சௌ.சுரேஷ் முனைவர்பட்ட ஆய்வேட்டின் மதிப்புரை
கே.சிவக்குமார்
சிலப்பதிகாரத்தில் தொல்குடிகளின் சமயமும் கண்ணகி தெய்வ நிலையாக்கமும் : இனவரைவியல் நோக்கு என்ற இவ்வாய்வேட்டை முன்னுரை முடிவுரை நீங்க ஐந்து இயல்களாக இவ்வாய்வாளர் அமைத்திருக்கிறார்.
முன்னுரை
முன்னுரை பகுதியில் சமயம் பற்றிய கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. சமயம் என்பது ஆவி வழிபாடாகத் தோன்றி பேய், பிசாசு நம்பிக்கைகளாக உருவாகி பின் கடவுள் கோட்பாடுகளாக வளர்ந்தன என்பதாக விளக்கப்பெறுகின்றது.
சிலப்பதிகாரக் காப்பியத்தில் தமிழர்களின் தொல்குடி முதல் முன்னேறிய வணிகச் சமூகத்தினர் வரையிலான பண்பாட்டு முறைகள், வாழ்வியல் நெறிமுறைகள், இசைக்கூத்து மரபுகள், பண்டைச் சமய மரபுகள், விழாக்கள், வழிபாட்டு முறைகள், கலைகள், அரசுமுறை, நீதி, நிர்வாகம், பெண்களின் சமுதாய நிலை என பல தனித்துவங்கள் குறிப்பிடப்படுகின்றன.
பத்தினி என்ற ஆற்றல் பெண்ணை உயர்நிலைப்படுத்தி தெய்வமாக்கியதாகவும், தொல்குடி, நாட்டார், பெருஞ்சமயம் என மூன்று நிலைகளிலும் பத்தினிக் கடவுள் ஏற்கப்பட்டதாகவும் இவையே கண்ணகிக்கு அடித்தளம் என்பதாகவும் கருதுகோள் அமைகின்றது. ஆய்வு முன்னோடிகள், ஆய்வு மூலங்கள் பற்றி விளக்கப் பெறுகின்றது. இனவரைவியல், ஒப்பீட்டு இனவரைவியல் முறையில் இவ்வாய்வு அணுகுமுறை அமைவதாக குறிக்கப் பெறுகின்றது. சிலப்பதிகாரத்தில் வேட்டுவவரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை ஆகிய காதைகளை முதன்மையாகவும் மற்ற காதைகளை அடுத்த நிலையில் கொண்டிருப்பதாகவும் இவ்வாய்வின் எல்லை குறிக்கப்பெறுகின்றது.
ஆய்வுப் பகுப்பானது முன்னுரை முடிவுரை நீங்களாக ஐந்து இயல்களைக் கொண்டிருக்கின்றது. இலக்கியமும் இனவரைவியலும் முதல் இயல் ஆகும். வேட்டுவ வரியில் எயினர்களின் சமயம் இரண்டாம் இயல் ஆகும். ஆய்ச்சியர் குரவையில் ஆயர்களின் சமயம் மூன்றாம் இயல் ஆகும். குன்றக் குரவையில் குறவர்களின் சமயம் நான்காம் இயல் ஆகும். கண்ணகி தெய்வமாக்கலும் படிநிலை வளர்ச்சியும் ஐந்தாம் இயல் ஆகும். ஒவ்வொரு இயலுக்கான அறிமுகத்துடன் முன்னுரை பகுதி நிறைவுபெறுகிறது.
