எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Wednesday, May 31, 2017

இயல் – 3 சமூக வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகள்

இயல் – 3
சமூக வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகள்

3.1.முன்னுரை
          இந்த இயலில் ஆய்விற்குரிய ஐந்து புதினங்களிலிருந்து இயற்கையின் அங்கமாகிய பழங்குடி மக்களின் வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகள் ஆராயப்பெறும். தமிழகப் பழங்குடிகளின் குடும்பம், உணவுமுறை, திருமணம்சமயம், தெய்வம், சடங்குகள், பாலின ஏற்றத்தாழ்வு, கலை, விளையாட்டு, அறிவியல், மருத்துவம், விழாக்கள், கல்வி, பஞ்சாயத்து, சட்டம், வாய்மொழி வழக்காறுகள், புழங்குபொருட்கள் ஆகியவை பற்றி இவ்வியலில் ஆராயப்பெறும்.
3.2.குடும்பம்
சோளகர்களிடத்தில் புதிதாகத் திருமணம் செய்துகொண்ட ஆணும் பெண்ணும் கணவர் மனைவி என்ற உரிமையுடன் தனி வீடு அமைத்து வாழ்கிறார்கள். கணவர் இறந்துவிட்ட இளம் சோளகப் பெண்கள் மறுதிருமணம் செய்து கொள்கிறார்கள். விதவையான பெண்கள் தனது பிள்ளைகளுடன் தாய்வீடு திரும்பி விடுகிறார்கள். தாய்வீட்டிலிருந்துகொண்டு மறுதிருமணம் செய்துகொள்கிறார்கள். அல்லது கணவனது சகோதரரைத் திருமணம் செய்துகொள்கிறார்கள். சோளகர்கள் வயது பார்த்துத் திருமணம் செய்துகொள்வது இல்லை. பெரியவர்களால் குலம் பார்க்கப்பட்டுத் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆண்களும் பெண்களும் வெளிப்படையாகத் தங்களது காதலை முறையிடுவதற்கு எந்தத் தடைகளும் இ்ல்லை. மனம் உடன்பட்டால் திருமணம் செய்துகொள்கிறார்கள். விருப்பம் இல்லாத கணவனை விட்டு புதியக் கணவனைத் தேர்ந்தெடுக்கின்ற உரிமை பெண்களுக்கு இருக்கின்றது. பழைய கணவர் தன் காதலிக்குக் கொடுத்தப் பரிசப்பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். தன் மனைவி பழைய கணவருடன் வாழ்ந்து பெற்றக் குழந்தையையும் தன் குழந்தையாக ஏற்று வாழ்கிறார்கள். பழைய கணவரிடமே குழந்தையை விட்டுக்கொடுத்து வருவதும் நிகழ்கிறது. இந்த நிகழ்வுகள் பெரும்பாலும் பஞ்சாயத்தார் கூடி நிறைவேற்றுவதாக அமைகின்றது. (பாலமுருகன்,.2013: 49-52,83,94-95).
                        கொல்லிமலை மலையாளிகள் கூட்டுக்குடும்ப முறையைப் பின்பற்றுகிறார்கள். திருமணமான கணவனும் மனைவியும் இறுதிக் காலம்வரை சேர்ந்து வாழ வேண்டும் என்பது நிர்பந்தம் இல்லை. மனம் ஒட்டாதவர்கள் பிரிந்து சென்று வேறொரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும். ஆயினும் இறுதிக் காலம் வரை சேர்ந்து வாழவேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டிருக்கிறார்கள். பிடாரி தனக்குக் கணவனாக வரவிருக்கும் சக்கரவத்திக் கருமனுடன்ஒருத்திக்கு ஒருவனாகவும், ஒருவனுக்கு ஒருத்தியாகவும்வாழ வேண்டும் என்று விரும்புகிறாள். ஆனால் திருமணப் பேச்சின் போது அவனுக்கு முதல் திருமணம் முடிந்த செய்தியை அறிந்து வருத்தப்படுகிறாள். காட்டு வேலையைச் செய்வதற்கு ஆளில்லை என்பதற்காக தனது பையனுக்கு மூன்று வயதிலேயே பதினெட்டு வயது பெண்ணைத் திருமணம் செய்து வைத்ததாகக் கருமனின் தந்தை விளக்குகிறார். அவர்களுக்கு ஒரு பையனும் மூன்று பெண்களும் பிறந்தார்கள். ஆனால் பையன் வாலிபனாவதற்குள் அந்தப் பெண் வேறொரு பையனை மணம் செய்து குடும்பமாகிவிட்டாள் என்பதாக தெரியவந்ததும் பிடாரி மகிழ்ச்சியடைகிறாள். ஊரார் முடிவுசெய்தபடி கருமனும் பிடாரியும் திருமணம் முடித்துக்கொண்டு பூங்குளத்தில் குடும்பமாகிறார்கள். (சின்னப்ப பாரதி,கு. 2008: 152-156).
படகர்கள் தங்களது அத்தை மற்றும் மாமன் மகளைத் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்துகிறார்கள். முறைகாரர்களை திருமணம் செய்கின்ற முறை முக்கியத்துவமாக இருக்கின்றது. முறைகாரர்கள் இல்லாதவர்களைத் திருமணம் செய்து குடும்பம் நடத்துதல் என்பது இரண்டாம்பட்சமாக இருக்கின்றது. கூட்டுக்குடும்ப வாழ்வை மேற்கொள்கிறார்கள். திருமணமான பெண் கணவர் வீட்டில் இணைந்து குடும்பம் நடத்துகிறாள். மனைவி வீட்டில் கணவன் இணைந்து குடும்பம் நடத்துதல் என்பது அரிதாகவே நிகழ்கிறது. குடும்பத்தில் மனம் ஒட்டாவிட்டால் பஞ்சாயத்தில் முறையிட்டு பிரிந்துசென்று வேறு திருமணம் செய்துகொள்ள உரிமையிருக்கின்றது. முதல் மனைவி வாழும்போது இரண்டாவது மனைவியைக் கட்டுதல் என்பது அரிதாக இருக்கின்றது. (ராஜம் கிருஷ்ணன். 2001: 51-53,101,130,156-162).
            தாணிக்கண்டி இருளர்கள் தாயின் சகோதரரின் மகளையோ தந்தையின் சகோதரியின் மகளையோ திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துகிறார்கள். (ஆட்டனத்தி. 2010: 83-85).
            ஒருத்திக்கு ஒருவன் என்ற ஒருதார மணமுறையானது பாலுறவு உரிமை வரலாற்றில் இறுதி வடிவமாக இருக்கின்றது.
சென்ற காலத்தில் நடந்ததைப்போல, சமுதாயம் முன்னேற குடும்பமும் முன்னேறும். சமுதாயம் மாற அதுவும் மாறும். அது சமுதாய அமைப்பின் படைப்பு. அதன் பண்பாட்டை அது பிரதிபலிக்கும். நாகரிகம் தொடங்கிய காலத்திலிருந்து ஒருதார மணக் குடும்பம் மிகவும் முன்னேற்றம் அடைந்திருக்கின்றது. எனவே ஆண், பெண் சமத்துவம் முழுமையாக சாதிக்கப்படுகின்றவரை அது மேலும் மேம்பட முடியும் என்று குறைந்தபட்சமாகக் கருதிக்கொள்ளலாம். நெடுந்தூர எதிர்காலத்தில் ஒருதார மணக் குடும்பத்தினால் சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாமல் போனால், அதற்குப் பின்னால் வரப்போகின்றவற்றின் இயல்பை ஆருடம் கூற முடியாது.”(எங்கெல்ஸ், பி. 2008: 68)
ஆணின் சொத்தாதிக்க நலனை அடிப்படையாகக் கொண்டு திருமண வடிவமாக நிலைபெற்றிருக்கிறது.
