பழங்குடிகளது ஆழ்மன உணர்நிலையில்
தாய் தலைமை சமூகத்தின் எச்சம்
(இலக்கிய மானிடவியலின் சமூக விஞஞான அணுகுமுறை)
(இலக்கிய மானிடவியலின் சமூக விஞஞான அணுகுமுறை)
புதியவன்
இரண்டு புதினங்களில் இடம்பெற்றுள்ள பழங்குடி மக்களது வாழ்வியலில் வெளிப்படுகின்ற தாய்தலைமைச் சமூகத்தின் எச்சங்களை விளக்குவதாக இக்கட்டுரை அமையும். தமிழகத்தின் கர்நாடக எல்லைப்புற மலை கிராமத்தில் வாழும் சோளகர் பழங்குடிகளைப் பற்றிய சோளகர் தொட்டி என்ற புதினத்தை ச.பாலமுருகன் படைத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் வாழும் இருளர் பழங்குடிகளைப் பற்றி பனியில் பூத்த நெருப்பு என்ற புதினத்தை ந.நஞ்சப்பன் படைத்துள்ளார். இரண்டு புதினங்களைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் இடம்பெறும். அறிமுகத்தைத் தொடர்ந்து தாய்தலைமைச் சமூகத்தின் எச்சங்களைப் பிரதிபலிக்கின்ற வாழ்வியல் கூறுகள் இடம்பெறும். இறுதியாக புதினங்களில் இடம்பெற்றுள்ள வாழ்வியல் கூறுகளிலிருந்து பழங்குடி மக்களின் ஆழ்மன உணர்நிலையின் அடிப்படையில் தாய்தலைமைச் சமூகத்தின் எச்சம் வெளிப்படுகின்ற முறை விளக்கப்பெறும்.
சிவண்ணா என்ற சோளகனை மையமாகக் கொண்டு சோளகர் தொட்டி என்ற புதினம் அமைக்கப்பட்டிருக்கிறது. சிவண்ணாவின் தந்தை பேதன் தாத்தனின் வேட்டைதொழிலை கைவிட்டு கடுமையாக உழைத்து காட்டைத் திருத்தி வளமான சீர்காட்டு விவசாய பூமியை உருவாக்கினான். புதிதாக உருவெடுத்துள்ள வனத்துறை என்ற அரசதிகாரத்தால் சோளகர்களின் வேட்டைத் தொழில் படிப்படியாக ஒடுக்கப்பட்டு வருகின்றது. பேதனின் சீர்காட்டை ஒட்டி கோல்காரனது விவசாய பூமியும் இருக்கின்றது. கோல்காரனது மகன் கரடியை வேட்டையாடியபோது வனத்துறையின் ஒடுக்குமுறையிலிருந்து மீட்பதற்காக ஐநூறு ரூபாய் கடன்படுகிறார்கள். கடன் கொடுத்தவனாகிய மணியகாரரின் கையாள் துரையன் கோல்காரனது இயலாமையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு நிலத்தை அபகரித்துக்கொள்கிறான். கோல்காரனது பூமியை ஒட்டியுள்ள சீர்காட்டையும் அபகரிக்க முயல்கிறான். மணியகாரரின் உதவியுடன் சீர்காட்டின் மீதான பட்டா உரிமையை அரசிடமிருந்து வாங்கிக்கொண்டு பேதனின் குடும்பத்தை காவல்துறையின் அதிகார உதவியுடன் வெளியேற்றுகிறான். பேதன் இறந்த பிறகு மணிராசன் திருவிழாவின் ஆவி வழிபாட்டில் சீர்காட்டை மீட்கும்படி சிவண்ணாவிற்கு அறிவுறுத்துகிறான். சிவண்ணா தீக்கங்காணியாக வேலை செய்தபோது மாதி என்பவளை விரும்பி திருமணம் செய்துகொள்கிறான். மாதியின் மகள் சித்தியை தனது மகளாக ஏற்றுக்கொள்கிறான். மூத்த மனைவி சின்னத்தாயி கோபமுற்று மகனை அழைத்துக்கொண்டு தாய்வீடு சென்றுவிடுகிறாள். ஒருநாள் காலை பொழுதில் போலிஸ்காரர்கள் ஜீப்பில் வந்து மிரட்டலாக அறிவித்தனர். “வீரப்பனை பிடிப்பதற்காக தமிழ்நாடு கர்நாடக போலீஸ் கூட்டு அதிரடிப்படை அமைச்சிருக்கு. நாங்க சொல்றபடி நீங்க கேட்டு நடந்துக்கணும். வீரப்பன் பற்றிய தகவல் தெரிஞ்சா உடனே தெரியப்படுத்தனும். நீங்க அவனுக்கு உதவி செய்தால் உங்களையும் சுட்டுக்கொல்வோம். வனத்திற்குள் வீரப்பனைத் தேடிக்கொண்டிருக்கிறோம். நீங்க யாரும் இனிமே வனத்திற்குள் எந்தக் காரணத்திற்காகவும் போகக் கூடாது. மீறினால் சுடப்படுவீர்கள்.” வீரப்பனை தேடுவதாகச் சொல்லி தமிழ்நாடு கர்நாடக காவல்துறையினரின் முகாம்கள் உருவெடுத்தன. எல்லா முகாம்களிலும் வீரப்பனின் பேரைச்சொல்லி அப்பாவி மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். அதிரடிப்படையினரின் சித்திரவதை முகாம்களுக்குள் சிக்கித்தவித்த சிவண்ணா தப்பித்து வனத்திற்குள் ஓடிவிடுகிறான். வனத்தில் வீரப்பன் சிவண்ணாவிற்கு அடைக்களம் தருகின்றான். அதிரடிப்படையினர் சிவண்ணாவின் மனைவி மாதியையும் அவளது மகள் சித்தியையும் சிறைபிடித்துச் சித்திரவதை செய்கிறார்கள். கடுமையான சித்திரவதைகளுக்குப் பிறகு உயிர் பிழைத்துத் தொட்டிக்கு திரும்புகிறார்கள். சிவண்ணா மாதியை