இயல் 1
இலக்கியமும் இனவரைவியலும் என்ற முதல் இயலில் இலக்கியம் என்ற சொல்லுக்குரிய விளக்கங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இலக்கியம் குறித்த வரையறைகள் அமைந்துள்ளன. இலக்கியத்தின் முக்கியத்துவம் பற்றிய கருத்துக்கள் அமைந்திருக்கின்றன. இலக்கியம் பற்றிய கருத்துக்கள் இரண்டு வகையாகப் பிரித்து அமைக்கப்பட்டுள்ளன. ஒன்று தமிழறிஞர்களின் கருத்துக்கள். இரண்டு மேலை நாட்டு அறிஞர்களின் கருத்துக்கள். இனவரைவியல் பற்றிய சொற்பொருள் விளக்கம் இடம் பெற்றுள்ளது. இனவரைவியலின் வரையறைகள் இரண்டு வகையில் விளக்கம் பெறுகின்றது. ஒன்று தமிழ்நாட்டு அறிஞர்களின் கருத்துக்கள். இரண்டு மேலை நாட்டு அறிஞர்களின் கருத்தக்கள். இனவரைவியலின் ஐம்பத்து மூன்று கூறுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இலக்கியத்தில் காலந்தோறும் இனவரவியல் கூறுகள் பதிவு பெற்று வருகின்றன. எனவே இனவரைவியலாளர் இலக்கியத்தை ஆராய்வதன் அவசியம் விளக்கப்படுகின்றது. இலக்கியமும் இனவரைவியலும் ஒன்றுபடும் இடங்கள் பற்றியும் வேறுபடும் இடங்கள் பற்றியும் விளக்கப் பெற்றுள்ளன.
”இயங்கும் இயங்காப் பொருட்கள் ஆகியன தெரிந்தோ, தெரியாமலோ படைப்பில் இடம் பெற்று விடுகின்றன என்பது மறுக்க முடியாது உண்மையாகும்”
(பக-25) என்று ஆய்வாளர் குறிப்பிடும்போது இயங்காதப் பொருட்கள் என்ற சொற்றொடர் பயன்பாடானது அறிவியல் தத்துவத்திற்கு முரணாக இடம்பெற்றிருக்கின்றது. ஆய்வுத் தத்துவத்தின் அடிப்படையில் எல்லாப் பொருள்களும் இயங்கிக்கொண்டும் மாறிக்கொண்டும் இருக்கின்றன என்ற உண்மை பற்றிய புரிதல் விடுபடுகின்றது.
இயல் 2
வேட்டவ வரியில் எயினர்களின் சமயம் என்ற இரண்டாம் இயலில் தொல் சமயம் பற்றிய அறிமுகம் அமைகின்றது. புராதன மக்களிடம் தோன்றிய உயிர்ப்பாற்றல் பற்றிய கருத்தே தொல்சமயமாக உருவானதாக குறிக்கப்பெறுகின்றது. சிலப்பதிகாரத்தின் வேட்டுவவரி என்ற காதையில் எயினர்களின் சமயத்தை மானிடவியலர்களின் கோட்பாடுகளுடன் பொருத்தி விளக்கப் பெற்றுள்ளதாக குறிக்கப்பெறுகின்றது. தொல் தமிழரின் சமயம் பற்றியம் தொல்காப்பியம் சிலப்பதிகாரம் வழியாக கொற்றவை வழிபாடு பற்றியும் ஆராயப்படுவதாக குறிக்கப்பெறுகின்றது. ஆவி பற்றிய நம்பிக்கை, மனா, அணங்கு, சூர், அதிஷ்டம், புனிதம், மந்திரம் ஆகியன