            “மனித வரலாற்றில் காதலும் திருமணமும் வெவ்வேறு துருவங்கள்.தாய்தலைமை சமூகத்தில் ஆணாதிக்கப் பண்புகளுக்கு எதிராக பெண்களிடம் தோன்றிய விடுதலை உணர்விலேயே காதல் பிறந்தது. தந்தை அதிகாரச் சமூகத்தில் பெண் விடுதலைக்கு எதிராக ஆண்களிடம் தோன்றிய சொத்தாதிக்க உணர்விலேயே திருமணம் பிறந்தது.” (புதியவன்.2016: 24).
பழங்குடி மக்களது குடும்ப அமைப்புகளின் இயங்குதலில் ஒருத்திக்கு ஒருவன் என்ற ஒருதார மணமுறை இறுக்கமான வடிவத்தை அடையவில்லை. ஒருதார மணமுறை அதிகாரப்பூர்வமான குடும்ப அமைப்பாக நடைமுறையில் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும்கூட இறுக்கம் அடையாமல் நெகிழ்வுத் தன்மையுடையதாகவே இருக்கின்றது. பருவம் அடைந்த சிறுவனை ஒரு பெண் திருமணம் செய்து கொள்வது, மூன்று வயது சிறுவனை பதினெட்டு வயது பெண் திருமணம் செய்து கொண்டு மற்றவர்களின் உரிமைக்காரர்களின் உதவியுடன் குழந்தை பெற்றுக்கொள்வது, கணவனைவிட்டு விலகி வேறொரு ஆடவனைத் திருமணம் செய்து கொள்வது, ஆகிய நடைமுறையிலுள்ள வடிவங்கள் ஒருதார மணமுறையின் இறுக்கமடையாதத் தன்மையை நிரூபிக்கின்றன. இருளர்களைப் பற்றிய இரண்டு புதினங்களுமே குடும்ப அமைப்பைப் பற்றிய செறிவானத் தகவல்களை விவரிக்கவில்லை. துண்டு துண்டான செய்திகளை இங்குமங்கும் காண முடிகிறது.
3.3.உணவுமுறை
3.3.1.காய்கள்
அவரைக்காய், கத்திரிக்காய், மொச்சைக்காய், காரக்காய், சூரக்காய், கசப்பு நாரத்தங்கை, புளியங்காய், நெல்லிக்காய்  போன்ற காய்கறி வகைகளைத் தமிழகப் பழங்குடி மக்கள் உணவாக உண்கிறார்கள். அவரைக்காய்களையும், கத்திரிக்காய்களையும் சோளகர்கள் இறைச்சியோடு சேர்த்து சமைத்து உண்ணுகிறார்கள். மலையாளிகள் மொச்சைப் பயிரை வேகவைத்துத் தாளித்து உண்கிறார்கள். படகர்கள் புளி சேர்க்காமல் மொச்சைப் பருப்பில் குழம்பு செய்து சாப்பிடுகிறார்கள். தேன்கனிக்கோட்டை இருளர்கள் பஞ்சக் காலத்தில் காரக்காய், சூரக்காய் ஆகிய காய்களைச் சாப்பிடுகிறார்கள்.
3.3.2.கீரைகள்
புளிச்சான் கீரை, சீங்கைக் கீரை, ஈங்கி நெக்கிரி கீரை, மெள்ள நெக்கிரி கீரை, வசலை கீரை, சீங்கை கீரை, சுருளி கீரை, பாவை கீரை, பட்டி கீரை, கோவை கீரை போன்ற கீரை வகைகளைத் தமிழகப் பழங்குடி மக்கள் உணவாக உண்கிறார்கள்.   மலையாளிகள் புளிச்சான் எனும் ஒருவகையான கீரையைத் துணை உணவாகச் சமைத்து உண்கிறார்கள். சோளகர்கள் தங்களது உணவில் சீங்கை எனும் கீரை வகையைச் சமைத்து உண்கிறார்கள்.  மலையாளிகள் ஈங்கி நெக்கிரி, மெள்ள நெக்கிரி எனும் கீரை வகையோடு பலா கொட்டை, கரு மொச்சை, கசப்பு நாரத்தங்காய் ஆகியவற்றைக் கலந்து ரசம் எனும் திரவ உணவை சமைத்து உண்கிறார்கள். தாணிக்கண்டி இருளர்கள் கீரையை டாகு என்கிறார்கள். வசலை டாகு, சீங்கை டாகு, சுருளி டாகு, பாவை டாகு, பட்டி டாகு, கோவை டாகு ஆகிய கீரை வகைகளைச் சமைத்துச் சாப்பிடுகிறார்கள்.
3.3.3.பழங்கள்
நெல்லிக்கனி, பலாப்பழம், அன்னாச்சிப் பழம், வாழைப்பழம், ஆரஞ்சுப் பழம், கூழாம்பழம், தவிட்டுப்பழம், முள்ளுப்பழம், நாகப் பழம், அத்திப்பழம், நாகதாளி பழம் போன்ற பழ வகைகளைத் தமிழகப் பழங்குடி மக்கள் உணவாக உண்கிறார்கள். சோளகர் சிறுவர்கள் வனங்களிலிருந்து நெல்லிக்கனிகளைப் பறித்துச் சாப்பிடுகிறார்கள். கொல்லிமலை மலையாளிகள் பலா, அன்னாச்சி, வாழை, ஆரஞ்சு, கூழாம்பழங்களைச் சாப்பிடுகிறார்கள். படகர் சிறுவர்கள் தவிட்டுப்பழம், முள்ளுப்பழம் ஆகிய பழங்களை வனங்களில் சேகரித்துச் சாப்பிடுகிறார்கள். தாணிக்கண்டி இருளர்கள் நாகப் பழம், அத்திப்பழம் ஆகிய பழங்களைச் சாப்பிடுகிறார்கள். தேன்கனிக்கோட்டை இருளர்கள் பஞ்ச காலத்தில் நாகதாளி பழத்தைச் சாப்பிடுகிறார்கள்.
3.3.4.கிழங்குகள்
வள்ளி கிழங்கு, இருளைக் கிழங்கு, பூமி சர்க்கரைக் கிழங்கு, சோலக் கிழங்குகற்றாழைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளைத் தமிழகப் பழங்குடி மக்கள் உணவாக உண்கிறார்கள். சோளகப் பழங்குடிகள் வள்ளிக்கிழங்கு, இருளைக் கிழங்கு, பூமி சர்க்கரைக் கிழங்கு ஆகிய கிழங்குகளை காடுகளிலிருந்து சேகரித்துவந்து சமைத்துச் சாப்பிடுகிறார்கள். தாணிக்கண்டி இருளர்கள் கிழங்குகளைக் கசாங்குஎன்று அழைக்கிறார்கள். சோலெக் கிழங்கு எனும் ஒரு வகை கிழங்கைச் சாப்பிடுகிறார்கள். இந்தக் கிழங்கை வேக வைக்காமல் தீயில் சுட்டுச் சாப்பிடுகிறார்கள். இந்தக் கிழங்கு இனிப்புச் சுவையுடையதாகும். தேன்கனிக்கோட்டை இருளர்கள் பஞ்சக் காலத்தில் கற்றாழைக்கிழங்கை வெட்டி, வேக வைத்து, புளி கரைசலில் ஒரு வாரம் ஊர வைத்துச் சாப்பிடுகிறார்கள்.

