சிந்தனைத் துளிகள்
புதியவன்
சாதனை எளிது
திட்டமிட்டுச் செயல்படத் தொடங்கியவர்கள்
திட்டமிடாத சாதனைகளையும் முடிப்பார்கள்
ஓய்வு?
ஓய்வின்றி உழைப்பது மிகக் கொடிது
அதனினும் கொடிது
கிடைத்த ஓய்வும்
விருப்பப்படி அமையாதது
அல்லது
விரும்பத் தகாதபடி அமைவது
முன்னேற்றம்
புலன் இன்பங்களைக்
கட்டுப்படுத்த முடியாதவர்கள்
வாழ்வின் மேன்மைகளை
எட்டிப்பிடிக்க முடியாது...
அறிவு மேன்மை
அறிவினால் உண்டாகும் மேன்மை யாதெனில்
சகமக்களின் துன்ப துயரங்களை
தன்நோயாக உணர்ந்து செயல்படுதலே
மனிதர் அல்லர்
சமூக மேன்மைக்கு உழைக்க முயலாதவர்
மனிதராகப் பிறப்பினும் மனிதர் அல்லர்...
கொண்டாட்டம்
கொண்டாட்டங்கள் என்பவை
வினையாற்ற பலப்படுத்தும் விளையாட்டாக வேண்டும்...
முன்னேற்றங்களைச் சொல்வதற்கு பாதையாக வேண்டும்...
பிரச்சனைகளை வெல்வதற்கு கல்வியாக வேண்டும்...
கண்டபடி நுகர்வுகளும் போதை ஆட்டம் செலவுகளும்
கொண்டாட்டம் என நினைத்தால்
அவை வீழ்த்தும் வீழ்த்தும் நம்மை கொண்டுபோய் வீழ்த்தும்!
வீழ்வு
வாழ்வின் இலட்சிய முடிவுகளை
மனவுறுதியுடனும் தெளிர்ந்த அறிவுடனும்
செயல்படுத்துவது வாழ்வு!
வசதிக்கேற்ப கைவிட்டு
மாற்றி மாற்றி செயல்படுவது வீழ்வு...
எட்டடி பாய்தல்
பிரச்சனைகள் வேடிக்கை காட்டும்போது
முன்னேற்றம் படிப்படியாகவே ஏறலாம் – ஆனால்
பிரச்சனைகளே நாலடி வேகத்தில் ஏறினால்
முன்னேற்றம் எட்டடியாவது பாய வேண்டும்
இல்லையெனில் முன்னேற்றம் தடைபடும் என்பதல்ல...
சமூகமேன்மையே பலியாகிவிடும்!
எது நீதி?
“நீதி” என்பது யாதெனில்
1.சமூகமேன்மை, 2.சமூகப் பாதுகாப்பு, 3.சுயமரியாதை, 4.சமூக மரியாதை, 5.சமத்துவம், 6.சகோதரத்துவம், 7.தன்னுரிமை, 8.சூழலியல் அரவணைப்பு ஆகியவற்றின் அரண் எனப்படும்.
எது அறம்?
அறம் எனப்படுவது யாதெனில்
சகமக்களுக்கு இடையிலான உறவை
சமூகளாவிய நிலையில்
ஒவ்வொரு சூழல்களிலும்
உயிர்ப்புடன் பாதுகாப்பதற்கும்
சமூக மேன்மை நோக்கி பண்படுத்துவதற்கும் உரிய
ஒழுக்கங்களின் ஒட்டுமொத்தத் தொகுப்பையும்
முழுமையாகக் கருதுவதாகும்.
அறிவியல் தத்துவம்
இயக்கம் இல்லாத பொருள்களே இல்லை...
முரண்பாடுகள் இல்லாத இயக்கங்கள் இல்லை...
இயங்காதப் பொருளென்று எதுவுமே இல்லை!
குழந்தைகளைக் கொண்டாடுங்கள்
குழந்தைகள் நம் வழியாக உலகிற்கு வந்தவர்கள்...
நம் சொத்துக்களாக வரவில்லை!
நம் சொந்த இலட்சியங்களைத் திணிக்காதீர்கள்
சமூக இலட்சியங்களை உணர்த்துங்கள்
அவர்களை வளர்க்காதீர்கள்...
உயர்த்துங்கள்! கொண்டாடுங்கள்!
சமூக மேன்மையின் செல்வங்கள்
அடுப்பில் பிறந்த உணவை
அடுப்பே திண்பது இல்லை...
அடுப்பால் பெற்ற அமுதை
அடுப்புக்கே இட்டால் அது மடமை!
பெற்றோரின் சொத்தல்ல குழந்தைகள்...