பற்றி மானிடவியலர்களின் கருத்துக்களின் வழியாக தொல் சமயம் விளக்கப்பெறுகின்றது. சங்க இலக்கியப் பாடல்களின் மேற்கோள்களிலிருந்து தொல் தமிழரின் சமயம் பற்றி விளக்கப் பெறுகின்றது. அணங்கு, சூர் போன்ற ஆரம்ப கால கடவுள்கள் ஓரிடத்தில் தங்காதவை என்றும் ஊர் மன்றத்தில் கடவுளை நிலை பெறச் செய்தது தொல் சமயத்தின் முக்கியப் படிமலர்ச்சி என்றும் குறிக்கப்பெறுகின்றது. தொல் சமய தெய்வங்களை துடியான தெய்வம், அன்பான தெய்வம் என இரு நிலைகளில் விளக்கப்பெறுகின்றது. ஆரம்ப நிலை தெய்வங்கள் மனிதரது பாலின அடையாளமின்றி இயற்கை ஆற்றல்களாக விளங்கின. பிறகு பெண்பால் அடையாளம் ஏற்று தாய் தெய்வங்களாயின. ஆரம்பநிலை தெய்வங்கள் ஓரிடத்தில் தங்காத நிலையிலிருந்து ஊர்மன்றத்தில் நிலைபெற்றதற்கான வரலாற்றுக் காரணங்களும், இயற்கை ஆற்றல்கள் என்ற நிலையிலிருந்து மனிதரது பெண்பால் அடையாளம் ஏற்று தாய்த் தெய்வமாக உருவெடுத்தமைக்கான வரலாற்றுக் காரணங்களும் விளக்கப்பெறாமல் விடுபட்டுள்ளன. தாய்வழி சமூகத்தில் தாய் தெய்வங்களும் பெண்பூசாரிகளும் இருந்தனர் என்ற வரலாற்றுத் தகவலானது சிலப்பதிகார வேட்டுவ வரி சாலினியுடன் ஒப்பிட்டு விளக்கப்பெறுகின்றது. பெண் பூசாரியிடமிருந்து படிமலர்ச்சி பெற்ற ஆண் பூசாரிகள் தோன்றினர் என்ற வரலாற்றுத் தகவலானது சிலப்பதிகாரத்தில் கட்டுவிச்சியைத் தொடர்ந்து வெறியாடவரும் வேலனுடன் ஒப்பிட்டு விளக்கப்பெறுகின்றது. தொல் தமிழரின் சமயச் சடங்குகளாக மந்திரம், தொத்துமந்திரம், குலக்குறி, நடுகல் வழிபாடு ஆகியன விளக்கப் பெறுகின்றன. தொல் சமயத்தின் தோற்றுவாயாக சாமானிசத்தையும் சாலினி வாக்குரைத்தல் என்பது சாமானிசத்தின் தொடர்ச்சியாகவும் விளக்கப்பெறுகின்றது. சாலினியைக் கொற்றவையாகப் புனைதல், கொற்றவை தெய்வத்தின் உருவ அமைப்பு, கொற்றவையின் பலி இருப்பிட அமைப்பு முறை, கொற்றவைக்கு குருதிப்பலி கொடுக்கும் முறை, கொற்றவைக்கு பலி கொடை செலுத்தும் முறை, கொற்றவை எயினர்களுக்கு உதவும் முறை, கொற்றவை சிறப்புக் கூறுகள் ஆகிய தலைப்புகளில் சிலப்பதிகார வேட்டுவவரியின் பாடல்களும் விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன. மேற்கண்ட தகவல்களைத் தொகுத்து தொகுப்புரை நிறைவு பெறுகின்றது.
