எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Tuesday, May 23, 2017

சமூகவிஞ்ஞானம் = மார்க்சியம்

சமூகவிஞ்ஞானம் = மார்க்சியம்
        மார்க்சியம் என்பது  கம்யூனிசந்தானே(பொதுவுடைமை). கம்யூனிசம் என்ற சொல்லையே காணவில்லை. கம்யூனிசம் இல்லாமல் மார்க்சியமா! இது எப்படி மார்க்சியம் ஆகும்? இப்படிப்பட்ட தயக்கம் பலருக்கும் இருக்கலாம். இது தவறானது.

மார்க்சியம் என்பது மார்க்சால் ஒழுங்குபடுத்தப்பட்ட சிந்தனைமுறை.

கம்யூனிசம் என்பது மார்க்சியத்தின் நேர்பொருளல்ல. ஏனெனில், சமூகம் பற்றி மார்க்சியம் கண்டறிந்த பல்வேறு உண்மைகளில் ஒன்று மட்டுமே கம்யூனிசம்.

            காரல் மார்க்ஸ் நான்கு முதன்மையானக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். 
1.தத்துவத் துறையில் இயங்கியல் பொருள் முதல் வாதம்.
2.வரலாற்றுத் துறையில் வரலாற்றுப் பொருள் முதல் வாதம்.
3.அரசியல் துறையில் விஞ்ஞான சோசலிமும் கம்யூனிசமும்.
4.பொருளியல் துறையில் மூலதனம் பற்றிய ஆய்வு
இவைகளைப் பற்றிய சுவாரசியமான புரிதல்களை அடைவதற்கு தனித்துவமான முயற்சிகள் தேவை. சமூகவிஞ்ஞானப் பயிற்சிகளில் பற்றுதலுடன் பங்கேற்பதில் மட்டுமே நமது முயற்சிகள் சாத்தியப்படும். சமூகவிஞ்ஞானக் களங்களில் செயல்படுபவர்களுக்கு இயல்பாகவே இத்தகைய முயற்சிகள் சாத்தியப்படும்.

மார்க்சியம் கண்டறிந்த சமூக முடிவுகளைக் கவனிப்போம். மார்க்சியம் உணர்த்தும் மனிதகுல வரலாறு முப்பெரும் பிரிவுகளாக உணரப்படுகிறது.

1.வர்க்கங்கள் தோன்றாத சமூகம்
2.வர்க்கச் சமூகங்கள்
3.எதிர்காலத்தில் அமையவுள்ள வர்க்கமற்ற சமூகம்

            மனித மூதாதையர்கள் வாழ்ந்த வர்க்கங்கள் தோன்றாத சமூகம். அதாவதுதனிச்சொத்துடைமை தோன்றாத சமூகம். இதனை ஆதிப் பொதுவுடைமை சமூகம் அல்லது புராதன பொதுவுடைமைச் சமூகம் என்பர். இக்காலக்கட்டத்தில் மனிதர்களுக்குள் வர்க்கப்பிரிவு தோன்றியிருக்கவில்லை. அதாவதுஉழைப்பவர்கள்பிறர் உழைப்பைச் சுரண்டுபவர்கள் என்கின்ற பிரிவு தோன்றியிருக்கவில்லை. தாய் தலைமையில் காடு சார்ந்த பொருட்களைச் சேகரித்து வாழ்ந்தார்கள். வேட்டைவிவசாயம் கரு வடிவில் தோன்றியிருந்தன. பல லட்சம் ஆண்டுகளாக மனிதர்கள் இத்தகைய வர்க்கமற்ற புராதன பொதுவுடைமை சமூகத்திலேயே வாழ்ந்தார்கள்.

   மனிதர்களுக்குள் வர்க்கம் தோன்றி சில ஆயிரம் ஆண்டுகளே ஆகின்றன. தாய் தலைமையின் காடுசார்ந்த பொருட் சேகரிப்புமுறை முதன்மையிழந்தது. ஆண்களின் அதிகபட்ச உழைப்பில் புதிய கருவிகளின் வளர்ச்சியுடன் வேட்டைதொழிலும் மந்தை தொழிலும் வளர்ச்சியடைந்தன. தேவைக்கதிகமான பொருட்கள் சொத்துக்களாகப் பெருகின. தாயின் பாரபட்சமற்ற தலைமையினால் சொத்துக்கள் சமச்சீர்நிலையில் இருந்தது. சொத்து உருவாக்கத்தில் ஆண்களின் அதிகப்பட்ச உழைப்பும், குழந்தை உருவாக்கத்தில் ஆண்களின் பங்கும் கண்டறியப்பட்டன. ஆண்களில் ஒருபகுதியினர்  தாய்தலைமையை எதிர்க்கத் தொடங்கினர். தாய்தலைமையிடமிருந்து சொத்துக்களின் பராமரிப்பை ஆண்கள் பறித்தனர். சொத்தின் மீதான அதிகாரம் தோன்றியது. சொத்ததிகாரம் தோன்றியதால் தந்தை என்ற புதிய உறவு தோன்றியது. உழைப்பவர் உழைக்காதவர் என்ற வர்க்கப் பிரிவு தோன்றியது. சொத்ததிகாரம் தந்தை அதிகாரமாகச் செயல்பட்டத் தொடங்கியது. பாலினச் சமத்துவத்தை அழித்து பெண்களை வெறும் சொத்துக்களாக உருமாற்றினர். ஆணதிகாரம் வர்க்கச் சமூகத்தின் அடையாளமாக நிலைப்பெற்றது. கீழ் வரும் நான்கு சமூகங்களும் வர்க்கச் சமூகங்களே.