அவர்கள் சமூகமேன்மையின் செல்வங்கள்!
அவர்களை வளர்க்காதீர்கள்...
உயர்த்துங்கள்! கொண்டாடுங்கள்!
வாழ்விற்காக அல்ல
மதிப்பெண்ணுக்காக படிப்பதும்
பணத்திற்காக உழைப்பதும்
வாழ்க்கை அல்ல...
வெறும் பிழைப்பே!
மனித உயர்வு
நீர்மட்டத்தின் உயர்வே
தாமரையின் உயர்வு...
சகமக்களின் உயர்வே
ஒரு மனிதரின் உயர்வு!
காதல் ?
பாலுறவு உரிமையை அங்கீகரிக்கும் வாழ்வின் இணையாளரைத் தேர்ந்தெடுக்கின்ற உரிமையே காதல் என்பது மட்டுமல்ல,
வாழ்வில் ஒத்துப்போகும் புரிதலுடைய நட்பின் ஆழத்தில் எதிர்பாலினக் கவர்ச்சி மிகுந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உதயமாகின்ற சமூக உணர்வே காதல் என்பது மட்டுமல்ல,
காதல் என்ற சமூக உணர்வானது கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்தின் தந்தையதிகாரப் பண்பாட்டிற்கு எதிராக தாய்தலைமையின் விடுதலை உணர்விலிருந்து வெளிப்பட்டதாகும். எனவே,
வரலாற்று உணர்வும் எதிர்காலக் கனவும் மனிதர்களுக்கு மட்டுமே உரியது. என்பதினால், சமூகச் சமத்துவம் என்ற காதலின் வரலாற்று இலட்சியத்தை நோக்கி வருங்காலத் தலைமுறைகள் பற்றிய கனவுகளைச் சுமந்து அக்கறையுடன் உழைப்பதையே காதலின் முழுமையான அர்த்தமாகக் கருத முடியும்.
நட்பு ?
ஒருவரது வாழ்வின் முன்னேற்றங்களில் மற்றவர்களது ஊக்கமிக்க பங்களிப்பே நட்பாகும்.
திருமணம்?
திருமணம் என்பது கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகத்தில் தோன்றிய தனிச்சொத்தாதிக்கத் தந்தையதிகாரச் சமூகத்தின் பண்பாடாகும். தந்தையதிகாரப் பண்பாட்டின் பிரதிநிதிகளாகிய ஒவ்வொரு ஆணுக்கும் வாரிசைப் பெற்றுத்தரும் சொத்தாகப் பெண்களை ஒப்படைக்கின்ற குலப் பெரியவர்களின் நடைமுறையே திருமணம் என்று அர்த்தப்படும்.
பகுத்துண்டு பழகல்
கற்றுக்கொள்வதற்கும்
கற்றுக்கொடுப்பதற்கும்
தலைசிறந்த கல்வி எவையெனில்
பகுத்துண்டு பழகுதலும்
மாண்புமிக்க ஒழுக்கங்களும்
புதுமொழி
எலும்பு இல்லாத நாக்கு
எப்படி எப்படியோ வளையட்டும்...
வார்த்தைகளின் இலக்கு மட்டும்
சமூகமேன்மையாக இருக்கட்டும்!
சமூக விடுதலை
சமூக மேன்மைக் கருத்துக்களை
ஆழ்மனதுவரை பற்றிக்கொண்டால்
ஆரம்பமாகிவிடும் சமூகவிடுதலை!
சமூகவிஞ்ஞான உழைப்பு
கஷ்டப்படுபவர்கள் எல்லோரும்
நல்லவர்கள் என்பது உறுதியல்ல – ஆனால்
மனித சமூகம் மேன்மை அடைவதற்கு நல்லவர்கள் கஷ்டப்படத்தான் வேண்டியுள்ளது!
பிழைப்பு
சமூகமேன்மைக்கு பயனற்ற
எந்த பெரிய உழைப்பும் உழைப்பல்ல
வெறும் பிழைப்பே!
எண்ணித் துணிக
இயற்கையின் அரணின்றி
மனித இனம் பிழைப்பதில்லை
மனித வளத்தின் உழைப்பின்றி
கலை அறிவியல் உயர்வதில்லை
கலை அறிவியல் உயர்வின்றி
சமூக மேன்மை சாத்தியமில்லை
எண்ணித் துணிக!
சுவரின்றி இல்லை
சித்திரம்...
சிந்தனையாளருக்கான அடிப்படை கேள்விகள்
1.என்ன நிலைமை இது?
2.ஏன் இந்த நிலைமையில் இருக்கு?