இயல் 3
ஆய்ச்சியர் குரவையில் ஆயர்களின் சமயம் என்ற மூன்றாம் இயலில் ஆயர்கள் தொல்குடி மக்களாக அறிமுகப்படுத்தப்படுகின்றனர். குரவைக் கூத்தின் வழியாக முல்லை நில வாழ்க்கை முறையையும், ஆயர்களின் சமயத்தையும், ஆய் மகளிர் தம் கணவரை எவ்வாறு தேர்ந்தெடுக்கின்றனர் என்பனவற்றையும் ஆய்வு செய்வதாக குறிக்கப் பெறுகின்றது. ஆயர்களின் தொழில்முறை என்ற தலைப்பில் ஆண்பெண் வேலை பிரிவினை பற்றி விளக்கப்பெறுகின்றது. ஆடு மாடுகளை மேய்த்து வளர்ப்பது ஆண்கள் பொறுப்பாகவும், பால் தயிர், மோர் வெண்ணெய் ஆகியவற்றை விற்பது பெண்களது பொறுப்பாகவும் விளக்கப் பெறுகின்றது. விற்பனை பெருட்களை உற்பத்தி செய்கின்ற வேலைமுறை பற்றி செறிவான முடிவுகள் இடம்பெறவில்லை. சங்க இலக்கியப் பாடல்கள், சிலப்பதிகாரம், தொல்காப்பிய அடிகள் ஆகியவற்றிலிருந்து ஆயர் வாழ்வியல் பற்றி ஆங்காங்கே மேற்கோள்கள் அமைகின்றன. குரவைக்கூத்து என்பது வாலசரிதை கூத்தினைக் குறிப்பதாக விளக்கப்படுகிறது. குரவையாடும் ஆயர் மகளிருக்கு இசை பெயரினை முறையாக வைத்து ஆடுகின்ற முறையை விளக்குகின்றது. காளையை அடக்கும் வீரனை ஆயர் பெண்கள் கணவராக தேர்ந்தெடுக்கின்றனர் என்ற செய்தி குறிப்பிடப்படுகின்றது. ஆய்ச்சியர் கண்ணகியை வழிபடுதல் என்ற தலைப்பில் திருமால் நப்பின்னையோடு கோவலன் கண்ணகியைத் தொடர்புபடுத்தி குரவையாடுகின்ற முறை விளக்கப்பெறுகின்றது. ஆயர்களின் சமயம் என்ற தலைப்பில் இயற்கையே அங்கத் தெய்வமாயிற்று என இயற்கையின் வழி மாயோன் எனும் தெய்வம் உருவாக்கப்பட்டதாக கதிர் மகாதேவன் முடிவை ஆய்வாளர் முன்னிறுத்தும்போது இயற்கை வழிபாட்டில் ஆண்பாலின் அடையாள உருவாக்கம் பற்றிய வரலாற்றுப் படிநிலை விடுபடுகின்றது. சங்க இலக்கியத்தில் மாயோன், மாயோனின் நிறம், திருமாலின் மார்பு, திருமாலின் கண், திருவடிகள், திருமாலின் கைகள், திருமாலின்கொடி ஊர்தி, திருமாலை வேந்தர்களுடன் ஒப்பிடுதல், ஆய்ச்சியர் குரவையின் மாயோன், ஆயர் மகளிர் நாரதரை புகழ்தல், ஆயர் மகளிர் நப்பின்னை மாயவனைப் புகழ்தல், மாயோனின் சிறப்பைக் கூறுதல் ஆகிய தலைப்புகள் ஆண் தெய்வம் பற்றிய பாடல்களும் பாடல்களுக்கான விளக்கங்களுமாக நீடிக்கின்றன. இத்தகைய நீடிப்புகளின் ஊடாக தாய் தெய்வ வழிபாடாகிய பெண் அடையாளத்திலிருந்து ஆண் அடையாளம் உருப்பெறத் தொடங்கிய வரலாற்றுக் காரணங்கள் விளக்கப் பெறாமல் விடுபடுதல்களாகவே முடிகின்றன. இவ்வியலின் தகவல்கள் தொகுக்கப்பட்டு தொகுப்புரை நிறைவுபெறுகிறது.
இயல் 4
குன்றக் குரவையில் குறவர்களின் சமயம் என்ற நான்காம்இயலில் அறியப்படும் தொல்குடி மக்கள் வேட்டைச் சமூகமாக குறிப்பிடப்படுகின்றனர்.சிலப்பதிகாரக் குன்றக் குரவையில் குறவர் தொல்குடிகளது வாழ்வியல் முறையினையும் முருக வழிபாட்டு முறையினையும், குல வழிபாட்டு மரபு, குரவைக் கூத்து, ஆடல் பாடல் சடங்கு, வள்ளி, கண்ணகி. முருகர் வழிபாட்டு நிலைகள், அதன் தொன்மக் கதைகள் ஆகியன ஆராயப்படுவதாக குறிக்கப்படுகின்றது. சங்க இலக்கியப் பாடல்களும் சிலப்பதிகாரப் பாடல்களும் இயலின் நெடுக மேற்கோள்களாக அமைந்திருக்கின்றன. குறவர்களின் தொழில் என்ற தலைப்பில் திணைப்புன விவசாயத்தில் பெண்கள் வன்புல விவசாயத்திலும் தினைப்புனக் காவலிலும் பெரும்பாலும் ஈடுபடுவதாக விளக்கப்படுகின்றது.
