எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Monday, June 19, 2017

சமூகவிஞ்ஞானம் விளக்குகின்ற உற்பத்திநிலை குறிப்புகள்

சமூகவிஞ்ஞானம் விளக்குகின்ற உற்பத்திநிலை குறிப்புகள்
புதியவன்
Puthiyavansiva.blogspot.in

மார்க்சிய சமூகவிஞ்ஞானம் கண்டறிந்த சமூக முடிவுகள் மனிதகுல வரலாற்றில் முப்பெரும் பிரிவுகளாக அறியப்படுகின்றது.
    1.    வர்க்கங்கள் தோன்றாத சமூகம்
    2.    வர்க்கச் சமூகங்கள்
    3.    எதிர்காலத்தில் அமையவுள்ள வர்க்கமற்றச் சமூகம்

1.வர்க்கங்கள் தோன்றாத சமூகம்
மனித மூதாதையர்கள் வாழ்ந்த வர்க்கங்கள் தோன்றாத சமூகம். அதாவது, தனிச்சொத்துடைமை தோன்றாத சமூகம். இதனை ஆதிப் பொதுவுடைமை சமூகம் அல்லது புராதன பொதுவுடைமைச் சமூகம் என்பர். இக்காலக்கட்டத்தில் மனிதர்களுக்குள் வர்க்கப்பிரிவு தோன்றியிருக்கவில்லை. அதாவது, உழைப்பவர்கள், பிறர் உழைப்பைச் சுரண்டுபவர்கள் என்கின்ற பிரிவு தோன்றியிருக்கவில்லை. தாய் தலைமையில் காடு சார்ந்த பொருட்களைச் சேகரித்து வாழ்ந்தார்கள். வேட்டை, விவசாயம் கரு வடிவில் தோன்றியிருந்தன. பல லட்சம் ஆண்டுகளாக மனிதர்கள் இத்தகைய வர்க்கமற்ற புராதன பொதுவுடைமை சமூகத்திலேயே வாழ்ந்தார்கள்.   

புராதன பொதுவுடைமை சமூக உற்பத்தி நிலை குறிப்புகள்
   1.   எளிமையான கருவிகள் (நார், கூடை, முறம், கட்டை, எலும்பு, கல்)
   2.   மேன்மையான ஆயுதங்கள் (ஈட்டி, வேல்)
   3.    காடுசார்ந்த பொருள் சேகரிப்பு முதன்மையான தொழில்
   4.    படிப்படியான வளர்ச்சியில் வேட்டைத் தொழில் 
   5.    கரு வடிவில் மந்தை வளர்ப்பு, விவசாயம்
   6.    இனக்குழு கலவரப் போர்
   7.    தாய் தலைமைச் சமூகத்தின் இயல்பு
   8.    தேவைக்கு அதிகமானப் பொருட்களைச் சேகரிக்க முடியாத சமூகம்

2.வர்க்கச் சமூகங்கள்
மனிதர்களுக்குள் வர்க்கம் தோன்றி சில ஆயிரம் ஆண்டுகளே ஆகின்றன. தாய் தலைமையின் காடுசார்ந்த பொருட் சேகரிப்புமுறை முதன்மையிழந்தது. ஆண்களின் அதிகபட்ச உழைப்பில் புதிய கருவிகளின் வளர்ச்சியுடன் வேட்டைதொழிலும் மந்தை தொழிலும் வளர்ச்சியடைந்தன. தேவைக்கதிகமான பொருட்கள் சொத்துக்களாகப் பெருகின. தாயின் பாரபட்சமற்ற தலைமையினால் சொத்துக்கள் சமச்சீர்நிலையில் இருந்தது. சொத்து உருவாக்கத்தில் ஆண்களின் அதிகப்பட்ச உழைப்பும், குழந்தை உருவாக்கத்தில் ஆண்களின் பங்கும் கண்டறியப்பட்டன. ஆண்களில் ஒருபகுதியினர்  தாய்தலைமையை எதிர்க்கத் தொடங்கினர். தாய்தலைமையிடமிருந்து சொத்துக்களின் பராமரிப்பை ஆண்கள் பறித்தனர். சொத்தின் மீதான அதிகாரம் தோன்றியது. சொத்ததிகாரம் தோன்றியதால் தந்தை என்ற புதிய உறவு தோன்றியது. உழைப்பவர் உழைக்காதவர் என்ற வர்க்கப் பிரிவு தோன்றியது. சொத்ததிகாரம் தந்தை அதிகாரமாகச் செயல்படத் தொடங்கியது. பாலினச் சமத்துவத்தை அழித்து பெண்களை வெறும் சொத்துக்களாக உருமாற்றினர். ஆணதிகாரம் வர்க்கச் சமூகத்தின் அடையாளமாக நிலைப்பெற்றது. கீழ் வரும் நான்கு சமூகங்களும் வர்க்கச் சமூகங்களே.
1.ஆண்டான்களின் சுகங்களுக்காக அடிமைகள் துன்புறுகின்ற அடிமை உழைப்பு முறை அல்லது ஆண்டான் அடிமை சமூகம். இந்தச் சமூக அமைப்பிலிருந்து பொதுச்சொத்து முறை மாறி தனிச்சொத்துமுறை நிலைக்கத் தொடங்கியது.