3.இந்த நிலைமை எப்படி ஆரம்பமாச்சு?
4.இந்த நிலைமையில் எத்தகைய மாற்றங்கள் சமூகத்தேவையின் அவசியமாக இருக்கின்றன?
5.என்னுடைய பங்கேற்பு என்னவாக இருக்க வேண்டும்?
ஆர்வம்
வாழ்வின் மேன்மைக்கு ஆர்வமே ஊற்று
கடிவாளம்
உலகப்பார்வையற்ற மனிதர்கள்
கண்மூடித்தனமாக ஓடுவதில்
குதிரைகளை மிஞ்சிவிடுகிறார்கள்...
பாவம் தோற்றுப்போகின்றன
கடிவாளம் கட்டிய குதிரைகள்!
உயிர்ப்பு
வாழ்தலின் உயிர்ப்பு தனித்துவம் மட்டுமே!
நெருப்பை முத்தமிடுதல்
உடன் வாழ்பவர்களை வெறுப்புடன் அணுகுதல் என்பது
நெருப்பை அன்புடன் முத்தமிடுவதற்குச் சமமாகும்
மனித வறட்சி
சக உயிரினங்களின் துயரங்களையும்
சக மனிதர்களின் துன்பங்களையும்
தன் நோயாகக் கருதாதக் கடமை மறந்தவர்களே...
மரணத்தின் வேதனைகளை
மரணிக்கும்போதே உணர்கிறீர்கள்!
பயங்கரவாதம்
எல்லா பயங்கரவாதங்களையும்
பெற்றெடுத்த ஒரே பேய்
அரச பயங்கரவாதம்!
மனித சாரம்
நீ சகமக்களின் சிறு துளி
நம் குடும்பம் ஒரு குட்டிச் சமூகம்
மானிட சமூகம் நம் மொத்த உருவம்
எழுத்து
எழுதுதல் என்பது
தன் சொந்த அறிவை
உரசுதல் என எண்ணத் தகும்
கதையே விதை
குழந்தைகளின் மேன்மைக்கு
கதைகளை விதை...
கதை பேசுதல் என்பது
குழந்தைகளின் சமூக உணர்வை
அவர்களது அறிவிலிருந்து ஆழ்மன உணர்வுவரை
கற்பனை வளத்துடனும்
கருத்து செறிவுடனும்
பற்றும்படி செய்து
சக மனிதராக உயர்த்துவதாகும்!
குழந்தைகளோடு கதை பேசுதலை நிகழ்த்தாவிட்டால்...
நாம் மனித வளர்ச்சியைக்
கொலை செய்வதாக அர்த்தப்படும்!
எதிர்வெல்லுதல்
வாழ்க்கை என்பது எதிர்பார்ப்பு அல்ல
எதிர்கொள்ளுதலே வாழ்க்கை...
வெற்றியோ தோல்வியோ
வாழ்க்கை வாழ்க்கைதான்!
வெற்றியின் மீது பிரதான நம்பிக்கை இருந்தால்
வாழ்க்கை என்பது எதிர்வெல்லுதல்
எனலாம்!
மானிட அறிவு மூன்று
தகவல் அறிவுகள் மழையாகப் பொழிந்து
துறை சார்ந்த அறிவுகள் நதிகளாக ஓடி
சமூக அறிவு எனும் பெருங் கடலில் கலப்பதாகும்!
அறிவியல் கலை
கலையை வழிநடத்துதல் அறிவியலின் கடமை!
அறிவியலுக்குச் சேவை செய்தல் கலையின் கடமை!
எது சமூகமேன்மை?
மனிதர்களுக்கு இடையிலான
ஏற்றத்தாழ்வுகளாகிய சமூக எதார்த்தத்திலிருந்து
ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ சமூகத்தை
எதிர்காலத்தில் அடைவதற்கான சமூகத்தேவையை நோக்கி
சமூகளாவிய ஒத்துழைப்பிலும்
தனிமனித உணர்நிலையிலும்
முன்னேற்றங்களைச் சாதிப்பது மட்டுமே
சமூகமேன்மை ஆகும்.
சமூக மரியாதை
நமது சொல்லை நாம் மதிக்காவிட்டால்
நமக்கும் சொல்லுக்கும் மதிப்பே இல்லை!
நமது முடிவை நாம் மதிக்காவிட்டால்
நமக்கும் செயலுக்கும் மதிப்பே இல்லை!