இரகசியமாக சந்தித்துச் செல்கிறான். மாதியின் விருப்பப்படி வீரப்பனை விட்டு விலகிவருகிறான். தலமலை அதிரடிப்படை முகாமில் சிக்காமல் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்திற்குச் சென்று சரண்டர் ஆகிறான். தலமலை முகாமில் சிக்காமல் சிவண்ணா உயிர்தப்பிய செய்தியை நாளிதழ் மூலமாக அறிந்துகொண்ட மாதி மகிழ்ச்சி அடைகிறாள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி யூனியனுக்கு உட்பட்ட பழமரத்துப்பட்டி கிராமத்தின் பண்ணையார் கோவிந்தரெட்டியின் ஒடுக்குமுறைகளை ஒழிப்பதை மையமாகக் கொண்டு பனியில் பூத்த நெருப்பு என்ற புதினம் அமைக்கப்பட்டிருக்கின்றது. தேன்கனிக்கோட்டை என்பது குட்டி இந்தியாவைப் போன்ற பகுதியாகும். இங்கு தமிழ், கன்னடம், தெலுங்கு, உருது ஆகிய மொழிகளைப் பேசுகின்ற மக்கள் அதிகம் வாழ்கிறார்கள். தளி என்ற பகுதி குட்டி இங்கிலாந்து என்று போற்றப்படுகின்றது. மலைகளில் பூர்வீகமாக வாழ்ந்த இருளர் போன்ற பழங்குடி மக்கள் வனத்துறையினரால் மலையடிவார கிராமங்களுக்கு அழைத்துவரப்பட்டுவிட்டார்கள். மலையடிவார கிராமங்களில் ரெட்டி, கவுடா, நாயுடு, பறையர். சக்கிலி, இருளர் பழங்குடிகள் போன்ற மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பொதுவுடைமை இயக்கத்தினரின் முயற்சிகளால் இவர்கள் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள். பழமரத்துப்பட்டி பண்ணையார் கோவிந்தரெட்டி இரண்டாயிரம் ஏக்கர் பட்டா நிலங்களுக்கும் ஆயிரம் ஏக்கர் பட்டா இல்லாத நிலங்களுக்கும் சொந்தக்காரர் ஆவார். இவருக்குத் தெரியாமல் ஊரில் யாரும் நிலம் வாங்கவோ விற்கவோ முயற்சி செய்யக் கூடாது என்பது எழுதப்படாத விதியாக இருக்கின்றது. சிவண்ணா என்ற ஆசிரியர் பண்ணையாருக்குத் தெரியாமல் நிலத்தை வாங்கிவிடுகிறார். பண்ணை கோவிந்தரெட்டி ஏழு கொடிய சீமைநாய்களுடனும் அடியாட்களுடனும் சென்று சிவண்ணாவையும் அவனது குடும்பத்தினரையும் கடுமையாகத் தாக்குகின்றார். அவனது மூன்று பிள்ளைகளையும் சீமைநாய்கள் கடித்துக் குதறுகின்றன. ஊர் மக்கள் அவர்களை காப்பாற்றி மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்கிறார்கள். மருத்துவ முயற்சிகள் பலனின்றி மகன் சிவா இறந்துவிடுகின்றான். மனைவி சுகுணா அவமானம் தாங்காது தற்கொலை செய்து இறக்கிறாள். ஊர்க்காரர்கள் பலிவாங்கும் உணர்விற்கு ஆளாயினர். இந்தச் சம்பவம் பற்றிய செய்திகள் வேகமாக எல்லா பகுதிகளுக்கும் பரவுகிறது. ஊரில் கம்யூனிச இயக்கம் வளர்ச்சி காணத்தொடங்கியிருந்தது. சென்னையிலிருந்து கம்யூனிச கட்சியின் தலைவர்கள் வந்து இக்கொடுமைகளுக்கு எதிரான வேலைதிட்டத்தில் ஈடுபடவிருப்பதாக செய்திகள் பரவின. தேன்கனிக்கோட்டை வட்டத்தில் சில ஜமீன்தார்களும், மிட்டாதாரர்களும், இனாம்தாரர்களும் பெரும் நிலஉடமையாளர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் ஆளுக்கொரு கட்சியைப் பிடித்து அரசியல் போர்வையைப் போர்த்திக் கொண்டிருந்தனர். பண்ணையார்களின் ஒத்துழைப்புடனும் வனத்துறையின் ஒத்துழைப்புடனும் காட்டுக் கொள்ளையர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் வன வளங்களையெல்லாம் கொள்ளையடித்துக்கொண்டு இருக்கின்றார்கள். தந்தங்களுக்காக யானைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. பண்ணையார் கோவிந்த ரெட்டியைப் பலிவாங்கும் உணர்வுடையவர்கள் புரட்சிகர இயக்கங்களில் வளர்ந்திருக்கிறார்கள். புரட்சிகர இயக்கமோ பண்ணையாரின் கொடுங்கோன்மையையும், வனங்களையும், வனமக்களின் வாழ்க்கையையும், அப்பாவி மக்களையும் சித்திரவதை செய்கின்ற வனத்துறை மற்றும் காவல்துறைக்கும், பண்ணையாட்களின் நலன்களுக்கு சாதகமாகிய அரசுக்கும் எதிராக தொடர்ந்து போராட்டங்களை நிகழ்த்துகிறது. இறுதியாக காவல்சிறையிலிருந்து வெளிவந்த போராட்டக்காரர்களும் வனத்திலிருந்து வெளிவந்த புரட்சிக்காரர்களும் ஒன்றிணைந்து கோவிந்தரெட்டியை படுகொலை செய்து பலிதீர்க்கிறார்கள்.