2.நிலத்தின் எஜமானர்களுக்காகப் பண்ணை அடிமைகள் பாடுபடுகின்ற பண்ணை அடிமை உழைப்பு முறை அல்லது நிலப்பிரபுத்துவச் சமூகம்.

3.முதலாளிகளின் இலாபங்களுக்காகத் தொழிலாளர்கள் துயருறுகின்ற கூலி அடிமை உழைப்பு முறை அல்லது முதலாளித்துவச் சமூகம்.

4.உழைக்கும் மக்களின் அதிகார ஒற்றுமையால் சொகுசாக வாழ்ந்தவர்களை ஒடுங்கும்படி செய்கின்ற மக்கள் தலைமை சமூகம் அல்லது சோசலிச சமூகம். தனிச்சொத்துடைமையைப் பாதுகாக்க உருவான அரசு இயந்திரத்தில் சொகுசாக வாழ்ந்தவர்களின் அதிகாரம் இந்தச் சமூக அமைப்பிலிருந்து உடைக்கப்பட்டது. மனிதத்தோல் போர்த்தியுள்ள மிருகங்களிடமிருந்து அரசு இயந்திரத்தை உழைக்கும் மக்கள் பறித்தெடுத்தார்கள். பொதுவுடைமை இலட்சியத்தின் அடிப்படையில் ஒன்றுபட்டதால் முளைத்த அதிகாரமே இவர்களைச் சாதிக்க வைத்தது. எதிர்காலத்தில் அமையவுள்ள வர்க்கமற்ற சமூகத்திற்கு பாதையமைப்பதே மக்கள் தலைமைச் சமூகத்தின் நோக்கம். அதாவது, எதிர்காலத்தில் அமையவுள்ள வர்க்கமற்ற பொதுவுடைமை சமூகமே சோசலிசச் சமூகத்தின் இலட்சிமாகும்.

ஆண்டான் அடிமைச் சமூக உற்பத்தி நிலை குறிப்புகள்
  1.    வலிமையானக் கருவிகள் ( நார், கூடை, முறம், கட்டை, எலும்பு, கல் - வெண்கலம், செப்பு, பித்தலை உலோகம், அடிமை உழைப்பு)
      2.    மேன்மையான ஆயுதங்கள் (வில், அம்பு, கோல்)
     3.    வலிமையான வேட்டை, மந்தைத் தொழில் முதன்மையாதல், சிறிது வளர்ந்த விவசாயம் முதன்மையற்ற காடுசார்ந்த பொருட் சேகரிப்பு தொழில்.
     4.    அடிமை வர்க்கம் தோன்றியது
     5.    அடிமைகள் எந்த உரிமைகளும் சுதந்திரமும் இல்லாதவர்கள்
   6.    அடிமைகளை இயந்திர நிலைக்கு பயன்படுத்துகின்ற தொழில்நுட்ப முறை.
   7.    எல்லா பணிகளுக்கும் அடிமைகளைப் பயன்படுத்துதல்
   8.     தனிச்சொத்துடைமை நிலைபெற்றது.
   9.    ஆண் அதிகாரச் சமூக நிலை உருவெடுத்து நிலைபெற்றது.
   10.    ஆண்டான் வர்க்க நலன்களுக்காக அரசு நிறுவனம் தோன்றியது.
   11.    அடிமைகளே முதன்மையானச் சொத்துக்கள்
   12.    ஆண்டான்களுக்கு இடையிலான அதிகாரப்போர்
   13.   ஆண்டான்களுக்கு எதிரான அடிமைகளின் போர்
   14.  சொத்துக்கள் மீதான அதிகார உறவு ஆண்டான் வர்க்கத்திடம் இருந்தது.

நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை சமூக உற்பத்தி நிலை குறிப்புகள்
   1.    இரும்பு உலோகமே முதன்மையானக் கருவி
 2.   வெண்கலம், செப்பு, பித்தளைகல், எலும்புகட்டை, முறம், கூடை,  நார்     ஆகியன முதன்மையற்ற கருவிகள்
   3.   மேன்மையான ஆயுதங்கள் (இரும்பினாலான வாள், வேல், வில்)
  4.   தொழில்நுட்ப மேம்பாடு – (நீர் விசை ஆலை, காற்று விசை ஆலை, நவீன குதிரை சேணம்)
   5.    விவசாயம் செய்தலே முதன்மைத் தொழில்.
   6.    மந்தை, வேட்டை, காடு சார்ந்த தொழில்கள் முதன்மையற்றவை
   7.    நிலத்தில் உழைக்கும் பண்ணை அடிமைகள் என்ற வர்க்கம் தோன்றுதல்
   8.    பண்ணை அடிமைகள் ஓரளவு சுதந்திரம் உடையவர்கள்
   9.    நிலங்களே முதன்மையானச் சொத்துக்கள்
   10.    நிலப்பிரபுக்களின் அதிகாரத்தில் அரசு நிறுவனம்
   11.    ஓரிடத்தில் தங்கி வாழும்முறை முதன்மையானது
   12. கிளை தொழில்கள் வளர்ச்சியடைதல்
   13. வணிக வர்க்கம் தோன்றுதல்
   14. கடன் வட்டி தோன்றுதல்
   15. நாணய பயன்பாடும், அடிமை வாணிகமும் வளர்தல்
   16. நிலப்பிரபுத்துவ அரசர்களுக்கு இடையிலான அதிகாரப்போர்
   17. நிலப்பிரபுக்களுக்கு எதிரான பண்ணை அடிமைகளின் போர்
   18. சொத்துக்கள் மீதான அதிகார உறவு நிலப்பிரபுத்துவ வர்க்கத்திடம் இருந்தது.