அறிவுக் கலை
ஒவ்வொரு செயலும் அறிவை உசுப்பட்டும்
எல்லா அறிவும் செயலை செதுக்கட்டும்
சுதந்திரம்
மனசை அறிவுக்கு கட்டுப்படுத்து
அறிவை வாழ்க்கைக்கு கட்டுப்படுத்து
வாழ்வை சமூகமேன்மைக்கு கட்டுப்படுத்து
சமூக மேன்மையின் வேர்களால் விரிவடையும்
சுயக்கட்டுப்பாடுகள்தான் சுதந்திரமே அல்லாமல்
தான்தோன்றித்தனம் அல்ல சுதந்திரம்!
விமர்சனக் கலை
செய் விமர்சனம் செய்
வாயால் விளைவது வெற்று வார்த்தைகள் அல்ல
கருத்துக் கருவிகளும் கருத்தாயுதங்களும்
சமூக மேன்மைக்கு உரியவர்களை
மெல்ல மெல்ல உயர்த்த
கருவியாகட்டும் விமர்சனம்...
சமூகத் தேக்கத்தில் உழல்பவர்களை
ஒரேயடியாக வீழ்த்த
ஆயுதமாகட்டும் விமர்சனம்...
உயர்த்த வேண்டியவர்களை வீழ்த்தாதீர்கள்
வீழ்த்த வேண்டியவர்களை உயர்த்தாதீர்கள்
அது விமர்சன அறம் ஆகாது
வாயால் விளைவது வெற்று வார்த்தைகள் அல்ல
செய் விமர்சனம் செய்
குழந்தை உலகம்
நம்மோடு குழந்தைகளும்
குழந்தைகளோடு நாமும்
சங்கமிக்கின்ற தருணங்களில்
இந்தப் பழைய உலகம்
புதிய உலகை கருத்தரிக்கத் தொடங்குகிறது!
புத்துலக மனிதர்களுக்குத் தேவையான
முன்மாதிரியான புன்னகைகளை
குழந்தைகளிடமிருந்து சேகரிக்கத் தொடங்குவோம்...
களம் பிரதானம்
பரிபூரண நோயாளிகள்
இந்த உலகிற்கு பயங்கரமான முகம்.
அதாவது போர்களின் உருவம்.
வெற்றியின் இலக்கு போர்கள் அற்ற உலகை அடைவதே.
இலக்கை அடைவது மனித குலத்தின் கடமை.
பெரும்பாலான மனிதர்களோ
கடமை மறந்து வேகமாக ஓடுகின்றார்கள்...
கடிவாளம் கட்டப்பட்ட குதிரைகள்போல!
ஓட்டத்தின் வேகத்தில் மன நோயாளிகளாக மாறுகிறார்கள்.
இந்த உலகம் மனநோயாளிகளின் உலகமாக மாறியிருக்கிறது.
வேலைக்கு ஏற்ற ஓய்வு கிடைக்காதவர்களும்...
மனதுக்கு விருப்பம் அற்ற வேலைகளில் சிக்கிக் கிடப்பவர்களும்...
சுதந்திரமான மனநிலை இல்லாமல் இறுக்கமாக வாழ்பவர்களும்...
நேர்மையும் அக்கறையும் உடைய சக மனிதரிடம்
மனம் திறந்த உரையாடலில் ஈடுபட முடியாதவர்களும்...
மன நோயின் பலவிதமான அறிகுறிகளைப் பெற்றிருக்கிறார்கள் .
அதாவது, மனநோயாளிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!
நோயைக் குணப்படுத்தும் மருந்தும் அவர்களிடமே இருக்கின்றது.
ஆனால் பிரச்சினை எதுவென்றால்
அவர்கள் தங்களைப் பரிபூரணமானவர்கள் என்பதாக நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
எது அறிவு?
உலகப் பொருட்களைஅறிந்துகொள்கின்ற நடத்தை முறையே அறிவு ஆகும்.
அறிவு இரண்டு நிலைப்படும்.
1.புலனறிவு, 2.செயலறிவு
கண், காது, மூக்கு, நாக்கு, மெய் ஆகிய ஐந்து புலன்களால் அறிவது புலனறிவு ஆகும்.
எண்ணங்களை சிந்தனையில் ஈடுபடுத்தி கருத்துக்களாக அறிவது செயலறிவு ஆகும்.
செயலறிவு மூன்று நிலைப்படும்.
1.தகவல் அறிவு, 2.துறைசார்ந்த அறிவு, 3.சமூக அறிவு
பல்வேறுபட்ட தகவல்களை அறிவது தகவலறிவு ஆகும்.
ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த அறிவினைப் பெறுவது துறைசார்ந்த அறிவாகும்.
சமூக உற்பத்திமுறை, பண்பாடு பற்றிய முழுதளாவிய அறிவினைப் பெறுவது சமூக அறிவாகும்.