3.3.5.தானியங்கள்
இராகி, கேழ்வரகு, சாமை, அரிசி, கொள்ளு, மூங்கில் குருத்து ஆகிய தானியங்களைத் தமிழகப் பழங்குடி மக்கள் உணவாக உண்கிறார்கள். இராகி தானியத்திலிருந்து இராகிக்களிஇராகிக் கூழ் ஆகிய உணவுகளைச் செய்து சாப்பிடுகிறார்கள். தாணிக்கண்டி இருளர்கள் இராகி உப்புமா செய்து சாப்பிடுகிறார்கள். அரிசியிலிருந்து அரிசிச் சோறு, அரிசிக் கஞ்சி செய்து சாப்பிடுகிறார்கள். தமிழகப் பழங்குடிகள் பொதுவாக அரிசிச் சோற்றை அரிதாகத்தான் சாப்பிடுகிறார்கள். திருமணம் போன்ற விழாக்களில் மட்டும்தான் அரிசிச் சோறு உண்ணுகிறார்கள். மலையாளிகள் திருமணத்தின்போது வெல்லம், புளியங்கொட்டை கலந்து செய்யப்பட்ட ஒரு வகை சோற்றைச் சாப்பிடுகிறார்கள். கஞ்சி என்பது திரவ வடிவிலான உணவாகும். மலையாளிகள் அரிசியைக் கஞ்சியாக காய்ச்சிக் குடிக்கிறார்கள்நெல்லினை அவித்து சோறு சமைத்துச் சாப்பிடுகிறார்கள். கேழ்வரகிலிருந்து கேழ்வரகு களி, கேழ்வரகு கூழ் ஆகிய உணவகளைத் தயாரித்துச் சாப்பிடுகிறார்கள். மலையாளிகள் கேழ்வரகைப் பக்குவப்படுத்தி மாவாக்கிக் களியாகக் கிளரி உண்ணுகிறார்கள். புளிச்சாறு, கொள்ளுக்கடுப்பான் ஆகியன துணை உணவாக பயன்படுத்தப்படுகின்றன.
கேழ்வரகு மாவிலிருந்து கூழ் என்னும் திரவ வடிவிலான உணவைத் தயார் செய்து குடிக்கிறார்கள். பச்சைமிளகாயைத் துணை உணவாகக் கடித்துக்கொள்கிறார்கள். கொள்ளு என்னும் தானியத்திலிருந்து மலையாளிகள் கொள்ளு கடுப்பான் எனும் உணவைத் தயார் செய்கிறார்கள். கொள்ளுக் கடுப்பானை கேழ்வரகுக் களிக்கு துணை உணவாகச் சமைத்து உண்கிறார்கள். சாமையிலிருந்து சாமைக் கஞ்சி, சாமைச் சோறு ஆகிய உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுகிறார்கள். மலையாளிகள் சாமையைக் கஞ்சியாகச் சமைத்து குடிக்கிறார்கள். படகர்கள் சாமையைச் சோறாகச் சமைத்துச் சாப்பிடுகிறார்கள். தாணிக்கண்டி இருளர்கள் இறப்பு நிகழ்ந்த வீட்டில் வருகை தருபவர்களின் பசியாற்றுவதற்காக உப்புக்கஞ்சி என்ற உணவைச் சமைக்கிறார்கள். தேன்கனிக்கோட்டை மலைகளில் வாழும் இருளர்கள் பஞ்சக் காலத்தில் மூங்கில் குருத்துக்களை வேக வைத்து உண்கிறார்கள்.

3.3.6.இறைச்சி
மான் கறி, பன்றிக்கறி, கரடிக்கறி, ஆட்டுக்கறி, கோழிக்கறி ஆகிய இறைச்சி வகைகளைத் தமிழகப் பழங்குடி மக்கள் பெரிதும் விரும்பி உண்கிறார்கள். சோளகர்கள் மானை வேட்டையாடுவதற்கு வாய்ப்பு அமைகின்ற தருணங்களில் மான் கறியைச் சமைத்து உண்கிறார்கள். மான் கறியை விரைவில் பதப்படுத்தி சமைக்காவிட்டால் கறி திரண்டு கெட்டுவிடும். தற்காப்பிற்காக வேட்டையாடப்பட்ட கரடியின் இறைச்சியைச் சமைத்துச் சாப்பிடுகிறார்கள். தேவைக்கு அதிகமாகக் கிடைத்த இறைச்சியை உப்புக்கண்டமாகப் பக்குவப்படுத்தி சமைத்துச் சாப்பிட்டிருக்கிறார்கள். மலையாளிகள் பன்றி கறி உணவை பன்றி சாறு என்கிறார்கள். பன்றி வேட்டையின் போது அல்லது பஞ்சாயத்தார் தீர்ப்பால் குற்ற விருந்து வைக்கப்படும்போது பன்றி உணவை உண்ணுகிறார்கள். இறைச்சியை சாறு போன்று திரவநிலை உணவாகவும் சமைக்கிறார்கள். மசாலில்லாது உப்பிட்டு வேகவைத்தும் சாப்பிடுகிறார்கள். தேன்கனிக்கோட்டை இருளர்கள் அரிதாக பன்றிக்கறியை சாப்பிடுகிறார்கள். வாய்வேட்டு வைப்பவர்களுக்கு அரிதாக பன்றி இறைச்சி கிடைக்கும்போது இருளர்களுக்கும் பங்கு கிடைக்கின்றது.
3.3.7.பிற உணவுகள்
தேன், பொரி, முறுக்கு, பொரிஉருண்டை, கடலை, இட்லி, சாம்பார், சட்னி, புளியங்கொட்டை, பலாக்கொட்டை, வெல்லம், கருப்பட்டி, தேயிலை, வெற்றிலை, காபி, ஆனம்புளிசாறு, பனியாரம், நெய், சீங்கைப்பூ, கள்ளிமுள்ளியான், சித்தராண்ணம், ஆகியன தமிழகப் பழங்குடி மக்கள் உண்ணுகின்ற பிற உணவுகள் ஆகும்.
            சோளகர்கள் திம்பம் சந்தையிலிருந்து தங்கள் வீட்டுப் பிள்ளைகள் திண்பதற்காக பொரி, முறுக்கு போன்ற திண்பண்டங்களை வாங்கிவருகிறார்கள். பால் கலக்காமல் தேயிலையை நீரில் கலந்து கருப்புத்தேநீர் என்ற பானத்தை அருந்துகிறார்கள். கஞ்சா புகைக்கும்போது சிலநேரங்களில் கருப்பட்டியைக் கடித்துக்கொள்கிறார்கள். வாயை சிவப்பு நிறமடையச் செய்யும் வெற்றிலையை மென்று உண்ணுகிறார்கள்.