முதலாளித்துவ கூலி அடிமை சமூக உற்பத்தி நிலை குறிப்புகள்
   1.     லாப வெறியைக் கூர்மைப்படுத்துகின்ற நவீன விஞ்ஞானக் கருவிகளே முதன்மைக் கருவிகள்.
 2.இரும்பு, வெண்கலம், செப்பு, பித்தளை, கல், எலும்புகட்டை, முறம், கூடை,  நார் ஆகியன முதன்மையற்ற கருவிகள்
    3. மேன்மையான ஆயுதங்கள் (துப்பாக்கி, வெடிகுண்டு, அணுஆயுதம், செயற்கை நுண் கிருமிகள்,      மனிதஇயந்திரம்)
      4.  தொழில்நுட்ப மேம்பாடு – (நீராவி இயந்திரம், மின் இயந்திரம், மீப்பெரும் இயந்திரங்கள், கணிப்பொறி,   இணையதளம், மென்பொருள், மீப்பெரும் தகவல் மையம், செயற்கை நுண்ணறிவுக் கணினி, மனித இயந்திம், அணுசக்தி)
        5.    தொழிற்சாலைகளில் பணி செய்தலே முதன்மையானத் தொழில்
    6.    நவீனமற்ற விவசாயம், மந்தை, வேட்டை, காடுசார்ந்த பொருட் சேகரிப்பு ஆகிய தொழில்கள் முதன்மையற்றவை
       7.    கூலி அடிமைகள் என்ற பாட்டாளி வர்க்கம் தோன்றுதல்
     8.     தனிமனித உரிமை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன நடைமுறைக்கு பொருத்தமற்ற நிலையில் இருத்தல்
       9.    இயந்திரங்களும் தொழிற்சாலைகளுமே முதன்மைச் சொத்துக்கள்
    10.    முதலாளிகளின் அதிகாரத்தில் அரசு நிறுவனம்
    11.    தொழிற்சாலைகளை மையமிட்டு வாழ்தலே முதன்மையானது
    12. அறிவியல் தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள் வளர்ச்சியடைதல்
    13. நடுத்தர வர்க்கம் குட்டி முதலாளித்துவ வர்க்கம் தோன்றுதல்
    14. வட்டித் தொழிலே வங்கி நிறுவனமாகத் தோன்றுதல்
    15. கடன் வணிகம் வளர்தல்
 16. சொத்துக்கள் மீதான அதிகார உறவு முதலாளித்துவ வர்க்கத்திடம் இருக்கின்றது.
   17. ஏகாதிபத்திய அதிகாரம் (அரசு+வங்கி+தொழில்) ஒன்றிணைதல் x சோசலிச அதிகாரத்திற்கான முயற்சிகள் (சரியான பொதுவுடைமை கட்சியின் தலைமையில் தொழிலாளிகளை முதன்மைப்படுத்தி உழைக்கும் மக்கள் அதிகாரத்தில் புதிய சமூகத்தைப் படைப்பதற்கான திட்டமிட்ட அறிவியல்பூர்வமான நடவடிக்கைகள் வளர்ச்சியடைதல்)
   18. இலாப வெறியுடன் இயற்கை சூழலை அழிக்கின்ற நடவடிக்கைகள்
 19.  நுகர்வதற்காகவே வாழ்க்கை என்ற பண்பாட்டை ஏகாதிபத்திய இலாபவெறி நலன்களுக்காகத் திணித்தல்
   20. முதலாளித்து அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் போர்
   21. முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாளர்களின் போர்
 22. சோசலிசத்திற்கான முயற்சிகளை ஒழிக்க முதலாளித்துவ அரசுகளின் ஒன்றிணைந்த நடவடிக்கைகள்
   23. ஆயுதங்கள், கருவிகள் போன்ற உற்பத்தி சக்திகள் நவீனமடைதலில் பலவீனம் இருப்பின் தேசிய இனவெறி, மதவெறி போன்ற பேரழிவு நடவடிக்கைகள் வழியாக முதலாளித்துவம் உயிர் பிழைத்திருக்கும்.
     23.1. முசோலியின் பாசிசம், ஹிட்லரின் நாசிசம், சமகால மோடியின் இந்துத்துவம் போன்ற அனைத்தும் முதலாளித்துவம் உயிர் பிழைக்க கையாளும் பேரழிவு நடவடிக்கையாகும்.
    24.உற்பத்தி சக்திகளின் வலிமையான வளர்ச்சிகளாலும் மக்கள் தலைமைக்கான முன்னெடுப்பு முயற்சிகளாலும் பேரழிவு நடவடிக்கைகள் முடக்கப்பட்டு முதலாளித்துவம் ஒழித்துக்கட்டப்படும்.

