும் வெளியில் அனுப்பியிருக்கிறார்கள். இந்த நிலமையை உருவாக்கிய பண்ணையார் சூழலைச் சரியாகப் பயன்படுத்த முயன்றான். பணஉதவி செய்து  ஊர்க்காரர்களைத் தனக்குச் சாதகமாக்கித் தாசப்பாவைத் தனிமைப்படுத்தக் கருதியிருந்தான். ஆனால் இருவரும் பண்ணையாரை உதாசீனம் செய்துவிட்டு எருமை எம்.டி.யின் பைனான்சில் வெற்றுத்தாளில் கையொப்பமிட்டு 10 சதவிகித வட்டியில் பணம் பெற்று வந்து அனைவரையும் மீட்டனர்.
            பண்ணையார் கோவிந்த ரெட்டி எருமை எம்.டி. யிடம் பணம்கொடுத்து வெற்றுப் பத்திரத்தை வாங்கிக்கொண்டார். தொட்டண்ணாவின் மூன்று ஏக்கர் கழனியையும், அவரின் பக்கத்து நிலத்துக்காரரான பைரனின்  ஐந்து ஏக்கர் மேட்டு நிலத்தையும் சட்டப்படி அபகரிக்க முயன்ற பண்ணையார் வக்கில் நோட்டீஸ் அனுப்பினார். எல்லா அயோக்கியத்தனங்களுக்கும் பாதுகாப்பு தேவையென்பதால் அரசியல் கட்சிகளில் எதிர்கட்சிக்காரராக அடையாளப்படுத்திக்கொண்டார்.
            தேன்கனிக்கோட்டை வட்டத்தில் இன்றும் சில ஜமீன்தார்களும், மிட்டாதாரர்களும், இனாம்தாரர்களும் பெரும் நிலஉடமையாளர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் ஆளுக்கொரு கட்சியைப் பிடித்து அரசியல் போர்வையைப் போர்த்திக் கொண்டிருந்தனர்.
            பண்ணையார்களின் ஒத்துழைப்புடனும் வனத்துறையின் ஒத்துழைப்புடனும் காட்டுக் கொள்ளையர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் வன வளங்களையெல்லாம் கொள்ளையடித்துக்கொண்டு இருக்கின்றார்கள்தந்தங்களுக்காக யானைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனைக் தடுக்கும் முயற்சியாக வலிமையான போராட்டங்களுக்குத் தலைமைதாங்கிய முனுசாமி மூர்க்கத்தனமாகக் கொலை செய்யப்படுகிறார்.
            வனத்தை நம்பி வாழும் எளிய மக்களிடம் வனத்துறை மோசமாக நடந்துகொள்கிறது. ஆடு மாடுகளை மேய்ப்பதற்கும், காட்டுப் பொருட்களைச் சேகரித்து வாழ்வதற்கும் இடையூறாக நடந்துகொள்கிறது. காட்டு மூங்கிலால்தானே வீடு கட்டினாய் இருப்பத்தைந்தாயிரம் தண்டம் கொடு என்றெல்லாம் அநீதி இழைக்கிறார்கள். கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கும் கஞ்சா உற்பத்திக்கும் காவல்துறையினரே காரணமாக இருக்கின்றார்கள். சாராயம் காய்ச்சுவதை விட்டுவிடலாம் என்று முயற்சி செய்த கோவிந்தனைச் சித்திரவதை செய்தும் வற்புறுத்தியும் சாராயம் காய்ச்சுவதற்குக் கட்டாயப்படுத்தினார்கள்.