சோளகர்கள் வனத்துறையினரின் ஒடுக்குமுறையால் அரிதாகவே வேட்டையாடுகிறார்கள். தொட்டியின் அருகே இருக்கின்ற பாறைகுட்டையில் தண்ணீர் குடிக்க வந்த மான்களில் ஒன்றை சோளகர் தொட்டியைச் சேர்ந்த மூன்று நாய்கள் தொட்டிக்கு விரட்டிச் செல்கின்றன. தொட்டியிலுள்ள இந்த நாய்கள் வேட்டைக்கு வாய்ப்பு கிடைத்தால் இரையைக் கவ்விக்கொண்டோ அல்லது விரட்டிக்கொண்டோ தொட்டியினரிடம் கொண்டுவந்து சேர்க்கின்றன. சிவண்ணாவும், புட்டனும், மூன்று நாய்களின் உதவியோடு வேட்டையாடத் தயாராகிறார்கள். சிவண்ணா ஒரு கையளவு கருங்கல்லை எடுத்து அந்த மானைக் குறிவைத்து வீழ்த்துகிறான். வேட்டையாடப்பட்ட மானின் கறியை கூறுபோட்டு பங்கிடுகிறார்கள். முதல் பங்கை ஊரிலுள்ள விதவைப் பெண்ணுக்கு ஒதுக்குகிறார்கள். இரண்டாவது பங்கை ஊரின் முக்கியமானவர்களாகிய கொத்தல்லி மற்றும் கோல்காரனுக்கு ஒதுக்குகிறார்கள்.மூன்றாவது பங்கை வேட்டையாடியவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். இவர்கள் மற்றவர்களைவிட பங்கில் சற்று கூடுதலாக எடுத்துக்கொள்ளும் உரிமையுடையவர்கள். நான்காவது பங்கை ஊரில் மான்கறியை விரும்புபவர்களுக்கு பங்கிடுகிறார்கள். இறுதியாக வேட்டைக்கு உதவுகின்ற நாய்களின் பங்கை கொடுத்துவிடுகின்றார்கள். வேட்டையின் முதல் பங்கை விதவை பெண்ணுக்குக் கொடுப்பதற்கான வரலாற்றுக் காரணத்தை பிறகு விளக்கப்போகிறோம்.
சோளகர்கள் தங்கள் பூமியில் மழை பெய்ய வேண்டி எங்குசீர்குட்டை என்ற பெண் தெய்வத்தை வழிபடுகிறார்கள். மழை தெய்வமாகிய எங்குசீர்குட்டையை நினைத்து வனத்திலுள்ள தாண்ரி மரத்தில் வழிபாட்டை நிகழ்த்துகிறார்கள். மழை பொய்த்துப்போகின்ற சூழ்நிலையில் பெண்கள் மட்டுமே இணைந்து நிகழ்த்துகின்ற பூஜையாக அமைந்திருக்கின்றது. பூஜைக்குரிய நாளை கொத்தல்லியும் கோல்காரனும் குறிப்பிடுகிறார்கள். அந்த நாளில் வீட்டை சாணி கொண்டு சுத்தம் செய்கிறார்கள். தொட்டிப் பெண்கள் அனைவரும் வீட்டிலுள்ள தானியங்களில் உணவு செய்து மூங்கில் கூடைகளிலும் முறங்களிலும் எடுத்துக்கொண்டு வனத்திற்குச் செல்கிறார்கள். தொட்டி ஆண்கள் அனைவரும் மணிராசன் கோயிலில் நின்று பெண்களை வழியனுப்புகிறார்கள். வனத்திலுள்ள உயரமான தாண்ரி மரத்தினைச் சுற்றிலும் உணவை வைத்துக்கொள்கிறார்கள். மரங்களடர்ந்த வனத்தில் தங்களது ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக நிற்கிறார்கள். வானத்தைப் பார்த்து எங்குசீர்குட்டை என்ற மழை தெய்வத்தை நினைத்து “மழை பொழி தாயே மழை பொழி” என்று கூட்டமாக வேண்டுகிறார்கள். வட்டமாக கும்மியடித்து ஆடுகிறார்கள். ஒருவர் மாறி ஒருவர் பாடுகிறார்கள். மழை இல்லாததால் தங்களுக்கு நேர்ந்துள்ள துயரங்களைச் சொல்லி அழுகிறார்கள். எடுத்துவந்த உணவை மதிய நேரத்தில் உண்டு முடிக்கிறார்கள். உணவிற்குப் பிறகு மீண்டும் ஆட்டத்தைத் தொடர்கிறார்கள். மாலை நேரம் இருட்டத் தொடங்கியதும் மூங்கில் கூடைகளையும் முறத்தையும் அங்கேயே வீசிவிட்டு உடைகளை அணிந்துகொண்டு தொட்டிக்குத் திரும்பிச் செல்கிறார்கள். ஆண்களை வனத்திற்குள் அனுமதிக்காமல் பெண்கள் மட்டும் ஒன்றிணைந்து நிர்வாண நிலையிலிருந்து மழை தெய்வத்தை அழைப்பதற்கான வரலாற்றுக் காரணத்தை பிறகு விளக்கப்போகிறோம். சோளகர்களது பூமியில் மழை பெய்யாமல் விவசாயம் பாதித்துவீடுகளில் சேகரித்து வைத்திருந்த தானியங்களும் முடிவடையப்போகின்றன. விவசாயத்திற்கும் வழியின்றி வேட்டைக்கும் வழியின்றி துயரடைகின்ற தருணங்களில் பெண்கள் காடுகளுக்குச் சென்று கிழங்கு தேடுகிறார்கள். கொத்துக் கருவி, கடப்பாரை போன்ற கருவிகளைப் பயன்படுத்தி கிழங்குகளைத் தோண்டி சேகரித்து வருகிறார்கள். காடுகளுக்குச் சென்று உணவு சேகரிப்பதற்கு ஆண்களல்லாமல் பெண்கள் ஏன் செல்கிறார்கள் என்பதற்கான வரலாற்றுக் காரணத்தை பிறகு விளக்கப்போகிறோம்.