 சோசலிசம் (மக்கள் தலைமை) சமூக உற்பத்தி நிலை குறிப்புகள்
   1.    சமூக உற்பத்தி முறையின் மேன்மைக்கான நவீன விஞ்ஞானக் கருவிகளே முதன்மைக் கருவிகள்.
 2.இரும்புவெண்கலம், செப்பு, பித்தளை, கல், எலும்புகட்டை, முறம், கூடை,  நார் ஆகியன முதன்மையற்ற கருவிகள்
  3.  சமூக உற்பத்தி முறையின் மேன்மையை தற்காப்பதற்கான ஆயுதங்களே மேன்மையான ஆயுதங்கள்
    4.    சமூகப் பொருளுற்பத்தியின் மேன்மைக்குத் தேவையான, மிகை உற்பத்தியில் பங்காற்றுகின்ற அனைத்து தொழில்களுமே முதன்மையானத் தொழில்களே
  5.   நவீனமற்ற விவசாயம், மந்தை, வேட்டை, காடுசார்ந்த பொருட் சேகரிப்பு ஆகிய தொழில்கள் முதன்மையற்றவை
    6.    மக்கள் தலைமையின் அதிகாரத்தில் உற்பத்தி சாதனங்கள் இயங்குதல்
  7.    மக்கள் தலைமையின் அதிகாரத்தில் உற்பத்தி சாதனங்களின் மீதான முதலாளிகளின் தனியுடைமை குறிப்பிட்ட வரம்பிற்குள் ஒடுக்கப்படுதல்
  8.    சமூகத்தேவையின் அடிப்படையில் திறமைக்கேற்ற வேலை உரிமை தோன்றுதல்
    9.    சமூகத்தேவையின் அடிப்படையில் தகுதிக்கேற்ற கூலி உரிமை தோன்றுதல்
    10.    மக்கள் தலைமை அரசின் சொத்துக்களே முதன்மையானது
    11. மக்கள் தலைமையின் அதிகாரத்தில் அரசு நிறுவனம்
  12. சொத்துக்கள் மீதான அதிகார உறவு உழைக்கும் மக்களாகிய பாட்டாளி வர்க்கத்திடம் இருப்பது.
    13. தொழில் நிறுவனங்களை விரிவாக்கி வாழ்தலே முதன்மையானது
    14. அறிவியல் தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள் விரிவடைதல்
    15. பாட்டாளி வர்க்கப் பண்புகள் விரிவடைதல்
   16. உலகில் ஏகாதிபத்திய அதிகாரத்தை வீழ்த்திப் பொதுவுடைமைச் சமூகத்தை உருவாக்குவதற்காக சோசலிச நாடுகளை விரிவுபடுத்துதல்
    17. மனித சமூக மேன்மைக்காக இயற்கைச் சூழலைப் பண்படுத்துதல்
 18. மக்கள் தலைமை (சோசலிசம்) நாடுகள் விரிவாவதற்கும் ஏகாதிபத்திய அதிகாரம் நிலைபெறுவதற்கும் இடையிலான அதிகாரப் போர்
  19. மக்கள் தலைமை அதிகாரம் உறுதிபடுவதற்கும் முதலாளித்துவ அதிகாரம் மீட்சியடைவதற்கும் இடையிலான விடுதலைப் போர்
  20. முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தை வீழ்த்த சோசலிச அரசுகளின் ஒன்றிணைந்த நடவடிக்கைகள்
   21. மக்கள் தலைமை அதிகாரத்தை நிலைப்படுத்துவதற்கும், பொதுவுடைமை நோக்கி வீரியப்படுத்துவதற்கும் ஏற்ற முறையில் சமூகப் பொருளாதாரத்தையும் மனித பண்பாட்டையும் மேன்மைப்படுத்துகின்ற திட்டமிட்ட நடவடிக்கைகளை விரிவாக மேற்கொள்ளுதல்
   21.1 மனிதர்களின் தனித்துவமான வேற்றுமைகளுக்கு இடையிலான எல்லாவிதமான ஏற்றத்தாழ்வுகளையும் ஒழித்தல்
   21.2  பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான பாலினச் சமத்துவத்தை உறுதிப்படுத்துதல்
    21.3                உடல் உழைப்பாளர்களுக்கும் மூளை உழைப்பாளர்களுக்கும் இடையிலான உழைப்பின் சமத்துவத்தை உறுதிப்படுத்துதல்
     21.4   தாய்மொழிகளுக்கு இடையிலான சமத்துவத்தை உறுதிப்படுத்துதல்
  21.5 அறிவியல் தத்துவத்தின் அடிப்படையில் வாழ்வதற்கான கல்விமுறையை விரிவுபடுத்துதல்
   21.6  பொதுவுடைமை இலக்கை அடைவதற்கு ஏற்றவாறு மனித உணர்வுகளில் சமூகமேன்மை விருப்பத்தை முதன்மைப்படுத்தி சுயநல விருப்பைக் கீழ்மைப்படுத்துகின்ற உள்ளத்தியலை வீரியமாக்குதல்
   21.7  மக்கள் தமது உடலாலும் மனதாலும் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கான நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல்
   21.8      மக்கள்  சுதந்திரமாகவும் உரிமையுடனும் சிந்தித்து கருத்துக்களைப் பரிமாறி செயல்படுகின்ற நடைமுறைகளின் அங்கீகாரத்தை உறுதிப்படுத்துதல்
     21.9    குழந்தைகள் வளர்வதற்கும் எதிர்காலத்தில் உழைப்பதற்கும் உரிய கடமைகளை சமூக நிறுவனங்கள் பொறுப்பேற்றுக்கொள்தல்
   21.10  உழைப்பில் ஈடுபட முடியாத முதியவர்களின் பாதுகாப்பையும் பராமரிப்பையும் சமூக நிறுவனங்கள் பொறுப்பேற்றுக்கொள்ளுதல்