            பண்ணையார் கோவிந்த ரெட்டிக்கு முக்கிய கைத்தடியாக பாப்பையா இருக்கிறார். பாப்பையாவின் ஒன்று விட்ட சகோதரி கௌரியை பண்ணையார் தனக்கு இணக்கமாக வைத்துக் கொள்கிறான். கௌரியின் கணவர் கங்கையா பண்ணையில் வேலை செய்கின்றான். பண்ணையார் தனக்கு செய்யும் அநீதியை சகிக்கமுடியாவிட்டாலும் பெரியராணியின் மீதான மரியாதையின் காரணமாகவும் பொறுத்துக்கொள்கிறான்
            பண்ணையார் கோவிந்தரெட்டிக்கு இரண்டு மனைவி இருக்கின்றனர். மூத்த மனைவி பெரிய ராணிக்கு இரண்டு பெண்கள். பிரேமா, ஹேமா. இருவரும் பெங்களூரில் படிக்கிறார்கள். இரண்டாம் மனைவி சின்னராணிக்கு ஒரு மகன் மட்டும்தான். பண்ணையாரின் தம்பி நாராயணன் இறந்துவிட்டான். நாராயணனின் மனைவி நாராயணிக்கு ராஜா, சந்திரன், திம்மையா என்ற மூன்று பையன்கள் இருக்கிறார்கள். பண்ணையார் கோவிந்த ரெட்டி நாராயணியை தனது இச்சைக்கு இனங்கச் செய்ய பலமுறை முயன்றிருக்கிறான். நாராயணியின் மீது வன்புணர்ச்சி தாக்குதலில் ஈடுபட்டபோது பெரியராணி தடுக்க முயன்றார். கங்கையாவின் மூலமாக இயக்கம் சார்ந்த மக்களுக்கு முன்னோடியாக செயல்படுகின்ற தாசப்பனுக்குத் தெரியபடுத்துகிறாள். தாசப்பன் வீரமிக்க மக்களோடு வந்து நாராயணியை காப்பாற்றினார். நாராயணியின் வார்த்தைக்கிணங்க பண்ணையார் உயிர் தப்புகிறார். தாசப்பனுக்கு கங்கையாதான் தகவல் சொன்னான் என்ற செய்தியை  அறிந்துகொண்டு கங்கையாவை சதிசெய்து மின்சாரம் பாய்ச்சி கொன்றுவிடுகிறார்கள்.
            கௌரியின் மகள்கள் வளர்ந்திருந்தார்கள். கௌரியிடம் உனது மகள்களும் தனது இச்சைக்கு இனங்க வேண்டும் என்று கட்டளையிட்டதும் கௌரி அதிர்ந்துபோனாள். பண்ணையாரின் உறவு எவ்வளவு ஆபத்தானது என்பதை கௌரி அப்பொழுதுதான் உணர்கிறாள். மூத்த மகளை வன்புணர்ந்தபோது மகளைக் காப்பாற்றுவதற்காக கௌரி செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இரண்டாவது மகளும் இந்தச் சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியுற்றாள். எனக்குக் கட்டுப்படாவிட்டால் கங்கையாவை அனுப்பிய இடத்திற்கே அனுப்பிவிடுவேன் என கொலைமிரட்டல் விட்டான். சகோதரிகள் இருவரும் தமது தந்தையைக் கொன்றவனிடம்தான் தாய் வாழ்கிறாள் என்ற உண்மையை அறிந்து வீட்டைவிட்டு வெளியேறி புரட்சிகர இயக்கத்தினருடன் சேர்ந்துவிடுகிறார்கள். பண்ணையார் கோவிந்த ரெட்டியைப் பலிவாங்கும் உணர்வுடையவர்கள் புரட்சிகர இயக்கங்களில் வளர்ந்திருந்தார்கள். வாத்தியார் சிவண்ணா, நாராயணியின் மகன்கள், கங்கையாவின் இரண்டு மகள்கள் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். புரட்சிகர இயக்கமோ பண்ணையாரின் கொடுங்கோன்மையையும், வனங்களையும், வனமக்களின் வாழ்க்கையையும், அப்பாவி மக்களையும் சித்திரவதை செய்கின்ற வனத்துறை மற்றும் காவல்துறைக்கும், பண்ணையாட்களின் நலன்களுக்குச் சாதகமாகிய அரசுக்கும் எதிராகத் தொடர்ந்து போராட்டங்களை நிகழ்த்தியது. காவல்சிறையிலிருந்து வெளிவந்த போராட்டக்காரர்களும் வனத்திலிருந்து வெளிவந்த புரட்சிக்காரர்களும் ஒன்றிணைந்து கோவிந்தரெட்டியைப் படுகொலை செய்து பலிதீர்க்கிறார்கள்.
1.18.இயல் முடிவுகள் 
          எந்த ஓர் இலக்கியத்தையும் இனவரைவியலின் துணைகொண்டு அறிவியல் பூர்வமாக அறிந்து கொள்வது சிறந்த முறையாகும். இனக்குழுக்களை உள்ளடக்கிய சமுதாயமானது இனவரைவியலாளருக்கும் சங்க இலக்கிய ஆராய்ச்சியாளர்களுக்கும் ஒரு களமாகத் திகழ்வதோடு மட்டுமல்லாமல் அக்களத்தின் செயற்பாடுகளை அறிந்துகொள்ள துணைபுரியும் தளமாகவும் உள்ளது. பண்பாட்டு மானிடவியல் என்பது இனக்குழு மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளையும் வரலாற்று நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள உதவும் கருவியாகத் திகழ்கிறது. பழங்குடிகள் பற்றிய பல்வேறு விளக்கங்களையும்  தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்களின் சுருக்கங்களையும் அறியமுடிகின்றது.