புலனறிவு ஐந்தும் ஆறாவது செயலறிவும் ஆகும்.
வெவ்வேறு தலைமுறைகளும் சகமனிதர்களும் தமக்குள் அறிவை பரிமாறுகின்ற நடத்தையால் அறிவது ஏழாம் அறிவாகும்.
இதனை அறிவுபரிமாற்றவழி அறிவு என குறிப்பிடலாம்.
தாய்மொழியின் சிறப்பு
1.அறிவு, ஆழ்மன உணர்வு, ஆழ்மனது ஆகிய மூன்றையும் புத்துயிர் பெறச்செய்கின்ற ஆற்றலாக தாய்மொழி இயங்குகிறது.
2.சமூகப் பண்பாட்டு உறவுகளை சேகரிப்பதற்கும் ஆக்கப்படுத்துவதற்கும் உரிய ஆற்றலாக தாய்மொழி இயங்குகிறது.
3.சமூகப் பொருளுற்பத்திக்கு கருவியாகவும் தாய்மொழி இயங்குகிறது.
தாய்மொழி
உடல் இயங்கும்படி
சகல உறுப்புக்களுக்கும் பாயாவிட்டால்
இரத்தத்திற்கு என்ன பெருமை?
அறிவு இயங்கும்படி
சகல துறைகளுக்கும் பாயாவிட்டால்
தாய்மொழிக்கும் இல்லை பெருமை…
உலகின் இயல்புக்கு தண்ணீர்போல
உடலின் இயல்புக்கு இரத்தம்போல
உணர்வின் இயல்புக்கு தாய்மொழியே ஆற்றல்!
நாடகக் கலையின் சிறப்பு
நாடகக் கலை என்பது
கற்றுக்கொடுப்பதற்கும்
கற்றுக்கொள்வதற்கும்
தலைசிறந்த கலை ஊடகம்!
தன்னை செதுக்குவதற்கும்
குழுவுடன் செதுங்குவதற்கும்
ஆளுமைப் பண்பில் உயர்வதற்கும்
தலைமைப் பண்பில் வளர்வதற்கும்
படைப்பாளுமை மிளிர்வதற்கும்
செயலாளுமை செழிப்பதற்கும்
வழிகாட்டுகின்ற தலைசிறந்த கல்வியாக
நாடகக் கலையே திகழ்கிறது.
அறிவியல் கலை இலக்கியம்
அறிவியல் கலை இலக்கியம் என்பவை
சகமனிதர்களுக்குத் தலைமையேற்று
சமூகமேன்மைக்கு வழிகாட்டுகின்ற
சமூக இயக்கத் துறைகளாகும்.
மொழி அறிவியல்
இலக்கணம் என்பது
மொழிகளின் தனித்தன்மைகள் பற்றிய அறிவியல்
மொழியியல் என்பது
மொழிகளின் பொதுத்தன்மைகள் பற்றிய அறிவியல்
எது செயல்?
செயல் என்பது
கலை அறிவியல் நேர்த்தியும்
சமூக மேன்மைக்கு முயற்சியும் ஆகும்.
ஏனெனில், எல்லா செயலும் செயல் அல்ல. செயல் என்பது முன்னேறிச் செல்தல் ஆகும். சமூகத்தின் தேக்கத்தையும் கீழ்நிலையையும் பாதுகாக்கின்ற எல்லா செயல்களும் செயலுக்கான தகுதியை இழந்துவிடுகின்றன. ஏனெனில் சமூக மேன்மையை நோக்கி முன்னேறுவதற்கு இத்தகைய செயல்கள் தடைகளாக அமைகின்றன. எனவே செயல் என்பதன் தகுதி சமூகமேன்மையை எட்டுவதற்கான முயற்சிகளுடன் இணைந்திருக்கின்றன. சமூகமேன்மையில் அக்கறையுள்ளவர்களே சமூகவிஞ்ஞானிகளாக மலர்ச்சி பெறுகிறார்கள். மக்கள் கலை இலக்கியக் கழகம் போன்ற சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் தங்களை சிறந்த செயல்வீரர்களாக உருமாற்றி வருகிறார்கள். நாம் ஒவ்வொருவரும் இத்தகைய செயல்வீரர்களாக உருமாறுவது சமூகத்தின் அவசியத் தேவையாக இருக்கின்றது. இத்தகைய அவசியம் கருதி நமது செயல்களை மேன்மைப்படுத்த முன்வருவோம்.