தளி பகுதியிலுள்ள மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி ஆனிமாத இறுதியில் வழிபாடு முடிந்த மறுநாள் இளைஞர்கள் களிமண்ணால் செய்யப்பட்ட மழைதேவரு உருவத்தை தூக்கி வருகிறார்கள். மழைதேவரை பூக்களாலும் வேப்பந்தழைகளாலும் அலங்காரம் செய்கிறார்கள். மழைதேவரின் உருவத்தை ஒருவன் தலையில் சுமந்திருக்கிறான். ஒருவன் மணியடித்துக் கொண்டிருக்கிறான். ஒருவன் திருநீறுதட்டை ஏந்திக்கொண்டிருக்கிறான். மற்றனைவரும் “அரகரா அரகரா” என்று கடவுளைப் போற்றிக்கொண்டிருக்கிறார்கள். முன் செல்பவர்கள் பறையை அடித்துக்கொண்டும் ஆடிக்கொண்டும் செல்கிறார்கள். மழைதேவருக்கு அருகிலுள்ள ஒருவர் மழைவேண்டி பஞ்சப் பாடல் பாடுகிறார். அவர் பாட மற்றவர்களும் பாடுகிறார்கள். தெருத்தெருவாக எல்லா வீடுகளுக்கும் மழைதேவரை எடுத்துச் செல்கிறார்கள். மொந்தையிலும் செம்பிலும் ஒரு சிலர் குடத்திலும் தண்ணீர் எடுத்து மழைதேவருக்கு ஊற்றுகிறார்கள். மழைதேவரைச் சுமக்கும் இளைஞன் வலது மற்றும் இடது புறமாக சுற்றிக்கொண்டு ஊற்றப்படும் நீரை எல்லாப் பக்கமும் பரவலாக சிதறச் செய்கிறான். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஆரியம், சோளம், கம்பு ஆகிய தானியங்களை தானம் தருகிறார்கள். இறுதியாக ஊர் பொது இடத்தில் கூடுகிறார்கள். கிடைத்த தானியங்களையும் காணிக்கை பணத்தையும் கணக்குப் பார்க்கிறார்கள். காணிக்கைப் பணத்தில் கடைகளுக்குச் சென்று தேங்காய், பழம், வெல்லம், கற்பூரம், பூ, ஊதுபத்தி, திரிசனம் ஆகியவைகளை வாங்கிவருகிறார்கள். தானியங்களை தனித்தனியாக மாவாக்குகிறார்கள். மறுநாள் மழைதேவருக்கு பூஜை நடத்தத் தொடங்குகிறார்கள். மதியம் இரண்டு மணியளவில் மழைதேவரை அலங்கரித்து பறையிசை முழங்க ஏரிக்குப் புறப்படுகிறார்கள். மழைதேவரை பின்தொடர்ந்து மக்கள் வருகிறார்கள். ஏரியில் பந்தல் அமைக்கப்பட்டிருக்கிறது. நொச்சித் தழைகளாலும் வேப்பந் தழைகளாலும் தென்னம் ஓலையால் பின்னப்பட்டுள்ள பாய் ஆகியவற்றாலும் பந்தல் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பந்தலில் வெள்ளைத் துணியைப் பாவாடையாக விரித்து மழைதேவரை அமர்த்துகிறார்கள். அருகில் கற்களை அமைத்து அடுப்பு மூட்டுகிறார்கள். தயாரிக்கப்பட்ட மாவுகளைக்கொண்டு கூழ் சமைக்கிறார்கள். அரிசி மாவில் வெல்லம் சேர்த்து பச்சைமாவு தயாரிக்கிறார்கள். கூழ், பச்சைமாவு, கடலை, பொரி ஆகியவற்றை மழைதேவருக்கு படையலிட்டு வழிபடுகிறார்கள். தேங்காயுடைத்து பூஜை செய்கிறார்கள். வயதான மூன்று விதவைப் பெண்களை அழுவதற்காக அழைக்கிறார்கள். மழையை வரச்சொல்லி அழுதுகொண்டே பாடுகிறார்கள். விதவைப் பெண்களை அழைத்து மழையை வரச்சொல்லி அழச்சொல்வதற்கான வரலாற்றுக் காரணத்தை பிறகு விளக்கப்போகிறோம்.