குறிஞ்சி நிலத் தெய்வமாகிய முருகனின் தெய்வ நிலையாக்கம் என்ற தலைப்பில் தொடக்கக் காலத்திலிருந்து குறிஞ்சி சமூகமானது வேட்டைச் சமூகமாக குறிக்கப்படுகின்றது. வேல் உடைய வேட்டைத் தலைவனை வேலன் என்பதாக வேலன் வழிபாடு பற்றிய பகுதி விளக்குகிறது. வேல் என்பது மனித குலத்தில் தோன்றிய முதல் வேட்டைக் கருவியாகும். அதிலிருந்து மேம்பட்ட உலோகத்தாலான வேல் உருப்பெற்றுள்ளது. குறிஞ்சித் திணையில் இருந்து உலோகக் காலம் வரையிலான ஒரு நீண்ட நெடும்பரப்பிற்குரிய பண்பாட்டு வரலாற்றை வேலின் வழிக் குன்றக்குரவை காட்டுவதாக விளக்கப்படுகின்றது. வேலன் என்ற ஆண் தெய்வத்தின் ஆயுதமாகிய வேலானது வழிபாட்டு பொருளாக இருக்கின்ற விளக்கத்தைத் தொடர்ந்து தாய்த் தெய்வத்தின் ஆயுதமாகிய சூலாயதம் என்ற தோண்டுகழி வழிபாட்டு பொருளாக இருக்கின்ற நிலையும் விளக்கப்படுகின்றது.
“வேல் வழிபாடு என்பது ஆதி வழிபாட்டு முறை”-
(பக் 109) என்று ஆய்வாளர் குறிப்பிடும்போது வேட்டை தொழில் முதன்மை பெறுவதற்கு முன்பே காடுசார்ந்த பொருள் சேகரிப்பு தொழிலில் கிழங்கு சேகரிக்க பெண்கள் பயன்படுத்திய சூலாயுதம் என்று அறியப்படும் தோண்டுகழியின் வழிபாடு வேல் வழிபாட்டிற்கு முந்தையது என்ற வரலாற்று படிநிலை பற்றிய குறிப்பு விடுபடுகின்றது.
வேல் வழிபாடு குறிஞ்சி நில முருகனின் வழிபாட்டு மரபோடு இணைந்து பௌரானிக வைதீக சமயத்திற்குரிய தெய்வமாக படிநிலை பெற்ற தகவல்கள் விளக்கப்பெறுகின்றது. குறிஞ்சி நில மக்களின் அகவாழ்க்கை, தலைவி அறத்தோடு நிற்றல், வெறியாட்டு (கட்டு விச்சி, வேலன்), குறவர்களின் கண்ணகி வழிபாடு, கண்ணகியைத் தெய்வமாக வழிபடல் ஆகிய தலைப்புகளில் குன்றக்குரவை பாடல்களும் விளக்கங்களும் விரிவாக கூறப்பட்டுள்ளன.
ஆய்வாளர் குறிப்பிடும் இரண்டு முடிவுகள் இங்கு பரிசீலனைக்கு உரியன. ஒன்று, குறவர்களின் வழிபடு தெய்வமான வள்ளி முருகன் வழிபாட்டினைத் தொடர்ந்து கண்ணகியையும் தங்களுடைய குலதெய்வமாக வழிபட்டு வந்துள்ளதனைக் குன்றக் குரவையில் காண இயல்வதாக ஆய்வாளர் குறிப்பிடுகின்றார்.