செயல் என்பது அறிவியலையும் கலையையும் அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. கலை என்பது அறிவியலின் துல்லியமான புலனறிவு நிலையிலிருந்து மாறுபட்டு இயங்குவதே ஆகும். அதாவது மனிதர்களின் பருண்மையான உணர்வு நிலைகளுடன் தொடர்பு கொண்டிருப்பதாக கலை அமைகிறது. எந்த ஒரு கலையும் வாழ்வின் எதார்த்தங்களைப் பற்றிக்கொண்டு கற்பனைகளின் புனைவுகளை உடுத்திக்கொண்டிருக்கின்றது. அறிவின் துல்லியத்தைப் பற்றிக்கொண்டு ஆழ்மனதின் எண்ணங்களுக்குள் கரைந்துகொண்டிருக்கின்றது. எனவே கலையானது ஓர் அறிவை செயல் வடிவம் எட்டச் செய்வதற்காக உணர்வு நிலையில் உந்துதல் செலுத்தி ஆதிக்கம் செய்கின்றது. எத்தகைய செயல் வீரர்களுக்கும் அறிவில் தெளிவும் கலையில் நேர்த்தியும் இன்றியமையாத அடிப்படைகள் ஆகும். சமூகமேன்மையை எட்ட முயல்பவர்கள் இத்தகைய அடிப்படைகளில் தேர்ச்சி பெற்றுவிட்டால் சமூகவிஞ்ஞானிகளின் பொன்னுலகம் விரைவில் கைகூடும்.
சாதிச் சதி
“ சாதி ” என்பது
வணிக சமூக வளர்ச்சியைத் தடுத்து
நிலப்பிரபுத்துவ சமூகம் நீடிப்பதற்காக
ஆரியர்கள் உருவாக்கிய
நான்கு வர்ணக் கொள்கைகளை
அரசர்கள் ஏற்று மக்களிடம்
சூழ்ச்சிகளால் நடைமுறைப்படுத்திய
“ சதி ” !
மேன்மையான பேச்சாளராவதற்கு உரிய விதிகள்
1.மையப் பொருள் விலகாமை
2.துணை செய்கின்ற கருத்துக்களை இணைத்தல்
3.மையப் பொருளின் சமூகத்தேவையை உணர்த்துதல்
4.கொள்கை உறுதி கடைபிடித்தல்
5.பிரதிபலிப்பு விளைவுகளைத் திட்டமிட்டு பேசுதல்
6.குரல் அளவை சமச்சீர் நிலையில் கடைபிடித்தல்
7.பொருத்தமான மௌன இடைவெளிகளைக் கடைபிடித்தல்
8.தகவல் தாவும் முறையை நேர்த்தியாகக் கையாள்தல்
9.சொல்கின்ற தகவலை முழுமையாக முடித்தல்
10.சமூகவிஞ்ஞான வாழ்வில் அனுபவம் பெற்றிருத்தல்
11.கவன ஈர்ப்பு அழகியலை மேன்மைப்படுத்துதல். அதாவது, கதை சொல்லும்முறை, காட்சிபடுத்தும் முறை, பார்வையாளர் பங்கேற்புமுறை, பாவனைகள், பாடல்கள், நடித்தல், மாற்றுக்குரல்...போன்றன.
ஆகஸ்டு 15
கழுதைக்கு தாலி கட்டுவதும்
ஆகஸ்டு 15ல் கொடியேற்றுவதும்
இரண்டும் ஒன்றுதான்
அது போலித் திருமணம்!
இது போலிச் சுதந்திரம்!
வெள்ளைக் கயிறேறும் தேசக் கொடியும்
சலனமற்ற மனிதர்களும்
ஜனகனமண முணுமுணுப்பும்
சலசலக்கும் கூட்டமும்
நெஞ்சுக்குள் குறுகுறுக்கும்…
வீரன் பகத்சிங்கை நினைத்ததும்
மின்னல் போல எண்ணுகிறேன்…
சுதந்திரமகள் தூக்கிலேற்றிக் கொல்லப்படுகிறாள்!
சிறப்பு தினங்கள் எச்சரிக்கை..
வணக்கம் நண்பர்களே!
நம் சமூகஅறிவிலிருந்து எவ்வளவோ தொலைந்தாயிற்று..
அதனால்தான் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்.
காடுகள்தினம், சிட்டுக்குருவிதினம், தண்ணீர்தினம் இவை போன்ற தினங்களெல்லாம் என்ன?
இவை நினைவுபடுத்துவது பிறந்ததினத்தையா இறந்ததினத்தையா?
இத்தகைய தினங்களை எத்தகைய நோக்கத்திற்காக, எவற்றைச் செய்வதற்காக அனுசரிக்கிறோம்?