            கொல்லிமலை மலையாளிகள் கருப்பட்டி பனியாரம் என்னும் இனிப்புச் சுவையுடைய உணவைச் சமைத்துச் சாப்பிடுகிறார்கள். ஆனம் என்னும் ஒரு வகை உணவைத் தயாரித்து உண்கிறார்கள். புளிச்சாறு எனும் உணவைச் சமைத்து சோற்றில் இட்டுப் பிசைந்து சாப்பிடுகிறார்கள். கீழ்நாட்டு சந்தையிலுள்ள கடைகளில் இட்லி, சாம்பார், சட்னி போன்ற உணவுகளை வாங்கி உண்கிறார்கள்.
            படகர்கள் உறவினர்களின் வீட்டிற்கு வருகைத் தரும்போது வீட்டுக் குழந்தைகளுக்காகப் பொரிஉருண்டை, கடலை, ஆரஞ்சு ஆகிய திண்பண்டங்களுடன் வருகிறார்கள். வெந்நீரில் தேயிலையிட்டுக் கலந்து அருந்துகிறார்கள். காபித்தூளையும் வெல்லத்தையும் வெந்நீரில் கலந்து அருந்துகிறார்கள். பாலிலிருந்து நெய் தயாரித்து உணவில் கலந்து சாப்பிடுகிறார்கள்.
            தாணிக்கண்டி இருளர்கள்  சுடு நீரில் காபிப் பொடி போட்டுக் கடுங்காபி என்னும் பானத்தைத் தயாரித்து அருந்துகிறார்கள். அரிசிச் சர்க்கரை, தேன், ஆகியவற்றைப் பூப்புச் சடங்கு நிகழும்போது உண்கிறார்கள்.
            தேன்களிக்கோட்டை இருளர்கள் கற்றாளை வகையைச் சேர்ந்த சிறிய தாவரமாகிய கள்ளிமுள்ளியானைப் பஞ்ச காலத்தில் பறித்து வந்து பச்சையாகவோ வேகவைத்தோ சாப்பிடுகிறார்கள். சீங்கைப்பூவை வேகவைத்து உண்கிறார்கள். சிற்றுண்டிக் கடையில் சித்தராண்ணம் எனும் உணவைச் சாப்பிடுகிறார்கள். சித்தாரண்ணம் என்பது நெல்லரிசிச் சோற்றில் புளிப்புச் சுவையும் கடலைக் கொட்டை தாளிப்பும் கலந்து செய்யப்படுகின்ற உணவாகும். வெற்றிலை போடுவதும் வழக்கம்.
3.3.8.போதைப் பொருட்கள்
கஞ்சா, புகையிலை, பீடி, சாராயம் ஆகிய போதைதரும் பொருட்களைத் தமிழகப் பழங்குடிகள் உட்கொள்கிறார்கள்.  சோளகர்களில் கஞ்சா அல்லது புகையிலையைச் சிவபாணம் என்றும் அழைக்கிறார்கள். ஆண்கள் பெண்கள் இரு பாலருமே பீடி போன்ற  புகைப்பானில் கஞ்சாவை வைத்துப் புகைக்கிறார்கள். கொல்லி மலை மலையாளிகள் புகையிலையை உற்சாகம் பெறுவதற்காக வாயில் அடக்கிக்கொள்கிறார்கள். படகர்களில் சிலர் சாராயம் குடிக்கிறார்கள். தாணிக்கண்டி இருளர்கள் கஞ்சா, பீடி ஆகியவற்றை போதைப் பொருட்களாகப் பயன்படுத்தகிறார்கள். தேன்கனிக்கோட்டை இருளர்கள் கஞ்சா, புகையிலை ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள். சிலர் சாராயம் குடிக்கிறார்கள்.
3.4.உடை
மாராப்புச் சீலை, சீட்டிப் பாவாடை, தாவணி, நைட்டி, சீலைத்துணி, ஜாக்கெட், மார்க்கட்டு சேலை, மண்டாக்கு, ரவிக்கை சீட்டி, கோவணம், அரைக்கை சட்டை, கால்சட்டை, துண்டு, வேட்டி, வெள்ளை வட்டு, வேட்டி மல்லு, கம்பளிஆடை போன்ற உடைகளை தமிழகப் பழங்குடி மக்கள் உடுத்துகிறார்கள்.
3.4.1.ஆண்களின் உடை - கோவணம் என்பது இடுப்பளவு மட்டுமே போர்த்தப்படுகின்ற சிறிய அளவிளான துணியாகும். இந்தத் துணி ஆண்களின் உடையாக அமைந்திருக்கின்றது. சோளகர்கள், கொல்லிமலை மலையாளிகள், தேன்கனிக்கோட்டை இருளர்கள் இடுப்பில் கோவணம், வேட்டி ஆகிய உடுப்புகளை உடுத்துகிறார்கள். கொல்லிமலை மலையாளிகளில் ஆண்கள் சிலர் அரைக்கை சட்டை அணிகிறார்கள். செடி கொடிகளின் பாலும் அழுக்கும் கரையும் படிந்ததாக அந்தச் சட்டை இருக்கின்றது. படகர்கள் இடுப்பில் வேட்டிமல்லு என்னும் துணிவகையை உடுத்துகிறார்கள். நீல நிறத்திலும் சிவப்பு நிறத்திலுமான கம்பளி ஆடைகளை அணிகின்றார்கள். வெள்ளை வட்டு என்னும் துணிவகையைத் தலையைச் சுற்றி உடுத்திக்கொள்கிறார்கள். தேன்கனிக்கோட்டை இருளர்கள் வேட்டித்துணியைத் தலையில் உருமால் கட்டிக்கொள்கிறார்கள். புகையிலையை வேட்டித்துணியில் முடிச்சிட்டு வைத்துக்கொள்கிறார்கள்.
3.4.2.பெண்களின் உடை சோளகப் பெண்கள் மார்பில் ஜாக்கெட் உடுத்திக்கொள்கிறார்கள். சீலைத்துணியைக் கட்டிக்கொள்கிறார்கள். கொல்லிமலை மலையாளிகளில் பெண்கள் மார்க்கட்டு சேலையை உடுத்துகிறார்கள். தலையில் மண்டாக்கு என்னும் உடுப்பை அணிந்துகொள்கிறார்கள். படகர் பெண்கள் ரவிக்கை சீட்டி, வெள்ளை முண்டு எனும் துணிவகைகளை உடுத்துகிறார்கள். தாணிக்கண்டி இருளப் பெண்கள் மாராப்புச் சீலை, சீட்டிப் பாவாடை, தாவணி, நைட்டி போன்ற உடைகளை உடுத்துகிறார்கள். தேன்கனிக்கோட்டை இருளர் பெண்கள் சேலை உடுத்துகிறார்கள்.
3.5.புழங்கு பொருட்கள்
3.5.1.உணவுக் கருவிகள்
வாழை இலை, தேக்கு இலை, சோற்றுக் கூடை, மூங்கில் தட்டு, சுரைபுருடை, சட்டி, அலுமினியக் குண்டா, அலுமினியச் செம்பு, மொந்தை, கிண்ணம், வெங்கல வட்டில் ஆகியவற்றைத் தமிழகப் பழங்குடி மக்கள் உணவிற்கான கருவிகளாகப் பயன்படுத்துகிறார்கள்.
3.5.1.1.சட்டிசமைப்பதற்கு பயன்படுத்தும் பாத்திரத்தைச் சட்டி என்கிறார்கள்.