3.எதிர்காலத்தில் அமையவுள்ள வர்க்கமற்றப்
பொதுவுடைமை சமூக (உடைமைப் பண்பற்றச் சமூகம்)  உற்பத்தி நிலை குறிப்புகள்
   1.    புதிய சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப நவீன இயந்திரக் கருவிகள் மேன்மையடைந்திருத்தல்      2.    இரும்பு, செப்பு, பித்தளை, கல், எலும்புகட்டை, முறம், கூடை,  நார் ஆகியன முதன்மையற்ற கருவிகள்
   3.  சமூக உற்பத்தி முறையின் மேன்மையை தற்காப்பதற்கும் இயற்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் உரிய  மேன்மையான ஆயுதங்கள் இயல்பாக இருத்தல்.  
       4. உடைமை அதிகாரமின்றி உற்பத்தி சாதனங்கள் இயக்கப்படுதல் இயல்பாக இருத்தல்.
     4.    சமூகத் தேவையின் அடிப்படையில் திறமைக்கேற்ற வேலை இயல்பாக இருத்தல்.
     5.    சமூகத் தேவையின் அடிப்படையில் தேவைக்கேற்ற கூலி இயல்பாக இருத்தல்.
     6.    சொத்துடைமை பண்பற்ற வாழ்க்கை இயல்பாக இருத்தல்.
     7.    அரசு நிறுவனமற்ற சமூக வாழ்க்கை இயல்பாக இருத்தல்.
     8.    தொழில் நிறுவனங்களை மேன்மைப்படுத்தி வாழ்தல் இயல்பாக இருத்தல்.
   9.    வர்க்க உறவுகளின் அதிகாரமின்றி சமூக நிறுவனங்களின் தலைமையில் சமச்சீர் பண்புடன் சொத்துக்கள் இயல்பாக இருத்தல்
     10. அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் இயல்பாக இருத்தல்
    11. அறிவியல் தத்துவக் கண்ணோட்டத்துடன் வாழ்கின்ற பண்பு இயல்பாக இருத்தல்
     12. பாட்டாளி வர்க்க பண்புகள் மட்டுமே மனித இயல்பாக இருத்தல்
    13. மனித சமூக மேன்மைகள் இயற்கை சூழலின் அங்கமாக இயங்கும் நிலை இயல்பாக இருத்தல்   
     14. வர்க்க முரண்களின் போர்களற்ற புதிய முரண்பாடுகளுடைய சமூகமாக இயங்கும் நிலை இயல்பாக இருத்தல்
     15. புதிய சமூகத்தின் தேவைகளுக்கேற்ப புதிய பண்பாடுகளுடன் வாழும் நிலை இயல்பாக இருத்தல்
     16. பழைய வர்க்கச் சமூகங்களின் சகிக்க முடியாத பண்புகளிலிருந்து விடுபட்டு, புதிய வர்க்கமற்றச் சமூகத்தின் மேன்மைமிக்க பண்புகளுடன் மனித வாழ்க்கை இயல்பாக இருத்தல்.