மனித சமூக வரலாற்றில் பொருளாதார படிமலர்ச்சியானது உற்பத்திக் கருவிகளது வளர்ச்சியின் அடிப்படையில் எட்டு கட்டங்களாக அமைகின்றது.
1.காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகம்
2.வேட்டை நாகரிகம்
3.கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம்
4.விவசாய நாகரிகம்
5.உற்பத்தி மீதான வணிக நாகரிகம்
6.வணிக இலாபத்திற்காகவே உற்பத்தி செய்தல்
7.நிதி மூலதனப் பிரிவு தோன்றி சமூக உற்பத்தியை ஆதிக்கம் செய்தல்
8.மக்கள் தலைமை கட்டுப்பாட்டில் சமூக உற்பத்தியைக் கட்டமைத்தல்
மனித வரலாற்று படிநிலையின் எட்டு கட்டங்களில் உற்பத்திக் கருவிகள் வளர்ச்சியடையாத காலக்கட்டத்தில் காடுசார்ந்த பொருட்களைச் சேகரித்தலே முதன்மைத் தொழிலாக அமைந்திருந்தது. வேட்டையாடுதல் என்பது இரண்டாம் கட்டமாகவே திகழ்ந்தது. கால்நடை மந்தை வளர்ப்பும் விவசாயமும் ஆரம்பநிலையிலேயே இருந்தன.
குழந்தைகளையும் கூட்டத்தையும் குழுவின் தாயார் வழிநடத்திய தாய்தலைமைச் சமூகத்தில் காடுசார்ந்து சேகரிக்கப்பட்ட பொருட்களை பெண்களே தலைமையேற்று கூட்டத்திற்கு பகிர்ந்தளித்துப் பராமரித்தார்கள். வளர்ச்சியடைந்த வேட்டை நாகரிகத்திலும் தாய்தலைமை சமூகத்தின் இத்தகையப் பண்பாடு பாதித்ததில்லை. கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்தில் தந்தையதிகார சமூகம் தோன்றும் காலம்வரையிலும் இந்த நிலையே நிலைத்திருக்கிறது. கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்தின் சொத்தாதிக்கத்தாலும் பாலுறுவு உரிமையில் நிகழ்ந்த இரு குழுக்களுக்கு இடையிலான உறவு முறையாலும், பெண் கருவுறுவதில் ஆண்களின் பாலுறவு நடத்தையே காரணம் என்ற கண்டுபிடிப்பும் தாய் தலைமை சமூகத்தை உடைத்து தந்தையதிகாரச் சமூகமாக மாற்றம் பெறத் தொடங்கியது. இயற்கையின் அங்கமாகிய பெண் படிப்படியாக செயற்கையின் அங்கமாகிய சொத்ததிகார ஆண்களுக்கு சொத்தாக மாறினாள். இன்றையத் தொன்மையானப் பழங்குடிச் சமூக வாழ்விலும் வேட்டையாடுதலுக்கும் மந்தை வளர்ப்பிற்கும் விவசாயத்திற்கும் வழியில்லாத சூழலில் காடுகளில் சென்று கிழங்குகளைச் சேகரிப்பதற்குப் பெண்கள்தான் செல்கிறார்கள். இந்த நடவடிக்கையின் மூலமாகச் சோளகர்கள் தங்களது ஆழ்மன உணர்நிலையில் காடுசார்ந்த பொருட்களைச் சேகரிக்கின்ற தாய்தலைமைச் சமூகத்துப் பெண்களை நினைவுகொள்வதாகச் செயல்படுகிறார்கள். ஆழ்மன உணர்நிலை என்பது சிக்மன் ஃப்ராய்டு விளக்குகின்ற நனவிலி மனத்தைக் குறிப்பதாகும். உணர்நிலை அறிவு என்பது சிக்மன் ஃப்ராய்டு விளக்குகின்ற நனவு மனத்தைக் குறிப்பதாகும். சோளகர்களது இத்தகைய நடவடிக்கையானது கடந்தகாலத் தாய்தலைமைச் சமூகத்தின் காடுசார்ந்த பொருள் சேகரிப்புக் கடமையின் எச்சமாக திகழ்கின்றது.
1.காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகம்
2.வேட்டை நாகரிகம்
3.கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம்
4.விவசாய நாகரிகம்
5.உற்பத்தி மீதான வணிக நாகரிகம்
6.வணிக இலாபத்திற்காகவே உற்பத்தி செய்தல்
7.நிதி மூலதனப் பிரிவு தோன்றி சமூக உற்பத்தியை ஆதிக்கம் செய்தல்
8.மக்கள் தலைமை கட்டுப்பாட்டில் சமூக உற்பத்தியைக் கட்டமைத்தல்
மனித வரலாற்று படிநிலையின் எட்டு கட்டங்களில் உற்பத்திக் கருவிகள் வளர்ச்சியடையாத காலக்கட்டத்தில் காடுசார்ந்த பொருட்களைச் சேகரித்தலே முதன்மைத் தொழிலாக அமைந்திருந்தது. வேட்டையாடுதல் என்பது இரண்டாம் கட்டமாகவே திகழ்ந்தது. கால்நடை மந்தை வளர்ப்பும் விவசாயமும் ஆரம்பநிலையிலேயே இருந்தன.