3.5.1.2.அலுமினியக் குண்டாகஞ்சி குடிப்பதற்காக மலையாளிகள் பயன்படுத்துகின்ற பாத்திரமாகும்.
3.5.1.3.அலுமினியச் செம்பு –  தேன்கனிக்கோட்டை இருளர்கள்  கூழ், நீர்  ஆகியவற்றை அருந்துவதற்கு அலுமினியச் செம்பைப் பயன்படுத்துகிறார்கள்.
3.5.1.4.மொந்தை - தேன்கனிக்கோட்டை இருளர்கள்  கூழ், நீர்  ஆகியவற்றை அருந்துவதற்கு மொந்தை என்னும் கருவியைப் பயன்படுத்துகிறார்கள்.
3.5.1.5.சோற்றுக் கூடைமலையாளிப் பெண்கள் உணவைச் சமைத்துவிட்டு வயல்களில் வேலை செய்யும் தங்கள் வீட்டு ஆடவர்களுக்கு உணவை எடுத்துச் செல்வதற்காக சோற்றுக்கூடையைப் பயன்படுத்துகிறார்கள்.
3.5.1.6.மூங்கில் தட்டுஉணவை வைத்துச் சாப்பிடுவதற்கு மூங்கில்தட்டைப் பயன்படுத்துகிறார்கள்.
3.5.1.7.கிண்ணம்பால் அருந்துவதற்காக படகர்கள் பயன்படுத்தப்படும் பாத்திரம் ஆகும்.
3.5.1.8.வெங்கல வட்டில்படகர்களது வீட்டுப் பெண்கள் தலைவனாகக் கருதப்படுகின்ற வீட்டு ஆணுக்கு உணவு படைப்பதற்காக வெங்கல வட்டிலைப் பயன்படுத்தப்படுகின்றனர்.
3.5.1.9.சுரைபுருடைசுரைக்குடுவையைத் தேன் சேகரிக்கின்ற கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்.
3.5.1.10.தேக்கு இலைதேக்கு மர இலைகளைச் சிறு குச்சிகளால் தைத்து உணவு பரிமாறுவதற்கான இலையை உருவாக்குகிறார்கள்.
3.5.1.11.வாழை இலைஉணவைச் சாப்பிடுவதற்குப் பயன்படுத்துகிறார்கள். வாழை இலையைத் தொன்னைபோல உருட்டிப்பிடித்து கூழை ஊற்றி அருந்துகிறார்கள்.
3.5.2.நீர் சேகரிப்பு கருவிகள்
சுரைபுருடை, மொந்தை, குடம், பானை ஆகியவற்றைத் தமிழகப் பழங்குடி மக்கள் நீர் சேகரிக்கின்ற கருவிகளாகப் பயன்படுத்துகிறார்கள்.
3.5.2.1.சுரைபுருடைசுரைக்காயினை தாகத்திற்கு அருந்துவதற்கான தண்ணீரை நிரப்பி பாதுகாக்கும் கலமாகப் பயன்படுத்துகின்றனர். இதனை சுரைபுருடை என்று அழைக்கிறார்கள். கோயில் மற்றும் உறவினரைச் சந்தித்தல் போன்ற பயணங்களில் சுரைபுருடையில் நீரை நிரப்பி எடுத்துச் செல்கின்றனர்.
3.5.2.2.பானைதண்ணீர் எடுத்துச் சேமிப்பதற்கான கலமாகப் பயன்படுத்துகிறார்கள்.
3.5.2.3.குடம்தாணிக்கண்டி இருளர்களும் தேன்கனிக்கோட்டை இருளர்களும்  நீர் சேகரிப்பதற்குக் குடத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
3.5.3.தற்காப்புக் கருவிகள்
தடி, கவ்வைக்கோல், போர்வை, கம்பளி துணி, செருப்பு, மூங்கில் கம்பு ஆகியவற்றைத் தமிழகப் பழங்குடி மக்கள் தற்காப்புக் கருவிகளாகப் பயன்படுத்துகிறார்கள்.
3.5.3.1.தடிவயதானவர்கள் ஊன்றி நடப்பதற்குப் பயன்படுத்துகின்ற கருவி. சோளகர் தொட்டியில் கொத்தல்லிக் கிழவர் இந்தக் கருவியைப் பயன்படுத்துகிறார்.
3.5.3.2.கவ்வைக்கோல்தாணிக்கண்டி இருளர்கள் தற்காப்பு ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள்.
3.5.3.3.போர்வை சோளகர்கள் குளிரை எதிர்கொள்வதற்காகப் போர்வை என்றத் துணியைப் பயன்படுத்துகின்றார்கள்.
3.5.3.4.கம்பளித் துணிகொல்லி மலை மலையாளிகளும் படகர்களும் குளிரை எதிர்கொள்வதற்காக கம்பளிகளைப் பயன்படுத்துகிறார்கள்.
3.5.3.5.செருப்பு –  படகர்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது செருப்பு அணிந்துகொண்டு செல்கிறார்கள்.
3.5.3.6.மூங்கில் கம்புவெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களுக்கு மலையேற்றத்திற்கான ஊன்றுகோல் கருவியாக மூங்கில் கம்பை விற்கிறார்கள்.
3.5.4.இசைக் கருவிகள்
மூங்கில் தப்பைபீனாச்சி, பறைமேளம், உருமி, சங்கு, ஜால்ரா, சுரைபுருடை, பீக்கி, பொரை, கொகால், பறைகுழல், தாரை, மத்தளம், தப்பட்டை, தகர டின் ஆகிய இசைக்கருவிகளைத் தமிழகப் பழங்குடி மக்கள் இசைக்கருவிகளாகப் பயன்படுத்துகிறார்கள். சோளகர்கள் பீனாச்சி எனும் சிறிய வடிவிலான நாதஸ்வரத்தைப் போன்ற இசைக் கருவியை வாயில் வைத்து ஊதுதல் மூலமாக இசைக்கிறார்கள். தப்பை மத்தளம் என்னும் கருவியைக் கைகளால் தட்டித் தாளம் இசைக்கின்றார்கள். மூங்கிலால் தட்டுதல் மூலமாகவும் தாளம் இசைக்கிறார்கள். இதனை மூங்கில் தப்பை என்கிறார்கள். பறைமேளம், உருமி, சங்கு போன்ற கருவிகளை மலையாளிகள் பயன்படுத்துகிறார்கள். படகர்கள் காவல் பரணுக்குச் செல்கின்றபோது ஊதுகுழல் என்னும் இசைக்கருவியையும் எடுத்துச் செல்கிறார்கள். பறைகுழல், தாரை, மத்தளம், தப்பட்டை ஆகிய இசைக்கருவிகளைக் கோத்தர்கள் இசைக்கிறார்கள். படகர்களின் முக்கிய நிகழ்வுகளில் கோத்தர்களின் இசையும் இடம்பெறுகின்றது. முட்டத்துவயல் இருளர் சுரைப்புருடையை இசைக்கருவியாகப் பயன்படுத்துகிறார். ஓசையெழுப்பும் மணிகளைக் காய்ந்த சுரைபுருடைக்குள் இட்டு ஆட்டுதல் மூலமாக இசை எழுப்புகிறார்கள். ஜால்ரா, பீக்கி, பொரை, கொகால், பறை போன்ற கருவிகளைத் தாணிக்கண்டி இருளர்கள் பயன்படுத்துகிறார்கள்.