1.ஆண்டான்களின் சுகங்களுக்காக அடிமைகள் துன்புறுகின்ற அடிமை உழைப்பு முறை அல்லது ஆண்டான் அடிமை சமூகம். இந்தச் சமூக அமைப்பிலிருந்து பொதுச்சொத்து முறை மாறி தனிச்சொத்துமுறை நிலைக்கத் தொடங்கியது.

2.நிலத்தின் எஜமானர்களுக்காகப் பண்ணை அடிமைகள் பாடுபடுகின்ற பண்ணை அடிமை உழைப்பு முறை அல்லது நிலப்பிரபுத்துவச் சமூகம்.

3.முதலாளிகளின் இலாபங்களுக்காகத் தொழிலாளர்கள் துயருறுகின்ற கூலி அடிமை உழைப்பு முறை அல்லது முதலாளித்துவச் சமூகம்.

4.உழைக்கும் மக்களின் அதிகார ஒற்றுமையால் சொகுசாக வாழ்ந்தவர்கள் சலிப்படைகின்ற மக்கள் தலைமை சமூகம் அல்லது சோசலிச சமூகம். தனிச்சொத்துடைமையைப் பாதுகாக்க உருவான அரசு இயந்திரத்தில் சொகுசாக வாழ்ந்தவர்களின் அதிகாரம் இந்தச் சமூக அமைப்பிலிருந்து உடைக்கப்பட்டது. மனிதத்தோல் போர்த்தியுள்ள மிருகங்களிடமிருந்து அரசு இயந்திரத்தை உழைக்கும் மக்கள் பறித்தெடுத்தார்கள். ஒற்றுமையால் முளைத்த அதிகாரமே இவர்களைச் சாதிக்க வைத்தது. எதிர்காலத்தில் அமையவுள்ள வர்க்கமற்ற சமூகத்திற்கு பாதையமைப்பதே மக்கள் தலைமைச் சமூகத்தின் நோக்கம். அதாவது, எதிர்காலத்தில் அமையவுள்ள வர்க்கமற்ற சமூகமே சோசலிசச் சமூகத்தின் இலட்சிமாகும்.

            சமூக அமைப்பு பற்றிய இத்தகைய முடிவுகள் சமூகவிஞ்ஞானிகளின் சிந்தனை வெளிச்சத்தில் தவிர்க்க முடியாதவை.

ஆதிமனிதர்கள் வாழ்ந்த பொதுவுடைமைச் சமூகமே வர்க்கச் சமூகம் முளைப்பதற்குரிய விதையாக இருந்தது. எனவே இந்த விதை இயங்குதலின் நான்காம் தன்மையை அடையும். அதாவது, பொதுவுடைமை சமூகம் உயர்ந்த நிலையைச் சந்திப்பது உறுதி. எனவே எதிர்காலத்தில் பொதுவுடைமை சமூகம் தவிர்க்க முடியாதபடி உறையும். இது சமூகவிஞ்ஞானத்தின் உறுதியான முடிவு.

            மற்றபடி மார்க்சியம் என்பதற்கு நேர்பொருள் கம்யூனிசம் என்பதல்ல. ஆனால் மார்க்சியத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வரலாற்றுக் கடமை கம்யூனிசக் கட்சிகளுக்கே இருக்கிறது. ஏனெனில், சமூகத்தின் வளர்ச்சியை பொதுவுடைமை நோக்கி விரைவு பெறச்செய்வதே மனிதநேயச் சக்திகளின் நோக்கம்.
            இதைச் சாதிப்பதற்குச் சமூகவிஞ்ஞானத்தைச் சரியாக உணர்ந்த, கம்யூனிச இலட்சியத்தில் உறுதி கொண்ட, ஒரு கட்சியின் தலைமை அமைய வேண்டியது அவசியம். இந்த உண்மைகளைக் காரல்மார்க்ஸ் சமூகவிஞ்ஞானத்தின் வழியாகக் கண்டறிந்தார். இவர் தனது ஆய்வின் இலட்சியத்திற்கு நேர்மையானவராக நடந்துகொண்டார். இவரது அனைத்து செயல்களும் கம்யூனிசக் கட்சியை முதன்மைப்படுத்துவதாகவே அமைந்தது. கம்யூனிஸ்டாகவே வாழ்ந்தார். கல்லறையில் விதையும்போதும் கம்யூனிஸ்டாகவே விதைந்தார். இன்று உலகம் முழுவதும் ஏராளமான கம்யூனிஸ இயக்கங்கள் தோன்றியிருக்கின்றன. ஆனால் பெரும்பாலான கம்யூனிஸ இயக்கங்களின் அனுபவங்கள் என்ன? ஏராளமான தோல்விகளைச் சந்தித்து இருக்கின்றன. ஆனால் தோல்விகளிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொண்டு வெற்றிக்காகப் போராடுபவர்களே கம்யூனிஸ்டுகள். ஆயினும், இந்த மக்கள் தத்துவம் இன்றும் பெரும்பாலான மக்களிடம் மலரவில்லை.
            ஒரு மார்க்சியச் சிந்தனையாளர் கம்யூனிச கட்சியில் இருக்க வேண்டியது அவசியமானதே. ஆனால் ஒரு கம்யூனிசக் கட்சியிலுள்ள எந்த உறுப்பினரும் மார்க்சியராக மலர வேண்டியது அதைவிடவும் அவசியமானதாகும்.

            நமது கம்யூனிசக் கட்சிகள் இத்தகைய ஒழுங்குமுறையுடன் செயல்படுகின்றனவா? இக்கட்சிகள் தங்களது வரலாற்றுக் கடமையை உணர்ந்து பரிசீலணையில் ஈடுபடுவது அவசியம்.


No comments:

அதிகம் படித்தவை