குழந்தைகளையும் கூட்டத்தையும் குழுவின் தாயார் வழிநடத்திய தாய்தலைமைச் சமூகத்தில் காடுசார்ந்து சேகரிக்கப்பட்ட பொருட்களை பெண்களே தலைமையேற்று கூட்டத்திற்கு பகிர்ந்தளித்துப் பராமரித்தார்கள். வளர்ச்சியடைந்த வேட்டை நாகரிகத்திலும் தாய்தலைமை சமூகத்தின் இத்தகையப் பண்பாடு பாதித்ததில்லை. கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்தில் தந்தையதிகார சமூகம் தோன்றும் காலம்வரையிலும் இந்த நிலையே நிலைத்திருக்கிறது. கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்தின் சொத்தாதிக்கத்தாலும் பாலுறுவு உரிமையில் நிகழ்ந்த இரு குழுக்களுக்கு இடையிலான உறவு முறையாலும், பெண் கருவுறுவதில் ஆண்களின் பாலுறவு நடத்தையே காரணம் என்ற கண்டுபிடிப்பும் தாய் தலைமை சமூகத்தை உடைத்து தந்தையதிகாரச் சமூகமாக மாற்றம் பெறத் தொடங்கியது. இயற்கையின் அங்கமாகிய பெண் படிப்படியாக செயற்கையின் அங்கமாகிய சொத்ததிகார ஆண்களுக்கு சொத்தாக மாறினாள். இன்றையத் தொன்மையானப் பழங்குடிச் சமூக வாழ்விலும் வேட்டையாடுதலுக்கும் மந்தை வளர்ப்பிற்கும் விவசாயத்திற்கும் வழியில்லாத சூழலில் காடுகளில் சென்று கிழங்குகளைச் சேகரிப்பதற்குப் பெண்கள்தான் செல்கிறார்கள். இந்த நடவடிக்கையின் மூலமாகச் சோளகர்கள் தங்களது ஆழ்மன உணர்நிலையில் காடுசார்ந்த பொருட்களைச் சேகரிக்கின்ற தாய்தலைமைச் சமூகத்துப் பெண்களை நினைவுகொள்வதாகச் செயல்படுகிறார்கள். ஆழ்மன உணர்நிலை என்பது சிக்மன் ஃப்ராய்டு விளக்குகின்ற நனவிலி மனத்தைக் குறிப்பதாகும். உணர்நிலை அறிவு என்பது சிக்மன் ஃப்ராய்டு விளக்குகின்ற நனவு மனத்தைக் குறிப்பதாகும். சோளகர்களது இத்தகைய நடவடிக்கையானது கடந்தகாலத் தாய்தலைமைச் சமூகத்தின் காடுசார்ந்த பொருள் சேகரிப்புக் கடமையின் எச்சமாக திகழ்கின்றது.
வேட்டையாடிய இரையைப் பங்கிடும்போது முதல் பங்கை சோளகர்கள் தங்கள் ஊரிலுள்ள விதவை பெண்ணுக்கு ஒதுக்குகிறார்கள். தாய்தலைமைச் சமூகத்தில் வேட்டையாடிய இறைச்சி முழுமையும் தாயின் தலைமைக்கு உட்பட்டு பகிர்ந்துகொள்ளப்பட்டது. தந்தை அதிகாரச் சமூகத்தில் விதவைப் பெண்ணுக்கு ஒரு குறிப்பிட்ட பங்கு ஒதுக்கப்படுகின்றது. கணவரை இழந்த பெண்ணை விதவை என்கிறார்கள். கணவர் என்பது தந்தை அதிகாரச் சமூகத்தின் அடையாளம் ஆகும். தாய்தலைமைச் சமூகத்தில் சொத்துடைமை உற்பத்திமுறை வலிமையடையும்வரை ஆண் பாலினத்தை முதன்மைப்படுத்துகின்ற கணவன் மற்றும் தந்தை ஆகிய உறவுமுறையோ கருத்துக்களோ தோன்றியிருக்கவில்லை. சோளகர்கள் தங்களது வேட்டையின் முதல் பங்கை ஒரு விதவைப் பெண்ணுக்கு ஒதுக்குகின்ற வழக்கமானது தாய்தலைமைச் சமூகத்தின் மீது ஆண்களின் ஆழ்மன உணர்நிலையிலுள்ள மரியாதையின் எச்சமாகும். கணவரை இழந்த பெண்ணை கணவர் என்ற தந்தையதிகார உறவு தோற்றம் பெறாத தாய்தலைமைச் சமூகத்தின் பெண்ணுக்குப் பதிலீடாகக் கருதுகிறார்கள்.