3.5.5.பிறக் கருவிகள்
புகைப்பான், ஞெலிகோல், மர உழக்கு, மூங்கில் கூடை, முறம், கோணிப்பை, சாக்கு, வெள்ளி காப்பு, வெக்கிச் செடி, நெருப்பு பெட்டி, சுருக்குப் பை, திருநீறு சட்டி, அகல் விளக்கு, மணி, அரைநாண் கயிறு ஆகிய பிற கருவிகளையும் தமிழகப் பழங்குடி மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
3.5.5.1.புகைப்பான்களிமண்ணால் விரல் அளவிற்குச் செய்யப்பட்டுள்ள கருவி. இதனைப் புகையிலை கஞ்சா புகைப்பதற்குப் பயன்படுத்துகிறார்கள்.
3.5.5.2.ஞெலிகோல்நெருப்பை உருவாக்குவதற்கு பயன்படுத்துகின்ற கருவி ஆகும். குளிரை எதிர்கொள்வதற்கு குடிசைக்குள் நடுமையத்தில் நெருப்பை மூட்டவதற்கும், குடிசைகளுக்கு வெளியில் தொட்டியினர் அனைவருக்கும் பொதுவாக உக்கடத்தீ மூட்டுவதற்கும் இந்தக் கருவி பயன்படுத்தப்படுகின்றது.
3.5.5.3.மர உழக்குதானியங்கள், நெல்லிக்கனிகள், உப்பு போன்ற பொருட்களை வைத்துக்கொள்வதற்கு மர உழக்கு பயன்படுத்தப்படுகின்றது.
3.5.5.4.மூங்கில் கூடைவனத்திலிருந்து மூங்கிலைச் சேகரித்து அவற்றைச் சிம்புகளாக வெட்டி கூடை முடைகிறார்கள். இந்தக் கூடையைப் பொருட்களைச் சேகரித்து எடுத்துச்செல்வதற்கும் சேகரித்து வைப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள்.
3.5.5.5.முறம்மூங்கில் சிம்புகளால் முறத்தைப் பின்னுகிறார்கள். இக்கருவியைப் பொருட்களைக் குவித்து அள்ளுவதற்காகப் பயன்படுத்துவார்கள்.
3.5.5.6.கோணிப்பை சாக்குகாட்டுக் கொட்டகையில் வைக்கோல் பரப்பில் தூங்குகின்றபோது கோணிப்பை சாக்கைப் போர்வையாகப் பயன்படுத்துகிறார்கள்.
3.5.5.7.வெள்ளிக் காப்புவெள்ளி உலோகத்தால் செய்யப்படுகின்ற காப்பினை கையில் அணிகின்ற அணிகலனாகப் பயன்படுத்துகிறார்கள்.
3.5.5.8.வெக்கிச் செடிபடகர் பெண்கள் தலை குளிப்பதற்கு வெக்கிச்செடி எனும் ஒரு வகை மூலிகையைப் பயன்படுத்துகிறார்கள்.
3.5.5.9.நெருப்புப் பெட்டிவிளக்கேற்றுவதற்கு நெருப்புப் பெட்டியைப் பயன்படுத்துகிறார்கள்.
3.5.5.10.சுருக்குப் பைதாணிக்கண்டி முதியவர்கள் வெற்றிலை பாக்கு வைத்துக்கொள்வதற்காக இந்தச் சுருக்குப் பையைப் பயன்படுத்துகிறார்கள்.
3.5.5.11.திருநீறுச் சட்டிதிருநீறு நிரப்பப்பட்ட திருநீறு சட்டியானது குடிசையின் மூங்கிலில் தொங்குகிறது.
3.5.5.12.அகல் விளக்குபடகர்கள் தங்களது வீடுகளில் மாலை நேரமானதும் இருளை எதிர்கொள்வதற்காக அகல் விளக்கைப் பயன்படுத்துகிறார்கள். ஆமணக்கு எண்ணெய் ஊற்றி விளக்கேற்றுகிறார்கள். விளக்கேற்றப்படும் இடத்தைத் தீபமாடம் என்று அழைக்கிறார்கள்.
3.5.5.13.மணிஇறைவனுக்குப் பூசை செய்கின்ற போது மணி அசைத்து ஆட்டுதல் மூலமாக புனித ஒலி எழுப்புகிறார்கள்.
3.5.5.14.அரைநாண் கயிறுதேன்கனிக்கோட்டை இருளர்கள் எருக்கன்  செடி நாரில் தயாரிக்கப்பட்ட அரைநாண் கயிற்றைக் கட்டிக்கொள்கிறார்கள்.
3.6.முக்கிய பொறுப்புகள்
3.6.1.கொத்தல்லிசோளகர்கள் ஊர் தலைமைப் பொறுப்பினைக் கொத்தல்லி என்று அழைக்கிறார்கள். ஊரின் தலைவர் கொத்தல்லி என்ற சொல்லால் அழைக்கப்படுகிறார். ஊரின் அனைத்து நடவடிக்கைகளையும் கொத்தல்லிதான் முடிவெடுக்கிறார்.
3.6.2.கோல்காரன்சோளகர்களது ஊரில் கோயில் வழிபாடு, சடங்குகள் போன்றவற்றில் முடிவெடுக்கும் அதிகாரம் கோல்காரரிடம்தான் இருக்கின்றது. வளைந்த சித்திர வேலைபாடுகள் நிறைந்த முன்னோர்களது ஆள் உயர கோலினை வைத்திருக்கும் உரிமையைக் கோல்காரர் பெற்றிருக்கிறார். மணிராசன் கோயில் திருவிழாவின் போது பத்து நாட்கள் பூசை செய்து விரதமெடுக்கிறார். கட்டுக்கோப்பாக விரதமெடுக்காவிட்டால் கோலை தொடக்கூடாது என்ற விதியுடன் செயல்படுகிறார்கள்.
3.6.3.தர்மகர்த்தாகொல்லிமலை மலையாளிகளின் ஊர் தலைவராக தர்மகர்த்தா இருக்கின்றார். ஊரில் அனைத்து நிகழ்வுகளும் இவருக்குக் கட்டுப்பட்டுதான் நிகழ்கின்றன.
3.6.4.பூசாரிதர்மகர்த்தாவிற்கு அடுத்த முக்கியப் பொறுப்பாக பூசாரி கருதப்படுகிறார். கொல்லிமலை மலையாளிகளின் சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் பூசாரியின் தலைமையில்தான் நடைபெறுகிறது.
3.6.5.ஊர் மூப்பன்தாணிக்கண்டி இருளர்களுக்கு ஊர் தலைவராகச் செயல்படுகின்றவரை ஊர்மூப்பன் என்று அழைக்கிறார்கள்.
            படகர்கள், இருளர்கள் பற்றியப் புதினங்களில் ஊரின் முக்கியப் பொறுப்பாளர்கள் பற்றிய செறிவானத் தகவல்கள் விவரிக்கப்படவில்லை.
3.7.சமயம் / தெய்வங்கள்
3.7.1.ஜடை சாமி  கோயில்ஜடைசாமியின் கோயில் சோளகர்களது வனத்திற்குள் அமைந்திருக்கின்றது. (பாலமுருகன்,.2013: 69). சோளகர்கள் நல்லதை நினைத்து வேண்டுவதற்காகவும், நன்றிக்கடனை வெளிப்படுத்துவதற்காகவும், ஜடைசாமிக்கு படையல் வைத்து வழிபடுகிறார்கள்.