பொதுவுடைமைச் சமூகத்தின் உற்பத்தி நிலை குறிப்புகள் அனைத்தும் எமது அனுமானங்களே. எதிர்காலத்தில் அமையவுள்ள வர்க்கமற்ற சமூகத்தின் மேன்மைக்கு சமூகவிஞ்ஞானம் நல்கும் உத்திரவாதத்தை இக்குறிப்புகளுக்கு நல்க முடியும் என்று எம்மால் உறுதியளிக்க முடியாது. இலாபவெறி பிடித்த முதலாளித்துவ உற்பத்தி என்பது ஒரு கொடூரமான மிருகம். தனியுடைமை சமூகத்தின் முதிர்ந்த பருவம். வயது முதிர்ந்த இந்தக் கிழட்டு மிருகம் மரணிக்கும்வரை உலகை கொல்லும். கொல்லப்படுவது மனிதகுலம் மட்டுமல்ல, உலக உயிர்களையும் இயற்கை வளங்களையும் இணைத்துதான். அந்த மிருகத்தின் இலக்கு என்பது தனது அழிவினை உலகையே கொல்லும் பேரழிவாக உறுதிப்படுத்துவதாகும். 
இந்த மிருகத்திற்குச் சவாலாக இருப்பதும் உலகின் வாழ்வை காப்பாற்றும் ஆற்றலும் பொதுவுடைமையை படைக்க முயல்கின்ற மார்க்சிய சமூகவிஞ்ஞானிகளுக்கு மட்டுமே இருக்கின்றது. ஏனெனில் இந்த மிருகத்தை கோடிக் கரங்களுடைய மக்கள் தேவதையைக் கொண்டு ஒரேயடியாக வீழ்த்தும் ஆற்றல் பொதுவுடைமைக்கு மட்டுமே உண்டு. 
தனியுடைமை என்பது செயற்கையின் ஆக்கமாக மனிதகுலத்தை இயக்குகிறது. பொதுவுடைமை என்பது இயற்கையின் அங்கமாக மனிதகுலத்தை இயக்குகிறது. தனியுடைமைக்கும் பொதுவுடைமைக்கும் இடையிலான மனிதகுலத்தின் போர் ஒட்டுமொத்த உலகிற்கும் வாழ்வா? சாவா? பிரச்சனையாகும். தனியுடைமைக்கு உலகப் பெருமுதலாளிகளும், பொதுவுடைமைக்கு உலகின் மார்க்சிய சமூகவிஞ்ஞானிகளும் தலைமையேற்று போரிடுகிறார்கள். இந்தப் போரில் மார்க்சிய சமூகவிஞ்ஞானிகள் வென்றால் உலகும் இயற்கையின் அங்கமாக மனிதகுலமும் மேன்மையான வாழ்வை அடையும். தோற்றால் உலகம் முற்றிலும் அழிந்து வேறொரு இயக்க வடிவை எட்டும். இரண்டில் எந்த ஒன்றும் நிகழ வாய்ப்பிருக்கின்றது. எனினும் பொதுவுடைமை சமூகம் பற்றிய இத்தகைய முடிவுகள் மார்க்சிய சமூகவிஞ்ஞானிகளின் சிந்தனை வெளிச்சத்தில் தவிர்க்க முடியாதவை. ஆதிமனிதர்கள் வாழ்ந்த பொதுவுடைமைச் சமூகமே வர்க்கச் சமூகம் முளைப்பதற்குரிய விதையாக இருந்தது. எனவே இந்த விதை இயங்குதலின் நான்காம் தன்மையை அடையும். அதாவது, பொதுவுடைமை சமூகம் உயர்ந்த நிலையைச் சந்திப்பது உறுதி. எனவே மனிதகுலம் நீடித்தால் எதிர்காலத்தில் பொதுவுடைமை சமூகம் தவிர்க்க முடியாதபடி உறையும். இது மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற எமது சமூகவிஞ்ஞானக் களத்தின் உறுதியான முடிவு. 


                                 
வெளிவந்த விபரம்

புதிய கோடாங்கி,
ஜுலை 2017.
பக்கம் (30 – 33)
புதுப்பிக்கப்படாத முன் வடிவம்


No comments:

அதிகம் படித்தவை