சமூகநலனிற்கு அவசியமென்றால் சமூகவிஞ்ஞான இயக்கங்களிலிருந்து திட்டமிட்டு செயல்படுவதன்றி வேறென்ன சரியாக இருக்க முடியும்!
அறிவன்புடன் புதியவன்..
உலக புத்தகதின (ஏப்ரல் 23) எச்சரிக்கை..
ஒரே நபர் எல்லா புத்தகங்களையும் படிக்க முடியாது. எல்லா நபர்களும் புத்தக வாசிப்பாளர்களோ, வாசித்தவற்றை உரையாடுபவர்களோ, செயல் வலிமைக்காக வாசித்தவற்றைச் சிந்திப்பவர்களோ அல்ல. வாசிப்பு பண்பாடே மறைந்து போயிற்று. சமூக அறிவிற்கு அவசியமான தாய்மொழி வாசிப்பு ஒட்டுமொத்தமாக வற்றிக் கொண்டிருக்கிறது. இந்த எதார்த்ததில் தீவிரமான வாசிப்பு முகாம்களை உருவாக்காமல் புத்தகங்களை சகமனிதர்களின் சமூகஅறிவு ஊடகமாக புதுப்பிக்கவே முடியாது. மாறாக சமூகதேவையை நிறைவேற்றும் வலிமையிருந்தும் வரலாற்று இடுகாட்டில் புதைந்துவிடும் அபாயம் புத்தகங்களுக்கு இருக்கின்றது. இத்தகைய அபாயத்திலிருந்து மீள குடும்பம், நூலகம் உட்பட கல்விநிறுவனங்களும் சமூகவிஞ்ஞான இயக்கங்களும் ஓய்வற்ற வாசிப்பு முகாம்களை உருவாக்குவது அவசியம். சமூகவிஞ்ஞானிகளுக்கு வலிமை சேர்ப்போம். அறிவன்புடன்புதியவன்..
வாசிப்பின் அவசியம்
புதியவன்
சமூகவிஞ்ஞானிகளுக்கு வலிமைசேர்ப்போம்!
புதிய மாணவர்களுக்கு வணக்கம். நமது முயற்சிகள் அனைத்தும் சமூகவிஞ்ஞானப் பயிற்சிகளே. நமது பயிற்சிகளில் புத்தக வாசிப்பு இன்றியமையாததாகும்.
சமூக அறிவில் அக்கறையுடைய சிலர் புத்தகம் வாசிப்பவர்களாகஇருக்கிறார்கள். குறிப்பாக சமூகவிஞ்ஞான கடமைகளில்பொறுப்புள்ளவர்கள் பள்ளி கல்லூரிகளில் படித்த அனுபவம்இல்லாவிட்டாலும் புத்தகம் வாசிப்பதில் முன்மாதிரிகளாகதிகழ்கிறார்கள். ஆனால், படித்து பட்டம் பெற்றவர்களோ பெரும்பாலும்புத்தகம் வாசிப்பது இல்லை. பல பேராசிரியர்களும் இதில்அடங்குவர். பலர் பெருமைக்காக புத்தகங்களை வாங்கி கண்காட்சிஅலமாரிகளில் சேமித்து வருகிறார்கள். பல வாசிப்பாளர்களோ சமூகஅறிஞர்களாக வளராமல் புத்தக புழுக்களாகவே தேங்கிவிடுகிறார்கள்.
வாசிப்பின் இத்தகைய சூழ்நிலையில் பொதுமக்களுக்கு முன்மாதிரியாக நாம் புத்தக வாசிப்பில் ஈடுபடுவது மிகமிக அவசியமாகிறது. சமூகத் தேவையின் அடிப்படையில் ஒவ்வொருவரும் தனது புத்தக வாசிப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
சமூக உணர்வையும் சமூக அறிவையும் வளர்த்துக்கொள்ள வாசிப்புஇன்றியமையாததாகத் திகழ்கிறது. நாளொன்றுக்கு 30 நிமிடமாவதுபுத்தகம் வாசித்து உரையாட நேரம் ஒதுக்க வேண்டும். இந்த முயற்சியைமுறைப்படுத்த நம்மில் வாசிப்பு முகாம்களை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.