3.7.2.மணிராசன் கோயில்முன்னோர் வழிபாடு நிகழும் இடமாக இக்கோயில் அமைந்திருக்கிறது. மணிராசன் கோயிலில் கழுத்தளவு சிலை ஒன்று மரத்தால் செய்யப்பட்டிருக்கிறது. இ்ந்தக் கழுத்தளவு சிலையே மணிராசன் சிலையாகும். முறுக்கிய மீசையுடனும் திறந்த கண்களுடனும் மணிராசனின் உருவம் அமைந்திருக்கின்றது. வெங்கலத்தாலான மாட்டின் சிலை ஒன்று இருக்கின்றது. மாட்டின் கழுத்தில் கட்டுகின்ற உருண்டை மணிகள் கோயிலில் குவிந்திருக்கின்றன. மணிராசன் சிலைக்கு முன்னால் ஒரு வில்வ மரம் இருக்கின்றது. வில்வமரத்தைச் சுற்றிலும் கற்கள் குவிந்திருக்கின்றன. இந்த வில்வமரத்தின் முன்பாக ஒரு குழி இருக்கின்றது. இதனைக் கெப்பைக்குழி என்கிறார்கள். இந்தக் குழியில்தான் இறந்த முன்னோர்களது எலும்புகள் இருக்கின்றன. மணிராசன் கோயில் விழாவன்று இறந்தவரின் எலும்புகளைப் புதைத்த குழியிலிருந்து எடுத்துவந்து எலும்புகளைக் கெப்பைக்குழியில் போடுகிறார்கள். இறந்தவரின் நினைவாக வில்வமரத்தைச் சுற்றி கல்லை வைத்துவிடுகிறார்கள்கெப்பைக்குழியில் எலும்பை போட்டபிறகே இறந்தவர் சமாதானமடைவதாக நம்புகிறார்கள். திருவிழாவின்போது கோல்காரன் பூசாரியின் உடலிலோ இறந்தவனை சார்ந்தவர்களின் உடலிலோ இறந்தவனின் ஆவி புகுந்து நீதி சொல்ல வேண்டும். அப்படி நிகழ்ந்தால் மட்டுமே இறந்தவன் நீதியான வாழ்க்கை வாழ்ந்திருப்பதாகக் கருதுகிறார்கள். (பாலமுருகன்,.2013: 23-24,97-98).
3.7.3.எங்குசீர்குட்டைசோளகர்கள் தங்கள் பூமியில் மழை பெய்ய வேண்டி எங்குசீர்குட்டை என்ற பெண் தெய்வத்தை வழிபடுகிறார்கள். மழை தெய்வமாகிய எங்குசீர்குட்டையை நினைத்து வனத்திலுள்ள தாண்ரி மரத்தில் வழிபாட்டை நிகழ்த்துகிறார்கள். மழை பொய்த்துப்போகின்ற சூழ்நிலையில்  பெண்கள் மட்டுமே இணைந்து நிகழ்த்துகின்ற பூசையாக அமைந்திருக்கின்றது. பூசைக்குரிய நாளை கொத்தல்லியும் கோல்காரனும் குறிப்பிடுகிறார்கள். அந்த நாளில் வீட்டை சாணி கொண்டு சுத்தம் செய்கிறார்கள். தொட்டிப் பெண்கள் அனைவரும் வீட்டிலுள்ள தானியங்களில் உணவு செய்து மூங்கில் கூடைகளிலும் முறங்களிலும் எடுத்துக்கொண்டு வனத்திற்குச் செல்கிறார்கள். தொட்டி ஆண்கள் அனைவரும் மணிராசன் கோயிலில் நின்று பெண்களை வழியனுப்புகிறார்கள். வனத்திலுள்ள உயரமான தாண்ரி மரத்தினைச் சுற்றிலும் உணவை வைத்துக்கொள்கிறார்கள். மரங்களடர்ந்த வனத்தில் தங்களது ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக நிற்கிறார்கள். வானத்தைப் பார்த்து எங்குசீர்குட்டை என்ற மழை தெய்வத்தை நினைத்துமழை பொழி தாயே மழை பொழிஎன்று கூட்டமாக வேண்டுகிறார்கள். வட்டமாக கும்மியடித்து ஆடுகிறார்கள். ஒருவர் மாறி ஒருவராக பாடுகிறார்கள். மழை இல்லாததால் தங்களுக்கு நேர்ந்துள்ள துயரங்களைச் சொல்லி அழுகிறார்கள். எடுத்துவந்த உணவை மதிய நேரத்தில் உண்டு முடிக்கிறார்கள். உணவிற்குப் பிறகு மீண்டும் ஆட்டத்தைத் தொடர்கிறார்கள். மாலை நேரம் இருட்டத் தொடங்கியதும் மூங்கில் கூடைகளையும் முறத்தையும் அங்கேயே வீசிவிட்டு உடைகளை அணிந்துகொண்டு தொட்டிக்குத் திரும்பிச் செல்கிறார்கள். (பாலமுருகன்,.2013: 36-37).
3.7.4.படகல் மாதேஸ்வரன் கோயில்சோளகணை என்னும் ஊரில் படகல் மாதேஸ்வரன் கோயில் அமைந்திருக்கின்றது. இரண்டு பாறைகளுக்கு இடையில் லிங்கம் போன்ற கல் அமைந்திருக்கின்றது. ஆண்டிற்கு ஒரு முறை திருவிழா நடைபெறுகிறது. சோளகர்களும் லிங்காயத்துச் சாதியினரும் இந்தத் திருவிழாவில் கலந்துகொள்கிறார்கள். பழம், தேங்காய் வைத்து வழிபடுகிறார்கள். லிங்காயத்துக்கள் மற்ற சாதியினர் பயன்படுத்துகின்ற பாத்திரத்தையோ அவர்களது உணவையோ ஏற்கமாட்டார்கள். எனவே அவர்கள் கோயிலில் அடுப்பு வைத்துச் சமைக்கவும் பயன்படுத்துவதற்கும் தனியாக மண்சட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. (பாலமுருகன்,.2013: 80-82).
3.7.5.விதைப்பின்போது வழிபடுதல்சோளகர்கள் விவசாயம் செய்வதற்காக நிலத்தை உழுது முடித்ததும் விதை தூவுபவர் வேண்டுதலோடு விதை தூவுகிறார். பேதன் உழுத நிலத்ததில் ஜோகம்மாள் விதையைத் தூவுகின்றபோது வேண்டுதலை முணுமுணுத்துக்கொண்டே தூவுகிறாள். “காத்தவர் தின்னது போக... கண்டவர் தின்னது போக... கள்ளர் தின்னது போக... விளையணும்.. விளையணும் சாமிஎன்பதாக வேண்டுகிறாள். (பாலமுருகன்,.2013: 43).
3.7.6.காளி கோயில்கொல்லிமலை மலையாளிகள் காளி தெய்வத்தை வழிபடுகிறார்கள். ஊர் வேட்டை நிகழ்த்தப்படும்போது காளி கோயிலில் வழிபாடு நிகழ்த்துகிறார்கள். வேட்டை முடிந்ததும் வேட்டையாடிய இரையை காளிக்கோயிலுக்கு எடுத்துவருகிறார்கள். பச்சைப் பந்தல் போட்டு காளிக்குத் திருவிழா நடத்துகிறார்கள். (சின்னப்ப பாரதி,கு. 2008: 141,152).