தேன்கனிக்கோட்டையில் இருளர்கள் வாழ்கின்ற பகுதியில் வறட்சிக் காலங்களில் மழை வேண்டி மழைதேவருக்கு படையலிட்டு வழிபடுகிறார்கள். அந்த வழிபாட்டில் வயதான மூன்று விதவைப் பெண்களை அழுவதற்காக அழைக்கிறார்கள். விதவை பெண்கள் மழையில்லாமல் தம் மக்கள் துயரடைகின்ற நிலைமைகளைப் பாடுவதன் மூலமாக மழை தேவருக்கு இரக்கம் உருவாகி மழையைப் பொழியச் செய்வார் என்பதாக நம்புகிறார்கள். இத்தகைய நம்பிக்கையின் அடிப்படையி்ல் விதவைப் பெண்கள் மழையை வரச்சொல்லி அழுதுகொண்டே பாடுகிறார்கள். இந்த விதவைப் பெண்களின் மழை வேண்டுகின்ற நிகழ்ச்சியானது சொத்ததிகாரத்தின் அடிப்படையிலான தந்தை அதிகாரச் சமூகம் தோன்றுவதற்கு முந்தைய தாய் தலைமைச் சமூக வடிவின் எச்சத்தை எடுத்தியம்புகின்றது. மழையைப் பற்றிய அறிவியலும் அறிவியல் தொழில் நுட்பங்களும் வளர்ச்சியடையாத தாய்தலைமைச் சமூகத்தில் கூட்டத்தை வழிநடத்திய தாய் இயற்கையிடம் கெஞ்சியும் போலி விஞ்ஞானமாகிய மந்திரம் மூலமாக இயற்கையைப் பணித்தும் மழை பொழிய வேண்டினார். வழிபாட்டு வரலாற்றின் தொடக்கமாகிய இயற்கை வழிபாட்டில் ஆதிப்பூசாரிகளாகப் பெண்களேத் திகழ்ந்தார்கள். தாய் தலைமைச் சமூகத்தில் கணவர் என்ற ஆணாதிக்கச் சின்னம் தோன்றியிருக்கவில்லை. தந்தை அதிகாரச் சமூகத்திற்கு உட்பட்ட மழைதேவரு வழிபாட்டில் அழுவதற்காக அழைக்கப்படுகின்ற கணவரில்லாத விதவைப் பெண்கள் கணவர் என்ற உறவு முறை தோன்றாத தாய்தலைமைச் சமூகப் பெண்களுக்குப் பதிலீடாக அமைகிறார்கள்.
சோளகர் தொட்டியில் மழை தெய்வத்தை வழிபடுவதற்காக ஆண்கள் தொட்டியிலிருந்துகொண்டு பெண்களை காட்டிற்கு வழியனுப்புகிறார்கள். காட்டிற்குச் சென்ற பெண்கள் மழை தெய்வமாகிய எங்குசீர் குட்டையை வழிபடுகிறார்கள். செயற்கையின் அடையாளமாகிய அனைத்து உடைகளையும் களைந்து, இயற்கையின் அடையாளமாகிய நிர்வாண நிலையிலிருந்து வழிபடுகிறார்கள். செயற்கையின் அடையாளமாகிய ஊர் பகுதியை நீங்கி, இயற்கையின் அடையாளமாகிய வனத்திற்குள் சென்று வழிபடுகிறார்கள். சொத்தாதிக்கத்தின் அடையாளமாகவும் தந்தையதிகாரத்தின் பிரதிநிதிகளாகவும் திகழ்கின்ற ஊர் ஆடவர்களை பிரிந்து, தாய்தலைமையின் பிரதிநிதிகளாக வந்து வழிபடுகிறார்கள். காடு சார்ந்த பொருள் சேகரிப்பின் அடையாளங்களாகிய கூடை முறங்களைச் சொத்தாதிக்கப் பண்பாட்டிற்கு உடைமையாக எடுத்துச் செல்லாமல் வனத்திலேயே வீசிவிட்டுச் செல்கிறார்கள். இத்தகைய நடவடிக்கைகள் மூலமாக சோளகர்கள் தங்களது ஆழ்மன உணர்நிலையில் தாய்தலைமைச் சமூகப் பெண்களுக்கு பதிலீடாக தங்களை உருமாற்றிக்கொள்வதாகக் கருதுகிறார்கள். அதாவது, தாய் தலைமை சமூகத்தின் தொடக்க வழிபாடாகிய இயற்கை வழிபாட்டை நிகழ்த்திய பெண் பூசாரிகளுக்கு பதிலீடாக தங்களை உருமாற்றிக்கொள்கிறார்கள்.
ஆழ் மன உணர்நிலை என்பது சமூக உள்ளத்தியல் பற்றிய அறிவியலாகும். சமூக உள்ளத்தியல் என்பது சமூக வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு கட்டமைவதாகும். சமூக வாழ்வியல் என்பது
சமூக வரலாற்றியலிலிருந்து பிரிக்க முடியாததாகும். இத்தகைய சமூகவிஞ்ஞான விளக்கத்தின்
அடிப்படையில் தந்தை அதிகார சமூகத்தில் வாழும் மனிதர்களது ஆழ்மன உணர்நிலையானது இத்தகைய பதிலீடுகள் மூலமாக தாய்தலைமைச் சமூகத்தை நினைவுகொள்கின்றன
என்ற முடிவை எட்ட முடிகின்றது.
தந்தையதிகாரத்தால் வீழ்த்தப்பட இயலாமல் தாய் தலைமை சமூகத்தின் மீதான சமூக மரியாதை மனிதர்களது ஆழ்மனதில் இன்றும் பேணப்படுவது ஆச்சரியப்படத்தக்க உண்மையாகும். பழங்குடிகளது பண்பாட்டில் மட்டுமல்ல, நவீன சொத்தாதிக்க சமூகத்தினரின் ஆழ்மனதிலும் தாய்தலைமையின் சமூக மரியாதை பேணப்படுகின்றது. அதனால்தான் கடல், காடு, காற்று, வானம், மலை, நிலம், இயற்கை அனைத்தும் தாயாக கொண்டாடப்படுகின்றன. அவற்றை தந்தையாக கொண்டாடும் தந்தையதிகாரப் பண்பாடு இன்றும் கட்டமைய இயலவில்லை என்பதே சான்றாகும்.
பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம் போன்ற தந்தையதிகாரப் பண்பாட்டை உடைக்க தாய்தலைமையின் நினைவும் மரியாதையும் உந்துதலாக அமையும். சமூக மேன்மை போற்றும் பாலின சமத்துவத்தை அடைவதற்கு கலங்கரையாகத் திகழும். மனித ஆழ்மன உணர்நிலையில் வெளிப்படுகின்ற இத்தகைய தாய்தலைமை மீதான நினைவுகளும் மரியாதைகளும் சமூக மேன்மைக்கு ஓர் உந்துவிசையாக அமைகின்றது
.
தந்தையதிகாரத்தால் வீழ்த்தப்பட இயலாமல் தாய் தலைமை சமூகத்தின் மீதான சமூக மரியாதை மனிதர்களது ஆழ்மனதில் இன்றும் பேணப்படுவது ஆச்சரியப்படத்தக்க உண்மையாகும். பழங்குடிகளது பண்பாட்டில் மட்டுமல்ல, நவீன சொத்தாதிக்க சமூகத்தினரின் ஆழ்மனதிலும் தாய்தலைமையின் சமூக மரியாதை பேணப்படுகின்றது. அதனால்தான் கடல், காடு, காற்று, வானம், மலை, நிலம், இயற்கை அனைத்தும் தாயாக கொண்டாடப்படுகின்றன. அவற்றை தந்தையாக கொண்டாடும் தந்தையதிகாரப் பண்பாடு இன்றும் கட்டமைய இயலவில்லை என்பதே சான்றாகும்.
பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம் போன்ற தந்தையதிகாரப் பண்பாட்டை உடைக்க தாய்தலைமையின் நினைவும் மரியாதையும் உந்துதலாக அமையும். சமூக மேன்மை போற்றும் பாலின சமத்துவத்தை அடைவதற்கு கலங்கரையாகத் திகழும். மனித ஆழ்மன உணர்நிலையில் வெளிப்படுகின்ற இத்தகைய தாய்தலைமை மீதான நினைவுகளும் மரியாதைகளும் சமூக மேன்மைக்கு ஓர் உந்துவிசையாக அமைகின்றது
.
துணை செய்தவை
1.சோளகர் தொட்டி - ச.பாலமுருகன், எதிர் வெளியீடு
2.எங்கெல்ஸ், பிரெடெரிக். 2008. குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம். மதுரை : கருத்து=பட்டறை.
2.எங்கெல்ஸ், பிரெடெரிக். 2008. குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம். மதுரை : கருத்து=பட்டறை.
3.கோபட் கந்தி. 2014. சுதந்திரமும் மக்கள் விடுதலையும். கோயம்புத்தூர்:
விடியல் பதிப்பகம்.
4.பரமசிவன், தொ. 2009. அறியப்படாத தமிழகம். சென்னை: காலச்சுவடு
பதிப்பகம்.
5.பாரதி, பக்தவத்சல. 2003 (1990). பண்பாட்டு மானிடவியல்.
சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.
6.ராகுல் சாங்கிருத்தியாயன் (தமிழாக்கம் கண. முத்தையா). 2003 (1949). 7.வால்காவிலிருந்து கங்கைவரை. சென்னை :தமிழ்ப் புத்தகாலயம்.
8.ஜார்ஜ் தாம்சன் (தமிழாக்கம் எஸ்.வி.ராஜதுரை). 2005. மனித
சாரம். கோயம்புத்தூர் : விடியல் பதிப்பகம்.
9.ஜார்ஜ் தாம்சன் (தமிழாக்கம் கோ. கேசவன்) 2002. மனித சமூக
சாரம். விழுப்புரம் : சரவணபாலு பதிப்பகம்.
10.காதலிலிருந்து கடவுள்வரை
- https://puthiyavansiva.blogspot.in/2016/11/blog-post.html
11.தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள்: இனவரைவியல் நோக்கு -https://puthiyavansiva.blogspot.com/2016/10/blog-post_79.html
12.
புதியவன். அக்.24, 2019. இலக்கிய அறிவியல். 'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ். https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5444:2019-10-24-12-39-00&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82
13.
புதியவன். அக்.28, 2019. காதல் வரலாறு. 'பதிவுகள்'
- பன்னாட்டு இணைய இதழ்.
14.
புதியவன். அக்.7, 2019. கடவுள் வரலாறு. 'பதிவுகள்'
- பன்னாட்டு இணைய இதழ்.
12.
புதியவன். அக்.24, 2019. இலக்கிய அறிவியல். 'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ். https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5444:2019-10-24-12-39-00&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82
13.
புதியவன். அக்.28, 2019. காதல் வரலாறு. 'பதிவுகள்'
- பன்னாட்டு இணைய இதழ்.
14.
புதியவன். அக்.7, 2019. கடவுள் வரலாறு. 'பதிவுகள்'
- பன்னாட்டு இணைய இதழ்.
வெளிவந்த விபரம்
உங்கள் நூலகம்,
ஆகஸ்ட் 2016,
ஆகஸ்ட் 2016,
பக்கம் 81 - 85
கீற்று இணையதளத்தில் பதிவு விபரம்
http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-aug16/31423-2016-09-10-06-55-46
http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-aug16/31423-2016-09-10-06-55-46
-காணொளி கருத்தாடல்-
பழங்குடிகளது ஆழ்மன
வெளிப்பாட்டில் தாய்தலைமை
(இலக்கிய மானிடவியலின்
சமூக விஞஞான அணுகுமுறை)
No comments:
Post a Comment