            இலக்கியம் என்பது சமூகத்திலிருந்துதான் உருவாக முடியும். சமூகத்திலுள்ள மனிதர்களின் மொழிப் பயன்பாட்டு ஆளுமைகளிலிருந்தும் சமூகப் பண்பாட்டு அடர்த்தியிலிருந்தும் இலக்கிய படைப்பாக்கம் உருவாகின்றது. வரலாற்று நிலையில் மனிதர்களுக்கு கட்டமைந்துள்ள உள்ளத்தியல்களும் கருத்தியல்களும் இலக்கியப் படைப்பிற்கு மூலங்களாக இருக்கின்றன. நிகழ்கால மனிதர்களின் சமூக வாழ்வியல் முரண்பாடுகளும் இலட்சியங்களும் இலக்கியப் படைப்பிற்கு உந்துதல்களாக இருக்கின்றன. மூலங்களையும் உந்துதல்களையும் காரணிகளாகப் பெற்று இலக்கியப் படைப்புகள் உருவெடுக்கின்றன. இலக்கியப் படைப்பாளிகள் சமூகத்தைத் தவிர்க்க இயலாத ஆதாரமாகப் பெற்றிருப்பதால் எந்த ஓர் இலக்கியப் படைப்பையும் சமூக நிகழ்வாகவே கருத முடிகின்றது. இலக்கியப் படைப்பாளர் சக மனிதர்களின் அங்கம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஒவ்வொரு படைப்பாளரும் எத்தகைய இலக்கியங்களைப் படைக்கிறார்கள் என்ற கேள்வி காலந்தோறும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. இலக்கியப் படைப்புகள் மீதான ஆய்வுகளைச் சமூகப் பற்றுள்ள ஆய்வாளர்கள் சமூகத் தேவையின் அடிப்படையில் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

            இலக்கியப் படைப்பாளர்களுக்கு மனித சமூகத்தைப் பற்றிய தனித்துவமானப் பார்வைகள் இன்றியமையாத சமூக அறிவாக அமைகின்றது. மனித சமூகத்தில் இனம், மதம், சாதி, தொழில் போன்ற வேறுபாடுகள் ஏராளமாக இருக்கின்றன. இத்தகையப் பல்வேறு வேற்றுமைகளை அவற்றின் தனித்துவங்களோடு புரிந்துகொள்வதற்கு இனவரைவியல் அணுகுமுறை இன்றியமையாததாக அமைகின்றது. இனவரைவியல் பார்வையற்ற இலக்கியப் படைப்பாளியின் சமூக அறிவு முழுமையின் சாராம்சமாக அமையாமல் அதிக விடுபாடுகளுடன் அமைகின்றது. அவர் ஒரு குறிப்பிட்ட மனிதர்களின் சமூகப் பொருளாதார வாழ்வியல் பண்பாடு பற்றிய புதினத்தைப் படைத்து முடிக்கின்றாரெனில் அந்தப் புதினத்தில் ஏராளமான பண்பாட்டு விடுபடுதல்களை ஆய்வாளர்களால் கண்டறிய முடியும். அந்தப் புதினம் எத்தகைய மனிதர்களைப் பற்றி உருவாக்கப்பட்டதோ அத்தகைய மனிதர்களைப் பற்றிய முழுமையின் சாராம்சமாகப் படைக்கப்படவில்லை என்பதையும் அறிய முடியும். எனவே ஒரு இலக்கியப் படைப்பாளியின் சமூக அறிவிற்கு மானிடவியலாளர்களின் இனவரைவியல் பார்வை இன்றியமையாததாகக் கருத முடிகின்றது. இந்த ஆய்வேட்டில் இடம்பெற்றுள்ள ஐந்து புதினங்களின் ஆசிரியர்கள் தமிழகப் பழங்குடி மக்களின் சமூகப் பொருளாதார பண்பாட்டு வாழ்வியலை முழுமையின் சாராம்சமாக வெளிப்படுமாறு உருவாக்கியுள்ளார்களா என்பதை அடுத்தடுத்த இயல்களிலும் இறுதியாக அமையும் முடிவுரை பகுதியிலும் அறியலாம்.
... 

இயல் – 2 வாழ்விடங்களும் சமூகப்பொருளாதார உற்பத்தி உறவுகளும்

No comments:

அதிகம் படித்தவை