(பக் 125)
இரண்டு, திணை நிலை தெய்வங்களுக்கு இணையாக கண்ணகியை முன்னிறுத்தும் இளங்கோவடிகள் இதன்வழி கண்ணகி வழிபாட்டின் புராதன மரபை வலியுறுத்தியுள்ளார். மேலும், அவர் கண்ணகி வழிபாடும் தொன்மை வாய்ந்தது என்ற கருத்து நிலையைப் பதிவு செய்துள்ளதையும் அறிய முடிகின்றது.
(பக் 135) என்பதாக ஆய்வாளர் குறிப்பிடும்போது திணைநிலை தெய்வத்துடன் கண்ணகியை இணையாக்குகின்ற இளங்கோவடிகளது முயற்சி மீது எத்தகைய விவாதத்தையும் எழுப்பாமல் உடன்படுகிறார். இவ்வாய்வேட்டிற்கான முடிவுரை பகுதியில் பத்தினி எனும் சொல் தொல்படிவத்தால் குறிக்கப்படுகின்றது (பக் 198) என்பதாக ஆய்வாளர் கூறுவது குறிப்பிடத்தகுந்தது.
இத்தகைய கருத்து உடன்பாடுகளுக்கு உள்ளாக கொற்றவை, வள்ளி போன்ற திணைநிலை தெய்வங்களின் தோற்றங்களுக்கும் கண்ணகி என்ற பத்தினி தெய்வ தோற்றத்திற்கும் இடையிலான வரலாற்று படிநிலை காரணங்கள் விடுபடுகின்றன.
இயல் 5
கண்ணகி தெய்வமாக்கலும் படிநிலை வளர்ச்சியும் என்ற ஐந்தாம் இயலில் பத்தினி தெய்வமான கண்ணகி குறித்த பதிவகள் சங்க இலக்கியங்களிலும் மற்ற இலக்கியங்களிலும் எவ்வாறு அமைந்துள்ளன என்பதும், கண்ணகி தெய்வத்தின் படிநிலை வளர்ச்சி தமிழகம், கேரளம், இலங்கை ஆகிய இடங்களில் உள்ள மக்களிடம் எவ்வாறு வழங்கப்பட்டு வந்துள்ளது என்பதை ஆராய்வதாக அமைகிறது. சங்க இலக்கியத்தில் கண்ணகி என்ற தலைப்பில் கண்ணகி பற்றிய சங்கஇலக்கிய மேற்கோள்களும் விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன. சிலப்பதிகாரத்தில் கண்ணகி என்ற தலைப்பில் தெய்வநிலையாக்கத்தின் சிறப்புக் கூறுகளான கற்பு, பத்தினி, தெய்வத்தன்மை போன்றவற்றை ஆராய்வதாக குறிப்பிடப்படுகின்றது. கற்பு அறத்தைக் காப்பதை தலையாய கடமையாகக் கண்ணகி கொண்டதால் அருந்ததிக்கு ஒப்பாக போற்றப்படுகிறாள். கடவுள்கள் கண்ணகியைப் பத்தினி என்று போற்றுவதாக குறிக்கப்பெறுகின்றது. கற்பு, பத்தினி என்ற பண்பின் அடிப்படையில் கண்ணகியைத் தெய்வம் என்று குறிப்பிடுவது விளக்கப்பெறுகின்றது.
தமிழகத்தில் கண்ணகி வழிபாட்டு முறைகள், கேரளாவில் கண்ணகி வழிபாட்டு முறைகள், இலங்கையில் கண்ணகி வழிபாட்டு முறைகள் ஆகிய தலைப்புகளில் அவ்வப் பகுதிகளில் கண்ணகி வழிபாடு நிகழ்கின்ற கோயில்களைப் பற்றிய தகவல்கள் இடம்பெறுகின்றன.
எயினர் குலத்து சாலினி வணிக குலத்து கண்ணகிக்கு வாக்குரைக்கிறாள். ஒரு மாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி என்பதாக உலக மக்களுக்கே முன்மாதிரியாக கண்ணகியை சாலினி பாடுவதாக இளங்கோவடிகள் அமைத்திருக்கிறார்.