பெரும்பாலான மக்கள் பிம்பங்களை மட்டுமே பிரதிபலிப்பவர்களாகவாழ்ந்து வருகிறார்கள். சுயசிந்தனையை இழந்த சுயமரியாதையற்றவாழ்வை மேற்கொண்டிருக்கிறார்கள். இதற்கு மாற்றாக நாம் முன்மாதிரியான வாழ்வியலை வாழ்ந்து காட்டுவது அவசியம். சுயசிந்தனையுடைய சமூகஅறிஞராக வாழ்ந்து காட்டும் கடமை நமக்கு இருக்கின்றது. இதற்கு புத்தக வாசிப்பு மிகவும்அடிப்படையாகும். ஏனெனில் வாசிப்பு மட்டுமே பிம்பங்களைக் கடந்துமொழிப் பதிவுகளின் வழியாக எண்ணங்களையும் கற்பனைகளையும்ஆற்றலுடன் மலரச் செய்து கருத்துருவாக்கங்களை வலிமைபடுத்துகின்றன.
கருத்தாக்கத்தின் விளைவாக சிந்தனை தூண்டப்படுகின்றது. இந்தத்தூண்டல் உரையாடலையும் செயல்களையும் மலரச் செய்து மேலும்சகமனித ஆற்றலை வலிமைப்படுத்துகிறது. சகமனித ஆற்றலுடைய சமூகஅறிஞராக வளர்ந்து விட வேண்டும்.
இந்த நிலையை எட்டிவிட்டால் எல்லா பிம்பங்களையும்காட்சிகளையும் உலக நிகழ்வுகள் அனைத்தையும் கருத்தாக்கங்களாககிரகித்துக்கொண்டு நமது செயலாற்றலை துல்லியமாகவும் கூர்மையாகவும்ஆழமாகவும் வேகமாகவும் விரிவுபடுத்த முடியும். இந்த விரிவுபடுத்தல்கள் நமது சமூகவிஞ்ஞான இலட்சியங்களை விரைவுடுத்தும்.
புதிய மாணவர்களாகிய நாம் வாசிப்பு முகாம்களை விரிவுபடுத்துவோம்.
மாணவர்கள் கற்பவர்கள் மட்டுமல்ல, கற்றுக் கொடுப்பவர்கள் என்பதை நிரூபித்துக் காட்டுவோம்.
மானிட அறிவு மூன்று
தகவல் அறிவுகள் மழையாகப் பொழிந்து
துறைசார்ந்த அறிவுகள் நதிகளாக ஓடி
சமூக அறிவு எனும் பெருங்கடலில் கலக்க வேண்டும்!
பயங்கரவாதம்
எல்லா பயங்கரவாதங்களையும்
பெற்றெடுத்த ஒரே பேய்
அரசபயங்கரவாதம்!
எது பெண்ணியம்?
பெண்ணியம் என்பது பெண்களின் தனிப்பட்ட ஆண்களை வெறுப்பதோ அல்லது தனிப்பட்ட ஒரு பெண்ணின் விடுதலையைப் பற்றியதோ அல்ல. மாறாக, ஆணாதிக்கச் சமூகப் பண்பாட்டிற்கு எதிரான பெண்களின் ஒட்டுமொத்த சமூக விடுதலையைக் குறிக்கின்ற சிந்தனையாகும். அரசியல், பொருளாதாரம், பண்பாடு, வரலாறு என சமூகம் முழுவதிலும் பெண்கள் தமக்கான உரிமைகளை மீட்பதும் விடுதலையை அடைவதும் பற்றிய மனிதகுல இலட்சியமாகும்.
எது மொழிதல்?
மொழிதல் என்றாலே அது சமூகத்தின் மொழிதல்தான். தனிமனித மொழிதல் அனைத்தும் சமூக மொழிதலின் வெளிப்பாடே. சமூக மொழிதல் என்பது சமூகத் தேவையின் முரண்பட்ட இரு எதிர்நிலைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அவை சமூகத் தேக்கமும் சமூக மேன்மையும் ஆகும். எனவே எத்தகைய சமூகத் தேவையுடன் மொழிதல் கட்டமைகின்றது என்பதை அவதானிப்பதே மொழிதல் குறித்த உரையாடல்களின் முக்கியத்துவமாகும். சமூக மேன்மை எனில் உடன்பட்டு உயர்த்துவதும், சமூகத் தேக்கம் எனில் எதிர்பட்டு உடைப்பதுவும் மொழிதல் சார்ந்த உணர்வாளர்களின் சமூகக் கடமையாகும்.
மனிதத் திறமும் தொழில் நுட்பமும்
மனிதத்திறன் என்பது தொழில்நுட்பத்திறன் சார்ந்தது. தொழில்நுட்பம் என்பது திட்டமிட்ட மாற்றங்களை உற்பத்தி செய்வதற்காக பயன்படுத்தப்படும் மனித அனுபவம், புறநிலை எதார்த்தம் பற்றிய மனித அறிவு, இயற்கை வளங்கள் மற்றும் கருவிகளும் ஆயுதங்களும் ஆகும்.
No comments:
Post a Comment