3.7.7.ஈசன்படகர்கள் ஈசன் என்ற தெய்வத்தை வழிபடுகிறார்கள். சூரியனை ஈசனின் உயிர் தோற்றமாகக் கருதி வழிபடுகிறார்கள். (ராஜம் கிருஷ்ணன். 2001: 16).
3.7.8.ஹெத்தப்பாவின் கோயில்மரகத மலையில் முதல்முதலில் வந்து வாழ்ந்த  முன்னோரான ஹெத்தப்பாவின் நினைவாக அந்தக் கோயில் அமைந்திருக்கின்றது. அந்தக் கோயிலில் ஒரு தீபம் எரிந்துகொண்டு இருக்கின்றது. அந்தத் தீபம்தான் அக்கோயிலின் தெய்வமாக வணங்கப்படுகின்றது. வேறு சிலைகள் எதுவும் கிடையாது. அந்த தீபத்தை அணையாமல் பாதுகாக்கின்ற பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஒரு சிறுவன் காவல் பணியைச் செய்கிறான். அந்தச் சிறுவனை ஊரார் கூடி நியமிக்கிறார்கள். அந்தச் சிறுவன் அவனது குடும்பத்தில் பால் கறக்கும் உரிமையை ஏற்கின்ற புனித சடங்கினை ஏற்றிருக்க வேண்டும். அந்தச் சடங்கை ஏற்றுள்ள சிறுவனையே புனித நெருப்பைப் பாதுகாக்கும் பொறுப்பாளனாக நியமிக்கிறார்கள். அச்சிறுவன் வாலிபனாகும்வரை பொறுப்பைத் தொடர்கிறான். வாலிப பருவத்தில் பொறுப்பை நிறைவு செய்து குடும்ப வாழ்விற்குத் திரும்பும்போது வேறொரு சிறுவனைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஹெத்தப்பாவின் புனித நெருப்பு அணைக்கப்பட்டு புதிய நெருப்பு ஏற்றப்படுகின்றது. (ராஜம் கிருஷ்ணன். 2001: 56-57).
3.7.9.மாதலிங்கேசுவரர் கோயில்படகர்கள் கீழ்மலையிலுள்ள மாதலிங்கேசுவரர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்கிறார்கள். பள்ளமானப் பகுதியில் சிறிய குடில் போன்று மண்டபமும் நான்கு புறம் குளமும் அமைந்திருக்கின்றது. மண்டபத்தில் சிறிய அகல் விளக்கு எரிகின்றது. அந்த அகல் விளக்கின் ஒளியில் இறைவனைத் தரிசிக்கிறார்கள். மாசி மாதம் அழல் மிதி திருவிழா நடத்துகிறார்கள். அழல் மிதித்து வழிபாடு செய்தால் புனிதமடைவதாகக் கருதுகிறார்கள். அழல் மிதி திருநாள் முடிந்ததும் விவசாய பூமியில் விதைப்பு திருநாள் நடைபெறுகிறது. (ராஜம் கிருஷ்ணன். 2001: 164-165).
3.7.10.ஹத்தையம்மன் -  படகர்கள் ஹத்தையம்மன் என்ற பெண் தெய்வத்தை வழிபடுகிறார்கள். (ராஜம் கிருஷ்ணன். 2001: 166).
3.7.11.வெள்ளியங்கிரி ஈசன்தாணிக்கண்டி இருளர்கள் வெள்ளியங்கிரி மலையிலுள்ள ஈசனை வழிபடுகிறார்கள். வெள்ளியங்கிரி மலையிலுள்ள ஏழு மலைகளைக் கடந்து ஈசனை வழிபடுகிறார்கள்.
3.7.12.வெள்ளை விநாயகர் கோயில்வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் தொடக்கத்திலுள்ள கோயிலாக வெள்ளை விநாயகர் கோயில் அமைந்திருக்கின்றது. தாணிக்கண்டி இருளர்கள் வெள்ளை விநாயகரை வழிபடுகிறார்கள். (ஆட்டனத்தி. 2010: 1-3).
3.7.13.காளியம்மன் கோயில்தாணிக்கண்டியிலிருந்து சாடிவயலுக்குப் போகின்ற ஒற்றையடிப் பாதையில் வீரகாளியம்மன் கோயில் இருக்கின்றது. தாணிக்கண்டி இருளர்கள் வீர காளியம்மனை வழிபடுகிறார்கள். (ஆட்டனத்தி. 2010: 86).
3.7.14.மலை மாதேஸ்வரன் கோயில்தேன்கனிக்கோட்டை பகுதியில் வாழும் இருளர்கள் மலையிலுள்ள மாதேஸ்வரன் கோயிலுக்குச் சென்று வழிபடுகிறார்கள்.
3.7.15.மாரியம்மன் கோயில்முட்டத்து வயல் கிராமத்தில் மாரியம்மன் கோயில் இருக்கின்றது. பொன்னானும் அவர் மகள் செல்லியும் வழிபாடு செய்கிறார்கள். (ஆட்டனத்தி. 2010: 41-45).
            தளி பகுதியிலுள்ள மாரியம்மன் கோயிலை இருளர்கள் வழிபடுகிறார்கள். மூன்றாண்டுகளாக மழையில்லாததால் மழை வேண்டி சித்திரை மாதம் கூழ் ஊற்றி மறுநாள் மாவிளக்கு வைத்து வழிபடுகிறார்கள். ஆனிமாத இறுதியில் மழைவேண்டி சிறப்பு பூசை செய்கிறார்கள். உடம்பில் மாரி வந்து ஒரு பெண் சாமியாடி குறி சொல்கிறாள். குறி சொன்ன பெண் மழை வரும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்துகிறாள். பூசாரி கொடுத்த எழும்பிச்சம்பழத்தை வாயிலிட்டு மென்றுவிட்டு கைகளை முறுக்கிக்கொண்ட தரையில் படுத்து உருளுகிறாள். பூசாரி அந்தப் பெண்ணுக்குத் தீர்த்தம் தெளித்து திருநீறு பூசி நிதானப்படுத்துகிறார். (நஞ்சப்பன்,. 2007: 65-66).
3.7.16.மதூரம்மன் கோயில்தளி பகுதியிலுள்ள மதூரம்மன் கோயிலை இருளர்கள் வழிபடுகிறார்கள். (நஞ்சப்பன்,. 2007: 65).

3.7.17.மரத்தடி தெய்வங்கள்தளி பகுதியிலுள்ள தேவலரி மரத்தடியில் இரண்டு தெய்வங்கள் இருக்கின்றன. 1.பசேஸ்வரன், 2.மாதையன். இரண்டு தெய்வத்திற்கு முன்னால் ஒரு காளை சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தெய்வங்கள் இருளர்களால் வழிபடப்படுகின்றன. மழைவேண்டி வைகாசி மாதம் பொங்கலிட்டு வழிபடுகிறார்கள். (நஞ்சப்பன்,. 2007: 65).
... 

இயல் – 3 சமூக வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகள் 1

1 comment:

Sengai Podhuvan said...

மலைவாழ் மக்கள் வாழ்க்கை முறை படிக்கப் படிக்கச் சுவை தரும் அறிவுத் தேன்.

அதிகம் படித்தவை