ஆயர் குல மாதரி வணிக குலத்து கண்ணகியை மண்ணின் மாதர்க்கு அணி ஆகிய என்ற எல்லா பெண்களுக்கும் முன்மாதிரி என்பதாக போற்றும்படி இளங்கோவடிகள் அமைத்திருக்கிறார்.
குறவரின பெண்கள் வணிககுலத்து கண்ணகியை பலர் தொழு பத்தினிக்குக் காட்டிக்கொடுத்த நிலை ஒன்று பாடுதும் யாம் என்று பலரும் வணங்கத்தக்க கற்புடையவளாக பாடுவதாக இளங்கோவடிகள் அமைத்திருக்கிறார்.
சிலப்பதிகாரத்தில் இந்த மூன்று காதைகளின் பாடல்களும் விளக்கங்களும் விரிவாக அமைகின்றன. இவ்விளக்கங்களின் ஊடாக இம் மூன்று மக்களும் தங்களது மரபான தெய்வங்களுடன் கண்ணகியைத் தெய்வமாக இணைத்து போற்றும்படி இளங்கோவடிகள் அமைத்திருப்பதற்கான சமூகளாவிய சமயத்தேவை என்ன என்பதற்கான விளக்கங்களின்றி விடுபடுதலாக நிறைவுபெறுகின்றது.
முடிவுரை
முடிவுரைப் பகுதியில் ஒவ்வொரு இயல்களினுடைய தொகுப்புரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் முறையாகத் தொகக்கப்பட்டுள்ளன. மேலும் மேலாய்விற்கான களங்கள் குறிப்பிடப்படுகின்றன. எயினர்களின் தாய்த் தெய்வமான கொற்றவை சிவபெருமானின் மனைவியாகவும், ஆயர்களின் தெய்வமான மாயோன் பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று திருமாலின் அவதாரக் கதைகளுடன் இணைக்கப்பட்டதையும் குறவர்களின் தெய்வமான முருகன் பரிணாம வளர்ச்சியில் சிவனின் மகனாகவும், ஆறுதலையினையும் பன்னிரண்டு கைகளையம் உடைய ஆறுமுகமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளதனையும் மேலாய்வு செய்வது இன்றியமையாததாகவும். தமிழகம், கேரளம், இலங்கையில் வழங்கப்படும் கதைகள் வழிபாட்டு முறைகள் போன்றவை கள ஆய்வின் மூலம் மேலாய்வு செய்ய வேண்டியது அவசியம் என்பதாகவும் ஆய்வேடு நிறைவு பெறுகின்றது.
மதிப்பு
ஆய்வேட்டை முழுதளாவிய நிலையில் நோக்கும்போது இத்தலைப்பின் அடிப்படையிலான ஆய்வாளரின் முயற்சி பாராட்டுதற்குரியது. இந்த ஆய்வேட்டை நூலாக வெளியிடுகின்ற சூழலில் மதிப்பீட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பரிசீலனைகளையும் விடுபடுதல்களையும் பொருட்படுத்துவது அவசியமாகும். மீளாய்வுடன் புதுப்பித்துக்கொண்டு சிறந்த நூலாக வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
துணை
செய்தவை
சுரேஷ், செள. 2016. சிலப்பதிகாரத்தில் தொல்குடிகளின் சமயமும் கண்ணகி
தெய்வநிலையாக்கமும் : இனவரைவியல் நோக்கு. முனைவர்பட்ட ஆய்வேடு.
புதியவன். மே 2016. காதல் வரலாறு. புதிய கோடாங்கி. பக். 20-25.
புதியவன்,டிசம்பர் 2016. காதலிலிருந்து கடவுள் வரை. புதிய கோடாங்கி. பக்.29-37. https://puthiyavansiva.blogspot.in/
No comments:
Post a Comment